Friday, June 10, 2016

த்வைபாயனரின் யோசனை!

“மன்னர் மன்னா! சிறிது காலம் முன்னர் வரை க்ஷாத்ர தேஜஸும், பிரம்ம தேஜஸும் ஒன்றையொன்று பிரிக்க முடியாமலேயே இருந்து வந்திருக்கிறது. அனைத்து ரிஷிகளிடமும் க்ஷாத்திர தேஜஸும் இருந்திருக்கிறது. பிரம்ம தேஜஸும் இருந்து வந்துள்ளது. அப்படியான ரிஷிகளிடம் பாடம் கற்கும் க்ஷத்திரிய அரசர்கள் நீதி பரிபாலனத்தில் சிறந்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது அவை ஒன்றையொன்று சாராமல் பிரிந்து விட்டன. சஹஸ்ரார்ஜுனனோடு நடத்திய யுத்தத்தின் பின்னர் இவை எல்லாம் அடியோடு மாறி விட்டன. முன் போல் இவை ஒன்று சேரவேண்டும். அப்போது தான் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், நியமங்களையும் விதிகளையும் சரிவரக் கடைப்பிடிக்க முடியும்!”

காங்கேயனுக்கு இது பிடித்தமானதாகத் தெரிந்தது. ஆகவே அவர் தலையை அசைத்துத் தம் சம்மதத்தைத் தெரிவித்தார். மேலும் வாய்மொழியாகவும், “ஆம், த்வைபாயனரே, அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அதை நாம் திரும்பக் கொண்டுவர வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?” என்றும் கேட்டார்.

அதற்கு த்வைபாயனர், “யுவராஜா, என் தந்தை பராசர முனிவர் அடிக்கடி சொல்வது என்னவென்றால், ஸ்ரோத்ரியர்கள் தங்கள் வாழ்க்கையில் முழு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வேதம் ஒன்றுக்காக மட்டும் வாழ்ந்து வர வேண்டும். ஆனால் அப்படியான பிராமணோத்தமர்கள் இப்போது அரிதாகவே காணப்படுகின்றனர். அனைவரும் தங்கள் நியம, நிஷ்டைகளை மறந்து வருகின்றனர். பிராமணர்கள் ஒழுங்காக இருந்து அனைத்தையும் கற்பித்தாலன்றி க்ஷத்திரியர்களால் நாடாள இயலாது! ஆக அவர்களும் தங்கள் உண்மையான கடமைகளை மறந்துவிட்டனர்.” என்று என் தந்தை சொல்வார்.” என்றார் த்வைபாயனர்.

தன் தலையை ஆட்டி ஆமோதித்த வண்ணம் காங்கேயன் சொல்வார்:” நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே, த்வைபாயனரே!  ராஜரிஷிகளாகவே இருந்த மனுவின் நாட்களும் வைவஸ்வனின் நாட்களும் காலப்போக்கில் மறந்து மறைந்துவிட்டன. இப்போதுள்ள க்ஷத்திரியர்களுக்கு தவத்தின் வலிமை தெரியவில்லை. அதற்காக வாழ்வதுமில்லை. அதிகாரங்களைக் கைப்பற்றி நாடுகளை ஆளவே விரும்புகின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களில் தங்கள் காலத்தைக் கழிக்கவே விரும்புகின்றனர். போட்டியிலும், பொறாமையிலும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு காலத்தைக் கழிக்கின்றனர். அவர்களிடம் போய் நீதி, நேர்மை, ஒழுக்கம், தர்மம் என்றெல்லாம் பேசினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள்!”

காங்கேயன் தன் கைகளைத் தன் தந்தையின் தோள்களின் மேல் அன்புடன் வைத்துக்கொண்டு தடவிக் கொடுத்தார். “தந்தைக்கு என்ன செய்வது என்று புதிராக இருக்கிறது. குழம்பிப் போய் இருக்கிறார். க்ஷத்திரியர்கள் தங்கள் அரச தர்மத்தை எல்லாம் கைவிட்டு எத்தனையோ காலங்கள் ஆகின்றன. எல்லாம் ஒவ்வொன்றாய்க் கெட்டுப் போக ஆரம்பித்தாயிற்று. இது எங்கே போய் முடியப் போகிறது என்பதே புரியவில்லை. இதை யார் எப்படி நிறுத்தப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை!”

கருணையுடனும், தயையுடனும் புன்னகைத்தார் த்வைபாயனர்.

“ஆர்யவர்த்தமும் அதன் மக்களும் இன்னமும் கெடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மதிப்புக்குரிய மன்னர் மன்னரிடமும், யுவராஜாவான உங்களிடமும் இருக்கிறது, பிரபுவே! நீங்கள் இருவரும் மனம் வைத்தால் அதைத் தடுத்து நிறுத்தலாம்.”

“ம்,, அப்படி நடக்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனாலும் சில சமயங்களில் எனக்கே தர்மத்தின் படி வாழ்வது என்பது ஒரு சவாலாகத் தோற்றமளிக்கிறதே! என்ன செய்வது?” என்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினார் காங்கேயன். “கவலை வேண்டாம் யுவராஜா!” என்று சொன்ன த்வைபாயனர் அவர் வயதுக்கு மீறிய விவேகத்துடன் காணப்பட்டார். அதே விவேகத்துடன் அவர் மேலும் கூறுவார்:” இருள் அதிகம் ஆகும்போது தான் வெளிச்சம் பிறக்கிறது. தர்மம் தானே எழுந்து நிற்கும்; அதற்கு வேண்டிய வலிமையையும், வல்லமையையும் சேகரித்த பின்னர் அது தானே எழுந்து நிமிர்ந்து நிற்கும்.” என்றார்.

“நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள். தந்தையும் தன்னால் இயன்றதைக் கட்டாயமாய்ச் செய்வார்.” என்றார் யுவராஜா காங்கேயன். தன்னை விட வயதில் மிகச் சிறியவராக இருக்கிறார் இந்த இளம் துறவி. ஆனாலும் இவரிடம் அளப்பரிய மதிப்பும், மரியாதையும் உண்டாகிறதே என நினைத்துக் கொண்டார் காங்கேயன்.


“வழி மிக எளிதானது யுவராஜா அவர்களே! நீங்களும், நானும், இன்னும் நூற்றுக்கணக்கான பிரமசாரிகளும் பிரமசரிய விரதம் ஏற்கையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்திருந்தோம்.
நான் நல்லனவற்றையே நினைத்துக் கொண்டு தீயனவற்றை மறந்துவிடுவேன்
நான் உண்மையையே கடைப்பிடிப்பேன். பொய்யை வெறுத்து ஒதுக்குவேன்.
ஞானத்தையும் விவேகத்தையும் போற்றுவேன்; அறியாமையை ஒதுக்குவேன்.
சத்தியப் பாதையில் செல்வேன்; பொய்யின் பாதையை ஒருக்காலும் நாட மாட்டேன்.
எளிமையான வாழ்க்கையை வாழ்வேனே அன்றி ஆடம்பர வாழ்க்கையை விரும்ப மாட்டேன்."

"யுவராஜா, இவற்றை எல்லாம் நாம் ஒருக்காலும் மறக்காமல் கடைப்பிடித்து வந்தோமானால் ஒளிக்கடவுளான சூரிய பகவான் நமக்கு நல்லனவற்றை எல்லாம் அருளித் தருவார். அவர் கண்கள் ஒரு கணம் மெல்ல மங்கியது போல் காணப்பட்டது. அவர் மேலும் அடக்கத்துடன் கூறினார்:” என்னால் இயன்றவரையிலும் இவற்றை எல்லாம் கடைப்பிடிக்க நான் முயற்சி செய்து வருகிறேன். கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் தான். ஆனால் என்னால் இயன்றவரை முயல்கிறேன். முயற்சியை நான் ஒரு போதும் கைவிடவில்லை!” என்று சொல்லிய வண்ணம் சுற்றிலும் பார்த்தவண்ணம் தன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தினார் த்வைபாயனர்.

சூரியனின் மெல்லிய கிரணங்கள் அந்த அறைக்குள் நுழைந்து அலாதியானதொரு சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. கதவுகள் வழியாகவும், சாளரங்கள் வழியாகவும் நுழைந்த வெளிச்சத்தைக் கண்ணுற்ற த்வைபாயனர் சூரியக் கடவுளை வழிபடும் விதமாகக் காயத்ரி மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். பின்னர் மேலும் பேசினார்.

“தோல்விகள் மேல் தோல்விகளைக் கண்டாலும் என் நம்பிக்கைக்கு அசைவில்லை. என்  தந்தை பராசர முனிவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி வீணாகிப் போய்விடக் கூடாது!” இதைச் சொன்ன த்வைபாயனர் தனக்குள்ளே மீண்டும் தன்னம்பிக்கை கிளர்ந்து எழுந்ததை உணர்ந்தார்.