Wednesday, January 25, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! பிரத்யும்னன் கதை!

பிரத்யும்னனுக்கு சுமார் இருபது வயது இருக்கும்.  அவனைப் பார்த்தால் காலத்திற்கு ஒவ்வாதவனாக, அராஜகவாதியாகத் தெரிவான். ஆனால் அவனுக்குத் தன்னுடைய யாதவ குலத்திடமும், யாதவ மக்களிடமும் ஆழ்ந்த அன்பும் அதீதமான கூட்டுறவும் இருந்தது. அவன் ஓர் நல்ல தலைவனாகப் பரிணமிப்பான் என்றே அனைவரும் நினைத்தனர். மேலும் சற்றும் பயமின்றி தர்மத்துக்காகப் போராடினான். அங்குள்ள அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டான். அனைவரும் அவனை மிகவும் நேசித்தனர். கடந்த ஐந்து வருடங்களாக அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் குறித்த பயிற்சிகளைப் பல்வேறு விதங்களில் கிருஷ்ணனின் மேற்பார்வையில் கற்று வந்தான்.  அவன் வரையில் கடவுளருக்கும் அசுரருக்கும் இடையில் முடிவுறாத பிரச்னைகள் இருந்து வந்தன.  அவன் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் அவனை ஓர் திடமான தைரியம் படைத்த க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்றுவதில் முதன்மையானவனாகக் காட்டி வந்தது.  எதையும் முழு மனதுடன் தீவிரமாகக் கற்றுக்கொள்ளும் அவனுடைய இயல்பான சுபாவமும் தீரம் நிறைந்த உள்ளுணர்வும் அவனை இந்தப் பயிற்சிகளில் முழு மனதுடன் ஈடுபடச் செய்தது. அவனும் அதை நன்கு உணர்ந்திருந்தான்.

பிரத்யும்னன் முழு மனதுடன் இதில் ஈடுபட்டதோடு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வந்தான். இது வரையிலும் அவன் செய்தவை அனைத்தும் அவன் தந்தையாகிய கிருஷ்ணனின் தலைமைக்குக் கீழ் அவன் மேற்பார்வையிலேயே அவனுடைய நிழலிலேயே அவன் செய்து வரும்படி இருந்தது.  ஆனாலும் கிருஷ்ணன் அதைத் தன் மகனுக்கு உரியது என்றே சொல்லியும் அதை அப்படியே வெளிப்படையாகப் பாராட்டியும் வந்தான்.  உண்மையில் கிருஷ்ணனின் தூண்டுதலும், அவன் கொடுத்த ஊக்கமும் இல்லை எனில் பிரத்யும்னனால் இவ்வளவு தூரம் செய்ய முடியுமா என்பதும் சந்தேகம் தான்! இளைஞன் ஆன பிரத்யும்னன் மல்லன் பூர்ணாவின் மோசமான நடத்தையை வெறுக்கவோ அதற்காகச் சினம் கொள்ளவோ இல்லை.  ஏனெனில் அவன் பிரத்யும்னனின் இடத்தில் துவாரகையில் அமர்த்தப்பட்டிருந்தான். பூர்ணாவிடம் பாசமே அதிகம் காட்டி வந்தான் பிரத்யும்னன்.

அவன் தாய் ருக்மிணி, விதர்ப்ப நாட்டின் இளவரசி அவனை ஓர் ஆரியர்களின் தலைவனாகவே வளர்த்து வந்தாள்.  அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் கற்பதிலும் அதைக் காப்பதிலும் காட்டிய ஈடுபாட்டை அவள் ஊக்குவித்தாள். அதன் பின்னர் தான் அந்த எதிர்பாரா நிகழ்வுகள் நடந்தன!  பிரத்யும்னன் ஷாம்பர் என்பவனால் கடத்தித் திருடிக் கொண்டு செல்லப்பட்டான். மாதங்கள் ஓடின. ஏன் வருடங்கள் கூடச் சென்றன. மகன் எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லை ருக்மிணிக்கு! அவள் மனம் உடைந்தது. ஒரு முறை நடந்த சிறு போரில் பிரத்யும்னன் ஷாம்பாரைக் கொன்றான். அவன் அழிந்ததும் தன் மனைவி மாயாவதியுடன் துவாரகை திரும்பினான்.  அங்கு அவளைத் திருமணமும் செய்து கொண்டான். அவள் அவனை விடப் பத்து வயது பெரியவளாக இருந்த போதிலும் அவளையே திருமணம் செய்து கொண்டான். அவள் பிரத்யும்னனுக்கு மனைவியே அல்ல, தாய் என்று யாதவர்கள் அனைவரும் கேலி பேசியதோடு அல்லாமல் இப்படி நடந்ததற்கு வெட்கமும் அடைந்தனர்.

ருக்மிணி தன் மகன் இப்படி க்ஷத்திரிய தர்மத்திலிருந்து விலகி நடந்து கொண்டதை ஒருக்காலும் மன்னிக்கவே இல்லை. அவள் மனம் புண்பட்டது. அவள் மாயாவதியையும் தன் மருமகளாக ஏற்கவில்லை. பிரத்யும்னனையும் மகனாக ஏற்கவில்லை.  தற்செயலாக அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கூடத் தாங்கொணா வெறுப்பில் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். பிரத்யும்னன் செய்த அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போயின. அவன் தாயின் மனதை அவனால் மாற்ற முடியவில்லை. ஆனால் கிருஷ்ணன் இதை ஏற்கவில்லை. அவன் ருக்மிணியை மனதை மாற்றிக்கொள்ளும்படி கூறினான். நம் பையன் நம்மிடம் இருக்கிறான். நம்மிடம் அளவிலாப் பாசம் கொண்டிருக்கிறான். இளைஞன், கடவுள் நம்பிக்கை உள்ளவன், நன்றாகப் பேசக் கூடியவனும் ஆவான். இதை விட என்ன வேண்டும்! இப்போதும் கிருஷ்ணன் அதே மனோநிலையில் இருந்தான்.

அவர்கள் கடைசியில் தனிமையில் விடப்பட்டதும் கிருஷ்ணன் பிரத்யும்னனிடம் கேட்டான். “எங்கே உன் மனைவி மாயாவதி? அவள் இந்த அரச குடும்பத்தின் மற்றப் பெண்களோடு தங்கி இருக்கிறாளா? அல்லது பிருகுகச்சாவுக்கோ கிரிநகரத்துக்கோ சென்றிருக்கிறாளா? அனைவரும் அவளைக் குறித்துப் பேசிக்கொள்ளும் மர்மம் என்ன? என்ன ரகசியம்?”

“நீங்கள் அவளை ஒருக்காலும் கண்டுபிடிக்க முடியாது!” என்றான் பிரத்யும்னன்.

“ஓ, அப்படியானால் அவள் எங்கே இருக்கிறாள்?” கிருஷ்ணன் கேட்டான்.

“அவள் காட்டில் தங்க விரும்பினாள். “

“ஓ, அப்படியா? காட்டில் அவள் என்ன செய்கிறாள்?”

“அவள் ஷால்வனை நான் போய் சந்திக்கையில் என்னுடன் வருவதற்காகத் தன்னையும் தயார்ப் படுத்திக் கொண்டு இருக்கிறாள்.”

“மகனே, நீ மனைவியைத் தேர்ந்தெடுத்த விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது! போகட்டும்! நீ ஷால்வனைச் சந்திக்கப் போவது குறித்து உன் மனைவியுடன் கலந்து ஆலோசித்து விட்டாயா?”

“தந்தையே, தன்னால் விளைந்திருக்கும் பாவத்தை நிவர்த்தி செய்ய அதை இவள் ஓர் பரிகாரமாகச் செய்ய விரும்புகிறாள். அப்படித் தான் இதை அவள் பார்க்கிறாள்.” என்றான் பிரத்யும்னன்.

“அவள் இன்னமும் காட்டில் தான் இருக்கிறாளா? மகனே நீ அதை நிச்சயமாக அறிவாயா?”

“தந்தையே, நான் அவளுடன் கடந்த பதினைந்து வருடமாகச் சேர்ந்து வசித்து வருகிறேன்.”

“அவள் ஏன் இங்கே வந்து மற்ற அரசகுலப் பெண்டிரோடு சேர்ந்து இருக்கக் கூடாது?” என்று கிருஷ்ணன் கேட்டான்.