Wednesday, May 18, 2016

வேதங்களைத் தொகுக்கும் வேத வியாசர்!

த்வைபாயனரும், பைலரும் படகை அவர்களுக்குத் தேவைப்பட்ட இடத்தில் நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள். அங்கிருந்து அவர்கள் நடந்து செல்வதாக நிச்சயித்துக் கொண்டார்கள். த்வைபாயனரின் மனோபலமும், அவருடைய ஈடுபாடான காரியங்களும் பைலர் மனதில் அவர் மேல் மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையும் உண்டாக்கி இருந்தது. த்வைபாயனரை மிக மரியாதையுடன் பார்த்தார் பைலர்.அவரைப் பொறுத்தவரை ஏதேனும் சரியில்லை எனில் அதற்காகக் குறைகள் சொல்லுவார். மற்றவர்கள் மேல் தவறைப் போட முயல்வார். கடவுளரை, ஆசாரியர்களை, மதத்தலைவர்களை என்று ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் பைலரும் அப்படி ஒன்றும் அதிகம் வயதானவர் அல்ல. இருவருமே இளைஞர்கள் தான்! ஆகவே வழியில் அவர்களுக்கு அலுப்புத் தட்டியபோதெல்லாம் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டார்கள். கேலி செய்து கொண்டனர். மரங்களின் மேல் ஏறிப் பழங்களைப் பறிப்பதில் போட்டி போட்டார்கள். ஓடிப் பிடித்து விளையாடினார்கள். பராசரரின் குருகுலத்தில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டிக் கொண்டு பேசினார்கள். இல்லை எனில் ஏதேனும் புதிய கதை புனைந்து கொண்டு புத்துணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டார்கள்.

செல்லும் வழியில் அவர்களுக்குச் சில இடங்களில் நல்ல விருந்தோம்பல் கிடைத்தது. சில இடங்களில் எவரும் கவனிக்கக் கூட இல்லை. அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் அதற்காகக் கவலைப்படாமல் காட்டிலுள்ள மரங்களிலிருந்து தின்னக்கூடிய பழங்களைப் பறித்துத் தின்றனர். சில சமயங்களில் அதுவும் கிடைக்காது! பசியோடு இருக்க நேரிடும். அப்போதெல்லாம் ஏதேனும் நகைச்சுவையாகப் பேசிப் பசியை மறக்கடித்துக் கொள்வார்கள். அதே நகைச்சுவையான விஷயத்தை ஏற்கெனவே பலமுறை பேசி இருந்தாலும் அதைக் குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். சில சமயங்களில் பைலர் வேண்டுமென்றே த்வைபாயனரிடம் சொல்வார்:”ரிஷிகளில் சிறந்தவரே, உம்முடைய சுரைக்குடுக்கை எப்போதும் உணவோடு நிறைந்திருக்கிறது. ஆனாலும் நீர் எனக்கு உணவளிக்காமல் எல்லாவற்றையும் நீரே உண்டு விடுகிறீரே! என்னுடன் பகிர்ந்து உண்ண வேண்டாமா?” என்று கேலியுடன் கேட்டுவிட்டு விண்ணைப் பார்த்து நிமிர்ந்து கொண்டு கைகளைக் கூப்பிய வண்ணம், “ஏ, சூரிய பகவானே! இப்படியா ஒரு சுயநலமிக்க குருவை எனக்குக் கொடுப்பாய்? இந்த குருவானவர் அவரே எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு என்னைப் பசியோடு விடுகிறாரே!” என்பார்.

அதற்குப் பதிலாக த்வைபாயனர் ஒரு புனிதமான ஆசாரியராகத் தன்னை நினைத்துக் கொண்டு கொஞ்சம் கம்பீரமான குரலில், “மகனே, பைலா, நீ ஒரு நல்ல சீடனாக இருந்தால் தான் நல்ல குருவாக முடியும்! ஆகவே முதலில் நல்ல சீடனாக இருக்கக் கற்றுக்கொள்வாய்!!” என்று தன் தந்தை சொல்வது போல் சொல்வார். மேலும், “பார், இங்கே! என்னுடைய சுரைக்குடுக்கை உணவால் நிறைந்துள்ளது. கடவுளின் கருணை தான் என்னே! பைலா! உமக்கு வேண்டிய உணவை நீரே எடுத்துக் கொள்ளும்!” என்றும் கூறுவார். இதைச் சொல்லிய வண்ணம் தன்னுடைய சுரைக்குடுக்கையைப் பைலரிடம் நீட்டுவார். பைலரும் அதை வாங்கிக் கொண்டு உணவை அதிலிருந்து எடுத்து உண்ணுவது போன்ற பாவனைகள் செய்வார். அதன் பின்னர் வயிறு நிறைந்துவிட்டாற்போல் தன் வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, “ஆஹா, இன்று நான் தேவைக்கும் மேல் உண்டிருக்கிறேன்.” என்ற வண்ணம் ஒரு பெரிய ஏப்பத்தை விடுவது போல் பாவனை செய்வார். உடனே இருவருக்கும் சிரிப்பு வந்துவிடும். விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

பைலருக்கு கோதுலி ஆசிரமத்தில் பசியோடிருந்த குழந்தைகளுக்கு சூரிய பகவான் உணவளித்ததைப் போல் இப்போது அளிக்கவில்லையே! அந்த அதிசயம் இப்போது ஏன் நடக்கவில்லை என்று புரியவே இல்லை! அவர் த்வைபாயனரிடம் கேட்பார்:” ஏன் இப்போது உங்கள் சுரைக்குடுக்கை உணவால் நிறையவில்லை? பசியோடிருந்த அந்த ஏழைக்குழந்தைகளுக்கு உணவளித்த சூரிய பகவான் இப்போது அப்படியே பசியோடிருக்கும் நமக்கு ஏன் உணவளிக்கவில்லை? இத்தனைக்கும் நாள் பூராவும் நாம் கடவுளரைத் தான் வழிபட்டு வருகிறோம். வேறெதுவும் செய்வதில்லை. அப்படி இருந்தும் நமக்குக் கடவுளரின் அருள் கிட்டவில்லை!” என்று கேட்டார்.  த்வைபாயனர் அந்தச் சமயங்களில் தன்னைத் தானே பைலரை விட வயதானவனாக நினைத்துக் கொள்வார். த்வைபாயனர் சொல்வார்:” என் மகனே! கடவுள் ஒரு போதும் சுயநலமாக நமக்கு உணவு வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டால் உதவ மாட்டார். மற்றவருக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். சுயநலக் கலப்பே இருக்கக் கூடாது!” என்று பராசரரின் குரலில் கூறுவார். இதைக் கேட்டுப் பைலர் சிரிக்க த்வைபாயனருக்கும் சிரிப்பு வந்து விடும்.

ஆனாலும் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை த்வைபாயனர் பைலரிடம் உறுதிபடக் கூறி வந்தார். “நாம் நமக்கென ஒரு ஆசிரமத்தை முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பசியோடிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் உணவருந்தும் முன்னர் உணவளித்து அவர்கள் பசியை ஆற்ற வேண்டும். இதற்கெல்லாம் நாம் உயிரோடிருக்க வேண்டும். நம்மை உயிருடன் காப்பாற்றும் பொறுப்பை நாம் கடவுளரிடம் ஒப்படைப்போம். நாம் வேதங்களுக்காக வாழ்கிறோம். அவற்றைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குச் சிறிதும் மாற்றமின்றிக் கொண்டு செல்லப் பாடுபடுகிறோம். ஆகவே வேதங்களுக்காக வாழும் நம்மைக் காக்கவேண்டியது அந்தப் பரம்பொருளின் பொறுப்பு! நம்மைச் சாகவிடாமல் அவன் காப்பாற்றுவான்!” என்றார். செல்லும் வழியில் வேதங்களை ஓதியவண்ணமே இருவரும் சென்றனர். கடவுளரை வழிபட்டுப் பிரார்த்தனைகள் செய்து கொண்டும், தர்மக்ஷேத்திரத்தின் புனர் நிர்மாணத்துக்கு உதவிகள் செய்யும்படியும் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.


செல்லும்போதும், வேதங்கள் ஓதும்போதும் அவற்றை ஒழுங்கு செய்து வரிசைப்படுத்தவும் முயன்று கொண்டு சென்றனர். சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த ரிஷி, முனிகளால் ஓதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த மந்திரங்களைச் சொல்லுவதும் அவற்றை வகைப்படுத்திப் பிரிப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான வேலையாக இல்லை அவர்களுக்கு. கடவுளரை அழைக்கும் மந்திரங்களும், பிரார்த்தனை மந்திரங்களும் நிறைந்த ரிக், கடவுளருக்குப் புனித வேள்விகளில் கொடுக்கும் ஆஹுதிகள் குறித்துச் சொல்லும் மந்திரங்கள் நிறைந்த யஜுர், சொற்களிலும் ஒலியிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு ஒரு சங்கீதம் போல் தொனித்த மற்ற மந்திரங்களைச் சொல்லும் முறை சாமம், இவை மூன்று சேர்ந்து த்ரயி வித்யா எனப்பட்டது. மூன்று மடங்கான வேதங்கள்!

ஆனால் த்வைபாயனருக்கு அவற்றில் துண்டு துண்டாக இருந்தவற்றை ஒழுங்கு படுத்திச் சொல்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. இவற்றை முழுவதும் அறிந்து ஒழுங்கு படுத்தினால் அதர்வ வேதத்திலும் நிறைந்த அறிவு ஏற்படும். அப்படித் தான் த்வைபாயனரின் தந்தை பராசரர் சொல்லி இருந்தார். இந்த மந்திரங்கள் மூலிகைகளிலும், வசியங்களிலும், தாயத்துகள் போன்றவை கட்டும்போதும் மிகவும் பயன்பட்டன. அவற்றில் இந்த மந்திரங்களைச் சொல்லிச் செய்கையில் தக்க பலன்கள் கிடைத்து வந்தன. எதிரிகளை வெல்வதற்கும், எதிரிகளை அழிப்பதற்கும், அபாயங்களை நீக்குவதற்கும், சிதைவுகளைத் தடுக்கவும், காதலில் வெற்றி பெறவும், பேய், பிசாசு, குட்டிச்சாத்தான் போன்ற துர்சக்திகளை விரட்டவும் பயன்பட்டதோடு அல்லாமல் துல்லியமாக எதிர்காலத்தைக் கணித்துக் கூறவும் முடிந்தது. பல்வேறு விதமான நோய்களை விரட்டவும் பயன்பட்டது.

பராசரரின் கூற்றுப்படி இந்த மந்திரங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்த ரிஷிகளாலேயே சொல்லப்பட்டு வந்தன. அவர்கள் பிருகு—ஆங்கிரஸா அல்லது அதர்வா—ஆங்கிரஸா என அழைக்கப்பட்டனர். இவர்கள் தர்மக்ஷேத்திரத்தின் மற்ற ரிஷிகளோடு சேர்ந்து வாழாமல் தனிக்குழுவாகச் செயல்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை வேதம் நான்கு பகுதிகளாக ஆனது. ரிக், யஜுர், சாமம், அதர்வம் ஆகியன.

2 comments:

ஸ்ரீராம். said...

ஒரு வாரமாக கணினி இல்லாததால் ரொம்ப டியூ! மற்றவற்றையும் சேர்த்து வாசித்தேன். அங்கு அடையாளக் கமெண்ட் கூட இடவில்லை.

:))

வல்லிசிம்ஹன் said...

மிக சுவையாகச் செல்லும் த்வைபாயனரின் வரலாறுடன் இப்போது வேதமும் வருகிறது. மங்களமே.
அறியாத பல விஷயங்களை அறியக் கொடுத்து வைத்திருக்கிறோம். நன்றி கீதா,