Friday, June 27, 2014

என்னுயிர் நின்னதன்றோ!

கடைசியில் கிருஷ்ணன் வாயைத் திறந்தான்.  “சாத்யகி, நீ விரைவில் தூங்கச் செல்!  காலையில் உன் சக்தி அனைத்தையும் செலவு செய்து போட்டியில் ஜெயிக்கும்படி இருக்கும்!” என்றான்.

“ஓ, கிருஷ்ணா!  நான் முழு சக்தியுடன் இருக்கிறேன்.  எனக்குச் சோர்வெல்லாம் இல்லை.   அதுவும் இப்போது நீ அந்த மகதனுக்கு எதிராக ஒரு வெற்றியை எதிர்பார்க்கிறாய் அல்லவா?  அது போதும் எனக்கு;  நான் எப்போதையும் விட வலிமையுடன் இருக்கிறேன்.” என்று உற்சாகமாகக் கூறினான் சாத்யகி.

“தூங்கச் செல் சாத்யகி!  உத்தவனுக்காக நான் காத்திருக்கிறேன்.  நீ காத்திருக்க வேண்டாம்.”

சாத்யகி தன் படுக்கையில் படுத்துக் கொண்டு கிருஷ்ணனையே பார்த்தான். துவாரகையில் அவனை விடுவித்த அந்த அழகான வம்புக்கார புத்திசாலிப் பெண் பாமா அவன் நினைவுக்கு வந்தாள்.  அவள் எப்படியேனும் கிருஷ்ணனை மணந்து கொள்ளப் போவதாகத் தன்னிடம் சபதம் போட்டிருப்பதை நினைத்துக் கொண்டவனுக்கு ஒரு புன்னகை தோன்றியது.  பாமாவை நினைத்துச் சிரித்துக் கொண்டே தூங்க ஆரம்பித்தான் சாத்யகி.  சாத்யகி நன்கு தூங்கி விட்டான் என்று தெரிந்ததும் கிருஷ்ணன் கூடாரத்துக்கு வெளியே வந்து உத்தவனுக்குக் காத்திருந்தான்.   அங்கிருந்த அமைதி அவனைத் தாக்கியது.  அத்தனை அமைதியிலும் அவன் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.  திடீரென ஒரு சந்தேகம் அவனுக்குள் தோன்றியது.  “அவன், வாசுதேவ கிருஷ்ணன் உண்மையிலேயே தர்மத்தை நிலை நாட்டத் தான் பிறந்திருக்கிறானா? அல்லது அவன் விரும்பும்படியாக அனைத்தும் நடைபெறுவது தற்செயலான ஒன்றா?"

இந்த மஹா பெரிய அதே சமயம் மிகவும் சிக்கலான சுயம்வரத்தைத் திட்டம் போடுவதிலும் அதை நடத்துவதிலும் அவன் மிகவும் அதிகமான அபாயங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.  இதில் அவன் மட்டும் தோற்றான் எனில் அனைத்தையும் இழந்து விடுவான்.  அதே போல் அவன் மிகவும் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்து இங்கே வரவழைக்க இருக்கும் பாண்டவர்கள் ஐவர்!  அவர்களுக்கும் இதன் மூலம் பெரிய அளவில் நஷ்டமே ஏற்படும்.   சற்று நேரத்தில் உத்தவன் வந்தான்.  வரும்போதே தலையை ஆட்டித் தன் எண்ணத்தைத் தெரிவித்தவன், கிசுகிசுப்பாக, “சிகுரி நாகனுக்குப் பாண்டவர்கள் குறித்த எந்தச் செய்தியும் வரவில்லையாம். அவனால் கண்டு பிடிக்கவும் முடியவில்லையாம்”  என்றான்.   உத்தவனையே கவலையுடன் பார்த்த கிருஷ்ணன், “ இப்போது அனைத்துமே மிகக் கடினமாக ஆகி வருகிறது, உத்தவா! நம்மையும் ஆபத்து சூழ்ந்து கொள்ளும் அபாயத்தில் இருக்கிறோம்.”

கிருஷ்ணனையே ஆவலுடனும், அன்புடனும் பார்த்த உத்தவன் தன் கைகளால் அவன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்தான்.  பின்னர், “கிருஷ்ணா, நீ எப்போதுமே என்னிடம் அன்பு காட்டி நல்ல நண்பனாக இருந்து வருகிறாய்.  இப்போது எனக்கு ஓர் உதவி செய்வாயா?”

“என்ன அது உத்தவா?  நீ கேட்டு நான் இல்லை என்று சொல்வேனா?”

“அப்படி எனில் நாளை போட்டியில் சாத்யகி தோற்றான் எனில் நான் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள நீ எனக்கு அநுமதி கொடு!”

“நீயா?”  ஆச்சரியத்துடன்  வினவினான் கிருஷ்ணன். ‘ நீ போட்டியில் கலந்து கொள்கிறாயா?  உத்தவா?  திரௌபதியை மணந்து கொள்ள உனக்கு முழு மனதுடன் விருப்பமா?  உனக்கு எனத் தனியாக எவ்வித ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இல்லை என்பதை நான் அறிவேன். அதோடு நீ மென்மையான மனம் படைத்தவன்.   இப்படி ஒரு வலுவான போட்டியில் சேர்ந்து கொள்ளும் ஆவல் உனக்கு ஏற்பட்டதே இல்லையே?  இப்போது எப்படி?  நீ போட்டியில் வென்றால் திரௌபதியை மணந்து கொண்டு மகிழ்வோடு இருக்க முடியும் என எண்ணுகிறாயா?  அது முடியாத ஒன்று உத்தவா! அதோடு நீ மணந்து கொண்டிருக்கும் இரட்டைச் சகோதரிகள் மனதை நீ மிகவும் புண்படுத்தி விடுவாய்.  அவர்கள் இருவரும் மனம் உடைந்து போவார்கள்.”

“அது ஒன்றும் விஷயமே இல்லை கிருஷ்ணா!  துரியோதனனை மணக்கும்படியான நிலைமை ஏற்படாது என நீ திரௌபதிக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய்; நீயோ போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை.  சாத்யகியால் வெல்வது கடினம். அவனால் முடியவில்லை எனில் என்னைப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கொடு.  உன்னை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  தயவு செய்து மாட்டேன் என்று மட்டும் சொல்லி விடாதே!”  உத்தவன் முழு மனதுடன் இந்தப் போட்டியில் தான் கலந்து கொள்ள நினைப்பது அவன் குரலில் தெரிந்தது.   கிருஷ்ணன் அவனை அன்போடு அணைத்துக் கொண்டு, “உத்தவா, என்னுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்ற வேண்டி நீ எத்தனை முறைகள் உன்னையே தியாகம் செய்வாய்? “

“கண்ணா, வாசுதேவா, நான் உயிர் வாழ்வதே உனக்காகத் தான். நீ அளித்த வாக்குறுதிகள் உண்மையாக இருக்கத் தான் நான் வாழ்கிறேன்.  கிருஷ்ணன் வாக்குறுதி கொடுத்தால் அது நடக்கும் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் வாழ்நாள் குறிக்கோள்.  தயவு செய்து அனுமதி கொடு கிருஷ்ணா!”

“சரி உத்தவா!  நீ விரும்பினால் அவ்வண்ணமே நடக்கும்.  ஆனால் இதன் மூலம் நான் மகிழ்ச்சி அடையப் போவதில்லை. “ என்ற கிருஷ்ணனுக்கு ஒரு சந்தேகம் தோன்ற, “ அது சரி அப்பனே, நீயும் தோற்று, சாத்யகியும் தோற்று துரியோதனன் மட்டும் ஜெயித்தான் எனில்? அப்போது என்ன செய்வது?”

“அப்போது கூட துரியோதனன் போட்டியில் வெல்லாமல் நான் பார்த்துக் கொள்வேன், கிருஷ்ணா!”  அந்த இருட்டில் மங்கலான நிலவொளியில் உத்தவன் முகத்தில் தெரிந்த கிளர்ச்சியைப் பார்த்த கிருஷ்ணன் ஆச்சரியம் அடைந்தான்.   “எப்படி, அப்பா?” கிருஷ்ணன் ஆச்சரியம் பொங்க உத்தவனிடம் கேட்டான்.  “ம்ஹூம், அதெல்லாம் சொல்ல மாட்டேன்.  நீ மட்டும் மாட்டேன் என்று சொல்லாமல் என்னை அனுமதித்து விடு! அவ்வளவு தான் எனக்கு வேண்டியது.”  உத்தவன் குரல் தீர்மானமாக ஒலித்தது.

“உன் திட்டம் தான் என்ன உத்தவா?” கண்ணன் வற்புறுத்தினான்.

“ஒருவேளை துரியோதனன் வென்று விட்டான் எனில், என்னால் வெல்ல முடியவில்லை எனில், …… என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.”  உத்தவன் சகஜமாகச் சொன்னான்.  அவன் சாதாரணமாகச் சொல்வது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளூர அவன் திட்டத்தைக் குறித்துக் கண்ணனுக்கு யோசனையாக இருந்தது.  “என்ன செய்வாய்? செய்யப் போகிறாய்?”  கிருஷ்ணன் உத்தவன் குரலில் இருந்த உறுதியைக் கண்டு ஒரு கணம் மூச்சு விடக் கூட மறந்தான்.  உத்தவன் உடனடியாக எதுவும் பேசவில்லை.

“நான் அந்த வில்லைப் பார்த்தேன் கிருஷ்ணா!  மிகவும் கனமானது.  வலிமையானது.  அந்த வில் என்னை நசுக்கிக் கொல்லும் அளவுக்கு சக்தி உள்ளதும் கூட.  அவ்வளவு கடினமாக இருக்கிறது.  அப்படி ஒருவேளை நான் அந்த வில்லினால் நசுக்கிக் கொல்லப்பட்டால்…….”  சற்றே தயங்கிய உத்தவன், மீண்டும் தன் குரலை சகஜமாக சாதாரணமாகப் பேசுபவன் போல் மாற்றிய வண்ணம் தொடர்ந்தான். “ நான் நசுக்கிக் கொல்லப்பட்டால்…… இறந்தவன் உடல் இருக்குமிடத்தில் சுயம்வரம் நடத்த முடியாது.  அதன் புனிதம் கெட்டு விடும்.  சுயம்வரமே நின்று போய்விடும்.”

“உத்தவா, உத்தவா!” கண்கள் கண்ணீரைத் தானாகப் பெருக்க, குரல் உணர்ச்சி வசத்தில் நடுங்கக் கிருஷ்ணன் செய்வதறியாது தவித்தான்.  “என் வாக்குறுதியைக் காக்க வேண்டி உன் உயிரை நீ தியாகம் செய்ய வேண்டுமா?  ஏன் அப்படி?  ஏன் இப்படிச் செய்ய நினைக்கிறாய் உத்தவா?”

“கடவுளின் வார்த்தைகள் உண்மையானவையாக முழுமையானவையாக பூர்த்தி அடைபவையாக இருக்க வேண்டும், கோவிந்தா!  நீ என் கடவுள்.   நீ எங்கள் அனைவருக்குமே கடவுள்.  நீ எங்கள் கடவுளாக இருப்பதால் தான் நாங்கள் அனைவருமே இருக்கிறோம்.  உன்னில் நாங்கள்;  எங்களில் நீ! இருக்கிறாய்; இருக்கிறோம்.  இல்லை எனில் நாம் அனைவருமே இறந்து விடலாம்.  குறைந்த பக்ஷமாக நானாவது என் உயிரை அதற்காக விட்டு விடுகிறேன்.  உனக்காக கிருஷ்ணா!  நீ எங்கள் ரக்ஷகன்!  எங்களைக் காப்பவன்.  நீயே எங்கள் பர வாசுதேவன்!  உன்னிடம் பூரணமாகச் சரணாகதி அடைகிறோம் வாசுதேவா!”

கண்ணன் கண்கள் குளமாக உத்தவனைத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கட்டி அணைத்துக் கொண்டான்.

3 comments:

ஸ்ரீராம். said...

//திடீரென ஒரு சந்தேகம் அவனுக்குள் தோன்றியது. “அவன், வாசுதேவ கிருஷ்ணன் உண்மையிலேயே தர்மத்தை நிலை நாட்டத் தான் பிறந்திருக்கிறானா? அல்லது அவன் விரும்பும்படியாக அனைத்தும் நடைபெறுவது தற்செயலான ஒன்றா?"//

யோசிப்பதே கண்ணன்தானே... சற்றே குழப்பமாக இருக்கிறதே!

உத்தவனின் பக்தி சிலிர்க்க வைக்கிறது.

sambasivam6geetha said...

கண்ணன் தான் யோசிக்கிறான். தான் அசாதாரணமானவன் என்பது புரிந்தாலும் அவனும் ஒரு சாமானிய மனிதனைப் போல் சந்தேகங்கள் கொண்டவனே என்பதை தர்க்க ரீதியாகப் பார்த்திருக்கிறார் ஆசிரியர். :))) ஆகவே கண்ணனின் சந்தேகங்களும் சரி, ராமனின் முடிவுகளும் சரி ஏற்கக் கூடியவையே! :))))

அப்பாதுரை said...

கண்ணனுக்குத் தோன்றும் சந்தேகம் அருமையான டச். கண்ணனை கண்ணனாகக் காண் முடிகிறது.

கடவுளின் வாக்கு பொய்க்கக் கூடாது என்பதற்காக மனிதர்கள் புரிய நினைக்கும் உயிர்த்தியாகம்.. இங்கே தான் எல்லாமே தொடங்குகிறது....;-)