Tuesday, September 27, 2016

தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்!

“ம்ம்ம்ம், இது எவ்விதத்திலாவது குரு வம்சத்துப் பெண்டிரைப் பாதிக்குமா, அம்மா? அப்படிப் பாதித்தால் அது எங்கனம் நடைபெறும்?” என்று தன் தாயிடம் கேட்டார் த்வைபாயனர். “அப்படி ஏதும் தெரியவில்லை, மகனே! நான் சந்தித்தவர்கள் எல்லோருமே பாண்டவ புத்திரர்களை முழு மனதோடு ஆதரிக்கின்றனர்.” என்று கூறிய சத்யவதி தன் கண்களைச் சிறிது மூடிக் கொண்டு ஏதோ பழைய காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து பார்ப்பவள் போல் காணப்பட்டாள். பின்னர் தொடர்ந்து தனக்குள்ளே முணுமுணுக்கும் பாவனையில், “ஹூம், இந்தக் குரு வம்சத்தின் அதிகாரத்தையும் ஆட்சி புரியும் சக்தியையும் வலிமை பெறச் செய்யப் போவதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு முட்டாள் நான்! கனவுகளிலேயே வாழ்ந்திருக்கிறேன்!” என்று அலுப்புடன் கூறினாள்.

தன் தாயின் நெற்றியின் மேல் மிருதுவாகக் கையை வைத்தார் த்வைபாயனர். நெற்றி நெருப்பாய்ச் சுட்டுக் கொண்டிருந்தது. மெல்லத் தடவிக் கொடுத்தவர், “அப்படி எல்லாம் பேசாதீர்கள், அம்மா! நீங்கள் ஒரு அசையாத் தூண் போல் ஸ்திரமாக நின்று காங்கேயருக்கு முழு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். அதோடு இல்லாமல் குரு வம்சத்தினரிடையே உங்களுக்கு உள்ள பிடிப்பும், ஈர்ப்பும் போல் அவர்களும் உங்களிடம் மாறாத அன்பு வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு விஷயம் உண்மை தான்! இந்த ஷகுனி ஒரு ஆபத்தானவன். அதிலும் யுதிஷ்டிரன் அரியணை ஏறினால் அவன் சும்மா இருக்க மாட்டான். தன் வேலையைக் காட்டுவான்.”

சத்யவதி கூறினாள். “ஷகுனியைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது. நினைக்கவும் முடியாது. அவன் ஓர் சின்னஞ்சிறு புழுவைப் போல இருப்பான். ஆனால் அந்தப் புழு ஒரு மரத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று முழு மரத்தையும் வேரோடு அறுத்துவிட்டு விடும். அதைப் போன்றவன் அவன். உன் அபிப்பிராயம் என்ன கிருஷ்ணா? உனக்கும் இந்தக் குருவம்சத்தினரின் முன்னேற்றத்தில் அக்கறை உண்டு. ஆகவே உன் கருத்தையும் கூறு!” என்றாள் சத்யவதி. “அம்மா, நாம் இப்போது ஓர் செங்குத்துப் பாறையின் விளிம்பில் நிற்கிறோம். ஒவ்வொருவரும் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை நாம் நமக்கு நாமே முதலில் தெளிவாக்கிக் கொள்வோம். நான் எங்கே நிற்கிறேன் என்பதையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். குரு வம்சத்தினர் சர்வ வல்லமை பெற்று அதிகாரங்களைப் பெற்று இருப்பதற்கு எனக்குள் சொந்தமாகவும் காரணங்கள் உண்டு!” என்றார் த்வைபாயனர்.

“உனக்கெனத் தனிக்காரணங்களா? அவை என்ன?” சத்யவதி கேட்டாள்.

சற்று நேரம் மௌனமாகவே இருந்தார் த்வைபாயனர். அந்த அறைக்குள்ளாக சூரியக் கிரணங்கள் சாளரத்தின் வழியாக மெல்ல மெல்ல உள்ளே வந்து ஒளிச் சிதறல்களாகக் காட்சி அளிக்க சற்று நேரம் அதையே பார்த்தார். பின்னர் தன் தாயிடம் திரும்பி, “அம்மா, சொல்கிறேன். எனக்கெனச் சில காரணங்கள் இருக்கின்றன என்றேன் அல்லவா? குரு வம்சத்தினரின் அதிகாரம் பரவலாகவும், வல்லமையாக இருக்கவும் அதை நான் ஆதரிக்கவும் சில காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியோ ஏமாற்றமோ அடைய வேண்டாம். இதை நான் இன்று வரை எவரிடமும் விவரித்துச் சொன்னதில்லை. மாட்சிமை பொருந்திய காங்கேயரிடம் பிரம தேஜஸும், க்ஷத்திரிய தேஜஸும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. ஆகவே அவருக்குக் கட்டுப்பட்ட ஒரு சக்கரவர்த்தி இந்தக் குரு வம்சத்து ராஜ்யத்தை ஆட்சி புரிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவனாக நீதியும் நியாயமும் உள்ளவனாக, சாவுக்கும் அஞ்சாதவனாக தர்மம் ஒன்றுக்கே வாழ்பவனாக இருக்க வேண்டும், என்பது என் ஆசை. ஆகவே இந்தக் குரு வம்சத்தில் அப்படி ஒரு அரசன் அரியணை ஏறினால் அது யுதிஷ்டிரனாக இருக்கலாம். இல்லை எனில் நான் வேறு எங்காவது போய் வேறு அரசனைத் தேட வேண்டியது தான்!”

சற்றே நிறுத்திக் கொண்டு பின்னர் மேலும் விநயத்துடன் கூறினார். “தாயே, எனக்கு சூரிய பகவான் ஆணையிட்டிருக்கிறார். தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று! நானே எதிர்பாராவண்ணம் அதற்கான அதிகாரத்தையும் எனக்களித்திருக்கிறார். ஆசிரமங்கள் பல்கிப்பெருக ஆரம்பித்துள்ளன; மக்களுக்கும் வேதவாக்கியங்களில் நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது. வேதத்தைக் கற்பவர்களும், கற்பிப்பவர்களும் பெருகி வருகின்றனர். நன்கு கற்றறிந்த ஓர் புத்தம்புதிய தலைமுறை தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. நான் வழிகாட்டி வரும் வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர். கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நான் நேர்மையாகவும், நல்வாழ்க்கை வாழவும் மக்களைப் பழக்கப்படுத்தி வருகிறேன். ஆகவே இதை எல்லாம் நான் மேலும் தொடரவேண்டுமானால் இங்கே ஹஸ்தினாபுரத்தில் ஓர் நேர்மையும் நியாயமும் உள்ள சக்கரவர்த்தி ஆள வேண்டும். அதற்கு யுதிஷ்டிரனே பொருத்தமானவன்.” என்று முடித்தார் த்வைபாயனர்.

“ஹூம், மகனே, நாம் எங்கே போய்த் தேடுவது அப்படிப் பட்ட ஓர் சக்கரவர்த்தியை!” என்று பெருமூச்சு விட்ட சத்யவதி, “மகனே, பாண்டு மட்டும் நம்மிடையே இருந்திருந்தால்!  அவன் அப்படிப் பட்ட ஓர் சக்கரவர்த்தியாக நிச்சயம் இருந்திருப்பான்! ஆனால் தெய்வம் துணை செய்யவில்லையே!” தன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சத்யவதி. “கிருஷ்ணா, நீ என் கஷ்டங்களைச் சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லையே! என் வலிமையின் வல்லமையின் கடைசிக்கட்டத்தில் நான் இருக்கிறேன்.” என்று மீண்டும் பெருமூச்சு விட்டாள் சத்யவதி!

“இல்லை, தாயே, நான் புரிந்து கொண்டுள்ளேன்.” என்றார் த்வைபாயனர்..”ஆனால் அவை எல்லாம் இந்தக் கஷ்டத்திலிருந்து விடுபடும் வழியல்ல தாயே! அதில் ஏதும் பொருள் இல்லை! நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், உங்களை வணங்குகிறேன். என் தெய்வம் நீங்கள். அம்மா, நான் உங்கள் மகன் என்பதால் மட்டும் அல்ல. இந்த ஹஸ்தினாபுரத்து மக்களின் மனதில் எப்படிப்பட்டதொரு மாற்றங்களையும் நல்லொழுக்கமான வாழ்க்கையை வாழவும் நீங்கள் முனைந்து பாடுபட்டீர்கள்! அதைப் பார்த்துப் பார்த்துப் பெருமைப் பட்டிருக்கிறேன், தாயே!”

த்வைபாயனர் மீண்டும் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார். சூரிய ஒளி உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்த த்வைபாயனர் தன்னையும் அறியாமல் மேலும் பணிவுடன் பேசினார். “ஆனால் தாயே, இதற்குப் பின்னர் எல்லாமே வித்தியாசமாக ஆகி விடும். என்னால் இனிமேல் நடக்கப் போவதைக் குறித்து அறிய முடிகிறது. நான் அறிந்த வரையில் ஹஸ்தினாபுரம் ஓர் மாபெரும் யுத்தத்தை நோக்கி நடைபோடுகிறது. ஹஸ்தினாபுரம் போர் புரியும் கூடாரமாகப் பிரிந்து நிற்கப் போகிறது. தர்மம் அடியோடு மறக்கப்படும். மனிதர்களுக்குள்ளே அவர்களுக்கிடையே உள்ள விரோத மனப்பான்மையால் ரத்தம் சிந்தப் போகிறது. இல்லை, இல்லை, கொட்டப் போகிறது. அதோடு இப்போது எவரால் சொல்ல முடியும் அம்மா, இந்த மாபெரும் யுத்தத்தில் ஜெயிக்கப் போவது யார் என்று? நல்லவரா, அல்லது கெட்டவரா? கடவுளா அல்லது சைத்தானா?”

“கிருஷ்ணா, இன்று நீ மிகவும் விரக்தியிலும் ஏமாற்றத்திலும் தென்படுகிறாய். நீ இப்படி எல்லாம் பேசியதே இல்லை. எப்போதும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையில் தெம்புடன் பேசுவாய்! இன்று ஏன் இப்படி?” என்று சத்யவதி தன் மகனைப் பார்த்துக் கேட்டாள். “தாயே, குரு வம்சத்தினரின் உள் சண்டையால், தாயாதிச் சண்டையால் இந்த மொத்த உலகும் கஷ்டப்படப் போகிறது. பிரிந்து நிற்கப் போகிறது!” என்றார் த்வைபாயனர். “த்வைபாயனரே, அப்படிச் சொல்லாதீர்கள்! இதைத் தடுக்க வேறு வழி ஏதும் இல்லையா?” என்று கேட்டார் பீஷ்மர்.

“நான் தான் சொல்லிவிட்டேனே, இளவரசே! ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும், ஆட்சியும் முக்கியமான இடம் பெறப் போகிறது. புதியதாக நியமிக்கப் போகும் சக்கரவர்த்தி பிரமதேஜஸும், க்ஷத்திரிய தேஜஸும் ஒருங்கே பொருந்தியவனாக இருக்கவேண்டும். அவனுடைய பரிபூரண அதிகாரம் இந்த உலகு முழுவதும் பரவ வேண்டும்.அனைவரும் அதை உணர வேண்டும்.” என்றார் த்வைபாயனர். பின்னர் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் தொடர்ந்து பேசினார். “இந்த ஷகுனி இருக்கிறானே, அவன் பரமசிவன் கழுத்தில் உள்ள விஷம் போன்றவன். அதைத் துப்பவும் முடியாது; விழுங்கவும் முடியாது!” என்றார். “ஆஹா, நாம் ஓர் செங்குத்துப்பாறையின் விளிம்பில் நிற்கிறோம் என்று நீ சொன்னதன் உண்மையான பொருளை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது, மகனே!” என்றாள் சத்யவதி மெல்லிய குரலில்.

“தாயே, வரக்கூடியதை அப்படியே எதிர்கொள்வோம். தைரியமாக இருங்கள். கடவுள் நமக்கு இவற்றை எதிர்கொள்ளும் தைரியம் மட்டுமில்லாமல் இதிலிருந்து நாம் தப்பிக்கவும் வழிகாட்டுவார் என்று நம்புவோம்.” என்றார் த்வைபாயனர். வேறு வழியில்லாமல் தன் கையைத் தூக்கி விரித்தாள் சத்யவதி! “ஆனால் இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் நான் எப்படி வாழ்வேன்? எங்கு பார்த்தாலும் சூழ்ச்சி, எந்தப் பக்கம் செல்வது என்று முடிவெடுக்க முடியாத் தன்மை, மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமை, நேர்மையான நல்வாழ்க்கை வாழ வேண்டிய வழியில் ஸ்திரமாகவும் தைரியமாகவும் நிற்க முடியாமல் தவித்தல்! இந்தச் சூழ்நிலையில் நான் வாழவேண்டுமா?” என்று விரக்தியின் எல்லைக்கே போய்க் கூறினாள் சத்யவதி.

“நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறேன், தாயே!” என்றார் த்வைபாயனர். “காசி தேசத்து இளவரசிகளான அம்பிகாவுடனும், அம்பாலிகாவுடனும் நீங்கள் பராசர ஆசிரமத்துக்குச் சென்று விடுங்கள். அங்கே நீங்கள் ஓய்வாக இருக்கலாம். நீங்கள் கிளம்புகையில் ஹஸ்தினாபுரத்து மக்கள் கண்ணீர் சிந்தலாம். ஆனால் அந்தக்கண்ணீர் தான் உங்களையும் ஹஸ்தினாபுரத்து மக்களையும் பிணைக்கும் கயிறாக இருக்கும். நீங்கள் இந்தச் சூழ்ச்சிகள் நிறைந்த இடத்திலிருந்து வெளியேறி விட்டாலே, நீங்கள் மகாப் பெரியவராக மதிக்கப்படுவீர்கள். உங்கள் தார்மிக அதிகாரம் மிக உயர்ந்த இடத்துக்குச் சென்று விடும். நீங்கள் முக்கியத்துவம் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் இன்றியமையாதவர் என்பது மக்களால் உணரப்படும். ஒரு வேளை இங்கே ரத்தம் சிந்தினால் நீங்கள் மௌனமாக ஓர் பார்வையாளராக இருங்கள். ஆனால் அதன் பின்னர் யுத்த்த்தினால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை அறிந்து கொண்டு அவர்களே உங்களிடம் வலிமை பெறவும் வழிகாட்டச் சொல்லும்படியும் வந்து நிற்பார்கள்.” என்றார்.

சத்யவதி சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். “சரி, கிருஷ்ணா, மிக நல்லது. நான் அப்படியே செய்கிறேன்.” என்ற வண்ணம் நீண்ட பெருமூச்சு விட்டாள். “அதெல்லாம் சரி அப்பா! ஒரு வேளை ஹஸ்தினாபுரமோ அல்லது மற்ற எந்த இடத்ஹ்டு அதிகாரமோ தர்மத்தைக் காக்க வேண்டி ஓர் அரசனைச் சக்கரவர்த்தியைக் கொண்டு வரவில்லை எனில்? அப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் சத்யவதி. “தாயே, நான் அதையும் கவனத்தில் கொள்ளாமல் இல்லை. இந்த ஆபத்து இருக்கிறது என்பதையும் உணர்வேன்.” என்ற த்வைபாயனர் மேலும் தொடர்ந்து, “ஆனால் ஒன்று, எனக்குக் கடவுளரிடமிருந்து பித்ருலோகத்துக்கு அழைப்பு வரும் வரை நான் தர்மத்திற்காகவும் நீதி, நேர்மைக்காகவும் வாழ்வேன். ஒரு வேளை குரு வம்சத்தவரால் அப்படி ஓர் சக்கரவர்த்தியைக் கொண்டு வர முடியவில்லை எனில், என் கடவுள் சூரிய பகவான் எனக்கு வழிகாட்டுவான். என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்வான்.
தர்மம் என்றென்றும் சாஸ்வதம்; அதற்கு அழிவில்லை.
சூரிய பகவானே, அழிவற்ற தர்மத்தின் பாதுகாவலன்
தீமைகளை அழித்து நன்மைகளை நிலை நாட்டி தர்மசாம்ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபிப்பான்,
இது நிச்சயம் நடக்கும், எனக்கு உறுதியாகத் தெரியும். நிச்சயமாகத் தெரியும்.”


இத்துடன் ஆறாம் பாகம் வேத வியாசர் முடிவடைந்தது. இனி ஏழாம்பாகம் யுதிஷ்டிரர் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

1 comment:

ஸ்ரீராம். said...

யுதிஷ்டிரர்! முன்னர் ஒரு கேள்வி கேட்டேன்.