Tuesday, September 20, 2016

சுகருக்குத் திருமணம் நடந்ததா, இல்லையா? ஒரு சந்தேகம்! விளக்கம்!

மேலே தொடரும் முன்னர் ஒரு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வோம். வேதங்களைப் பகுத்த வியாசர் வேறே, மஹாபாரதம் எழுதிய வியாசர் வேறே, புராணங்களைத் தொகுத்த வியாசர் வேறே, பிரம்ம சூத்திரம் இயற்றிய பாதராயன வியாசர் வேறே என்று பலர் கருதுகின்றனர். ஆனால் வேதங்களின் தொன்மை குறித்தும், க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வியாசர் இருந்த காலம் குறித்தும் கூர்ந்து நோக்கினால் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  ஒரு சிலரின் கருத்துப்படி இந்த வியாசரே பதரிகாசிரமத்தில் தம் காலத்தை அதிகம் கழித்ததால் பாதராயணர் என்றழைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். அப்படி எனில் புராணங்களை வகைப்படுத்திய வியாசர் வேறாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். புராண நூல்களும் இதிகாச காலத்தைச் சேர்ந்தவை அல்ல. ஆகவே அந்த வியாசரை ஒதுக்கிடுவோம். இப்போ நம்ம க்ருஷ்ண த்வைபாயனரைப் பார்ப்போமா?

இவர் தான் மஹாபாரதத்தை சுமார் எட்டாயிரம் ஸ்லோகங்களால் எழுதியதாகவும், பின்னால் இது வைசம்பாயனர், சுகர், லோமஹர்ஷணர் அவரின் சீடரும் மைந்தரும் ஆன உக்ரஸ்வரஸ் ஆகியோர் விரிவாக்கியதில் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டதாக பாரதம் ஆனது என்றொரு கூற்று உண்டு. நமக்கு இப்போ இதெல்லாம் இங்கே தேவை இல்லை. இந்த வியாசருக்குக் கல்யாணம் ஆச்சா, இல்லையா? மனைவி இருந்தாளா, இல்லையா? இவர் மகன் என்று அழைக்கப்படும் சுக ரிஷி உண்மையில் இவருக்குப் பிறந்தவரா? சுகர் திருமணம் ஆனவரா என்பதெல்லாம் தான் இப்போதைய முக்கியக் கேள்விகள். வியாசர் திருமணம் செய்து கொண்டதாக பாரதத்தில் எங்கும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரியவில்லை. ஆனால் தனக்கு வாரிசு வேண்டும் என்று நினைத்த வியாசர் சிவனை நினைத்துத் தவம் இருக்க ஈசன் அவர் முன்னே தோன்றி மகன் பிறப்பான் என்று வரம் அளித்ததாகவும் சொல்வார்கள்.

எப்படி எனில் வியாசர் அரணிக்கட்டையால் கடைந்து நெருப்பு உண்டாக்குகையில் விண்ணில் பறந்த கிருதாசி என்னும் தேவமங்கையின் அழகைக் கண்ட வியாசர் சற்றே அவள் அழகில் மயங்க, கிளியாகத் தோன்றி இருந்த அவளோ வியாசரின் மூலம் கர்ப்பம் தாங்கிப் பிறந்த பிள்ளை தான் கிளி மூக்குடன் கூடிய சுகர் என்பார்கள். ஆனால் நம் கதைப்படியோ வியாசர் ஜாபாலியின் மகளான வாடிகாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கும், ஜாபாலியின் மகளான வாடிகாவுக்கும் பிறந்த பிள்ளையாகப் பார்க்கிறோம் சுகரை. மேலும் இந்தக் கதையின் படி சுகரும் திருமணம் செய்து கொள்கிறார். இவர் திருமணம் செய்து கொள்ளும் பெண் பழங்குடிப் பெண்ணான பீவரி அல்லது பிவாரி என்று கேள்விப் படுகிறோம். ஆனால் மேலும் மேலும் சான்றுகள், ஆதாரங்கள் எனத் தேடியதில் எங்குமே வியாசருக்குத் திருமணம் நடைபெற்றதாகவே சொல்லப்படவில்லை. சுகரை அவருடைய ஆன்மிக புத்திரன் என்றும் பிறவி ஞானி என்றுமே சொல்லப்படுகிறது. தேவமங்கையின் துணை இல்லாமலேயே அரணிக்கட்டையைக் கடைந்ததன் மூலமே சுகரின் பிறப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கயிலையில் ஈசனும், அன்னையும் தனித்திருக்கையில் பிரம்ம ரகசியமான பிரபஞ்ச தத்துவத்தைக் குறித்து ஈசனும், அன்னையும் உரையாட அதைக் கேட்ட அங்கிருந்த கிளி ஒன்று தன் மறுபிறப்பில் சுகராகத் தோன்றியதாகவும் எங்கேயோ எப்போதோ படித்தேன். புத்தகம் எது என்று நினைவில் இல்லாமையால் ஆதாரம் கொடுக்க முடியலை. ஆனால் நம் கதைப்படி சுகருக்குத் திருமணம் நடப்பதால் இதற்கான ஆதாரங்களை ஒருவாறு திரட்டினேன். தேவி நாராயணீயத்தில் இந்தப் பகுதி வருகிறது. தேவி நாராயணீயம் என்பது தேவி பாகவதத்தின் சுருக்கமான வடிவம் என்று அறிகிறோம். இதைப் பலேலி நாராயண நம்பூதிரி என்பவர் 430 ஸ்லோகங்களில் 41 தசகங்களாக எழுதி உள்ளார். அதில் நம் கதைக்குத்தேவையான தகவல்கள் கிடைக்கும் தசகம் ஏழில் கிடைக்கிறது.

தான் செய்ய வேண்டிய அக்னி காரியங்களைச் செய்ய, அரணியில் மத்தைப் பூட்டி அக்னி உண்டாக்க முயலும் போது, க்ருதாப்ஜி ஒரு கிளி உருவம் எடுத்து அங்கும் இங்கும்மாக ஆகாசத்தில் சிங்காரமாக ஊர்ந்தாள்.  அதைக் கண்ட வ்யாஸர் உணர்ச்சி வசப்பட அவரது வீர்யம் சிதறி அரணியில் விழுகிறது. அந்த அரணியிலிருந்து இவரை போல் ஒரு புத்திரன் ஜனிக்கிறான். இரண்டாவது அக்னி போன்று தோன்றிய அக்குழந்தையைக் கையில் எடுத்துத் தழுவி கங்கா ஸ்நானம் செய்வித்து சாதகாதி கர்மங்களைச் செய்து, சுக ரூபியான அப்ஸரின் மோகத்தால் உண்டான புத்ரனானதால் சுகன் என்று பெயர் வைத்தார்.

2. கேசிஜ் ஜகு: கேசன வாத்யகோஷம்
  சக்ருச்ச நாகே நந்ருது: ஸ்த்ரியச்ச
  வாயுர் வவௌ ஸ்பர்சஸுக: ஸீகந்தஹ
  சுகோத்பவே ஸர்வஜனா: ப்ரஹ்ருஷ்டாஹா
ஆகாஸத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது. தேவர்கள் துந்துபி முதலிய பஞ்சவாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் பாடினர். நாரதர் முதலிய ரிஷிகள் ஆசீர்வதித்தனர். காற்று சுகந்தமாக வீசியதாம். உலகத்தில் உள்ள அனைவரும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினர்.

3. பால: ஸ ஸத்யோ வவ்ருதே, ஸுசேதா
  ப்ருஹஸ்பதேராத்தஸமஸ்த வித்யஹ
  தத்வா விநீதோ குருதக்ஷிணாம் ச
  ப்ரத்யாகதோ ஹர்ஷயதி ஸ்ம தாதம்
வ்யாஸர் மகனுக்கு உபநயனம் செய்வித்தார். சுகர் தேவ குருவான ப்ரகஸ்பதியிடம் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுணர்ந்து அவருக்கு குருதட்ஷணையும் கொடுத்துவிட்டுப் பின் வ்யாஸரிடம் வந்தார். வித்தைகளைக் கற்றுணர்ந்த தன் மகன் எந்த கர்வமும் இல்லாமல் அடக்கமாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் கொண்டார்.

4. யுவானமேகாந் ததப; ப்ரவ்ருத்தம்
  வ்யாஸ: கதாசித் சுகமேவமூசே
  "வேதாம்ச்ச சாஸ்த்ராணி ச வேத்ஸி புத்ர;
  க்ருத்வா விவாஹம் பவ ஸத்க்ருஹஸ்தஹ
எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சந்யாஸி போல் இருக்கும் சுகரிடம், வ்யாஸர் "விவாஹம் செய்துகொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு செய்ய வேண்டிய தேவ யக்ஜம், பிதுர்யக்ஜம் போன்ற கர்மங்களை மனைவியுடன் செய்து, பிதுர்க்கடனினின்று எனக்கு விமோசனம் தர வேண்டும். புத்திரன் இல்லாதவனுக்கு சுவர்க்கம் இல்லை என்று தர்ம சாஸ்த்ரங்கள் சொல்கின்றது. இல்லறதர்மம் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லறத்திலிருந்தும் முக்தி அடையலாம். அனைவரும் சந்யாஸிகள் ஆனால் எப்படி சிருஷ்டி உற்பத்தியாகும். அதனால் நீ விவாஹம் செய்துகொள்" என்று ஒரு தந்தையின் இயல்பான குணத்துடன் சொன்னார்.

5. ஸர்வாச்ரமாணாம் கவயோ விசிஷ்டா
  க்ருஹாச்ரமம் ஸ்ரேஷ்டதரம் வதந்தி;
  தமாச்ரித ஸ்திஷ்டதி லோக ஏஷ;
  யஜஸ்வ தேவான் விதிவத் பித்ரும்ச்ச
ஏகாந்த சந்யாஸ தர்மத்தைவிட இல்லறதர்மம் மிகவும் உயர்ந்தது. எல்லாவகையிலும் உயர்ந்ததாகவேச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நீ விவாஹம் செய்து கொண்டு குழந்தைகளை உற்பத்தி செய்து நன்றாக இருக்கவேண்டும். அப்பொழுதான் நம் முன்னோர்கள் கரையேறுவார்கள். உன்னுடைய கடமைகளைச் சரிவர செய்து, பித்ருக்களைத் தர்ப்பணம் முத்லியவைகளால் திருப்திபடுத்தி புத்ர பௌத்ரர்களைப் பெற்று சந்தோஷமாக இருந்து எங்களைக் கரையேற்ற வேண்டும் என்றார். இள வயதில் திருமணம் செய்து கொண்டால் தான், புத்ர பௌத்ரர்களைப் பெற்றுக் கடமைகளைச் செய்துப் பின் தவம் செய்யப் போக முடியும். சுகர் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் தான் கரையேற முடியாது என்று நினைக்கிறார். அதனால் விவாஹம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

6. தவாஸ்து ஸத்புத்ர; ருணாதஹம் ச
  முச்யேய; மாம் த்வம் ஸுகினம் குருஷ்வ;
  புத்ர: ஸுகாயாத்ர பரத்ர ச ஸ்யாது
  த்வாம் புத்ர! தீவ்ரைரலேபே தபோபிஹி
உன்னைப் புத்திரனாகப் பெற நான் பலகாலம் தவம் செய்தேன். அதனால் நீ இளவயதில் திருமணம் செய்து, உனக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறந்து, அதாவது கொள்ளுப் பேரன் பிறந்து பார்க்க வேண்டும், என்னைக் கரையேற்ற வேண்டும் என்றார். எல்லோருக்கும் ஏற்படகூடிய இயற்கையான ஆசை. இந்த ஆசைதான் வ்யாஸர் மனதிலும் வந்தது.

7. கிஞ்ச ப்ரமாதீனி ஸதேந்த்ரியாணி
  ஹரந்தி சித்தம் ப்ரஸபம் நரஸ்ய
  பச்யன் பிதா மே ஜனனீம் தபஸ்வீ
  பராசரோபி ஸ்மரமோஹிதோSபூது

8. ய ஆச்ரமாதா ச்ரமேதி தத்தது
  கர்மாணி குர்வன் ஸ ஸுகீ ஸதா ஸ்யாது
  க்ருஹாச்ரமோ நைவ ச பந்தஹேதுஹு
  ஸ்தவயா ச தீமன்! க்ரியதாம் விவாஹ:
இல்லற வாழ்வில் நியாயமான முறையில் பொருளைச் சம்பாதித்து, விதித்த கர்மங்களைக் கிரமப்படிச் செய்தால் பந்தத்தினின்றும் விடுபடலாம். விதித்த கர்மங்களை முறைப்படிச் செய்பவனுக்குச் சாதிக்க முடியாதது எது? இல்லற வாழ்க்கையில் தேவர்களையும், பித்ருக்களையும், மனிதர்களையும் த்ருப்தி அடையச் செய்து, விதித்த கர்மங்களைச் சரிவரச் செய்து, ஸத் புத்திரனைப் பெற்று, அவனை இல்லறத்தில் ஈடுபடுத்திப், பின் வானப்ரஸ்தாச்ரமத்தை அடைந்து, சில காலம் அதில் இருந்து பின் சந்யாஸ ஆச்சிரமம் அடைவாய்.
      இல்லறத்தில் ஈடுபடாதவனுக்கு இந்த்ரியங்களையும் புலன்களையும் வெல்வது எளிதல்ல. விஸ்வாமித்திரர் மேனகயைக் கண்டு மோகித்து சகுந்தலையை பெற்றார். என் பிதாவான ப்ராசரர் மச்சகந்தியை மோகித்தார். ப்ரம்மனும் தன் புத்ரியிடம் மோகம் கொண்டு பின் சிவனால் தெளிவடைந்தான். இதை எல்லாம் யோசித்து நான் சொன்னபடி விவாஹம் செய்து கொள் என்றார். சுகரிடம் எள்ளளவும் மாற்றம் இல்லாததால் மன வேதனை அடைந்து அழுகிறார்.

9. ஏவம் ப்ருவாணோபி சுகம் விவாஹா-
  -த்யஸக்தமா ஜ்ஞாய பிதேவ ராகீ
  புராணகர்த்தா ச ஜகத்குரு: ஸ
  மாயாநிமக்னோSச்ருவிலோசனோSபூது
வ்யாஸர் ஜகத் குரு, புராணங்களை எழுதியவர். அவர் ஏன் அழ வேண்டும்? தபஸ் செய்ய  சக்தி குறைந்ததா? இல்லை. தேவியிடம் பக்தி குறைந்ததா ? இல்லை. பின் ஏன் அழ வேண்டும்? பாசம். மகன் விவாஹம் செய்து கொள்ளவில்லையே என்ற பாசம். மாயை. ஜகமே மாயையில் உழலுகிறது. ஆனால் சுகர் பல ஜன்மங்களாக என்னைத் தொடர்ந்து வந்த மாயை கிழவனாகி, இப்பிறவியில் என்னை விட்டு விலகி விட்டது. எனவே விவாஹம் என்னும் மாயையில் சிக்க மாட்டேன். முற்றும் துறந்த முனிவர்களையும் மாயையில் சிக்க வைக்கும் அந்த மாயாசக்தியை நான் வழிபடுவேன் என்று சொல்கிறார். சுகர் சுக போகங்களிலிருந்து விலகி நிற்கிறார்.

10. போகேஷு மே நிஸ்ப்ருஹதாSஸ்து மாதஹ
  ப்ரலோபிதோ மா கரவாணி பாபம்;
  மா பாததாம் மாம் தவ தேவி! மாயா;
  மாயாதிநாதே! ஸததம் நமஸ்தே
      இந்த சுகர் எப்படி மாயையிலிருந்து விலகி அதன் பிடியில் சிக்காமல், மன உறுதியுடன் இருக்கிறாரோ அப்படிப் பட்ட மன உறுதியை எனக்கும் தா என்று இந்த கவிஞன் வேண்டுகிறார்.  அதன் பின்னர் வரும் அடுத்த தசகத்தில் கீழ்க்கண்டவாறு சுகர் திருமணம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

12. விதேஹராஜம் தமவாப்ய ப்ருஷ்ட்வா
   ஸ்வதர்மசங்கா: பரிஹ்ருத்ய தீரஹ
   பலேஷ்வஸக்த: குரு கர்ம; தேந
   கர்மக்ஷ்ய: ஸ்யாத்; தவ பத்ரமஸ்து,
அவர் ராஜா, க்ரஹஸ்தன். ராஜ்ய பரிபாலனம் செய்பவர். ஆனாலும் எந்த பந்தமும் இல்லாத ஜீவன் முக்தன். ப்ரம்ம ஞானமுடைய ராஜரிஷி. சாந்த குணமுடைய யோகீ. அவர் உன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார் என்று சொன்னார். க்ரஹஸ்தன், ராஜா ஆனாலும் ஜீவன் முக்தன் என்று சொல்கிறாரே? இது எப்படி முடியும்? என்று சுகருக்குச் சந்தேகம் வருகிறது. ஜனக மஹாராஜாவை நேரில் சந்தித்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள் என்று வ்யாஸர் சொன்னார்,

13. ச்ருத்வேதி ஸத்ய ஹ: சுக ஆச்ரமாத் ஸ
   ப்ரஸ்தாய வைதேஹ,புரம் ஸமேத்ய
   ப்ரத்யுத்கத: ஸர்வஜனைர் ந்ருபாய
   ன்ய வேதயத் ஸ்வாக,மனஸ்ய ஹேதும்
தந்தையின் ஆசீர் வாதத்துடன் சுகர் மிதிலை  புறப்படுகிறார். அந் நாட்டு நுழைவாயிலில் நிற்கும் காவலாளி, சுகரைத் தடுக்கிறான். எங்களின் கேள்விக்குப் பதில் சொன்னால் மட்டுமே நகரின் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறான். காவலாளியின் அனைத்து வினாவிற்கும் தகுந்த பதிலை சுகர் சொன்னபின் அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சுகருக்கு உபசாரங்கள் செய்து முடிந்த பின் ,அவர் ஜனக மஹாராஜாவிடம் ப்ரம்மசர்யம், க்ரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாஸம் இவைகளுக்கான தர்மங்களைச் சொல்ல வேண்டும். க்ரஹஸ்தாச்ரமம் பந்தப்படுத்தாது. மனசு தான் காரணம் என்று என் தந்தை சொல்கிறார். அதனால் என் சந்தேகத்தைத் தாங்கள் நிவர்த்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.

14. க்ருஹஸ்ததர்மஸ்ய மஹத்வமஸ்மாது
   விஞாய தீமான் ஸ சுகோ நிவ்ருத்தஹ
   பித்ராச்ருமம் ப்ராப்ய ஸுதாம் பித்ருணாம்
   வ்யாஸேSதிஹ்ருஷ்டே, க்ருஹிணீம் சகார
      வ்யாஸர் சொன்ன அதே விளக்கங்களை ஜனகரும் சொல்கிறார். பந்தம் வேண்டாம் என்று, தபஸ் செய்ய காட்டிற்குச் சென்றாலும், ஒரு மானையோ, முயலையோப் பார்த்து ஆசைப்பட்டால் அதுவும் பந்தத்தை ஏற்படுத்தும். எதன் மேல் ஆசை வைத்தாலும் அது பந்தமே. மனதை எடுத்து வைத்துவிட்டு எங்காவது போக முடியுமா? வீடானாலும், காடானாலும் மனசு தான் காரணம். அதனால் க்ரஹஸ்தாச்ரமத்தால் பந்தம் வராது என்று சொல்ல சுகரும் மனக் குழுப்பம் நீங்கி தெளிவடைந்து தந்தையிடம் மீண்டும் சென்று திருமணத்திற்கு சம்மதம் தருகிறார். பித்ரு தேவதைகளின் புத்ரியான பீவரீ என்னும் கன்னிகையை கல்யாணம் செய்து கொள்கிறார்.

15. உத்பாத்ய புத்ராம்சசதுர: ஸுதாம் ச
   க்ருஹஸ்ததர்மான் விதினாSSசரன் ஸஹ
   ப்ரதாய சைனாம் முனயேSணுஹாய
   பபூவ காலே க்ருதஸர்வக்ருத்யஹ
க்ருஷ்ணன், கௌரப்ரமன், பூரிதன், தேவஸ்ருதன் என்ற நான்கு மகன்களும், கீர்த்தி என்ற ஒரு பெண்ணும் பிறக்கின்றனர். க்ரஹஸ்தாச்ரம தர்மப்படி வாழ்ந்து வருகிறார். மகன்களுக்குச் செய்ய வேண்டிய உபநயனம் போன்றவைகளையும் செய்வித்து, உரிய வயதில் மகளை அணுஹன் என்னும் மஹானுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அவர்களுக்கு ப்ரமதத்தன் என்னும் மகனும் பிறக்கிறான்.

16. ஹித்வாSSச்ய்ரமம் தாத,மபீசசைல
   ச்ருங்கே, தபஸ்வீ ஸஹ,ஸோத்பதன் கே
   பபௌ ஸ பாஸ்வா,னிவ, தத்வியோக
   கின்னம் சிவோ வ்யாஸ,மஸாந்த்வ யச்ச
      தன் பிதாவின் விருப்பப்படி க்ரஹஸ்தாச்ரம கடமைகளைச் சரிவர முடித்து விட்டு, கைலாய மலைக்குச் சென்று த்யானம் செய்து, சித்தியும் அடைந்து, மலையினின்றும் எழும் உதய சூரியனைப் போல கைலாய மலையிலிருந்து மேலே எழும்பினார். அப்பொழுது கைலாய மலையில் இரண்டு சிகரம் இருப்பது போல் தோன்றியது. இவர் எழுந்த வேகத்தில் கைலாய மலையும் சிறிது அசைந்தது. அதன் பிறகு சுகர் ஆகாஸ ஸஞ்சாரியாய் ரிஷிகளால் துதிக்கப்பட்டு வந்தார். மகனைப் பிரிந்த வ்யாஸர் துயரம் தாங்காமல் கைலாயமலை வந்து மகனே! மகனே! என்று கதறி அழுத போது, பார்வதி பரமேஸ்வரன் அவருக்குக் காட்சி தந்து "உன் மகன் யாரும் அடைய முடியாத ஆகாஸ சஞ்சார பதவி அடைந்திருக்கிறான். அவனால் உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது என்று ஆறுதல் சொன்னார். அப்படியும் வ்யாஸர் ஆறுதல் அடையாததால், வ்யாஸரின் அருகில் சுகர் சாயா ரூபமாக தோன்றும்படி அனுக்ரஹம் செய்து மறைந்தனர்.

ஆகவே மேற்கொண்டு வரும் நிகழ்வுகளுக்கான அடிப்படை இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். இனி மேலே நம் கதை தொடரும்.


1 comment:

ஸ்ரீராம். said...

நிறைய விவரங்கள் தேடிக் கொடுத்திருக்கிறீர்கள்.