Monday, September 19, 2016

சுகருக்கு எத்தனை தாய்கள்?

“த்வைபாயனா, நாம் சுகனைக் குறித்து ஓர் முடிவு எடுத்துவிட்டோமானால் அடுத்தடுத்த வேலைகளுக்கும் எளிதில் ஓர் தீர்வு கிடைத்துவிடும்!” என்றாள் ராஜமாதா! கொஞ்சம் கருணையுடன் சிரித்துக் கொண்டார் த்வைபாயனர். “அவனைப் பார்த்தாலே மிக எளிமையாகவும், கீழ்ப்படிதல் உள்ளவனாகவும், அடக்கமும் விநயமும் நிரம்பி உள்ளவனாகவும் இருக்கிறான். ஆனால் பாருங்கள், அவன் தான் எல்லாச் சிக்கல்களையும் உருவாக்கி இருக்கிறான். சிக்கல்களின் உலகமாக மாற்றி உள்ளான்.” என்றவர் தன்னைப் பெற்றெடுத்த ராஜமாதாவைப் பார்த்து, “மதிப்புக்குரிய என் தாயே! நீங்கள் தான் எப்படியாவது பேசி அவன் மனதை மாற்றி அவன் இல்லறத்தைத் தேர்ந்தெடுக்குமாறு செய்ய வேண்டும்.” என்றார்.

“மகனே, என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? நானும் ஜாபாலியாவும் பலமுறை அவனிடம் இது குறித்துப் பேசி விட்டோம். எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்து விட்டோம். அவனுக்கு எங்கள் வேண்டுகோளெல்லாம் கேலிக்குரியதாகத் தெரிகிறது போலும்! எரிச்சலூட்டும் ஓர் புன்னகையுடன் எங்களைச் சிறு குழந்தைகளைப் பார்ப்பது போல் பார்க்கிறான். அவனை விடப் பெரியவர்களாக அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஓர் தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டான். அது தான் தான் சந்நியாசியாகவேண்டும் என்பது! ஆகவே அவன் இல்லறத்தைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை!” என்றாள் ராஜமாதா கோபத்துடன். பின்னர் வாடிகாவைப் பார்த்துக் கண்களால் ஜாடை காட்ட, ராஜமாதா விட்ட இடத்திலிருந்து வாடிகா ஆரம்பித்தாள். “சுகன் எனக்கு ஒரே மகன்!” என்றவள் கண்களில் கண்ணீருடன், “அவன் ஓர் நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இல்வாழ்க்கையில் ஈடுபடாத எந்த ஸ்ரோத்திரியனும் தன் கல்வி கற்பிக்கும் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது. அவர்கள் ஈடுபாடு கல்வி கற்பிக்கையில் முழுமை அடையாது. இது தானே நம்முடைய பழமையான ஆரியர்களின் கோட்பாடுகள்! கற்பிக்கும் ஆசாரியர் இல்வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தானே கற்பிக்க வேண்டும்! அதோடு இல்வாழ்க்கையில் ஈடுபடாமல் மனைவியின் உதவி இல்லாமல் அவனால் எப்படித் தன் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முறைப்படி செய்ய முடியும்? மனைவியின் துணை இல்லாமல் செய்யும் எந்தச் சடங்கும் முற்றுப் பெற்றதாக ஆகாதே!” என்றாள் வாடிகா.

வாடிகா மேலும் தொடரும் முன்னர் ஷார்மிக்குக் கோபம் வந்து கோபத்தில் கொந்தளித்தாள். எரிமலையைப் போல் வெடித்தாள்.”இன்னும் எத்தனை நேரமாக இதையே பேசி வாக்குவாதம் செய்து கொண்டிருப்பாய்?” என்று வாடிகாவைப் பார்த்துக் கத்தினாள். தன் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, “த்வைபாயனன் இந்த ஆசிரமத்தை வழி நடத்தட்டும். அவனால் இயலாதெனில் சுகன் அந்தப் பொறுப்பை ஏற்கட்டும். என்னுடைய முடிவு இறுதியானது. அதோடு சுகதேவன் மோசாவின் இளைய சகோதரி பிவாரியைப் போன்றதொரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதற்குக் குறைந்தெல்லாம் பெண்கள் தேவையில்லை.” என்றவண்ணம் தன் தலையில் போட்டிருந்த துணியைச் சரிசெய்து கொண்டாள்.

“சுயநலக்காரர்கள்! நீங்கள் அனைவருமே சுயநலவாதிகள்!” என்றாள் ஷார்மி. “நான் என்னுடைய ஆசாரியர் இப்போது இருந்திருந்தால் என்னை என்ன செய்யச் சொல்வாரோ அதையே செய்யப் போகிறேன்.” என்றவள் வாடிகாவை முதலில் உறுத்துப் பார்த்துவிட்டுப் பின்னர் ராஜமாதாவையும் பார்த்துவிட்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கம்பீரமாக நின்றாள். வாடிகாவுக்குக் கோபம் வந்தது. ஷார்மியைக் கோபத்துடன் பார்த்தாள். இன்று வரை அவள் இதை அறிந்திருக்கவில்லையே! தன் கணவனின் வாழ்க்கையில் ஷார்மிக்கு இத்தனை அதிகாரமும், சக்தியும் இருக்கும் என்பதை அவள் தெரிந்து வைத்திருக்கவில்லை. தன்னைவிட இவளுக்குத் தான் அவரிடம் உரிமையும், அதிகாரமும் இருக்கிறது! நொந்து போனாள் வாடிகா. ஷார்மி விடவில்லை.

“த்வைபாயனன் இங்கே வரும்போது தன் தாய் உடன் இல்லாமல் தந்தையுடன் தனியாகத் தான் வந்தான். நான் தான் அவனுக்கு அம்மாவாகப் பனிரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். இன்னமும் இருக்கிறேன். அவன் என் மகன். அதோடு இல்லாமல் என் ஆசாரியரின் மானசிக புத்திரனும் ஆவான். அவருடைய ஆன்மிக வாரிசு த்வைபாயனன் தான்!” தன் கடுமையான பார்வையால் அனைவரையும் பார்த்த அவள் பார்வையில் உறுதி தெரிந்தது. அதன் பின்னர் அவள் திடீரென உணர்ச்சிமயமாக மாறினாள். “நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு அவனை “ஆசாரியனாக”வும், “குரு”வாகவும் மாற்றி விட்டீர்கள். அவனுக்கு இங்கேயும் வேலை இருக்கிறது. இங்கேயும் அவன் தேவைப்படுகிறான். அதே போல் தர்மக்ஷேத்திரத்தில். மற்ற ஆசிரமங்களில். இங்கும் அங்குமாக அவன் இருக்க வேண்டி இருக்கிறது. இப்போது அவன் இவ்வளவு பெரியவனாக, “ஆசாரிய”னாக ஆகிவிட்டதால் இங்கே எனக்காக நேரம் ஒதுக்க அவனுக்கு நேரம் இல்லை. இந்த ஆசிரமத்தைக் கவனிக்கப் பொழுது இல்லை!” என்றவள் சற்று நிறுத்திக் கொண்டாள்.

மீண்டும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “ஆகவே நான் சுகனை விடமாட்டேன். ஒருநாளும் விடமாட்டேன். அவன் இல்லறத்தை ஏற்க வேண்டும். மோசாவின் இளைய சகோதரியான பிவாரியை மணந்து கொள்ளவேண்டும். நான் இதை எல்லாம் ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். இது தான் என் முடிவு!” என்று அறிவித்தாள்.  வாடிகாவின் மனம் மிகவும் புண்பட்டு விட்டது. தான் பெற்றெடுத்து வளர்த்த தன் ஒரே மகன் மேல் ஷார்மி காட்டிய ஏகபோக உரிமையை அவளால் ஏற்க முடியவில்லை. அவள் மகன் இவ்வளவு சாதாரணமானவனா? அவளுக்கு இல்லாத உரிமையா ஷார்மிக்கு வந்து விட்டது! கோபத்துடன் ஷார்மியைப் பார்த்தாள்,”அம்மா, ஷார்மி அன்னையே, நான் அவனை என் வயிற்றில் பத்து மாதம் சுமந்திருக்கிறேன் என்பதை தயவு செய்து மறக்க வேண்டாம். அவனுக்கு ஏற்ற மணமகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு என்னுடையது மட்டுமே! உங்களுடையது அல்ல! நான் ஆசாரிய சௌனகரின் மகளை சுகனுக்கு ஏற்ற மணமகளாக ஏற்கெனவே தேர்ந்தெடுத்து விட்டேன். ஆகவே உங்கள் தேர்வு தேவையில்லை!” என்றாள் திட்டவட்டமாக.

ஷார்மி வாடிகாவை ஏளனத்துடன் பார்த்ததோடு அல்லாமல் அவளுக்கு அவமானம் உண்டாக்கும் வகையில் ஏளனம் கலந்த சொற்களை அவள் மீது வீசினாள். “ஜாபாலியின் புதல்வியே! சுகனை உன் மகன், மகன் என்றே சொல்லிக் கொள்கிறாயே! மோசா அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு போய் வைத்துக் கொல்ல முயன்ற போது நீ எங்கிருந்தாய்? நீயா அவனைக் காப்பாற்றினாய்? என் உயிரைப் பணயம் வைத்து நான் அவனுக்காக உணவும் மற்றப் பொருட்களையும் எடுத்துச் சென்று கொடுத்துக் காப்பாற்றினேன்! அதை நீ அறிவாயா? அப்படி நான் ரகசியமாக அவனுக்கு உணவளித்திருக்காவிட்டால் இன்று அவன் உயிருடன் இருந்திருக்க மாட்டான். பசியே அவனைக் கொன்றிருக்கும்! அது தெரியுமா உனக்கு? அப்போது நீ எங்கே இருந்தாய்?” கேட்டுவிட்டு மேலும் ஏளனத்துடன், “ஹஸ்தினாபுரத்து அரண்மனையில் ராஜமாதாவின் உபசாரங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தாய்! நினைவிருக்கிறதா?” என்றாள்.

வாடிகாவின் மனம் மேலும் புண்பட அவள் ஷார்மியைப் பார்த்துக் கோபமாகக் கத்த வேண்டும் என்று ஆரம்பிக்க இருக்கையில் திடீரென சுகன் கீழேயே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் திடீரெனச் சிரிக்க ஆரம்பித்தான்.  அப்போது சூழ்நிலையின் இறுக்கம் ஓரளவுக்குக் குறைய ராஜமாதா அவனிப் பார்த்து, “குழந்தாய், திடீரென ஏன் சிரிக்கிறாய்?” என்று ஆதுரத்துடன் கேட்டாள். சுகதேவரோ தன் தலையை மேலே தூக்காமலேயே அசைத்தவர் மீண்டும் வெடிச்சிரிப்புச் சிரிக்க ஆரம்பித்தார். ராஜமாதா, “ஏனப்பா இப்படிச் சிரிக்கிறாய்?” என்று மீண்டும் சுகரைப் பார்த்துக் கேட்டாள். சுகதேவர் தன் தலையை அசைத்துக் கொண்டார். பின்னர் மிக முயற்சி செய்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். தன் கைகளைக் கூப்பியவண்ணம், “மன்னிக்கவும், ராஜமாதா, மற்றும் இங்குள்ள பெரியோர்களே, என்னை மன்னிக்கவும். ஆனால் எனக்குச் சிரிப்பு அடக்க முடியாமல் வெடித்துவிட்டது!” என்றார் பணிவுடனேயே!

“அதெல்லாம் சரி, குழந்தாய்? ஆனால் எதைக் கண்டு நீ அப்படிச் சிரித்தாய்? சொன்னாயெனில் அந்த வேடிக்கையைக் கேட்டு நாங்களும் சிரிப்போமே! நீ மட்டும் சிரித்தால் போதுமா?  சொல்லப்பா!” என்றாள் ராஜமாதா மீண்டும், மீண்டும். அப்போது மீண்டும் சுகருக்குச் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டார் அவர். மேலும் பேசினார்: “இவர்கள் இருவரின் யார் என் தாய் என்பதை நினைத்து நினைத்து அதிசயித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார். இதைச் சொல்லும்போதே சிரிப்பில் அவர் உடல் குலுங்கியது. தன் சுட்டு விரலால் வாடிகாவையும், ஷார்மியையும் சுட்டிக் காட்டினார் தொடர்ந்து, “ இயற்கைக்கு மாறாக நான் இரு தாய்களுக்குப் பிறந்திருப்பேனோ என நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்தது!” என்றவர் மீண்டும் சிரித்த வண்ணம், “அல்லது எனக்குத் தாயே இல்லை! ஒரே புதிராக இருக்கிறது! எல்லோருமே என்னைத் தங்கள் மகனாக நினைக்கிறார்கள். சொந்தம் கொண்டாடுகின்றனர்.” என்றவர் ராஜமாதாவைப் பார்த்து மீண்டும் மீண்டும் சிரித்தார்.

“சுயநலமாக இருக்காதே சுகதேவா! உன்னுடைய சந்தோஷத்தைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கிறது அதை நினைத்து நினைத்து நீ சிரிக்கிறாய். அந்த உன் அனுபவத்தை எங்களுடனும் பகிர்ந்து கொள். நாங்களும் அதைக் கேட்டு மகிழ்கிறோம்.” என்றாள் ராஜமாதா. மிக முயற்சி எடுத்துக் கொண்டு தன் சிரிப்பை அடக்கியவண்ணம் சுகர் சொன்னார். “தாயே, நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் தாயே! நீங்களும் என்னை உங்கள் மகன் என்று சொல்வதற்குக் காத்திருக்கிறேன். அதே போல் தாவியும் சொல்ல வேண்டும் என்று காத்திருக்கிறேன்! இருவரும் என்னை உங்கள் மகன் என்று சொந்தம் கொண்டாடுங்கள்!” என்ற வண்ணம் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார். இதைக் கேட்ட எல்லோருமே சிரிக்க ஆரம்பித்தார்கள்.

க்ருபா மட்டும் மௌனமாகவே எல்லாவற்றையும் கவனித்து வந்தான். அவனுடைய பழங்குடி இனத்தவரின் பிரச்னைகள் பேசப்பட்டால் தவிர மற்றவற்றைக் குறித்து அவன் அதிகம் கவலைப்படவில்லை. அந்த விஷயங்களில் ஆர்வமும் காட்டவில்லை. குறிப்பாகப் பழங்குடியினரின் திருமணமோ அந்தப் பெண்கள் ஆசிரமத்துக்காரர்களோடு திருமணம் செய்து கொள்வதோ குறித்து அவன் கவலையே படவில்லை. இப்போது சுகர் சொன்னதைக் கேட்டு அவனுக்கும் சிரிப்பு வர அவனும் சிரித்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

இதில் எல்லாம் சண்டையா!