Sunday, January 1, 2012

நற்பொருளைக் கொடுத்துச்சிவந்த கரங்களா!

அனைவரும் கர்ணன் தான, தருமம் செய்வதில் சிறந்தவன் என்றும் நினைக்கலாம். கர்ணன் தானமும், தருமமும் செய்தான் தான் இல்லை எனவில்லை. ஆனால் அதுவும் அவன் சுயநலத்திற்காகவே செய்தான். பார்க்கப் போனால் அவனுக்கு நாடு வந்ததே துரியோதனனால். துரியோதனன் கர்ணனுக்கு என ஒரு அந்தஸ்தை உண்டாக்கிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே அங்கநாட்டிற்கு அரசனாக்கினான். ஆகவே கர்ணனுக்கு நாடே தானமாகக் கிடைத்தது. சுயமாக எதுவும் கர்ணனுக்குக் கிடைக்கவில்லை. அதோடு அவன் பாண்டவர்களை வெல்லவென்றே தருமமும், தானமும் செய்வதை ஒரு வேள்வி போல் செய்து வந்தான். ஆகவே இதில் சுயநலமே மிகுந்திருந்தது. என்றாலும் நாளாவட்டத்தில் தானம் செய்வது அவன் அன்றாட வாழ்க்கையின் நடைமுறையாகவும் போனது. இந்தக் கர்ணனுக்கும் இப்போது யுதிஷ்டிரன் யுவராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டதும், ஹஸ்தினாபுரத்தின் மக்களுக்கும், அரசமாளிகையினருக்கும் பாண்டவர்கள் மிகவும் பிரியமானவர்களாக இருப்பதும் பிடிக்கவில்லை. எப்பாடுபட்டேனும் இவர்களை அகற்றவேண்டும். துரியோதனனுடன் ஆன தன்னுடைய நட்பை இதற்குப் பயன்படுத்த ஆரம்பித்தான் கர்ணன். அவனுக்குத் துணையாக காந்தார நாட்டு சகுனி மாமா. ஆனால் இவர் ஆரம்பத்தில் இதை எல்லாம் எதிர்த்தவரே! அதைப் பின்னர் பார்ப்போமா! இப்போது அடுத்துப் பாஞ்சால நாட்டு துருபதனின் பாத்திரத்தையும், இந்தக் கதையின் ஆரம்பத்தில் பாஞ்சால நாட்டின் நிலைமையையும் ஆராய்வோம்.

இளவயதில் துருபதனுடன் படித்த துரோணர் கிருபரின் தங்கையை மணந்து இல்வாழ்க்கை நடத்தியதில் ஏற்பட்ட வறுமை காரணமாக துருபதனிடம் செல்வத்தை யாசிக்கச் சென்றபோது அவன் மூலம் ஏற்பட்ட அவமானத்தை மறக்கவே இல்லை. அதற்குப் பழிவாங்கத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரசகுலத்தைச் சேர்ந்த தன்னுடைய மாணாக்கர்கள் தக்க பருவம் அடையவும், அவர்கள் வித்தையில் பூரணமாகத் தேர்ச்சி பெறவும் காத்திருந்தார். அவர்கள் உரிய தேர்ச்சி பெற்றதும் தங்கள் திறமையை வெளிப்பட உலகுக்கும் காட்டினார்கள். அதன் பின்னர் கெளரவர்களை முதலில் அனுப்பி துருபதனை வென்றுவரச் சொல்கிறார் துரோணர். ஆனால் அவர்களால் இயலவில்லை. அதன் பின்னர் வில் வித்தையில் சிறந்த அர்ஜுனன் செல்ல அவனும் போரில் வென்றதோடு அல்லாமல் துருபதனைக் கட்டி இழுத்து வந்து துரோணரின் காலடிகளில் விழச் செய்கிறான். தன் காலடியில் வந்து விழுந்த துருபதனைக் கண்டு எள்ளி நகையாடிய துரோணர் இப்போது பாஞ்சால நாடு தன் வசம் இருப்பதாகவும், தான் துருபதனுக்கு அந்த நாட்டில் சரிபாதியைத் தருவதாகவும் கூறினார். அவமானம் அடைந்த துருபதன் துரோணர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு தன் நாடு திரும்பினான்.


வேறு வழியே இல்லாமல் துரோணரால் வெகுமதி என்ற பெயரில் அளிக்கப்பட்ட தன் சொந்த நாட்டைப் பெற்றுக்கொண்டு திரும்பிய துருபதன் இந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தான். தன்னுடைய மொத்த வாழ்நாளையும் செலவழித்தாலும் இத்தகையதொரு மீளா அவமானத்திலிருந்து தான் தப்ப இயலாதே என மனம் உருகினான். இதற்கு ஒரே வழி துரோணரைப் பழிவாங்குவதே என முடிவு செய்தான். துரோணரையும், அவர் அபிமான சீடனான அர்ஜுனனையும் தன்னால் மறக்க இயலாது; அவர்களால் தான் அடைந்த அவமானத்தையும் பொறுக்க இயலாது.

தன்னுடைய துவேஷத்தையும், ஆங்காரத்தையும் அப்படியே தன்னுடைய இரு மகன்களுக்கும் (த்ருஷ்டத்யும்னன், சத்யஜித்) , ஒரே மகளான கிருஷ்ணாவுக்கும் (திரெளபதி) இளவயதில் இருந்து சொல்லிச் சொல்லி அவர்களை துரோணருக்கு எதிராக மாற்றினான் துருபதன். தங்கள் தகப்பன் அடைந்த அவமானத்தால் மனம் நொந்த இரு சகோதரர்களும், மகளான திரெளபதியும் தங்கள் தகப்பனுக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழிவாங்குவதைத் தங்கள் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாய்க்கொண்டனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையே தங்கள் தகப்பனுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கவே அர்ப்பணித்துக்கொள்வதாய் முடிவும் செய்தனர். என்னதான் பகைவராக இருந்தாலும் துரோணரை விடவும் சிறந்த ஆசாரியர் இல்லை என்ற காரணத்தால் த்ருஷ்டத்யும்னன் அவரிடமும் சிலநாட்கள் கல்வி கற்றுத் தேர்ந்தான். துரோணரும் துருபதனின் நோக்கத்தையும், த்ருஷ்டத்யும்னனின் நோக்கத்தையும் அறிந்திருந்தும் எந்தவிதமான வேறுபாட்டையும் காட்டாமல் அவனுக்குத் தனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் கற்பித்தார்.

இவ்வாறு இரு சகோதரர்களும் தக்க சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்க அவர்களின் சகோதரியான கிருஷ்ணா, என்று அழைக்கப்பட்ட கருநிறத்து அழகியான திரெளபதியும் வாலிபப் பருவத்தை அடைந்து தக்க மணாளனுக்குக் காத்திருந்தாள். அந்நாட்களில் ஆர்யவர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசும்படியான அழகும், தீரமும், மன உறுதியும் படைத்தவளாக வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணா(தன் நிறத்திற்காகக் கிருஷ்ணா என அழைக்கப்பட்டாள்) ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்வித்தை வீரனையே, அதிலும் வேகமாய் ஓடும் ரதத்தில் இருந்த வண்ணமே வில்லில் அம்பை ஏற்றிக் குறிபார்த்து எய்து இலக்கைத் தாக்கும் அளவுக்குத் திறமை உள்ள வில்லாளியையே மணக்கப் போவதாய்ப் பேச்சு. அரசர்களின் மஹாசபைகளிலும், ரிஷிகளின் ஆசிரமங்களிலும், குருகுலங்களில் ஆயுதப் பயிற்சியும், யுத்தப் பயிற்சியும் மேற்கொள்ளும் அரசகுமாரர்களிடையேயும் இதுதான் பேச்சு. திரெளபதியின் இந்த அறிவிப்பினால் எவருக்கும் அவளை மணக்கத் துணிவில்லை. நாட்கள் கடந்து வருடங்களும் கடந்தன. திரெளபதியும் இப்போது பத்தொன்பது வயதை முடித்து இருபதாவது வயதில் இருக்கிறாள். இனியும் நாட்களைக் கடத்தக்கூடாது. துருபதனுக்கு ஒருபக்கம் கவலை; கண்ணை மூடிக்கொண்டு எவனோ ஒரு அரசகுமாரனுக்கும் தன் அருமை மகளை, தனக்காகப்பழி முடிக்கக் காத்திருக்கும் வீராங்கனையைக் கொடுக்க அவன் தயாரில்லை. என்ன செய்யலாம்? அவளுக்குத் தக்க மணாளனுக்கே அவளை மணமுடிக்கவேண்டும்.

இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்வீரன் யார்? அப்போது இருவரைக் குறித்தே அனைவரும் கூறி வந்தனர். ஒருவன் கிருஷ்ண வாசுதேவன். சிறந்த வில்லாளியும், ரதசாரதியும் கூட. ஓடும் ரதத்தில் இருந்து தொலைதூரத்துக் குறியைத் தாக்கும் வல்லமை படைத்தவன். மற்றவன் அர்ஜுனன். அவனுக்குச் சமமான வீரன். அவனைவிடச் சிறந்தவனாகவும் விளங்குவான். ஆனால்??? ஆனால்?? அவன் செய்த காரியம்! சேச்சே! ஹும் ஹூம், அந்த தேரோட்டி சூதனின் மகன் கர்ணனும் சிறந்த வில்லாளியாமே? அவனும் இப்போது அங்கநாட்டின் அரசன் தான். ஆனாலும் கிருஷ்ணாவுக்கு அவன் தகுந்தவன் அல்ல.

கிருஷ்ண வாசுதேவன்?? ஆம்... அதுதான் சரி... தூரத்தில் கட்டியக்காரர்களின் குரல்.

"ஆச்சாரிய சாந்தீபனி அவர்கள் வருகிறார்கள்! பராக்! பராக்! பராக்!!!!"""

2 comments:

பித்தனின் வாக்கு said...

nalla irukku, theriyatha visayangal palavaum solli irukkinrirkal.

thodarungal. nanri.

priya.r said...

முன்பு படித்ததில் இருந்து கர்ணனின் குணாதிசயங்கள் மாறுபட்டனவாக இங்கே தெரிகிறதே ?!