Wednesday, March 30, 2016

ரோகிணியின் கண்ணீர்!

ரோகிணியின் முகத்தைக் கூர்ந்து கவனித்த கிருஷ்ணனுக்கு அவளுடைய ஆழ்ந்த துக்கம் புரிந்தது. மனம் உடைந்து துக்கத்தின் விளிம்பில் இருக்கும் அவளைக் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்தான் கிருஷ்ணன். “வேண்டாம், வேண்டாம்,பறவைப் பெண்ணே! நான் உன்னை மணந்து கொள்கிறேன்! ஆம் மணந்து கொள்கிறேன். உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்.” என்று ஒரு தாய் தன் மகவிடம் பேசுவது போன்ற வாத்சல்யத்துடன் கூறினான். அவள் தன் தலையை ஆட்டி மறுத்தவண்ணம் அவன் கைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். பின்னர் மெதுவாகக் கூறினாள்; “இல்லை, இது சரியில்லை! நீ என்னை மணந்தால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. நான் உன் மனைவியாக இருப்பதற்குத் தகுதி வாய்ந்தவள் அல்ல!” என்றாள். மீண்டும் கலவரம் அடைந்திருக்கும் அவள் முகத்தையும் பயத்தில் காணப்பட்ட கண்களையும் கவனித்த கிருஷ்ணன் மனதில் அன்பு பிரவாகம் எடுத்தது. அவள் தோள்களின் மேல் தன் கையை அன்புடன் வைத்துக் கொண்டே, “ பறவைப்பெண்ணே! நீ ஏன் எனக்கு மனைவியாக ஆவதற்கு இவ்வளவு பயப்படுகிறாய்? பயப்படாதே! உன்னை மணந்து கொண்டு நான் சந்தோஷமாகவே இருப்பேன்!” என்றான்.

அவர்களிடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அனைத்துக் கரடி இன மனிதர்களும் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். ரோகிணியும், கிருஷ்ணனும் ஆரியர்களின் மொழியிலேயே பேசிக் கொண்டதால் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அவர்கள் எவருக்கும் புரியவில்லை. ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு மகிழ்வானதாக இருந்தது. இருவரில் எவரோ ஒருவர் நெருப்பில் தள்ளப்படுவதை வேடிக்கை பார்த்து ஆனந்திக்கலாமே! சிறிது நேரம் தரையையே பார்த்துக் கொண்டிருந்த ரோகிணி எதுவும் பேசவில்லை. பின்னர் கிருஷ்ணனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் சொல்லவொணாத் துயரம் மேலோங்கிக் கொண்டிருந்தது. விம்மி விம்மி அழ ஆரம்பித்த அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அதே சமயம் துயரத்தின் தாக்கம் தாளாத அவள் மயங்கிக் கீழே சரிய இருந்தாள். நல்லவேளையாக அருகே நின்றிருந்த சத்யபாமா அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். விக்கி விக்கி அழுத ரோகிணி தன் தந்தையாகிய ஜாம்பவானை நோக்கி, “தந்தையே, என்னை நெருப்பில் போட்டுக் கருநிறக் கடவுளிடம் ஒப்படையுங்கள்!” என்று வேண்டினாள். கிருஷ்ணன் ஜாம்பவான் பக்கம் திரும்பித் தன் மொழியில் பேச ஆரம்பித்தான். “ஐயா, தயை கூர்ந்து நான் சொல்வதை ரோகிணிக்கு உங்கள் மொழியில் எடுத்துச் சொல்லுங்கள். என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் மொழியில் சொல்லப்பட்டு அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கூறினான்.

ஜாம்பவான் சம்மதிக்கக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான். “நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்னுடைய மனைவியாக ஆக உன் சம்மதத்தைத் தெரிவிப்பாயாக!” என்று வேண்டிக் கேட்கும் பாவனையில் கிருஷ்ணன் கூறினான். இதன் மூலம் அவள் தனக்குத் தான் ஒரு உதவியைச் செய்யும்படி அவள் நினைக்குமாறு செய்தான். அத்தனை வேதனையிலும் தென்பட்ட நம்பிக்கைக்கீற்று ரோகிணியைக் கிருஷ்ணன் பால் திரும்பிப் பார்க்க வைத்தது. கிருஷ்ணன் மேலும் கூறினான். “மாட்சிமை பொருந்திய கரடிகளின் அரசரே! கொண்டாட்டங்களையும் சடங்குகளையும் தொடருங்கள். நான் அவளை மணக்க விரும்புகிறேன்.” என்றான். ஜாம்பவான் ரோகிணியின் பக்கம் திரும்பினார். “ நான் கரடிகளின் அரசன், உன்னைக் கேட்கிறேன் ரோகிணி, ஜாம்பவானின் மகளே! இதோ இங்கே இருக்கும் இந்த வாசுதேவக் கிருஷ்ணனை மணந்து கொள்வதாக நீ நம் கருநிறக்கடவுள் மேல் சங்கல்பித்து உறுதி மொழி கொடுப்பாயா? உன்னால் இவனை மணக்க முடியுமா?” என்று கேட்டார். “அதை மீண்டும் அவளுக்குத் தெளிவாக்குங்கள், ஐயா!” என்ற கிருஷ்ணன், ரோகிணியைப் பார்த்து, “பறவைப் பெண்ணே! நான் உன்னை மணக்க விரும்புகிறேன். உன் தந்தையும் உன்னை எனக்கு மணம் செய்து கொடுக்க விரும்புகிறார்.” என்றான்.

ஜாம்பவான் மீண்டும் ரோகிணியிடம் கேட்பதற்கான கேள்வியைக் கிருஷ்ணனிடம் கூறினார். “ நீ என்னைத் திருமணம் செய்து கொண்டு உன் இந்தப் பிறந்தகத்தை விட்டு விட்டு என்னுடன் என் மனைவியாக வருவதற்குத் தயாராக இருக்கிறாயா?” எனக் கேட்கும்படி கூறினார். ஆரியர்களின் மொழியில் மிகச் சிறிய அளவே பரிச்சயம் உள்ள ரோகிணி, கிருஷ்ணனைப் பார்த்துத் தன் நடுங்கும் குரலில் கூறினாள்:”ஏ, அந்நியனே நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில் என்றேனும் ஓர் நாள் நீ என்னை விட்டுச் சென்று விடுவாய். பின்னர் நான் கணவன் இல்லாமல் தனியாக வாழப் பழகவேண்டும். அப்படி இல்லாமல் நீ என்னைத் திருமணம் செய்து கொண்டு உன்னுடன் அழைத்துச் சென்றாயானால் உன் மனிதர்களோடு எனக்குப் பழகத் தெரியாமல் தவிப்பேன். என்னை ஏன் அழைத்து வந்தோம் என்று நீ வருந்தும்படி ஆகி விடும்.” என்றாள். ரோகிணியின் பேச்சைக் கேட்ட சத்யாவின் மனம் மிக நெகிழ்ந்தது. ரோகிணியைப் பார்த்து அவள், “ரோகிணி, சொல், சத்தியம் செய்வதாகச் சொல்!” என்று கூறினாள். கிருஷ்ணனும் அவளை மிகவும் அன்புடன் பார்த்து நம்பிக்கை தொனிக்கும் குரலில், “நீ எங்கிருந்தாலும் நானும் அங்கிருப்பேன்; நான் எங்கே சென்றாலும் உன்னையும் அழைத்துச் செல்வேன்! என் மனைவியாக உனக்குச் சம்மதமா? நீ அதற்காகக் கருநிறக்கடவுளின் பெயரால் சத்தியம் செய்கிறாயா?” என்று கேட்டான்.

தன் தலையைக் குனிந்து கொண்ட ரோகிணி, “நான் சத்தியம் செய்கிறேன்!” என மெல்லிய குரலில் வாக்களித்தாள். கரடி அரசன் ஜாம்பவான் கிருஷ்ணனைப் பார்த்து, “ஏ, அந்நியனே, வாசுதேவக் கிருஷ்ணா! அவளிடம் அவளை நன்கு கவனித்துக்கொள்வதாக உறுதி மொழி கொடுப்பாய்!” என்றான்.  அதன் பின்னர் ஜாம்பவான் மேலும் ஒரு சடங்கைக் குறித்துச் சொன்னவண்ணம் கிருஷ்ணனிடம் தான் சொல்வதைத் திரும்ப அப்படியே கூறச் சொன்னான். “எல்லோரிலும் வல்லவராகவும், எவருக்கும், எதற்கும் பயப்படாதவராகவும், எல்லோருக்கும் தலைவராகவும் இருக்கும் எங்கள் கருநிறக் கடவுளே! மேலும் தர்மத்தின் காவலன் ஆன இறப்புக் கடவுள் ஆன யமனே! உங்கள் இருவருக்கும் நான் இந்த உறுதிமொழியைத் தருகிறேன். நான் மீறினேன் எனில் என்னை மரணம் தழுவட்டும்!” என்றான். கிருஷ்ணன் அதை அப்படியே திருப்பிச் சொன்னான். பின்னர் ரோகிணியிடம் திரும்பிய ஜாம்பவான், “ரோகிணி, நான் சொல்வதைத் திரும்பச் சொல்! “நான், ரோகிணி, கருநிறக்கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன். என் கணவனாகப் போகும் இந்த வாசுதேவக் கிருஷ்ணன் எங்கே இருப்பாரோ அங்கெல்லாம் அவருடன் நானும் இருப்பேன். அவர் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிப்பேன்.” என்று சொல்லச் சொன்னான். ரோகிணியும் அதைத் திரும்பக் கூறினாள். நிமிர்ந்து கிருஷ்ணனுக்குத் தன் அழகிய சின்னஞ்சிறிய முகத்தைக் காட்டிய ரோகிணி, “அந்நியரே, இப்போதும் ஒன்றும் மோசமாக வில்லை. இப்போது கூட நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்ளலாம். என்னை நீங்கள் மணக்கவேண்டும் என்று கட்டாயமெல்லாம் இல்லை!” என்றாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் மழையெனப் பொழிந்தது.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

அனைத்தும் அறிந்த கண்ணா. உயிர்களைக் காக்க உதித்தவனே. ரோஹிணியும் காக்கப் படுகிறாள். நலமே நடக்கட்டும்.

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.