Tuesday, January 24, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! துவாரகை மீண்டது!

கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பும் வழியில் கண்ட கோரமான காட்சிகள் அதிர்ச்சியை அளித்தன. வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன, மனிதர்களும் எரிக்கப்பட்டு ஆங்காங்கே எரிந்த உடல்கள் காணப்பட்டன. அவற்றில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள் போன்றவற்றின் உடல்கள் காணப்பட்டன. பல குதிரைகளும், பசுக்களும் எரிக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணனும் மற்ற மஹாரதிகளும் சௌராஷ்டிரத்தில் இல்லை என்பதை ஷால்வன் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டான்.  முழு வேகத்துடன் துவாரகையைத்தாக்க இறங்கி இருந்தான். எங்கெங்கு பார்த்தாலும் நெருப்பு வைக்கப்பட்டிருந்தது அல்லது வாளால் தாக்கி மனிதர்களும், மிருகங்களும் கொல்லப்பட்டிருந்தனர். இவற்றை எல்லாம் செய்து முடித்துவிட்டுக் கிருஷ்ணனுக்குச் செய்தி போய் அவன் சௌராஷ்டிரம் திரும்புவதற்குள்ளாக ஷால்வன் தன் நாட்டுக்குத் திரும்பி விட்டான்.

தான் துவாரகைக்குத் திரும்பி விட்டதைத் தன் பாஞ்சஜன்யத்தை ஊதி அறிவித்தான் கிருஷ்ணன்.  மற்ற மஹாரதிகளும் தங்கள் வரவை அவ்வண்ணமே அறிவித்ததோடு அல்லாமல் எதிரிக்குச் சவாலும் விட்டனர்.  ஆனால் அங்கே அந்தச் சவாலை எதிர்கொள்ள எந்த எதிரியும் இருக்கவில்லை என்பதே மாபெரும் சோகம். யாதவர்கள் தாங்கள் துணிவுடன் எதிரியை எதிர்கொண்டிருந்தாலும் அவனை எதிர்க்க முடியாமல் போய்விட்டதால் துவாரகையின் அருகே இருந்த அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் புகுந்திருந்தவர்கள், இப்போது கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி விட்டான் என்னும் செய்தியைக் கேட்டதும் வெளிவந்தனர்.  இன்னும் சிலர் காட்டுக்குள் மீண்டும் ஓடி அங்கே ஒளிந்திருந்த கிருஷ்ணனின் மகன் ஆன பிரத்யும்னனை அழைத்து வந்தனர். அவன் தன்னுடைய படை வீரர்களுடன் அங்கே வந்து கிருஷ்ணனுக்கும் மற்றப் பெரியோருக்கும் கீழே விழுந்து வணங்கினார்கள்.

அந்தப் படை வீரர்களின் பிரிவு கடற்கரையோரத்தில் முகாம் இட்டிருந்தது. ஆங்காங்கே தங்குவதற்குக் குடில்கள் எழுப்பி இருந்தார்கள்.  அந்தக் குடில்களில் அக்கம்பக்கமிருந்து வந்திருந்த குடிமக்கள் தங்கி இருந்தனர்.  கிருஷ்ணனும் மற்ற மஹாரதிகளுக்கும் உணவு படைக்கப்பட்டது. அதன் பின்னர் பிரத்யும்னன் ஷால்வன் தன்னுடைய ஒட்டகங்களைப் பயன்படுத்தி அதன் மேல் வீரர்களை ஏற்றி எப்படிக் கடந்து வந்து தங்களைத் தாக்கினான் என்பதையும் லாவனிகா நதியை எப்படிக் கடந்தான் என்பதையு விவரித்தான். அதன் பின்னர் அவன் சௌராஷ்டிரம் முழுமைக்கும் சென்று தாக்கியதையும் விவரித்தான்.

“நம்முடைய வீரர்கள் துணிச்சலாக அவனையும் அவன்படை வீரர்களையும் எதிர்கொண்டனர்.” என்றான் பிரத்யும்னன். “அதன் பின்னர் தான் சித்தப்பா உத்தவர் இரு தூதர்களை அனுப்பி உங்களை துவாரகைக்குத் திரும்பும்படி சொல்லி அனுப்பினார்.  காயம் பட்டவர்களை கிரிநகர்க் கோட்டைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை செய்யும்படி செய்தார்.  மற்ற யாதவத் தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் தங்களை ஷால்வனின் வீரர்களிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டி அடரந்த காட்டில் தஞ்சம் புகுந்தனர்.”

“சில யாதவர்கள் தங்கள் ஆட்களை அனுப்பி எதிரியின் நிலைமையை உளவு பார்க்கச் சொன்னார்கள். அவர்கள் லாவனிகா நதியைக் கடக்கும்போது சௌப வாரியர்களின் ஒரு குழு நம் வீரர்களைப் பிடித்துவிட்டது. அவர்களில் தான் எங்கள் தாத்தாவும், உங்கள் தந்தையுமான மதிப்புக்குரிய வசுதேவரும் இருந்தார்.”

“நீங்கள் ஏன் தந்தையை அந்த உளவுக்குழுவுடன் அனுப்பி வைத்து அவரைப் பிடித்துக் கொண்டு போகும்படி செய்தீர்கள்?” கிருஷ்ணன் கேட்டான்.

“தந்தையே! நாங்க பெரு முயற்சி செய்தோம், அவர்கள் சென்ற வழியில் செல்லவும் முயன்றோம். ஆனால் அவர்கள் சென்ற வழியில் எங்களால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. “ என்றான் பிரத்யும்னன்.

“எங்களால் முடிந்ததைச் செய்துவிட்டோம், தந்தையே! ஆனால் அங்கே செல்ல, சௌப நாட்டுக்குச் செல்ல நமக்கு ஒட்டகங்கள் தேவை! அவை இல்லாமல் நம்மால் அவர்களைத் தொடர்ந்து அந்தப் பாலைவனைத்தில் செல்ல இயலாது!” என்று வருத்தத்துடன் கூறினான் பிரத்யும்னன்.

“சரி! கவலைப்படாதே! தந்தை உயிருடன் இருந்தாரானால், அது உண்மையானால், இன்னும் சில நாட்கள் தாமதிப்பதால் எதுவும் நடந்து விடாது! பொறுத்திருப்போம்.  ஆனால் அவரை ஷால்வன் மட்டும் கொன்றிருந்தான் எனில் அதற்குரிய தண்டனையை அவன் அனுபவித்தே தீர வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

“அது சரி, சாத்யகியைக் குறித்து ஏதும் தகவல் இல்லையா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“சாத்யகி மாமா நீங்கள் வழியில் ஆபத்துக்களைச் சந்திக்க நேரலாம் என்பதற்காக உங்களை எச்சரிக்க வேண்டும் என்று போயிருக்கிறார். நீங்கள் அவரை வழியில் சந்திக்கவே இல்லையா?  மாமா இங்கிருந்து சென்று ஐந்து நாட்களுக்கு மேலாகிறதே! ஆனால் அவரிடமிருந்து இன்னும் எந்தச் செய்தியும் வரவில்லை. ஒருவேளை ஷால்வன் அவரையும் பிடித்துக் கடத்திச் சென்றிருப்பானோ!”

ஒரு கண நேரம் அப்போதைய சூழ்நிலையைக் குறித்துக் கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தான். பின்னர் மீண்டும், “நம்முடைய ராஜ்யத்துக்குள் அத்து மீறிப் புகுந்த ஷால்வனைத் தடுப்பது மிகவும் கடினமாகி விட்டது.  இப்போது நாம் அவனை அவனுடைய சொந்த நாட்டிலேயே சென்று தாக்க வேண்டும். ம்ம்ம்ம்ம் அவன் நாடு ஒரு பக்கம் லாவனிகா நதியாலும் இன்னொரு பக்கம் நீளமான பாலைவனத்தாலும் காக்கப்படுகிறது. இதைத் தாண்டிச் சென்று தான் நாம் அவனைத் தாக்கியாக வேண்டும். அவனிடமிருந்து தப்பி ஓடுவதன் மூலம் நாம் ஷால்வனை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.  அவனை அவன் வழியிலேயே சென்று தக்க த்ண்டனை கொடுப்பதன் மூலம் அவனை ஒழிக்க வேண்டும். ம்ம்ம்ம், நல்லது! சௌபப் படையின் வீரர்கள் இன்னும் யாரேனும் சௌராஷ்டிரத்தில் இருக்கிறார்களா? அது குறித்து ஏதும் தெரியுமா?” என்று கண்ணன் கேட்டான்.

“இல்லை, தந்தையே! லாவனிகா நதிக்குத் தெற்கே ஒரு சின்ன சௌப வீரனைக் கூட நம்மால் பார்க்க இயலாது! நான் அப்படி நினைக்கவில்லை!” என்றான் பிரத்யும்னன். “ஆஹா! அப்படியா! யாதவர்கள் எத்தனை பேர் சௌராஷ்டிரத்தில் இருக்கின்றனர்?” என்று கண்ணன் கேட்டான்.

“ஓ, அவர்கள் நிறைய இருக்கின்றனர். அவர்கள் மெல்லத் திரும்புவதோடு தங்கள் பசுக்களையும், குதிரைகளையும் மற்றக் கால்நடைகளையும் திரும்ப இங்கே கொண்டு வருகின்றனர்.  இப்போது அவர்களுக்கு உண்ண உணவு பழங்கள், வேர்கள், கொட்டைகள், காய்கள் போன்றவை தான். மாதா அன்னபூரணியின் கிருபையால் அவை தாராளமாகக் கிடைக்கின்றன.” என்றான் பிரத்யும்னன்.

“சரி, தந்தையே! நீங்கள் இப்போது இங்கே துவாரகைக்குத் திரும்பி விட்டதால் நான்  பாட்டனார் வசுதேவரைத் தேடிச் செல்ல விரும்புகிறேன்.” என்றான் பிரத்யும்னன்.

“அவசரமாகவும், மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்ளாதே, மகனே!” என்றான் கிருஷ்ணன்.

“ஓ, என்னுடைய மூர்க்கத் தனத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், தந்தையே! நீங்கள் எப்போதுமே என்னை அவசரக்காரன் என்றே சொல்லி வருகிறீர்கள். ஆனால் பின்னர் நான் என்ன செய்கிறேனோ அதைச் சரி என ஒப்புக் கொள்வீர்கள்!” என்றான் பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே. அவன் கண்களில் தந்தையிடம்   கொண்டிருக்கும் அளவற்ற பாசமும், மரியாதையும் ஒளிர்ந்தன.  கிருஷ்ணனும் அன்புடன் தன் மகனின் கன்னத்தைத் தட்டிக் கொண்டே சொன்னான். “அதனால் தான் பெண்களுக்கு  உன்னை மிகப் பிடித்திருக்கிறது போலும்!” என்றான். “உன் மூளை எங்கள் அனைவ்ரின் மூளையை விட நூறு யோஜனை தூரம் முன்னோக்கிச் செல்கிறது! “ என்றும் குறும்புடன் பாராட்டினான் மகனை!

துவாரகையின் மாளிகைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தவற்றை எடுக்கையில் அனைவரின் மனங்களும் கனத்தன.  அனைத்து அழகான கட்டிடங்களும் இடிக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ காட்சி அளித்தன. அனைவருக்கும் குடி இருக்கக் குடில்கள் தேவை. குறைந்தது நூற்றுக்கணக்கான குடில்கள் உடனடித் தேவை. ஆனால் குடில்களை நிர்மாணிக்கத் தேவையான பொருட்கள் கிடைப்பது தான் கஷ்டமாக இருந்தது.  உணவுக்காக மக்கள் கூடிய கூட்டமும் போட்ட ஆரவாரங்களும் கேட்கவும் பார்க்கவும் பரிதாபத்தைக் கொடுத்தது. அவர்கள் தேவைக்கு வேண்டிய உணவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதில் கால்பங்கே கிடைத்தது. குழந்தைகள் பாலுக்கு அழுதன. ஆனால் பாலே கிடைக்கவில்லை!

அங்கே இருந்த சில குதிரைகளையும் கண்காணிக்கவோ அவற்றைப் பழக்கவோ மனிதர்கள் இல்லை. அவற்றைப் பிடித்துக் கட்டிப்போடவும் யாரும் முயலவில்லை.  ஆகவே அவை இஷ்டத்துக்கு அங்குமிங்கும் அலைந்தன.  பெண்களில் வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும், இளம்பெண்கள் ஆனாலும் சரி, வருத்தத்துடன் அமர்ந்திருந்தனர். தங்கள் தலையில் கைகளை வைத்துக் கொண்டு துயரத்தில் புலம்பிக்கொண்டும் அழுது கொண்டும் ஏமாற்றத்தில் மூழ்கி  அமர்ந்து கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இழப்பு. சிலருக்குக் கணவன், சிலருக்கு மகன், சிலருக்குத் தந்தை, சிலருக்கு சகோதரன்.  அந்த இழப்பின் தாக்கம் அவர்களுக்குப் பெரிதாக இருந்தது.

அங்கே தாக்குவதற்கும் மக்களைச் சோதனை இடுவதற்கும் வந்த ஷால்வனின் படை வீரர்கள் வீடுகளுக்குத் தீ வைத்திருந்தார்கள். ஆனால் அங்கே தங்கினால் தங்களுக்கும் தங்கள் ஒட்டகங்களுக்கும் தேவையான உணவு கிடைக்காது என்பதால் உடனே சென்று விட்டிருந்தனர்.  கிருஷ்ணன் அனைவரையும் சந்தித்துப் பேசினான். அவன் பேச்சினால் அனைவரின் மனமும் அமைதி அடைந்தது.  அங்கே நடந்த நடவடிக்கைகளுக்கு உயிரும் உணவும் கொடுத்தது கிருஷ்ணன் தான்.  தன் இனிமையான பேச்சினால் அனைவரின் துன்பத்தையும் அகற்ற முயன்றான்.  அவன் அங்கே இருந்ததே அனைவரின் மனதிலும் அளவற்ற நிம்மதியை உண்டாக்கியது.  அவனுடைய உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

“சோம்நாத் கோயிலிற்கும் அதன் மூர்த்திக்கும் பாதிப்பு ஏதும் இல்லையே? அதைக் குறித்த தகவல்கள் ஏதும் உண்டா?” என்று கேட்டான் கிருஷ்ணன். “ஓ, ஷால்வனின் படைகள் அவற்றை அழித்து விட்டனர்!” என்றான் பிரத்யும்னன். “ம்ம்ம்ம்ம்” என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்ட கிருஷ்ணன், “அந்தக் கோயிலை நாம் திரும்பவும் கட்டுவோம். இம்முறை வெள்ளியால் கோபுரங்கள், கலசங்கள் அமைத்துக் கட்டுவோம்!” என்றான். கிருஷ்ணனின் இடைவிடா முயற்சியினால் துவாரகை மீண்டும் உயிர்த்தெழுந்தது.

2 comments:

பித்தனின் வாக்கு said...

விட்டுப் போன அனைத்துப் பதிவுகளையும் படித்தேன் மிக அருமை. யுத்த காண்டம் படிக்க ஆர்வமாய் உள்ளேன். நன்றி.

பித்தனின் வாக்கு said...

விட்டுப் போன அனைத்துப் பதிவுகளையும் படித்தேன் மிக அருமை. யுத்த காண்டம் படிக்க ஆர்வமாய் உள்ளேன். நன்றி.