Thursday, May 26, 2016

ஜாபாலியின் சக்தி!

இங்கே அதர்வ அல்லது அதர்வண வேதம் குறித்து ஒரு சின்னக் குறிப்பு. உபநயனம் ஏற்கெனவே நடந்தவர்கள் மூன்று வேதங்களையும் ஒரு சேரக் கற்கலாம், அதாவது அத்யயனம் செய்யலாம்; அல்லது ஒன்றைக் கற்ற பின்னர் மற்றதைக் கற்கலாம்; அல்லது கற்காமல் விடலாம். ஆனால் அதர்வ வேதம் கற்கவேண்டுமெனில் மீண்டும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும். இதைக் குறித்துப் பார்ப்பதற்கு முன்!

ரிக் வேத சம்ஹிதை முழுவதும் ஸ்தோத்திரங்களால் ஆனது! யஜுர்வேதமோ எனில் யக்ஞ சம்பந்தமான வழிபாட்டுக் காரியத்தில் உள்ள கிரமங்களை வரிசைப்படுத்திக் கொடுப்பது. ரிக் வேதத்தில் உள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்ற காரியத்தில் பொருத்துவது! ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் யஜுர் வேதத்திலும் காணப்பட்டாலும் உரைநடையில் யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்வது யஜுர்வேதம். யஜுர் வேதம் தனக்குள்ளேயே பல மாறுபாடுகளைக் கொண்டது. இரண்டு தனி வேதங்களாகப் பிரிந்துள்ளது.ஒன்று சுக்ல யஜுர் வேதம், மற்றது க்ருஷ்ண யஜுர் வேதம். ஸாமம் என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது என்று அர்த்தம். இப்படித் தான் தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு நெருங்கி வரச் செய்வது ஸாமவேதம். ரிக் வேதத்தில் உள்ள ஸ்துதிகளே சாம வேதத்தில் பாட்டாக வெளிப்படுகின்றன. ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம் தான்! ஆத்ம ஸ்ரேயஸையும், தேவதா ப்ரீதியையும் விசேஷமாக அளிப்பது ஸாம வேதம்.

இதல்லாமல் அதர்வன் என்றால் புரோகிதர் என்னும் பொருள் உண்டு. அதர்வ ரிஷியின் மூலம் வெளிப்பட்டுப் பிரபலமடைந்ததாலேயே அதர்வ வேதம் அல்லது அதர்வண வேதம் என்னும் பெயர். இதிலும் யஜுர் வேதம் போல உரைநடை, செய்யுள் என இருவடிவங்களும் இருக்கின்றன.  மற்ற வேத மந்திரங்களுக்கும் அதீத சக்தி உண்டென்றாலும் அதர்வ வேத மந்திரங்களின் சக்தி இன்னும் தனித்தன்மை பெற்றவை. மிக உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்கள் எல்லாம் அதர்வத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவற்றை அத்யயனம் செய்பவர்கள் மிகக் குறைவு!

 வட மாநிலங்களில் ஒரிசாவில் இருக்கும் ஆதர்வணிக பிராமணர்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்கின்றனர். இன்னும் குஜராத், சௌராஷ்ட்ரா, கோசலம் ஆகிய நாடுகளிலும் அதர்வ வேதத்தைச் சேர்ந்த சிலர் இருக்கின்றனர். நாம் உபநயனம் செய்விக்கையில் சொல்லப்படும் காயத்ரி மந்திரம் முதல் மூன்று வேதங்களின் ஸாரம் எனச் சொல்லப்படும். ஏனெனில் வேதங்கள் மூன்றே என்றொரு கருத்து இருந்ததால் அதில் அதர்வத்தைச் சேர்க்கவில்லை. ஆகையால் அதர்வ வேதம் பயிலும் முன்னர் அதர்வ காயத்ரியை உபதேசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ண விரும்புவோர் புனர் உபநயனம் செய்து கொண்டு அதர்வ காயத்ரியை உபதேசமாகப் பெற வேண்டும். ஆனால் த்ரிபாதா எனப்படும் பொதுவான காயத்ரி மந்திரத்தை ஒரு முறை உபதேசம் பெற்றோர் ரிக், யஜுர், சாமம் மூன்றில் எந்த வேதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் புனர் உபநயனம் செய்து கொள்ளாமலேயே மற்ற இரு வேதங்களை அத்யயனம் செய்யலாம். அதர்வ வேதம் அத்யயனம் செய்வதாக இருந்தால் மட்டுமே புனர் உபநயனம் செய்து கொண்டு அதர்வ காயத்ரி மந்திர உபதேசம் பெற வேண்டும்.

(நன்றி: தெய்வத்தின் குரல்)

இனி நம் த்வைபாயனர் என்ன ஆனார் என்பதைப் பார்ப்போம். முந்தைய பதிவில் சொன்னபடி வழிபாடுகள் முடிவடைந்ததும், மஹா அதர்வண ரிஷி, த்வைபாயனரைத் தன் பக்கம் திருப்பிக் கொஞ்ச நேரம் அவரையே பார்த்தார். அவர் புருவம் நெரிந்தது. த்வைபாயனரின் நெஞ்சுக்குள் ஊடுருவுவது போல அவரையே பார்த்தவண்ணம் இருந்தார். இந்த இளைஞன் சற்றும் அக்ஷரம் பிசகாமல், த்வனி மாறாமல் ஸ்ருதி மாறாமல் அதர்வ வேதத்தைச் சொல்கிறானே! அது எப்படி? பின்னர் திரும்பிய ரிஷி ஏரியை விட்டு வெளியேறினார். அங்கே ஏரிக்குள்ளாக ஒரு மாணவன் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த பைலரைப் பார்த்தார். அவர் மூச்சு விடுவதற்கு மட்டுமே தலையை மட்டும் வெளியே வைத்து அவர் முழு உடலும் நீருக்குள் கிடந்தது. பின்னர் திரும்பி சுமாந்துவைப் பார்த்து, “சுமாந்து, பையைத் திற!” என்றார். பை திறக்கப்பட்டதும் அதிலிருந்து சில மூலிகைகளை வெளியே எடுத்தார். சுமாந்துவைப் பார்த்து, “அக்னிக் குண்டத்திலிருந்து சாம்பலை எடுத்து வா!” என்றார். சுமாந்துவும் அப்படியே சென்று அக்னிக் குண்டத்திலிருந்து சாம்பலை எடுத்து வந்தான். அந்தச் சாம்பலைப் பைலரின் நெற்றி, கன்னங்கள், மார்பு, கால்கள் அனைத்திலும் பூசி விட்டார். அதன் பின்னர் யம தர்ம ராஜனை வழிபட்டு மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்.

“ஏ, யமதர்மராஜனே, மரணத்தின் அதிபதியே
இந்த இளைஞனுக்குக் கொஞ்சம் கருணை காட்டு
கருணையின் பலன்களை இவன் அனுபவிக்கட்டும்!
ஏ,சூரியனே, ஒளிக்குக் கடவுளே, கண்ணெதிரே தோன்றும் கடவுளே!
இவ்வுலகைத் தன் ஒளியால் காப்பவனே!
விரைந்து வா! எழும்பி வா! மரணத்தின் பிடியிலிருந்து இவனை விடுவித்துவிடு!
இவனை மூழ்க அடித்துவிடாதே! நீயும் மூழ்கிவிடாதே!
இவ்வுலகிலிருந்து நீயும் சென்று விடாதே! இவனையும் செல்ல விடாதே!
அக்னியின் பார்வையிலிருந்தும் சூரியனின் பார்வையிலிருந்தும் இவனை
விலகிச் செல்லவிடாதே!
இவற்றைச் சொன்ன வண்ணம் அதர்வ ரிஷி சற்றே நிறுத்தினார். பைலரின் முகத்தில் மீண்டும் அந்தச் சாம்பலைப் பூசி விட்டார். மீண்டும் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
“விண்ணிற்கும், மண்ணிற்கும் அதிபதிகளான சூரியனும் சந்திரனும் இவனைப் பாதுகாக்கட்டும்!
அகன்று விரிந்த இந்தப் பிரபஞ்சத்தின் விண்ணும், கடலும், நீரும் இவனைப் பாதுகாக்கட்டும்!
இவன் மேல் எறியப்பட்ட அந்த ஏவுகணை பயனற்றுப் போகட்டும்!
எப்போதும் கவனமாகவும் கண்காணிப்போடும் இருக்கும் அந்தக் கடவுளரின் பார்வை இவனைப் பாதுகாக்கட்டும்!
என்றென்றும் தூங்காமல் விழித்திருந்து நம்மை எல்லாம் பாதுகாக்கும் அந்தப் பரம்பொருளின் பார்வை இவனை பாதுகாக்கட்டும்!
என்றென்றும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரம்பொருள் இவனைப் பாதுகாக்கட்டும்!
இந்த மனிதனை நம்முடன் இருக்கச் செய்வாய், ஏ, பரம்பொருளே!
இவ்வுலகை விட்டு இவனைச் செல்ல விடாதே!
நான், மஹா அதர்வன், பிருகு முனிவரின், மற்றும் ஆங்கிரஸ முனிவரின் ஆசிகளுடனும் கருணையுடனும்
இவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி உள்ளேன்.

அதன் பின்னர் மஹா அதர்வ ரிஷி சில மூலிகைகளைத் தண்ணீரில் நனைத்தார். அதிலிருந்து சில சொட்டுக்களைப் பைலரின் உதட்டில் விட்டார். விடும்போதும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“இந்த மூலிகைகள் ஜிவாலா, நாகரிஷா மற்றும் ஜிவான்டி ஆகியவையால் எப்போதும் நன்மையே கிடைத்துள்ளது. வெற்றியே கிடைக்கும். இந்த வெற்றி அளிக்கும் மூலிகைகளைச் சேமிப்பதும் ஓர் ஆனந்தமே! ஏ, பரம்பொருளே, நீ எழுந்தருளி இந்த மனிதனின் உயிரைக் காப்பாற்றி அவனை ஆபத்திலிருந்து விலக்கியும் மரணத்தின் பிடியிலிருந்து விடுவித்தும் விடு!”

த்வைபாயனர் அனைத்தையும் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றிருந்தார். தன் கைகளைக் கூப்பியவண்ணம் மரியாதைக்குரியவகையில் ஜாபாலி ரிஷியை வணங்கிக் கொண்டு நின்றிருந்தார். எவ்விதமான சிரமங்களும் இல்லாமல் மஹரிஷியால் இப்போது சொல்லப்பட்ட மந்திரங்கள் அதற்குரிய உச்சரிப்புடனும், ஏற்ற, இறக்கங்களுடனும் அவர் மனதில் பதிந்தது. இது அதர்வ வேதத்தின் ஒரு பகுதி என்றும் இதை நம் தந்தை அறிந்திருக்கவில்லை என்பதையும் த்வைபாயனர் உணர்ந்தார். மந்திரங்களை உச்சரித்தவண்ணமே மஹா அதர்வ ரிஷி பைலரின் உடலில் முழுக்க முழுக்க அக்னிக் குண்டத்துச் சாம்பலைப் பூசி விட்டுக் கொண்டே இருந்தார். அது வரை மூச்சு விடக் கூடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பைலரின் மூச்சு ஒழுங்குக்கு மெல்ல மெல்ல வர ஆரம்பித்தது. அதன் பின்னர் அனைத்துக் கடவுளருக்கும் தங்கள் வணக்கஙக்ளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்ட பின்னர் அனைவரும் காட்டில் இருந்து பறித்துவரப் பட்ட பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றை உணவாக உண்டனர்.

பின்னர் அந்தப் புனிதமான நெருப்பு முறைப்படியான சடங்குகளைச் செய்து அணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜாபாலி ரிஷியின் சீடர்கள் அனைவரும் சங்குகளை ஊதிக் கொண்டு இருவர் இருவராக வரிசையாகச் செல்ல ஆரம்பித்தனர். ஒரு சின்ன ஊர்வலம் போல் இருந்தது அது. பைலரைத் தாற்காலிகமாகத் தயாரிக்கப்பட்டதொரு பல்லக்குப் போன்ற ஊர்தியில் அமரவைத்து இருபக்கமும் இருவர் அதைத் தூக்கியவண்ணம் வர ஊர்வலம் நகர ஆரம்பித்தது. த்வைபாயனரும் சுமாந்துவும் சேர்ந்து சென்றனர். அப்போது மீண்டும் ஜாபாலி ரிஷியின் வசியம் த்வைபாயனரிடம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாற்போல் உணர்ந்தார். தன்னையும் அறியாமல் இயந்திரத் தனமாக ஜாபாலி ரிஷியைப் பின் தொடர்ந்தார் த்வைபாயனர்.

3 comments:

ஸ்ரீராம். said...

அத்யயனமா அத்யாயனமா?

சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு இந்தப் பதிவின் ஆரம்பத்தில் ஒரு மறைமுக பதில்!

ஜாபாலி முனிவர் (அதர்வண) வழியில் சொல்லப் படுவதுதான் தேல்கடிக்கும், பாம்புக்கடிக்கும் மந்திரிப்பது போன்றவையா?

sambasivam6geetha said...

//அத்யயனமா அத்யாயனமா?//

அத்யயனம் தான் சரியானது. உங்க வீட்டுக்கு சாஸ்திரிகள் வரச்சே அவர் கிட்டேயும் கேட்டுக்குங்க.

ஆமாம் தேள்கடி, பாம்புக்கடி, விஷத்தை இறக்குதல் போன்றவை எல்லாம் அதர்வ வேதத்தைச் சார்ந்தவையே!

மோகன்ஜி said...

ரசித்துப் படித்தேன் அக்கையாரே!