Monday, June 20, 2016

த்வைபாயனரின் கோரிக்கை!

அன்று மதியம் த்வைபாயனர் ஹஸ்தினாபுரத்திலிருந்து தான் விடைபெறுவதாகச் சொல்வதற்காக அரசமாளிகைக்குச் சென்றார். சக்கரவர்த்தி ஷாந்தனுவைச் சந்திக்கச் சென்றபோது காங்கேயன் தன் வழக்கமான இடத்தில் அமர்ந்த வண்ணம் தந்தையின் தோள்பட்டையைத் தடவிக் கொடுத்தவண்ணம் இருந்தார். இடப்பக்கமாக மஹாராணி சத்யவதி அமர்ந்திருந்தாள். ராஜகுருவான ஆசாரியர் விபூதியும் அங்கே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். த்வைபாயனர் உள்ளே நுழைந்ததுமே காங்கேயன் அங்கே இருந்த மந்திரி குனிக்கையும் மற்ற ஊழியர்களையும் அறையை விட்டு வெளியேறக் கட்டளையிட்டார். அனைவரும் சம்பிரதாயமாக ஒருவருக்கொருவர் வணங்கிக் கொண்டபின்னர் தன் தந்தையின் தோளை மீண்டும் பிடித்துக் கொண்ட வண்ணம் காங்கேயன் பேச ஆரம்பித்தார். “த்வைபாயனரே, நாளை நீங்கள் இங்கிருந்து விடைப் பெறுகிறீர்கள். நான் தந்தையுடனும், தாயுடனும் நீங்கள் முந்தாநாள் கூறியவற்றைக் குறித்துக் கலந்து ஆலோசித்தேன். தந்தை சரியாகவே சொல்கிறார். நாங்கள் உங்களுக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடனை எவ்வகையிலேனும் தீர்த்தாக வேண்டும். தயவு செய்து சொல்லுங்கள்! நாங்கள் எவ்வகையில் உங்களுக்கு உதவ முடியும்?”

“பிரபுவே, என்னுடைய முதல் விருப்பம் தர்மக்ஷேத்திரத்தில் ஓர் ஆசிரமத்தை ஸ்தாபிப்பது ஆகும்.”

“நாங்கள் இங்கிருந்தே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து விடுகிறோம்.” என்றார் காங்கேயன். “இல்லை, இல்லை, அதற்கு உடனடியாக அவசரம் ஒன்றும் இல்லை. நான் முதலில் யமுனைக்கரையில் இருக்கும் ஆசிரமத்திற்குச் சென்று என் தந்தையின் சீடர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தர்மக்ஷேத்திரத்துக்கு அழைத்து வரப்போகிறேன்.”

“உங்கள் தந்தை, பராசர முனிவர், யமுனைக்கரையில் ஆசிரமத்தில் சீடர்களை விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று ஷாந்தனு கேட்டான். அதற்கு மஹாராணி சத்யவதி பதில் சொன்னாள். “ஆம், ஆம்! நான் அறிவேன் அவர்கள் அனைவரையும். சஹஸ்ரார்ஜுனனால் மதிப்புக்குரிய முனிவரின் ஆசிரமம் அழிக்கப்பட்ட சமயம், பராசர முனிவரின் சீடர்கள் பலரும் கொல்லப்பட்டனர். அங்கிருந்து வெகு சிலரே தப்பினார்கள். அவர்களில் ஒரு சிலர் வெகுகாலமாக அங்கே இருந்தவர்கள். அவர்கள் அக்கம்பக்கம் இருந்தச் சின்னச் சின்ன ஆசிரமங்களில் தங்களுக்கு அடைக்கலம் தேடிக் கொண்டனர்.”என்று மிக மிக மெதுவாகவும், மிருதுவாகவும் மிகவும் யோசித்து யோசித்துக் கூறினாள் சத்யவதி. அப்போது காங்கேயர் த்வைபாயனர் பக்கம் திரும்பி, “உங்கள் தந்தை இந்தக் கலவரத்திலிருந்து எப்படித் தப்பினார்?” என்று கேட்டார்.

“என் தந்தையின் ஆசிரமத்தை அழிக்கவேண்டி சஹஸ்ரார்ஜுனன் வந்த சமயம் அவர் ஆரியத் தலைவர்களிடம் உதவி கேட்டுச் சென்றிருந்தார். அங்கே இல்லை. ஆகவே அவரைக் கொல்லவில்லை. உயிருடன் தப்பினார். ஆனால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதனால் கால் உடைந்தது. என்றாலும் விடாமல் அருகிலுள்ள ஆசிரமங்களுக்கு விடாமல் சென்று தன் சீடர்களைக் கண்டு வருவார். இது நான் பிறந்து வளர்ந்த பின்னரும் தொடர்ந்து நடந்தது. என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அவருடைய பயணங்களில் அவர் ஆசிரமங்களைச் சென்று அங்கே கற்பித்ததோடு அல்லாமல் நேர்மையாகவும்,எளிமையாகவும் வாழ வேண்டிய அவசியத்தையும் கூறுவார். தானே அப்படி வாழ்ந்தும் காட்டினார். வரும் தலைமுறைக்காக வேதங்களைக் கட்டிக் காத்து ரக்ஷிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார் அவற்றுக்காகவே வாழச் சொல்லுவார். ஆகவே இந்த ஆசிரமங்களுக்கெல்லாம் நான் சென்று அங்குள்ள என் தந்தையின் சீடர்களில் எத்தனை பேருக்கு என்னோடு தர்மக்ஷேத்திரம் வருவதற்கு விருப்பம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”

“ஏன் இப்படி ஒரு சாபம் நிறைந்த இடத்துக்குச் செல்லவேண்டும்? நாம் கங்கைக்கரையில் ஓர் விசாலமான இடத்தைத் தேர்ந்தெடுப்போம். அங்கே நீங்கள் உங்களுக்கென ஓர் ஆசிரமத்தை நிர்மாணித்துக் கொள்ளலாம்.” என்றார் காங்கேயர். த்வைபாயனர் தலையை ஆட்டி மறுத்தார். “கங்கைக்கரையின் ஆசிரமங்கள் தந்தையின் விருப்பத்துக்கு ஒத்தவையாகச் சொல்ல முடியாது. அங்கே நாம் நினைப்பதை அடைய முடியாது!” என்றார். இதைக் கேட்ட ஆசார்ய விபூதி இதைத் தன்னைக் குறித்துச் சொல்லப்பட்டதாக நினைத்தார். ஏனெனில் இத்தகைய கங்கைக்கரை ஆசிரமங்கள் பலவற்றிற்கு அவர் போஷகராக இருந்து வந்தார். ஆகவே த்வைபாயனரை மறுத்துப் பேச நினைத்துப் பின் ஏதோ நினைத்தவராய்த் தன்னை அடக்கிக் கொண்டார். த்வைபாயனர் மேலே தொடர்ந்தார்.

“நேர்மையும் தர்மமும் நிலைக்க வேண்டுமானால், அவை பாதுகாக்கப்படவேண்டுமானால் தர்மக்ஷேத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அது தான் தர்மத்தின் உலகம்! சத்திய லோகம். அங்கே இருப்பவர்கள், இருந்தவர்கள், இனி இருக்கப் போகிறவர்களால் வேதங்கள் மட்டுமல்லாமல் அவை சொல்லும் தர்மமும் காப்பாற்றப்படும்!”  ஆசாரியர் விபூதிக்குத் தாங்க முடியாத எரிச்சலும் கோபமும் வந்தது. இந்த இளம் துறவி சிறிதும் மரியாதை அற்றவன் என்றே எண்ணினார். ஆனால் காங்கேயரோ, “சரி, த்வைபாயனரே! இதில் உங்கள் விருப்பம் தான் முக்கியம்! நான் வேட்டைக்காரர்களையும் காடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பலரையும் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் அங்கிருக்கும் காட்டு மிருகங்களை முடிந்தவரை வேட்டையாடிக் கொன்றுக் காட்டு மரங்களை அப்புறப்படுத்தியும் சுத்தம் செய்து கொடுப்பார்கள்.” என்றார்.

“இன்னும் வேறே என்ன செய்ய வேண்டும்? நாங்கள் செய்யவேண்டியது ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்!” என்றான் ஷாந்தனு.

சற்று நேரம் கண்களை மூடி யோசித்த த்வைபாயனர் பின்னர் கண்களைத் திறந்து, “பரத வம்சத்தில் சிறந்த அரசனே! உன்னால் தான் உன்னுடைய குரு வம்சத்தினால் தான் கடைசியாக ஓர் முயற்சி செய்து ஹைஹேயர்கள் ஒழிக்கப்பட்டனர். ஓநாய்களின் சாம்ராஜ்யமாக இருந்த அந்த இடம் இப்போது உன் வம்சத்தின் பெயரால் குருக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது!” என்றார்.பின்னர் மீண்டும் பேச்சை நிறுத்தி மௌனமானார். அதன் பின்னர் தன் கண்களைத் தரையில் பதித்துக் கொண்டார். அவர் பேசுவதற்கான முயற்சிகளை எல்லாம் ஒளிக்கடவுளிடமிருந்து பெற முயற்சிக்கிறாரோ என்னும்படி தோன்றியது. மீண்டும் பேசிய த்வைபாயனர், “மன்னா, நீங்கள் பல தேசத்து மன்னர்களை எல்லாம் வெற்றி கொண்ட வெற்றி வீரர்! அனைத்து ஆரிய அரசர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட மாபெரும் சக்கரவர்த்தி! ஆனாலும் அடக்கத்தின் காரணமாகவோ அல்லது பணிவின் காரணமாகவோ நீங்கள் சம்பிரதாயமான யக்ஞங்களைச் செய்யவில்லை! ஒரு சக்கரவர்த்தி செய்யக் கூடிய வாஜ்பேய யாகமோ, ராஜசூய யாகமோ அல்லது அஸ்வமேத யாகமோ உங்களால் செய்யப்படவில்லை!”

இதைச் சொன்ன த்வைபாயனர் மீண்டும் பேச்சை நிறுத்தி மௌனமானார். அனைவரும் அவர் அடுத்துச் சொல்வதற்காகக் காத்திருக்கையில் அவர் மேலும் பேசுவார்; “ மாட்சிமை பொருந்திய மன்னா! வேதங்களால் அவற்றின் வைத்திய முறையால் உங்கள் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கிறது.இது சூரிய பகவானின் கட்டளை என்றே நான் எண்ணுகிறேன். தர்மக்ஷேத்திரம் உங்களால் உங்கள் வம்சத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பது சூரிய பகவானின் கட்டளை! ஆகையால் நீங்கள் மேலே சொன்ன யாகங்களில் ஏதேனும் ஒன்றை தர்மக்ஷேத்திரத்தில் நடத்தித் தர வேண்டும். அது தான் முறையானதும் சரியானதும் என்று என் எண்ணம்.” என்று சொல்லி நிறுத்தினார் த்வைபாயனர். ஆசாரிய விபூதியால் இதற்கு மேலும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. த்வைபாயனன் தன் வலையை மிகப் பெரிதாக விரித்து மன்னனை அதில் ஆழ்த்த நினைக்கிறான் என்று எண்ணினார். “ஆஹா, இது என்ன? மன்னர் இப்போதிருக்கும் நிலையில் அவ்வளவு தூரம் தர்மக்ஷேத்திரம் வரை பிரயாணம் செய்ய முடியுமா அவரால்? இது நடக்கக் கூடியதே இல்லை!” என்றார்.