Friday, June 24, 2016

"இவன் என் மகன்!"

த்வைபாயனர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் வேண்டிக் கேட்கும் தோரணையில் ஆசாரிய விபூதியைப் பார்த்தார். “ஆசாரியரே, இந்தப் பரம்பரைப் பகையை நீக்க வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? புத்தியும், ஞானமும் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்பதே வேதத்தின் சிறப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே! இதனால் வேதங்களின் மதிப்பு ஒரு போதும் குறையப் போவதில்லையே!” என்றார். சக்கரவர்த்தி தன் மெலிந்த கையைத் தூக்கித் தான் பேச வேண்டும் என்பதாக சைகை காட்டினான். பின்னர் ஆசாரிய விபூதியைப் பார்த்த வண்ணம் மெல்லிய குரலில் பேசினான். “ ஆசாரியரே, மதிப்புக்குரிய த்வைபாயனரால் என் உயிர் பிழைத்திருக்கிறது. எனக்கு உயிர் கொடுத்தவர் அவரே! மேலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டதாலேயே நேற்றைய ராஜசபைக் காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறின. அவருடைய விருப்பங்களை நாம் நிறைவேற்றித் தர வேண்டும்.” என்று கூறினான்.

அதற்கு ஆசாரியர், “மன்னா! நீ சொல்வது சரியே! முனிவர்களில் சிறந்தவரான க்ருஷ்ண த்வைபாயனர் சொல்வதை நாம் ஏற்கத் தான் வேண்டும். அவருடைய விருப்பங்களை நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் என்னை அதில் போலியாக ஈடுபடும்படி செய்யாதே! எனக்குள்ளே இருக்கும் நம்பிக்கையை நான் நாசமாக்க நினைக்கவில்லை! வெளிப்பார்வைக்குத் தன் தவறுக்காக வருந்துபவர் போல் தோன்றினாலும் ஆசாரிய விபூதி உள்ளூர வெறுப்புடனும், அவமதிப்புடனும் பேசினார். அவரது பேச்சில் இது மறைமுகமாகப் புகுத்தப்பட்டிருந்தது. காங்கேயர் ஆசாரியர் பக்கம் திரும்பி, “மாட்சிமை பொருந்திய ஆசாரியரே, இப்போதுள்ள ஸ்ரோத்திரியர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்தப் பகையை நீக்கி அதை சுமுகமாக முடித்து வைக்க ஒரு வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

“அது ஒன்றும் பரம்பரைப் பகை அல்ல, காங்கேயரே! நம்பிக்கை! உண்மையை, சத்தியத்தை நம்புவது! நேர்மையாகவும், உண்மையாகவும் நான் வேதத்தை முழு மனதோடு நம்புகிறேன். மேலும் அது மூன்றே பகுதிகளைக் கொண்டது என்றும் மூன்று வேதங்களே உள்ளன என்றும் நம்பி வருகிறேன். அப்படி இருக்கையில் இந்த அதர்வ வேதத்தை நான் வேதங்களின் ஒரு பகுதியாக எப்படி ஏற்பேன்?” என்று கேட்டார். மேலும் மறுப்பாகத் தலையையும் ஆட்டினார். த்வைபாயனருக்குத் தாம் இருந்த தர்மசங்கடமான நிலை நன்கு புலப்பட்டது. என்றாலும் புன்னகையுடனேயே பேசினார். “ஆசாரியரே, இந்தப் பரம்பரைப் பகை வாஜ்பேய யக்ஞத்திலும் உள்புகவேண்டும் என்பதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த யக்ஞம் ஆசாரிய விபூதி அவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்கிறாரோ அப்படியே அதன் தலைமைப் புரோகிதர் (அத்வார்யு) செய்து கொடுப்பார். ஆசாரிய விபூதி அவர்களின் இந்த வெளிப்படையான பேச்சை நான் மிகவும் மதிக்கிறேன்; அதில் மகிழ்ச்சியும் அடைகிறேன். மேலும் அவர் ஒன்றும் தவறாக எதுவும் சொல்லவும் இல்லை; செய்யவும் இல்லை; இவர் கூறுவதைத் தான் என் கொள்ளுப்பாட்டனார் வசிஷ்ட முனிவரும் கூறி வந்திருக்கிறார்.”

ஆசாரிய விபூதி மீண்டும் தலையசைத்து மறுப்பைத் தெரிவித்தவர் மன்னனைப் பார்த்தார். வேண்டுதல் கேட்கும் தோரணையில், “மன்னா, எனக்கு இப்போது வயது அதிகம் ஆகிவிட்டது. அதிலும் உன் உடல் நிலை சரியில்லாத சமயத்தில் த்வைபாயனன் வந்து அதிசயங்கள் செய்து உன்னைக் காப்பாற்றிக் கொடுத்த அந்தக் கணத்திலேயே எனக்குப் புரிந்து விட்டது. இனி குரு வம்சத்திற்கு ஆசாரியனாக நான் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அது முடிவுக்கு வந்து விட்டது! ஓர் இளம் துறவி, இளம் முனிவர், அது ஒரு வேளை த்வைபாயனராகவே இருக்கட்டும்! இங்கே ராஜகுருவாக எனக்குப் பின்னர் பொறுப்பேற்கத் தகுதி வாய்ந்தவரே ஆவார்!” என்று முடித்தார். அடக்கத்துடன் குறுக்கிட்ட த்வைபாயனர், “ஆசாரியரே! என்னால் இந்தப் பொறுப்பை நிர்வகிக்க முடியாது! இதை நான் முற்றிலும் ஏற்கப் போவதில்லை. இங்கே ராஜகுருவாக நான் அமர்ந்து விட்டால் எதற்காக நான் இத்தனை பிரயாசைப் படுகிறேனோ அது ஒருக்காலும் நிறைவேறாது. வேதங்களை மீண்டும் புனர் நிர்மாணம் செய்வதும், அதை ஒட்டி தர்ம சாம்ராஜ்யத்தை ஏற்படுத்துவதும், தர்மக்ஷேத்திரத்தைப் புதுப்பிப்பதுமே என் வாழ்க்கை லட்சியங்கள். அதிலிருந்து நான் ஒருபோதும் வழுவ மாட்டேன்!” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மஹாராணி சத்யவதி அவ்வளவு நேரமும் அனைவரின் பேச்சுக்களையும் கேட்டவண்ணம் மௌனமாக அமர்ந்திருந்தாள். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தாள். இப்போது அவள் திடீரெனத் தன் முக்காட்டை நீக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தாள். அவள் கண்கள் கோபத்தில் ஜ்வலித்தன. முகம் நெருப்பிலிடப்பட்ட தாமிரம் போல் செக்கச் சிவந்திருந்தது. அவள் பேச்சு தீர்மானமாக இருந்தது. “ மாட்சிமை பொருந்திய மன்னா, ஆரிய புத்திரரே! நான் இந்த சம்பாஷணையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நான் ஒரு பெண் தான்; என்னால் வேதங்கள் மூன்று தொகுப்புக்களா அல்லது நான்கு தொகுப்புக்களா என்பதைக் குறித்து விரிவாகப் பேச இயலாது! அவ்வளவுக்கு எனக்குத் தகுதியும் இல்லை!”

அங்கே அமர்ந்திருந்த அனைவருக்கும் மன்னனுக்கும் ஆச்சரியம் மேலிட்டது. அதிலும் எப்போதும் இனிமையாகவும் மென்மையாகவும் பேசும் மஹாராணிக்கு இவ்வளவு கோபமும் வருமா? அவள் குரலில் இத்தனை கடுமையும் காட்டுவாளா? கண்களில் எத்தனை ஆக்ரோஷம்? மன்னன் நிமிர்ந்து அமர்ந்தான். “ஆரிய புத்திரரே, ஸ்ரோத்திரியர்களுக்குள்ளே எத்தனை மனவேறுபாடுகள் இருந்தாலும் அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைச் சொல்லி விடுகிறேன். நானோ என்னுடைய இரு புத்திரர்களோ த்வைபாயனர் இல்லாத எந்த யக்ஞத்திற்கும் வரப்போவதில்லை. நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. வாஜ்பேய யக்ஞம் நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி, த்வைபாயனர் ஏற்படுத்தப் போகும் ஆசிரமம் நன்கு நிர்மாணிக்கப்படுவதைக் காண்பதற்காக நாங்கள் அதிலும் நான் குருக்ஷேத்திரம் செல்லப் போகிறேன். அங்கே கட்டாயம் ஆசிரமம் ஏற்படுத்தப் படவேண்டும்.” சற்றே நிறுத்தினாள் சத்யவதி.

பின்னர் மீண்டும் ஜ்வலிக்கும் கண்களோடு அவள் கூறியதாவது! “மாட்சிமை பொருந்திய முனிவரின் உறுதிமொழி அவருடைய சபதம்” இந்த இடத்தில் அவள் குரல் தழுதழுத்தது. முனிவரின் பெயரை அவளால் கூற முடியவில்லை! சற்றே நிறுத்திவிட்டு……….”அவருடைய கடைசி ஆசை நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று முடித்தாள். அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எவருக்கும் பேச்சே வரவில்லை. அன்று வரை மஹாராணிக்கு இவ்வளவு கோபம் வரும் என்றோ, அவள் கோபமாகப் பேசுவாள் என்றோ மன்னனோ மற்றவர்களோ அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர் சத்யவதி சும்மா இருக்கவில்லை. ஆசாரிய விபூதியை நோக்கித் திரும்பினாள். “ ஆசாரியரே, நான் ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்து நீங்கள் எனக்கு ஆசானாக இருந்து வருகிறீர்கள். எனக்குப் பல விஷயங்களையும் கற்பித்தீர்கள். மேலும் ஆரியபுத்திரருக்கு மிகவும் விசுவாசமாக இருந்து வருகிறீர்கள்.  உங்களுடைய புத்திக்கும் ஞானத்துக்கும், விவேகத்துக்கும் நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறேன். மதிக்கிறேன். ஆனாலும் ஆரிய புத்திரரின் விருப்பங்களுக்கும் மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும். அவர் விரும்புகிறபடியே எல்லாம் நடக்க வேண்டும். நீங்கள் இந்த வாஜ்பேய யாகத்துக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வேண்டும் என்று நானும் இப்போது விரும்புகிறேன். அது எங்கள் கட்டளையும் கூட. இப்போது ஆரியபுத்திரர் மிகவும் களைத்து விட்டார். ஆகவே சற்று ஓய்வு எடுக்கட்டும். நீங்கள் ஹஸ்தினாபுரத்தின் மற்ற ஸ்ரோத்திரியர்களையும் இது குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யுங்கள்.” என்ற சத்யவதி தவிர்க்க முடியாத மதிப்புடனும் மரியாதையுடனும் ஆசாரிய விபூதியைப் பார்த்தாள்.

த்வைபாயனர் தன் தாய்க்கு இவ்வளவு கோபம் வரும் என்று தெரிந்திருக்கவில்லை. அவருக்குத் தன் தாயின் இந்த மாபெரும் அன்பு அலை தன்னை மூழ்கடித்துவிட்டதாகத் தோன்றியது. ஆசாரியர் ஏதும் பேசாமல் மௌனமாக எழுந்து மன்னனையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து விட்டு அவ்விடம் விட்டு அகன்றார். த்வைபாயனரும் கிளம்பத் தயார் ஆனார். அங்கிருந்த அப்போதைய சூழ்நிலை மிகவும் இறுக்கமாக இருந்தது. எழுந்து கொண்டு தன் தண்டத்தையும் சுரைக்குடுக்கையையும் எடுத்துக் கொண்ட த்வைபாயனர் மன்னனையும், சத்யவதியையும் ஆசீர்வதிக்கக் கைகளை உயர்த்தினார். அவர் தன் வலக்கையை உயர்த்த இருந்த அதே தருணத்தில் மீண்டும் சத்யவதி குறுக்கிட்டாள். அவர் அவ்வாறு செய்யும் முன்னரே ஆணையிடும் தோரணையில் சத்யவதி பேச ஆரம்பித்தாள். “இப்படி இல்லை!” என்றவள், “கிருஷ்ணா, நீ ஆரியபுத்திரரையும், என்னையும்  தினம் தினம் இங்கிருந்து கிளம்புகையில் ஆசீர்வதித்து விட்டுக் கிளம்புகிறாய். இப்படி ஒரு மரியாதை எனக்கு இனிமேல் தேவையில்லை! நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை!” என்றாள்.

சக்கரவர்த்தி ஷாந்தனுவுக்குக் கண்கள் விரிந்தன. ஆச்சரியம் மீதூற சத்யவதியையே வெறித்தான். இப்படி ஒரு அதிரடியான பேச்சை சத்யவதியிடமிருந்து அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதன் முக்கியத்துவமும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் சத்யவதி அவனைப் பார்த்து, “ஆர்ய புத்திரரே, நமக்குத் திருமணம் ஆகும் முன்னர் நான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன் அல்லவா? எனக்கு ஏற்கெனவே ஓர் மகன் உண்டு என்பதைக் குறித்துத் தெரிவித்திருக்கிறேன். அவன் தந்தையுடன் சென்று விட்டான் என்றும் கூறி இருந்தேன்.” தன் விரல்களை த்வைபாயனரை நோக்கி நீட்டியவண்ணம் சத்யவதி தெரிவித்தாள். “இதோ இவன் தான் அந்த மகன்!”  மன்னன் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சத்யவதிக்கு மன நலம் பாதிக்கப்பட்டு விட்டதோ என்று சம்சயித்தான். ஆனால் சத்யவதியோ, “கிருஷ்ணா, சக்கரவர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிக் கொள்! அவர் உன் தந்தையின் ஸ்தானத்தில் இப்போது இருக்கிறார். உனக்கு ஓர் தெய்வத்தைப் போன்றவர் இவர்!” என்றாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.