Wednesday, May 25, 2016

அதர்வத்தின் ஆசாரியர் ஜாபாலி முனிவர்!

அதன் பின்னர் அந்த முனிவர் த்வைபாயனரைப் பார்த்து, “எழுந்திரு, பிரமசாரியே! எழுந்து நில்! நடப்பாய்!” என்று ஆணையிடும் தொனியில் கூறினார். ஆனால் த்வைபாயனருக்கோ எழுந்து நிற்கமுடியுமா என்பதிலேயே சந்தேகமாக இருந்தது. ஆனால் முனிவர் விடவில்லை. “எழுந்திரு, மகனே! எழுந்திரு!” என்ற வண்ணம் தன் ஒளி பொருந்திய கண்களை த்வைபாயனர் மேலேயே நாட்டியபடி நின்று கொண்டிருந்தார். த்வைபாயனரின் கண்களும், முனிவரின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டன. த்வைபாயனரால் தன் கண்களை மீட்க முடியவில்லை. முனிவரின் கண்களோடு அவையும் ஒன்றிப் போனவை போல் உணர்ந்தார். மேலும் இந்த வயதான முனிவர் த்வைபாயனரின் எண்ணத்துக்கு ஏற்ப அவரை நடக்க விடமாட்டார் போலவும் தோன்றியது. அந்தக் கிழவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கட்டளையாக ஏற்று த்வைபாயனர் செய்தாக வேண்டும் என்று தோன்றியது. இயந்திரம் போல் எழுந்தார் த்வைபாயனர். இப்போது அவர் உடலில் எங்கும் ஒரு சின்ன வலி கூடத் தெரியவில்லை. அதை நினைத்து ஆச்சரியப்படும்போதே அந்த முனிவர் த்வைபாயனரை, “என்னைத் தொடர்ந்து வா!” என்று ஆணையிட்டார்.

எங்கோ விண்ணில் கால் பதித்து நடக்கிறாற்போல் உணர்ந்த த்வைபாயனர் அந்த ரிஷியைத் தொடர்ந்து சென்றார். அவரின் சீடர்கள் அனைவரும் மிகவும் மரியாதையுடன் அவருக்கும் த்வைபாயனருக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்கள் நதிக்கரைக்கு வந்து விட்டார்கள். த்வைபாயனர் எதுவுமே சொல்ல முடியாமல் அவரைப் பின் தொடர்ந்து யந்திரத்தனமாகச் சென்று கொண்டிருந்தார். அவர் தலையைக் குனிந்த வண்ணம் கைகளைக் கூப்பிய வண்ணம் முனிவரைப் பின் தொடர்ந்தார். ஆனால் அவர் புத்தி தெளிவாக யோசித்தது. “எனக்கு என்னவோ ஆகி விட்டது! அதுவும் வித்தியாசமான முறையில்!” என்று நினைத்துக் கொண்டார். அவர் உணர்வைப் புத்தி சரியாக எடுத்துச் சொல்லியது. அதைத் தன்னோடு வந்த சுமாந்துவிடமும் சொன்னார். அவனோ பதிலுக்குச் சிரித்துக் கொண்டான். சுமாந்துவிடம் த்வைபாயனர், “இந்த மஹரிஷியின் பெயர் தான் என்னவோ!” என்று கேட்டார்.

“அட, அது கூட உனக்குத் தெரியாதா?” ஆச்சரியத்துடன் கேட்ட சுமாந்து, “அவர் ஆசாரியர்களுக்கெல்லாம் ஆசாரியர்! குருவுக்கெல்லாம் குருவானவர். இவர் பெயர் மஹா அதர்வண ஜாபாலி, மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இவரே தலைவர் ஆவார்!” என்றான். த்வைபாயனர் ஆச்சரியம் தாங்க முடியாமல் வாயைத் திறந்து திறந்து மூடினார். இவரைக் குறித்துத் தான் பராசரர் அவ்வப்போது ரகசியமாகத் தன் மகனிடம் சொல்லி வந்திருக்கிறார். இவர் அதர்வ வேதத்தை முழுதும் அறிந்த முனிவர். அதிலேயே திறமை மிக்கவர் இப்போது இவர் ஒருத்தர் தான் இருக்கிறார். அதோடு இல்லாமல் பராசரர் மேலும் சொன்னது என்னவென்றால், இந்த முனிவரும் தர்மக்ஷேத்திரத்திலேயே ஆசிரமம் அமைத்து இருந்து வந்ததாகவும், வசிஷ்டரோடு ஏற்பட்ட சிறிய மனவேறுபாட்டால் தர்மக்ஷேத்திரத்தை விட்டுச் சென்று விட்டார் என்றும் பராசரர் சொல்லிக் கேட்டிருக்கிறார். தர்மக்ஷேத்திரத்தில் இரண்டு குழுக்கள் இருந்திருக்கின்றன. ஒன்று வசிஷ்டர்—விஸ்வாமித்திரர் ஆகியோரைக் கொண்ட குழு! இவர்களைப் பொறுத்தவரையிலும் வேதம் மூன்றே பகுதிகள் தான். ரிக், யஜுர், சாமம் ஆகியன அவை! மற்றவர்களைப் பொறுத்தவரையில் பிருகு முனிவரும் ஆங்கிரஸ முனிவருமே இதற்குத் தக்க அதிகாரம் படைத்தவர்கள். இவர்கள் மிகப் பழைய காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அல்லாமல் அதர்வ வேதம் வேதங்களின் தொகுப்பில் பிரிக்க முடியாத பகுதி என்ற எண்ணமும் கொண்டவர்கள். அதர்வ வேதமும் சேர்த்து அவர்களைப் பொறுத்தவரையில் வேதங்களின் தொகுப்பு நான்கு பகுதிகளால் ஆனது.

பராசரர் வேதங்கள் மூன்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்; வேதங்கள் மூன்று என்னும் கொள்கையும் கொண்டவர்; ஆனாலும் அதை வெளிப்படையாகச் சொன்னது இல்லை! அதர்வ வேதம் வேதங்களின் தொகுப்பைச் சேர்ந்தது இல்லை என்னும் கருத்தை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. மாறாக அவற்றின் துணையால் அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரங்கள், வசிய மந்திரங்கள், தாயத்துகள், சூனிய வித்தைகள் இவற்றின் மூலமும், அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மூலிகைகள் மூலமும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், துன்பத்தால் அல்லல் உற்றவர்களுக்கும் மருந்துகளை அளித்து ஆசுவாசப்படுத்த முடியும் என்று நம்பினார். மேலும் மன்னர்களுக்கு வெற்றியை அளிக்கக் கூடிய மந்திரங்கள் மூலமாகவும் வசிய மந்திரங்கள் மூலமாகவும் பல சாதனைகளைச் செய்ய முடியும் என்றும் நம்பினார். இவற்றை எல்லாம் சிந்தித்த வண்ணம் ஜாபாலி முனிவரைப் பின் தொடர்ந்த த்வைபாயனரை ஜாபாலி, “நான் நதியில் இறங்கிக் குளிக்கப் போகிறேன். நான் எப்படிச் செய்கிறேனோ அதே போல் நீயும் செய்!” என்று சொன்னார். த்வைபாயனர் கீழ்ப்படிந்தார்.

தக்க முறையில் சடங்குகளைச் செய்து முடித்ததும் ஜாபாலியும் அவரின் சீடர்களும் சூரியனுக்கு அர்க்கியம் விட்டார்கள். சூரியனையும், வருணனையும் வழிபட்டார்கள். விண்ணிலிருந்து பூமியின் அனைத்து சிருஷ்டிகளையும் மேற்பார்வை பார்த்துக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வருணனுக்குத் தக்க வழிபாடுகள் செய்து அவரைத் திருப்தி செய்தார்கள். மந்திரங்களைச் சொல்ல ஆரம்பிக்கும்வரையிலும் ஏதோ ஓர் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த த்வைபாயனர் மந்திரத்தின் முதல் வார்த்தை காதில் விழுந்ததுமே தன் இனிமையான குரலினால் தானும் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
“கடவுளே, அனைத்திலும் பெரியவரே! அனைவரையும் பாதுகாப்பவரே! அனைத்தும் அறிந்தவரே!
எது தூரத்தில் உள்ளது? எது அருகே உள்ளது! அனைத்தும் அறிந்தவரே!
மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாறுவேஷத்தின் மூலம் மறைக்க நினைத்தாலும்
கடவுளே! நீ அனைத்தும் அறிந்தவன்! உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை!

“ஒரு மனிதன் நின்றால், நடந்தால், அல்லது பதுங்கினால், எங்கானும் மறைந்தாலும்
மறைவிடத்துக்கே சென்று விட்டாலும்
அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்! அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

இரு மனிதர்கள் கூடி அமர்ந்து திட்டம் போட்டாலும், சூழ்ச்சிகள் செய்தாலும்
அவர்கள் தாங்கள் தனிமையில் அமர்ந்து இருப்பதாக நினைத்தாலும்
அது உண்மையல்ல! அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்! மூன்றாவது மனிதனாகக் கண்காணிக்கிறான்.
அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

அவனறியாமல் அவர்கள் திட்டமோ, சூழ்ச்சியோ செய்ய முடியுமா?
இந்த உலகமே, பிரபஞ்சமே அவனுடையது! அவனுக்கு மட்டுமே உரியது!
நாம் குடியிருக்க வந்தவர்கள்!
இந்தப் பரந்த உலகு மட்டுமில்லாமல் பரந்து விரிந்து அளக்க முடியாமல் இருக்கும் இந்த விண்ணும்
அவனுடையது! எல்லையற்றது! அதன் எல்லைகளை நம்மால் காணவே முடியாமல் எங்கோ இருக்கின்றன!

இந்தப் பரந்து விரிந்த பூமியில் இருக்கும் கடல்களும் அதன் எல்லையில்லாக் காட்சிகளும் அவனுள்ளே இருப்பன!
இந்தக் கடல் நீரின் ஒவ்வொரு துளியிலும் அவன் நிறைந்திருக்கிறான். அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்!
அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

நீ விண்ணில் மேலே மேலே சென்று உயர உயரப் பறக்க நினைத்தாலும்
அங்கே அவன் இருக்கிறான்! ஆயிரமாயிரம் நக்ஷத்திரக் கண்களைக் கொண்டு உன்னைக்
கண்காணித்துக் கொண்டு இருக்கிறான்.! எல்லாம் வல்லவன்! அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

இந்த விண்ணிலோ மண்ணிலோ எது இருந்தாலும் எது கிடைத்தாலும், அல்லது இவற்றைத் தாண்டி எது இருந்தாலும்
அவை எல்லாம் எல்லாம் வல்ல இறைவனின் முன்னே கட்டவிழ்க்கப்பட்டு விடும்.
ஏ, மனிதா, உன்னுடைய கணக்கற்ற எல்லையில்லாத் தடுமாற்றங்களை எல்லாம் அவன் கண்காணிக்கிறான்.
இந்தப் பிரபஞ்சமே அவன் கட்டளைப்படியே சுழல்கிறது!

சதுரங்க ஆட்டக்காரன் தன் காய்களை நகர்த்துவது போல்
நம்முடைய விதியானது பின்னிப் பிணைந்து அவன் கைகளில் இருக்கிறது.
ஏழுக்கு ஏழு என்றும் மூன்றுக்கு மூன்று என்றும் காய்களைப்போட்டாலும்
வலையில் சிக்கித் தான் தீர்வாய்! ஏ, எல்லாம் வல்லவனே! எது தவறு எது சரி என்பதை
யார் சொன்னாலும் சொல்லட்டும். ஆனால் உண்மை சொல்பவனைச் சொல்லவிடுவாய்!
அவனை எங்களுடன் இருக்க வைப்பாய். அதன் மூலம் எங்களை ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ வைப்பாய்!
அங்கே அவன் இருக்கிறான்! எல்லாம் வல்லவன்! அவனறியாமல் ஓரணுவும் அசையாது!

1 comment:

ஸ்ரீராம். said...

ஓ.... நம்மாளு!

அது அதர்வ வேதமா? அதர்வண வேதமா?