Friday, January 20, 2017

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், எட்டாம் பாகம்,குருக்ஷேத்திரம்!

இரண்டு நாட்கள் கழித்து சாத்யகியும் கிருஷ்ணனும் தங்கள் தங்கள் படை வீரர்களுடன் விடிகாலையிலேயே சௌராஷ்டிரத்தை நோக்கிப் பயணப்பட்டனர். அடிக்கடிப் பயணப்பட்டதாலும், தொடர்ந்த பயன்பாட்டினாலும் இந்திரப் பிரஸ்தத்திலிருந்து பாலைவனம் வழியாக சௌராஷ்டிரத்தை நோக்கி வந்த அந்தப் பாதை இப்போது அனைத்துப் பாதசாரிகளாலும், ரத சாரதிகளாலும் பயன்படுத்தப்படும் ஓர் ராஜபாட்டையாக மாறி இருந்தது.  அதன் இருபக்கங்களிலும் புதிது புதிதாகப் பல கிராமங்களும், ஆசிரமங்களும் முளைத்திருந்தன.  கிராமத்து மக்களும், பெண்டிரும் கிருஷ்ண வாசுதேவன் அந்த வழியாகச் செல்வதை அறிந்து கொண்டு அவனைக் காண வழக்கம்போல் கூடினார்கள். வாசுதேவனுக்கு வரவேற்பு அளித்து அவனிடம் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்கள். ஆண்கள் பூரண கும்பத்தில் தேங்காயை வைத்து அவனை வரவேற்றார்கள். பெண்கள் விதவிதமான நீர்ப்பானைகளுடன் வந்திருந்தனர்.

அந்தப் பயணத்தில் கிருஷ்ணன் தானே ரதத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். அப்போது கிருஷ்ணனுக்கு அவனுடைய வாழ்க்கையானது எப்போதுமே மற்றவரிலிருந்து தனித்து இருப்பதையும் ஓர் கட்டாயமான பணியாகவும் இருந்ததை உணர்ந்தான். அனைவரையும் தீமைகளிலிருந்து காப்பாற்றும் ஓர் கடவுளாகவே தான் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தான். தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதிலும் க்ஷத்திரிய தர்மத்தைப் பேணிக்காப்பதிலும் தன் பங்கு மிக முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்தான். அவன் கண் முன்னர் கடந்த காலம் விரிந்தது.

பிறந்தது முதல் மத்ராவை விட்டு கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் பதினாறு வயது வரை வளர்ந்த அவன் தன் பதினாறாம் வயதில் தன்னைப் பெற்ற தந்தை வசுதேவராலும் மற்ற யாதவத் தலைவர்களாலும் மத்ராவுக்கு அழைக்கப்பட்டான். அங்கே கம்சனை எதிர்த்துப் போராடும்படி அறிவுறுத்தப்பட்டான். அதை ஏற்று மத்ரா வந்த கிருஷ்ணன் கம்சனை மல்யுத்தத்தில் தோற்கடித்ததோடு அல்லாமல் அவனைக் கொன்றும் போட்டான்.  அதிலிருந்து ஆரம்பமானது தான் ஜராசந்தனுக்கும், கிருஷ்ண வாசுதேவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாழ்வா, சாவா என்னும் போராட்டம். பல வருடங்கள் தொடர்ந்தது. ஜராசந்தன் மகதத்தில் ஈடு இணையற்ற சக்கரவர்த்தியாக இருந்தான் என்பதோடு ஆரியவர்த்தம் முழுமையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் அடக்கிக் கொண்டு வரவேண்டும் என்னும் தணியா ஆவலுடனும் இருந்தான். கம்சனுக்குத் தன் பெண்கள் இருவரையும் மணம் முடித்துக் கொடுத்திருந்த ஜராசந்தன் இப்போது தன் மாப்பிள்ளைக்காகக் கிருஷ்ணனைப் பழி வாங்கத் துடித்தான்.

கம்சன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதுமே ஜராசந்தன் பலராமனையும், கிருஷ்ணனையும் அடியோடு அழித்துவிடுவதாகச் சபதம் செய்திருந்தான். அதற்காக மத்ராவை முற்றுகையும் இட்டான். மத்ராவின் யாதவர்கள் அனைவரிடமும் கிருஷ்ணனையும் பலராமனையும்  தன்னிடம் சரண் அடையும்படி கூறுமாறு அறை கூவினான். ஆனால் கிருஷ்ணனும், பலராமனும் அங்கிருந்து எப்படியோ தப்பித்து கோமந்தகம் நோக்கிச் சென்று விட்டனர்.  ஜராசந்தன் விடாமல் கோமந்தகத்துக்கு வந்து அவர்களைத் துரத்தினான். அந்த மலையின் உயரத்தை எட்ட முடியாமல் போனதால் அவன் மலையின் பசுமைத் தாவரங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தி அப்படியே கிருஷ்ணனையும், பலராமனையும் தீயில் எரிக்க நினைத்தான். ஆனால் அதிலிருந்தும் இருவரும் தப்பினார்கள்.

சில ஆண்டுகளிலேயே மீண்டும் ஜராசந்தன் மத்ராவை நோக்கிப் படை எடுத்துச் சென்றான். அப்போது யாதவர்களுக்கு இரண்டே வழிகள் திறந்திருந்தன. ஒன்று பலராமனும், கிருஷ்ணனும் சரண் அடைவது அல்லது அனைத்து யாதவர்களும் ஒன்றாக அழிந்து போவது.  ஜராசந்தனின் இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கிருஷ்ணன் அனைத்து யாதவர்களையும் அங்கிருந்து வேறு ஓர் நாட்டுக்குக் குடியேற்றினான்.  யாதவ குலத்து ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள், அனைவரையும் அவரவர் எடுத்துச் செல்ல முடிந்த பொருட்களோடும், கால்நடைச் செல்வங்களோடும் சௌராஷ்டிரத்துக்கடற்கரையோரம் அழைத்துச் சென்று அங்கே துவாரகை நகரை உருவாக்கி அங்கிருந்த கிரிநகர் மலையில் ஓர் அழகான கோட்டையும் கட்டிப் புதியதோர் நாட்டை உருவாக்கினான்.

அதன் பின், அதன் பின்னர் தான் விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மிணியின் சுயம்வரம் நடந்ததும், அவள் கிருஷ்ணனுக்கு அனுப்பிய மடலும் அதை வைத்துக் கிருஷ்ணன் அவளைத் தூக்கி வந்ததும் திருமணம் செய்து கொண்டதும் நடந்தது. ஜராசந்தன் ருக்மிணியின் சுயம்வரத்தில் வந்திருந்து பங்கு பெற்ற போதும் அந்த சுயம்வரத்தில் பங்கு பெற முடியவில்லை. ஏனெனில் வந்திருந்த பெருவாரியான அரசர்கள் ஜராசந்தனுக்கு விரோதமாகவே இருந்தார்கள். ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மி எவ்வளவோ முயற்சிகள் எடுத்து ருக்மிணியைக் கிருஷ்ணனின் பிடியிலிருந்து விடுவித்துத் திரும்பக் கொண்டு வர எடுத்த முயற்சிகள் பலனில்லாமல் போயின.  அதன்பின் சில ஆண்டுகள் கழிந்தன.

பாஞ்சால இளவரசி திரௌபதியின் சுயம்வரத்தின் எப்படியேனும் அவளைத் தன் பேரனுக்கு மணமுடிக்க ஜராசந்தன் திட்டம் போட்டு வந்திருக்கையில் கிருஷ்ணன் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து ஓடச் செய்தான்.  ஜராசந்தன் இழிவு படுத்தப்பட்டாலும் அதைக் குறித்துப் பேசமுடியவில்லை. திரௌபதி பாண்டவர்களை மணந்ததன் மூலம் அவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஓர் பிணைப்பும் ஆதரவும் ஏற்பட சாத்தியம் ஆகியது.  அதன் பின்னரே கிருஷ்ணன் யுதிஷ்டிரனை ராஜசூய யாகம் செய்யச் சொன்னான். ஆரியர்களிடையே யுதிஷ்டிரனின் சக்கரவர்த்திப் பட்டத்தை அதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறினான். ஆனால் அதற்குத் தடையாக இருந்தவன் ஜராசந்தன். அவன் ஏற்கெனவே நூறு ஆரிய அரசர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு யாகத்தில் நரபலி கொடுத்தால் தான் ஆரியவர்த்தத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தி ஆகிவிடலாம் என்று ஏற்பாடுகள் செய்து 99 அரசர்கள் வரை பிடித்துச் சிறையில் அடைத்திருந்தான்.  இப்போது அவனை அழிப்பதைத் தவிர கிருஷ்ணனுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது.

கிருஷ்ணனை முதல் முதல் அவன் தந்தையும் மற்றவர்களும் மதுராவிற்கு அழைத்தபோது அந்தச் சமயம் அவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருந்தனர்.  நாலா திசைகளிலும் எதிரிகள். கிழக்கே ஜராசந்தன், தெற்கே சேதி நாட்டில் சிசுபாலன், மேற்கே பாலைவனத்தைத் தாண்டி ஷால்வன், துரியோதனனின் மாமனார் சபல் என்பவர் வடக்கே. ஆக நான்கு திசைகளிலும் எதிரிகள் இருந்தனர். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்திருந்தால் பின்னர் ஆரியவர்த்தம் அவர்கள் கைகளில் நசுங்கிச் சின்னாபின்னமாகி விடும். எவரும் தப்ப இயலாது.  ஆகவே யுதிஷ்டிரன் ராஜசூய யாகத்தைத் தொடங்கும் முன்னர் இப்படி அக்கம்பக்கம் விரோதமாக இருக்கும் அரசர்களை எல்லாம் ஒன்று அழிக்க வேண்டும். இல்லை எனில் நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும். ஆகவே இதற்கெல்லாம் மூலகாரணம் ஆன ஜராசந்தனை முதலில் அழிக்க வேண்டும் என்று நினைத்த கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் அதைத் தெரிவித்தான். ஆனால் யுதிஷ்டிரன் போரையோ, ஆயுதப் பிரயோகத்தையோ விரும்பாததால் ஜராசந்தனையும் மல்யுத்தம் மூலம் கொல்வதற்கு முடிவு செய்தான்.

ஜராசந்தனுக்கு மல்யுத்தத்தில் மிகவும் பிரியம் உண்டு. மேலும் க்ஷத்திரிய அரசர்களுக்கு இந்த மல்யுத்தப் பயிற்சி ஓர் முக்கியமான பயிற்சி ஆகும். இது வெறும் உடல் பயிற்சியாக மட்டும் பார்க்கப்படவில்லை. ஆனால் இரு மன்னர்களுக்கிடையே போர் ஏற்படாமல் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளவும் இதன் மூலம் மன்னர்களின் கௌரவம் பாதிக்கப்படாமல் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கவும் பயன்பட்டது. ஆகவே கிருஷ்ணன் பீமனுடனும், அர்ஜுனனுடனும் கிரிவ்ரஜம் சென்று அங்கே பீமன் மூலம் ஜராசந்தனை அழித்தான். அங்கிருந்து வந்ததும் ராஜசூய யாகத்தின் அக்ரபூஜையின்போது அதை எதிர்த்த சிசுபாலனைத் தன் சக்கராயுதத்தால் கிருஷ்ணன் அழித்தான். ராஜசூய யாகம் முடிந்தாலும் அரசர்களுக்குள் இருந்த மனக்கசப்பு அகலவே இல்லை. அதிலும் கிருஷ்ணனுக்கு உதவியர்களுக்கும் அவர்கள் எதிரிகளுக்கும் இடையே இருந்த தீராப்பகை விஸ்வரூபம் எடுத்து விட்டது.

1 comment:

ஸ்ரீராம். said...

//அதன் பின், அதன் பின்னர் தான் விதர்ப்ப தேசத்து இளவரசி//

ஒன்று போதாதோ! தொடர்கிறேன்.