Thursday, September 29, 2016

கண்ணன் வருவான், ஏழாம்பாகம்! கண்ணனுக்குப் பிரியாவிடை!

திரு முன்ஷி அவர்கள் என்ன எழுதி இருக்கிறாரோ, எந்த வரிசையில் எழுதி இருக்கிறாரோ அப்படித் தான் நான் எழுதி வருகிறேன். மஹரிஷிகளில் நான் வியாசன் என்று கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதாக வருகிறது. ஆகவே தான் சென்ற பாகத்தில் வியாசரின் பங்கைக் குறித்துப் பார்த்தோம். வியாசாய விஷ்ணு ரூபாய! என்பதும் அனைவரும் அறிந்ததே! இதில்  என் சொந்தக் கற்பனை ஏதும் இல்லை. திரு முன்ஷி அவர்கள் எழுதி இருப்பது தான்! இப்போது யுதிஷ்டிரனின் வாழ்க்கை மூலம் கண்ணனின் பங்கைச் சொல்ல நினைக்கிறார் முன்ஷி. அதைத் தான் நான் எழுதப் போகிறேன். படிக்கிறவங்க மட்டும் மனதைத் திடம் செய்து கொண்டு படிக்கவும். நன்றி. இதை எழுதுவது “கீதா சாம்பசிவம்” ஆகிய நான் என்று நினைக்காமல் முன்ஷி ஜி சொல்லி இருப்பதைப் படிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு படிக்கவும். கடைசி பாகம் குருக்ஷேத்திரத்தோடு பாதியில் நின்று விடும். அப்போதும் கதை முடியவில்லை என்று நினைக்க வேண்டாம். கிட்டத்தட்ட இது பாகவதமும், பாரதமும் கலந்தது தான். மஹாபாரதத்தில் கண்ணனின் பங்கு மிகப் பெரியது! அதை ஒரு வரிக்குள் அடக்க முடியாது. இனி நம் கதைக்குச் செல்வோம். இந்திரப் பிரஸ்தத்தை நோக்கிச் செல்வோம்.

இந்திரப் பிரஸ்தம்! நகர் முழுவதும் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் அரச மாளிகையில் நிலா முற்றத்திலும் மற்றும் ராஜ வீதியின் தெருவோரங்களிலும் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். கண்ணன் இன்று துவாரகைக்குத் திரும்புகிறான். அவனுக்குப் பிரிவுபசார விழா! பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திலிருந்து திருதராஷ்டிரன் வெளியேற்றியதும், அவர்களை இந்திரப் பிரஸ்தத்தில் நகரை நிர்மாணிக்கச் சொல்லியும் காண்டவ வனத்தை அழிப்பதில் உதவி செய்தும் கண்ணனும் யாதவத் தலைவர்கள் பலரும் ஈடுபட்டார்கள். அவர்களில் சிலர் துவாரகைக்கு ஏற்கெனவே சென்று விட கண்ணனும் மீதம் இருந்த யாதவத் தலைவர்களும் இன்று துவாரகை திரும்ப இருக்கின்றனர். மிகப் பிரமாதமாகப் பெரிய அளவில் பிரிவுபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசாரிய தௌம்யர் தன் சீடர்களோடும் மற்ற ஸ்ரோத்திரியர்களோடும் அங்கே நின்று கொண்டிருந்தார். விடைபெற்றுச் செல்லும் விருந்தாளிகளுக்குத் தூவி ஆசிகளை வழங்கத் தயாராக அவர் கையிலும் மற்றவர்கள் கைகளிலும் அக்ஷதை இருந்தது. யுதிஷ்டிரன் கிருஷ்ணனை அவன் ரதத்தின் அருகே அழைத்து வந்து கொண்டிருந்தான். கண்ணன் ஏறி அமர்ந்ததும் ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை விரட்டத் தயாராக ரத சாரதி தாருகன் காத்திருந்தான். கைகளில் குதிரைகளைப் பூட்டி இருந்த கயிறுகளை இழுத்துப் பிடித்திருந்தான். அதையும் மீறிக் குதிரைகள் பரபரத்துக் கொண்டிருந்தன. சாத்யகியின் ரதத்தில் கிருஷ்ணனின் ஆயுதங்கள் எல்லாம் அதனதன் இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் சாத்யகி அர்ஜுனனிடம் வில் வித்தை பயின்று தேர்ச்சி அடைவதற்காகச் சில நாட்கள் இந்திரப் பிரஸ்தத்தில் தங்கிச் செல்ல இருந்தான். கிருஷ்ணன் மாளிகை வாயிலுக்கு வந்தான். “ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா” என்னும் கோஷம் உரக்க ஒலித்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் தன் இருகைகளையும் கூப்பி மக்களை வணங்கினான்.

கிருஷ்ணன் வழக்கம் போல் தன் மஞ்சள் வண்ணப் பீதாம்பரத்தை அரையில் உடுத்தி இருந்தான். தங்கச் சரிகை வேலைப்பாடு செய்த உருமாலைத் தோளில் வீசி இருந்தான். அவன் கழுத்தில் அணிந்திருந்த ரத்தினமாலை சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்தது. அவன் தலையில் அணிந்திருந்த கிரீடத்தின் மேல் ஓர் அழகான மயிலிறகைச் சூடி இருந்தான். கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும், பீமனையும் விடச் சிறியவன். ஆனால் அர்ஜுனனுக்கு ஒரு வயது பெரியவன். என்றாலும் வயது அவன் முகத்திலோ உடலிலோ தன் அடையாளங்களைப் பதிக்கவில்லை! இளமையாகவே இருந்தான். அப்போது ஆசாரிய தௌம்யர் அங்கே வந்து கிருஷ்ணன் கிளம்புவதற்கான நல்ல நேரம் நெருங்கிவிட்டதாய்க் கூறினார். தன் அத்தை குந்தியின் கால்களில் விழுந்து வணங்கிய கிருஷ்ணன், திரௌபதியைப் பார்த்து அன்பான புன்னகை புரிந்து  விடைபெற்றான். தன் சின்னத் தங்கை, அருமைத் தங்கை இப்போது அர்ஜுனனின் மனைவியாக ஆகி இருப்பவள் சுபத்ராவின் சோகம் தோய்ந்த முகத்தைத் தூக்கிப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவள் கன்னத்தில் குறும்புடன் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஐந்து சகோதரர்களையும் அவரவர் கன்னங்களில் தட்டிக் கொடுத்தும், அழுத்திக் கொடுத்தும் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றான்.

சுபத்ராவைப் பார்த்து, “சுபத்ரா, அர்ஜுனனைக் கடத்துவதற்காக நீ என் ரதத்தைத் திருடினாய் அல்லவா? அதை நான் இப்போது திரும்பிப் பெறலாமா?” என்று கேட்டான். சுபத்ராவுக்கு நாணம் மீதூறியது. மெல்லத் தன் கண்களை மட்டும் மேலே தூக்கித் தன் அருமை அண்ணனைத் தான் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பார்த்து பிரமித்தவனை, தன் அன்புக்குரியவனைப் பார்த்தாள். பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனுக்கு இருபக்கங்களிலும் நடந்து வந்தார்கள். நகுலனும், சஹாதேவனும் சாத்யகியுடன் பக்கவாட்டில் வந்தனர். ரதத்தை நெருங்கினார்கள். யுதிஷ்டிரன் அப்போது, “நில், கிருஷ்ணா, கொஞ்சம் பொறு. உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!” என்ற வண்ணம் கிருஷ்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். “என்ன அது?” என்று வியப்புடன் கேட்டான் கிருஷ்ணன். “இன்னும் சிறிது நேரத்தில் உனக்குத் தெரியவரும்!” என்றான் யுதிஷ்டிரன் புன்னகையுடன். பின்னர் யுதிஷ்டிரன் தாருகனை குதிரைகளைக் கட்டி இருக்கும் ரதத்தின் முகக் கயிறுகளைத் தன்னிடம் கொடுக்கச் சொன்னான். தாருகனைக் கீழே இறங்கச் சொன்ன யுதிஷ்டிரன் தான் அந்த இடத்தில் அமர்ந்தான். “நான் தான் உன் ரதத்தை உனக்காக ஓட்டப் போகிறேன்.” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன இது?” என்று உண்மையான ஆச்சரியத்துடன் கேட்டான் கிருஷ்ணன். “என்னை ஒரு கேள்வியும் கேட்காதே கிருஷ்ணா! நீயே இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்வாய்!” என்று சொன்னான் யுதிஷ்டிரன். பின்னர் யுதிஷ்டிரன் ஒரு சைகை செய்ய பீமன் குதித்து ரதத்தில் ஏறிச் சாமரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். அர்ஜுனனோ ஒரு குடையை விரித்துக் கிருஷ்ணன் தலைக்கு மேல் பிடித்தான். “சரி, இப்போது ரதத்தில் ஏறு, கிருஷ்ணா!” என்றான் யுதிஷ்டிரன். “ஆனால், இதெல்லாம் என்னப்பா?” என்று கேட்டான் கிருஷ்ணன். “உங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை மூழ்கடித்து விட்டீர்கள். ஆனால் இத்தகைய மரியாதைகளுக்கு எல்லாம் நான் தகுதியானவனே அல்ல! நான் ஓர் அரசன் இல்லை, சாமானியன், சக்கரவர்த்தியும் அல்ல! அதற்கும் கீழானவனே!” என்றான் கண்ணன். “சரி, சரி, கிருஷ்ணா, நீ இப்போது நீயாகவே ரதத்தில் ஏறப் போகிறாயா? இல்லை எனில் நான் உன்னைத் தூக்கி உட்கார வைக்கவா?” என்று பயமுறுத்தினான் பீமன்.

2 comments:

ஸ்ரீராம். said...

//படிக்கிறவங்க மட்டும் மனதைத் திடம் செய்து கொண்டு படிக்கவும்//

:)))) ஏனோ?

sambasivam6geetha said...

குழுமத்தில் சிலருக்கு இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே பொதுவாகச் சொன்னது வலைப்பக்கத்திலும் எடுக்காமல் போட்டுட்டேன். :) கதை கற்பனை தான் என்றாலும் பல சம்பவங்களும் தேவி பாகவதம், தேவி நாராயணியம், பாகவதம், ஹரி வம்சம் போன்றவற்றில் வருகின்றன. அவற்றையும் சரி பார்த்துக் கொண்டே எழுதுகிறேன். :)