Wednesday, June 8, 2016

ஷாந்தனுவின் வேண்டுகோள்!

சிகிச்சை ஆரம்பித்து எட்டு நாட்கள் ஆகி இருந்தன. எட்டாம் நாள் சக்கரவர்த்தி ஷாந்தனு மெல்ல எழுந்து அமர்ந்ததோடு அல்லாமல் தன்னைச் சுற்றி என்ன நடந்தது, இப்போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான். மெல்ல மெல்லப் பேசவும் செய்தான். ஆனாலும் குரலில் பலஹீனம் இன்னமும் தெரிந்தது. அவனால் வழக்கமான குரலில் பேச முடியவில்லை. அன்று மத்தியானம் சிகிச்சை முடிவடைந்ததும் த்வைபாயனர் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்து அக்னியை அணைத்தார். பின்னர் கோயிலுக்குச் செல்வதற்காகக் கிளம்பினார்.

சக்கரவர்த்தி ஷாந்தனு மென்மையான கரடித்தோலால் செய்யப்பட்ட படுக்கையில் சாய்ந்த வண்ணம் படுத்திருந்தான். அவனருகே அவனுடைய ஆசை மனைவி மஹாராணி சத்யவதி அமர்ந்து கொண்டு மன்னனின் தோளை மெதுவாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். அவள் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது. அதோடு அவள் உள் மனதில் தன் மகன் கிருஷ்ண த்வைபாயனரின் சக்தியைக் குறித்துப் பெருமிதமும் ஏற்பட்டிருந்தது. தன் மகன் மகாப் பெரிய சாதனையைச் செய்துவிட்டான் என்று அவளுக்குப் புரிந்தது. படுக்கையின் தலைமாட்டில் விசிறி வீசும் பெண்கள் நின்று கொண்டு இயந்திரம் போல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.


படுக்கையின் வலப்பக்கம் போட்டிருந்த ஆசனத்தில் யுவராஜா காங்கேயன் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் இப்போது பதட்டமும், வியாகூலமும் குறைந்திருந்தது. அமைதி தெரிந்தது. த்வைபாயனரின் மேல் அலாதியான மதிப்பும் ஏற்பட்டிருந்தது. அவரால் இத்தனை காலம் செய்து வந்த வைத்தியங்களில் குணமடையாத தன் தந்தை இப்போது த்வைபாயனரின் மந்திர வித்தைக்குக் குணமானது குறித்து இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தவிதமான மருந்துகளுக்கும் குணமாகாத தன் தந்தை இப்போது குணமாகி இருக்கிறார். இந்த இளைஞனுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் ஆசாரியரும், ராஜகுருவுமான விபூதி அவர்கள் யுவராஜா காங்கேயன் அருகே அமர்ந்திருந்தவர் த்வைபாயனரை அவநம்பிக்கையுடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார். இங்கே நடந்த அதிசயத்தினால் அவர் அதிர்ச்சி அடைந்திருந்தார். இப்படியும் நடக்க முடியும் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அந்த இளைஞன் சொன்ன மந்திரங்கள் பெரும்பாலும் அவர் அறிந்தவையே! அவரால் சொல்லப்பட்டவையே! அவரும் மந்திர வித்தையை நன்கு கற்று அதில் தேர்ச்சி பெற்றவரே! ஆனால் இந்த இளைஞன் முன்னால் அவர் திறமை தோற்கடிக்கப்பட்டு விட்டதே!


ஹஸ்தினாபுரத்தின் ஸ்ரோத்ரியர்களுக்குள்ளே அவர் தான் இன்றளவும் தலைவராக இருந்ததோடு அல்லாமல் அதன் மூலம் கிடைத்து வந்த பெரிய மரியாதைகளையும், மதிப்பையும் அவர் அனுபவித்து வந்தார். அதர்வ வேதம் வேதங்களின் தொகுப்புத் தான் என்று யாரேனும் சொல்லி வந்தால் அவர்களைக் கொஞ்சமும் மதிக்க மாட்டார். எவரோடும் ஒத்துப் போக மாட்டார். அதர்வ வேதத்தைக் கொண்டாடுபவர்களைத் தம் விரோதியாகவே பார்ப்பார். அவர் தினமும் மன்னனின் படுக்கைக்கு அருகே அமர்ந்து கொண்டு அங்கு நடக்கும் சாஸ்திர ரீதியான சடங்குகளை மேற்பார்வை செய்து வந்தார். அது அவர் கடமை. ஒரு ராஜகுருவாக மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமை! ஆகவே அவர் அங்கே அமர்ந்திருக்க நேர்ந்தது. இல்லை எனில் இந்த இளைஞன் அதர்வ வேதத்தை அந்த மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்ததுமே அவர் அறையை விட்டே வெளியேறி இருப்பார். அவர் சிறிதும் இதை எதிர்பார்க்கவே இல்லை. அதர்வ மந்திரத்தை இந்த இளைஞன் உச்சரித்துக் கொண்டே அதில் சொல்லி இருக்கும் மந்திர மூலிகைகளைக் கொண்டு மன்னனுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறான் என்று அவர் நினைக்கவே இல்லை!


த்வைபாயனர் கோயிலில் பார்த்த இளைய மந்திரி குனிக் என்பவரும் அங்கே படுக்கைக்கு அருகே அதன் காலடியில் நின்று கொண்டிருந்தார். அவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தினாலும் ஆர்வமிகுதியினாலும் த்வைபாயனர் செய்ததைப் பாராட்டியதோடு அல்லாமல் இதன் மூலம் த்வைபாயனருக்கு என்ன விதத்தில் லாபம் கிட்டப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டினார். ஹஸ்தினாபுரத்தின் மேல் த்வைபாயனருக்கு என்ன விதத்தில் உரிமை இருக்கப் போகிறது என்றும் இந்தக் காரியத்தின் மூலம் அவர் அடையப்போகும் லாபத்தின் அளவு குறித்தும் அவர் சிந்தித்தார்.

த்வைபாயனர் இவை எதையும் கவனிக்காமல் அறையை விட்டு வெளியேற ஆயத்தமானார். வெளியேறும் முன்னர் அவர் காங்கேயனிடம் அறையில் உள்ள ஊழியர்களை அப்புறப்படுத்தும்படி மெதுவாகச் சொன்னார். உடனே சைகை மூலம் அறையிலிருந்து ஊழியர்களையும், மந்திரி குனிக்கையும் அப்புறப்படுத்தினார் காங்கேயன். அறையில் எவரும் அந்நியர் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்ட த்வைபாயனர் மன்னனைப் பார்த்து, “சக்கரவர்த்தி, பரத குலத்துச் சிறந்த அரசே! நாளை ஒன்பதாம் நாள் என்னுடைய சிகிச்சை முடிவடைகிறது. அதன் பின் நீங்கள் கொஞ்சம் எழுந்து நடக்கலாம். இனிமேல் நாளைக்குப் பின்னர் என் உதவி உங்களுக்குத் தேவையாக இருக்காது!” என்றார்.


ஷாந்தனு பதிலே சொல்லாமல் தன் கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். பின்னர் த்வைபாயனரிடம், “நான் எவ்வண்ணம் உங்களுக்குப் பரிசளிப்பேன்? என் நன்றியை எப்படித் திருப்பிக் காட்டுவேன்? த்வைபாயனரே! தயை கூர்ந்து சொல்லுங்கள்!” என்றான். அவன் குரலில் நன்றி நிரம்பி வழிந்தது. “பரிசா?” என்று கேட்டுவிட்டுச் சிறுபிள்ளையைப் போலப் பெரிதாகச் சிரித்தார் த்வைபாயனர். “பரிசை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன், அரசே! எனக்கு அதை வைத்து எப்படிப் பயன்பெறுவது என்பதே தெரியாது. அதோடு சக்கரவர்த்தி, அந்தப் பரிசை நான் ஏற்றுக் கொண்டேன் ஆனால், என்னுடைய தவமெல்லாம் வீணாகிவிடுமே!  என் தவம் வீணானால் நான் சொல்லும் மந்திரங்களுக்குப் பொருளே இல்லை. அவையும் தங்கள் சக்தியை இழந்துவிடுமே! பரிசெல்லாம் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் புதிதாகவோ அதிசயமாகவோ செய்து விடவில்லை. எல்லாம் வல்ல ஒளிக்கடவுள் என்னை வழிநடத்தி ஹஸ்தினாபுரம் கொண்டு சேர்த்தார். அதோடு அல்லாமல் உங்களை குணப்படுத்தும் சக்தியையும் எனக்கு உவந்தளித்தார். அவர் இதை எனக்கு மட்டுமல்ல பலப் பல ஸ்ரோத்ரியர்களுக்குச் செய்து தான் வருகிறார்.”


மன்னன் சைகை காட்ட காங்கேயன் மன்னனின் வாய்க்கருகே தன் காதை வைத்துக் கொண்டு தகப்பன் மெல்ல மெல்லப் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டார். தந்தை என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொண்ட காங்கேயர் த்வைபாயனரிடம் திரும்பி, “தந்தை உங்களுக்கு எவ்வகையில் உதவி செய்தால் உங்களுக்குப் பயனாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்.” என்றார். அதற்கு த்வைபாயனர், “பரத குலத்தில் சிறந்தவரே, யுவராஜா, என்னை மாபெரும் நன்றிக்கடனில் மூழ்க அடிக்காதீர்கள். ஏற்கெனவே எனக்கு நீங்கள் அபாரமான தன்னம்பிக்கையைக் கொடுத்து விட்டீர்கள். ஒளிக்கடவுளான சூரிய பகவானின் கருணா கடாட்சம் என் மேல் நிறைய இருக்கிறது என்பதைக் காட்டிக் கொடுத்துள்ளீர்கள். நான் என்ன செய்கிறேனோ அதற்கு அவன் துணை இருக்கிறது என்பதையும் புரிய வைத்துள்ளீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? எனக்கு வாழ்க்கையில் உள்ள ஒரே ஒரு குறிக்கோள், தர்மம் நிலைபெற்று வாழ வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில் தர்மத்தின் ஆட்சி நடக்கவேண்டும் என்பதே ஆகும். நம் முன்னொர் கடைப்பிடித்த அந்த தர்ம வாழ்க்கை மீண்டும் வரவேண்டும்.”


“என் தந்தை அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் ஒரு அரசனாக, சக்கரவர்த்தியாகத் தன் தர்மத்தைக் கைவிடாது காப்பாற்றி வந்திருக்கிறார்., தர்மத்தின் வழியினில் நடந்து வந்திருக்கிறார்.” என்றார் காங்கேயன்.

சக்கரவர்த்தியின் உதடுகள் புன்னகை செய்ய முயன்று தோற்றுப் போய்க் கொஞ்சம் கோணிக் கொண்டன. எனினும் மன்னனின் முகபாவத்திலிருந்து அவன் புன்னகை செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டனர். தான் பேச விரும்புவதை ஜாடை மூலம் தெரிவித்த மன்னன், மெதுவான குரலில், “தர்மம் அழிந்து தான் வருகிறது!” என்று ஒத்துக் கொண்டான்.


“மன்னா, அது யார் தவறும் அல்ல! சஹஸ்ரார்ஜுனன் ஒரு காட்டுத்தீயைப் போல் வந்து புகுந்து அனைத்தையும் அழித்துச் சாம்பலாக்கி விட்டான். அவன் வழியில் குறுக்கிட்டவர் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அடியோடு அழித்துவிட்டான்.” என்ற த்வைபாயனர் தான் சொல்வது அனைத்துக்கும் ஒரு குறியீடு இருக்கிறது என்பதை மன்னன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழுத்தம் திருத்தமாகப் பேசினார். “அவனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆரியர்களால் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளவே போராட வேண்டி இருந்தது. இதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் மன்னா! ஏனெனில் இந்தப் போரில் நேரடியாக ஈடுபட்ட உங்களுக்கு இது நன்றாகவே புரியும். மற்றவர்களை விட நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எத்தனையோ ஆசிரமங்கள் அழிக்கப்பட்டு விட்டன. வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அதற்குச் சம்மதிக்காதவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். நேர்மையான மனிதர்கள் செய்வதறியாமல் ஓர் தெளிவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். ஆரியர்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போனதோடல்லாமல் பழைய விதிகள், நியமங்கள், நீதிகள் அனைத்தும் மறக்கப் பட்டு விட்டன. அவற்றைக் கடைப்பிடிப்பவர் இன்று இல்லை!”


“இதற்கு நான் அல்லது நாம் என்ன செய்யவேண்டும்?”மன்னன் ஆர்வமுடன் கேட்டான். த்வைபாயனரின் பேச்சில் அவன் முழுமையாக ஈடுபட்டுவிட்டதை அவன் முகம் காட்டியது.