Sunday, June 26, 2016

த்வைபாயனரின் வேண்டுகோள்!

மந்திரி குனிக் உடன் வர த்வைபாயனர் தான் தங்கி இருந்த கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த மரத்தோப்பினுள் தான் அவர் தங்கி இருந்தார். அங்கே சென்றபோது அவரைக் காணவும், ஆசிகள் பெறவும் உடல்நிலைக்கான மருந்துகளைப் பெறவும் மக்கள் கூட்டம் அலை மோதியது. மாலைக்கான நித்திய வழிபாடுகள் முடிவடைந்ததும், வந்திருந்தவர்களைக் கவனித்து அவரவர் தேவையை நிறைவேற்றி அனுப்பிய த்வபாயனர் அங்கிருந்த குழந்தைகளோடு தன் உணவைப் பங்கிட்டு உண்டார். பின்னர் வந்திருந்த கூட்டம்  மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. மந்திரி குனிக்கிடம் ஆசாரிய விபூதி அவர்களின் இல்லத்துக்குத் தம்மை அழைத்துச் செல்ல வேண்டினார் த்வைபாயனர். குனிக் த்வைபாயனரை அழைத்துச் சென்றார். ஒரு சில குறுகிய சந்துகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அதன் பின்னர் ராஜகுருவின் வசிப்பிடம் வந்தது. வீட்டைச் சுற்றிலும் மைதானம் விரிந்து பரந்து கிடந்தது. ஓர் பக்கம் பசுக்களைப் பராமரிக்கும் கோசாலை காணப்பட்டது. கோசாலையில் சுமார் பனிரண்டு பசுக்களுக்கு மேல் இருக்கும் போல் தெரிந்தது. வீட்டுப் பெண்மணிகள் அங்கே அமர்ந்த வண்ணம் பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் அதன் பிற்சேர்க்கையாக ஓர் கட்டிடம் காணப்பட்டது. அங்கிருந்து மாணாக்கர்களின் வேத கோஷங்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தன. வீட்டின் முற்றத்தின் நட்ட நடுவில் ஓர் பெரிய அக்னிக் குண்டம் காணப்பட்டது. அங்கு தான் புனிதமான வேள்விகள் நடக்கின்றன என்பது புரிய வந்தது.

ஆசாரிய விபூதி அந்தச் சமயம் வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஓர் தாழ்வறையில் ப்ரமிஷ்டா என்னும் பெயருடைய தன்னுடைய தொண்ணூறு வயதுத் தகப்பனாருடன் ஓர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். வயது அதிகம் ஆகிவிட்டதால் மிகவும் சுருங்கிக் காணப்பட்ட உடலுடனும், மங்கிய கண்களோடும், தொங்கும் கைகளோடும் காணப்பட்டார் அந்தக் கிழவர். வலக்கை ஆடிக் கொண்டே இருந்தது. இவர்களைத் தவிரவும் மூன்று முதிர்ந்த ஸ்ரோத்ரியர்களும் காணப்பட்டனர். அவர்கள் கங்கைக்கரையில் தங்கள் ஆசிரமங்களை நிர்மாணித்து நடத்தி வந்தனர். ஆசாரிய விபூதியைப் போலவே அவர்கள் அந்த ஆசிரமவாசிகளுக்குத் தலைமை வகித்து வந்தார்கள். இவர்களைத் தவிரவும் ஆசாரிய விபூதியின் இரு மகன்களும் காணப்பட்டனர். அவர்கள் நடுத்தர வயதை எட்டி இருந்தனர். அவர்கள் மூன்று வேதங்களிலும் சிறப்புத் தகுதி பெற்று அதன் சாரத்தை உள்வாங்கி இருந்தனர். சாஸ்திர சம்பிரதாயங்களில் தேர்ந்திருந்தார்கள். ப்ரமிஷ்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பட்டு வஸ்திரம் தரித்து ஆபரணங்கள் பூண்டு தங்கள் உயர்ந்த பதவிக்கான அடையாளங்களோடு காணப்பட்டனர். அவர்கள் மிகவும் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கே திடீரென வந்த மந்திரி குனிகரைக் கண்டதும் அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள். குனிகர் த்வைபாயனர் வந்திருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார். அவர்கள் அப்போது அங்கே அவரைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தனர்.

த்வைபாயனர் பிரமிஷ்டரைக் கீழே விழுந்து வணங்கினார். மற்ற முதிர்ந்த ஸ்ரோத்திரியர்களையும் வணங்கிக் கொண்டார். ஆசாரிய விபூதி அவரை வரவேற்கும் தோரணையில், “பராசர முனியின் மகனே! இங்கே அமருக!” என்று உபசரித்தார். தன் இரு மகன்களுக்கும் இடையே இருந்த ஆசனத்தில் த்வைபாயனரை அமரச் சொன்ன ஆசாரிய விபூதி, “இந்தச் சமயம் உங்களை நாங்கள் இங்கே எதிர்பார்க்கவில்லை!” என்று கூறினார். அவர் அப்போது அந்தச் சமயம் அங்கே வந்ததில் தங்களுக்கு இருந்த எரிச்சலைச் சற்றும் மறைக்கவில்லை அவர். த்வைபாயனரை அங்கே பார்த்ததில் எவ்விதமான மனமகிழ்ச்சி இருப்பதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. த்வைபாயனர் தமக்கு அளிக்கப்பட்ட ஆசனத்தை ஏற்கவில்லை. ஆசாரிய விபூதிக்கு எதிரே அவரின் சீடரைப் போலத் தரையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்து, “வணக்கத்துக்குரிய குருவே, இன்றைய நிகழ்வுகளுக்குப் பின்னர் என்னுடைய வருகை இங்கே விசித்திரமாகவே காணப்படும்.” என்றார். சற்றே நிறுத்திக் கொண்டு மௌனமாக இருந்த த்வைபாயனர் மேலே பேச ஆரம்பித்தார். “ஆசாரியரே! ஆனால் எப்படி இருந்தாலும் வணக்கத்துக்குரிய ஆசாரிய விபூதி தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு ஸ்ரோத்திரியனைத் திரும்ப அனுப்ப மாட்டார் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு!” என்றார்.

“ஸ்ரோத்ரியர்களுக்காக என் வீட்டுக்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!” அவருடைய குரலுக்கும் அவர் சொன்ன வார்த்தைகளுக்கும் சற்றும் பொருத்தமே இல்லாமல் பெயருக்குச் சொல்கிறாற்போல் இருந்தது.

த்வைபாயனர் எதையும் கருத்தில் கொள்ளாமல் மேலே பேசினார். “ஆசாரியரே! நீங்கள் தான் எனக்குப் பரிகாரமாகச் செய்யவேண்டிய சடங்குகளைக் குறித்துச் சொல்ல வேண்டும். கங்கைக்கரையின் ஆசிரமங்களைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் கறை நீங்கி அவை முன்னிருந்ததை விடச் சிறப்புடனும் வளமுடனும் இருக்கவேண்டிய பரிகாரங்களைக் குறித்துத் தெரியப்படுத்த வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டார். அப்போது பிரமிஷ்டர் பேச ஆரம்பித்தார். “விபூதி நீ பராசரரின் புதல்வன் என்று கூறினான். நான் அவனைச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.” என்ற வண்ணம் தன் கண்களுக்கு மேல் வலக்கையை வைத்துக் கொண்டு த்வைபாயனரைக் கூர்ந்து பார்த்தார் கிழவர். மேலும் தொடர்ந்து, “நான் பார்த்தது மஹா முனிவரான வசிஷ்டரின் ஆசிரமத்தில்!” என்றும் கூறினார். ஆசாரிய விபூதிக்கு உடலும் மனமும் இறுக்கமடைந்தது அவர் முகத்திலே தெரிந்தது. த்வைபாயனரைப் பார்த்து அவர், “பரிஹார ஹோமங்களைக் குறித்து என்னிடம் கேட்பதில் என்ன பலன்? அப்படி உனக்கு நீ ஏதேனும் பாவம் செய்துவிட்டதாகத் தெரிந்தால், உனக்குத் தெரிந்திருக்கும் நியதிகளாலேயே அவற்றைச் சரியான முறையில் பரிகாரங்கள் செய்ய உதவும்.” என்றார்.

“ஐயா, தாங்கள் என்னை மன்னிக்கவே இல்லை என்பதை நான் உணர்ந்ததால் தான்!.....” என்று நிறுத்திய த்வைபாயனர், மேலே தொடர்ந்து, தன் சிறுபிள்ளைத் தனமான சிரிப்பைச் சிரித்தார். அது பார்க்கக் கவர்ச்சிகரமாக இருந்தாலும் ஆசாரியரின் மனதில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. “நான் உன்னை மன்னித்தால் என்ன? மன்னிக்காவிட்டால் என்ன? அதனால் என்ன நடந்துவிடப் போகிறது?” என்று ஆசாரியர் குரலில் கடுமையுடன் கேட்டார்.

“ஓ, அது எனக்குக் கவலையைத் தருமே ஆசாரியரே! நான் வருந்துகிறேன். வணக்கத்துக்குரிய ஆசாரியரே, என் மன்னிப்பு மட்டும் உண்மையானதாக இருந்தால் கட்டாயம் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள். நானே சரியாக இல்லாதபோது மற்றவர்கள் சரியாகவும் ஒழுங்காகவும் இருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் எவ்விதமான நியாயமும் இல்லை அல்லவா? என்னை ஒரு வேண்டுகோள் வைக்க அனுமதிப்பீர்களா, வணக்கத்துக்குரிய ஆசாரியரே!” என்று த்வைபாயனர் கேட்டார். ஆசாரியரின் பொறுமை பறி போய்விட்டது. மிகவும் கோபத்துடன் கூடிய கடுமையான குரலில் அவர் பேச ஆரம்பித்தார். “ நீ கேட்பது வாஜ்பேய யக்ஞத்துடன் தொடர்புடையது எனில் நான் ஆரம்பத்திலேயே அதை நிராகரிக்கிறேன்.” என்றார்.

“ஏன் நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்? கடவுள் கூடப் பாவம் செய்கிறவர்களின், செய்தவர்களின் குரலைச் செவிமடுக்கிறான்.” அங்கிருந்த அனைவர் முகங்களிலும் ஏளனச் சிரிப்பு ஒன்று காணப்பட்டது. ஆனால் இதில் கிழவர் பிரமிஷ்டர் கலந்து கொள்ளவில்லை. அவர் தன் காதுகளின் மேல் உள்ளங்கையை வைத்து வளைத்துக் கொண்டு த்வைபாயனர் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் சொல்வதை ஆமோதிப்பதாகத் தலையையும் ஆட்டி மேலே அவரைப் பேசும்படி சைகையில் சொன்னார். அதைக் கவனித்த ஆசாரிய விபூதி, “சரி, சரி, நீ என்ன சொல்லவேண்டுமோ அதைச் சுருக்கமாகச் சொல்!” என்றார். இந்த இளம் துறவியைத் திரும்ப அனுப்பி விட்டுத் தான் உள்ளே செல்ல விரும்பினார் விபூதி! ஆனாலும் வேறு வழியின்றி அங்கே இருந்து அவர் பேச்சைக் கேட்கும்படி ஆகிவிட்டது.

“வணக்கத்துக்கு உரியவரே, ஆசாரியரே! நான் உங்களுக்குச் செய்த பாவத்தைக் கழுவ விரும்புகிறேன். அதற்குப் பரிகாரம் தேட விரும்புகிறேன்.” சற்று நேரம் மௌனமாக இருந்து யாரேனும் ஏதாவது பதில் சொல்வார்களா என எதிர்பார்த்தார் த்வைபாயனர். யாரும் வாயையே திறக்கவில்லை. ஆகவே மேலே தொடர்ந்தார். “ ஆசாரியரை நான் வணங்கிக் கேட்டுக் கொள்வதெல்லாம் வாஜ்பேய யக்ஞம் செய்வதிலிருந்து என்னை விடுவித்துவிட வேண்டும்………..” குறுக்கிட்ட ஆசாரியர், “ஆம், அதன் மூலம் மஹாராணியின் கடுமையையும் கொடுமையையும் நான் எதிர்கொள்ள வேண்டும்.” என்று  சீறினார்.

“ஆஹா, அப்படி எல்லாம் நடவாது ஆசாரியரே! மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தினி கோபம் அடைய மாட்டார். நான் உறுதியாகச் சொல்கிறேன். அதிலும் நான் ஒரு குற்றவாளி,  உயர்ந்த மனிதர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய குற்றவாளி என்பது மட்டும் மஹாராணிக்குத் தெரிந்து விட்டால் அவரே நான் வாஜ்பேய யக்ஞத்தில் கலந்து கொள்வதை ஒத்துக்கொள்ள மாட்டார்.  நான் அதற்குத் தகுதி படைத்தவன் அல்ல என்பதை அவர் தெரிந்து கொண்டால் எதுவும் சொல்ல மாட்டார்.” என்றார் த்வைபாயனர்