Sunday, January 1, 2017

வனவாசம் ஆரம்பம்!

தொடர்ந்தான் துரியோதனன். “தந்தையே, நீங்கள் திரௌபதியைத் துகில் உரியும்போது அவள் கண்களில் எரிந்த நெருப்பைக் கவனித்தீர்களா?  பாரத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவள் தந்தை பாஞ்சால நாட்டு அரசனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் சும்மா இருப்பான் என்று நினைக்கிறீர்களா? அவன் மகளை நிறைந்த சபையில் மானபங்கம் செய்ய நாம் முற்பட்டது அவனுக்குத் தெரிய வந்தால் பாஞ்சால அரசன் சும்மாவா இருப்பான்? அவன் மகன் பட்டத்து இளவரசன் த்ருஷ்டத்யும்னனுக்கு அவன் சகோதரிக்கு நேர்ந்த கதி தெரிய வந்தால் அவன் சும்மாவா இருப்பான்? அவன் சகோதரியை நாம் கேவலமாக நடத்தியதை அவன் அறிய நேர்ந்தால்?”

திருதராஷ்டிரன் சொன்னான். “குழந்தாய், நான் எல்லாவற்றையும் உன் நன்மை ஒன்றுக்காகவே செய்து வருகிறேன்.” என்றான்.  துரியோதனன் அதற்குத் திரும்ப பதில் சொன்னான். “ தந்தையே, அப்படிச் செய்வதாகச் சொல்லிக் கொண்டு நீங்கள் எங்களை அழிக்க முயல்கிறீர்கள்!” என்றான் கோபத்துடன்.  குருட்டு அரசன் சொன்னான். “அப்படிச் சொல்லாதே, குழந்தாய்! இந்த உலகிலேயே நான் எல்லோரையும் விட உன்னைத் தான் அதிகம் நேசிக்கிறேன். எப்படி நடந்து கொண்டால் உனக்குச் சரியாக இருக்கும் என்பதை எனக்குத் தெரிவி! நான் அவ்வாறே நடந்து கொள்கிறேன்.” என்றான்.

துரியோதனன் அதற்கு, “தந்தையே, இது ஒன்று தான் ஒரே வழி! நான் என் தாய் மாமன் ஷகுனியுடன் கலந்து ஆலோசித்து விட்டேன். இன்னும் ஓர் விளையாட்டு, சூதாட்டம் ஆட வேண்டும். ஆடுவோம். அந்த விளையாட்டில் தான் இறுதியான வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும். அதில் வென்றவர் இந்தப் பரந்து விரிந்த சாம்ராஜ்யம் முழுவதுக்கும் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்படுவார். இதில் தோற்பவர் நாட்டை விட்டுக் காட்டிற்குச் செல்ல வேண்டும். காட்டில் பனிரண்டு ஆண்டுகள் வசிக்க வேண்டும். பதின்மூன்றாம் ஆண்டில் எவர் கண்களிலும் படாமல், எவராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் இன்னொரு பனிரண்டு ஆண்டுகள் காட்டு வாசம் தான்! இதைச் சொல்லிப் பாண்டவர்களை மீண்டும் வரவழையுங்கள். இந்தச் சூதாட்டத்தில் நிச்சயம் நாங்கள் தான் ஜெயிப்போம். அவர்களை மறுபடி ஹஸ்தினாபுரம் அழையுங்கள்!” என்றான்.

அதற்கு திருதராஷ்டிரன், “குழந்தாய், இம்மாதிரி நான் எவ்வாறு செய்ய முடியும்? இப்படி எல்லாம் செய்ய முடியாதே! அதோடு அவர்களை மீண்டும் வரவழைக்கவும் முடியாதே!” என்றான். “தந்தையே, நீங்கள் யுதிஷ்டிரனை அழையுங்கள். உங்கள் அழைப்பை அவனால் ஒரு நாளும் மீற முடியாது. கட்டாயம் வந்துவிடுவான்.” என்றான் துரியோதனன். மேலும் தொடர்ந்து, “எங்கள் தாய்மாமன் ஷகுனி இருக்கையில் வெற்றி எங்கள் பக்கம் தான்! நிச்சயம் நாங்கள் வெல்வோம். பாண்டவர்கள் பனிரண்டு வருஷம் காட்டு வாசம் முடிந்து வருவதற்குள்ளாக எங்கள் நிலைமை இன்னமும் வலுவடைந்து விடும்! நாங்கள் வேண்டிய பலத்தைச் சேகரித்து விடுவோம்.” என்றான்.

அப்போது அங்கே இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த காந்தாரி குறுக்கிட்டாள். “குழந்தாய், நாம் விதுரனிடம் இதைக் குறித்துப் பேசி ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். அவன் தான் நீ பிறந்ததுமே உன்னை அழிக்கச் சொன்னான். நாங்கள் அப்போது அதைக் கேட்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்னையின் ஆணிவேரே நீ தான். எங்களுடைய அனைத்து துரதிர்ஷ்டங்களுக்கும் நீயே காரணம். இதோ பார், மகனே, இப்போதும் ஒன்றும் தாமதம் ஆகிவிடவில்லை. நீ மன்னிப்பைக் கோரிப் பெறலாம். நடந்தவற்றுக்காக வருத்தம் தெரிவிக்கலாம். பாண்டவர்கள் ஐவரும் நல்லவர்கள். பெருந்தன்மை மிகுந்தவர்கள். அவர்கள் நிச்சயம் உன்னை மன்னிப்பார்கள். உன் தந்தையைத் தவறான பாதையில் செல்லும்படி அனுமதிக்காதே!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

அதற்கு திருதராஷ்டிரன் எப்போதும் போல் தன் பலஹீனமான குரலில், “என் மகன் என்னிடம் கேட்பதை என்னால் ஒருக்காலும் மறுக்க முடியாது! நான் அவனை மிகவும் விரும்புகிறேன். அவனிடம் அதிகம் அன்பு செலுத்துகிறேன். அவன் இப்போது கேட்பது போல் தான் நான் செய்யப் போகிறேன்.” என்றான்.

கௌரவர்கள் விரைவில் ஒரு தூதனை இந்திரப் பிரஸ்தம் அனுப்பி வைத்தார்கள்.  அந்த தூதன் யுதிஷ்டிரனிடம் வந்து அவனை வணங்கிப் பின்னர் திருதராஷ்டிரனின் செய்தியைச் சொன்னான். “மகனே, தயவு செய்து ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பி வா! துரியோதனன் இன்னொரு ஆட்டம் உன்னுடன் ஆட விரும்புகிறான். இந்த ஆட்டத்தின் மூலமே உங்கள் எதிர்காலம் நிச்சயிக்கப்படும். உங்களுக்குள் தாயாதிச் சண்டை வந்து போர் மூளாமல் இருக்க வேண்டுமானால் இது ஒன்றே வழி!” என்றான்.  துரியோதனன் சொன்ன நிபந்தனை குறித்து தூதனிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் யுதிஷ்டிரன் தவிர மற்ற சகோதரர்கள் நால்வரும், திரௌபதியும் ஹஸ்தினாபுரம் செல்ல ஆக்ஷேபம் தெரிவித்தார்கள்.  திரும்பவும் கூப்பிட்டிருப்பதில் ஏதோ சூழ்ச்சி இருக்கும் என்ற சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் யுதிஷ்டிரனோ ஹஸ்தினாபுரம் செல்வதில் உறுதியாக இருந்தான். அவன் சொன்னான். “நான் என் பெரியப்பாவின் ஆணையை மீற முடியாது.  அவர் கட்டளைக்குக் கட்டாயம் கீழ்ப்படிவேன்.  இதன் மூலம் ஏதேனும் இறுதி முடிவு ஏற்படவில்லை எனில், போர் தான் ஒரே வழி!” என்றான்.

ஐவரும் மீண்டும் ஹஸ்தினாபுரம் வந்தனர். அதே தர்பார் மண்டபம். அதே மேடை. அதே ஷகுனி! அதே சதுரங்கப் பலகை. பாய்ச்சிக்காய்கள். தன்னுடைய இகழ்ச்சியான சிரிப்புடன் ஷகுனி அமர்ந்திருக்கப் பக்கத்தில் துரியோதனன். வயதில் மூத்த பெரியோர்களையோ, மற்ற அரச குலத்தவரையோ, பாண்டவர்களுக்கு ஆதரவான குரு வம்சத் தலைவர்களோ அழைக்கப்படவில்லை.  ஏனெனில் துரியோதனன் மீண்டும் யுதிஷ்டிரனைச் சூதாட்ட அரங்குக்கு அழைத்திருப்பதைக் கேட்ட அவர்களில் நியாயத்துக்கும், நேர்மைக்கும் அஞ்சும் அரச குலத்தவர் ஆக்ஷேபணை தெரிவித்தனர். அவர்களிடம் துரியோதனன், “இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் அசாதாரணமாக எதுவும் இல்லை! ஒரு மோசமான ரத்தக்களறியாக ஆகக்கூடிய போர் ஒன்றை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்.  அதைச் செய்ய வேண்டியது தான் இப்போது முக்கியமான வேலை. நாங்கள் மூச்சு விடக் கொஞ்சம் அவகாசம் தான் கேட்கிறோம். இதன் மூலம் யார் ராஜ்யத்தை இழக்கிறார்களோ அவர்கள் பனிரண்டு வருஷம் காட்டில் வாசம் செய்வதன் மூலம் எல்லோருடைய எல்லாவிதமான உணர்வுகளும் அமைதி அடைய நேரிடும்!” என்று கூறினான். இங்கே வந்ததும் பாண்டவர்களுக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டன. எப்போதும் போல் ஷகுனி தந்திரத்தால் இப்போதும் வென்றான். பாண்டவ சகோதரர்கள் இதற்கு ஆக்ஷேபணை தெரிவித்தனர். ஆனால் வழக்கம் போல் யுதிஷ்டிரன், தான் போட்டியில் தோற்று விட்டதால், காட்டிற்குச் செல்ல சம்மதம் தெரிவிப்பதாகவும் பனிரண்டு வருஷம் காட்டு வாசம் முடிந்ததும், பதின்மூன்றாம் வருஷம் எவருக்கும் தெரியாமல் மறைந்து வாழவும் சம்மதிப்பதாகவும் தெரிவித்தான்.  பதின்மூன்றாம் வருஷம் முடியும் முன்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் மீண்டும் இன்னொரு பனிரண்டு வருஷம் காட்டு வாசம் செய்யவும் சம்மதம் தெரிவித்தான். துஷ்சாசனன் பீமனை எருமை மாடு என்று திட்டினான். அவர்களின் ஆதரவாளர்கள் இதைப் புரிந்து கொண்டு பீமனை மேலும் மேலும் கேலி செய்தனர்.

துஷ்சாசனன் மேலும் மேலும் மிகக் கேவலமாக அவர்களைத் திட்டினான். பொறுக்க முடியாமல் போன பீமன், “ஹூம், நீ என்ன நேர்மையான வழியில் ஜெயித்தாயா என்ன? உன்னுடைய தாய்மாமன் செய்த மோசமான தந்திரத்தால் அல்லவோ வென்றாய்? உன் அண்ணன் விளையாடினானா எங்களுடன்?  அவனுக்குப் பதிலாக தந்திரமாக உன் மாமன் விளையாடியதால் அன்றோ நாங்கள் தோற்றோம்! நான் மீண்டும் சபதம் செய்கிறேன், துஷ்சாசனா! நான் உன்னைக் கொல்வேன். நிச்சயம் கொல்வேன்.  உன்னைக் கிழித்து உன் குடலை மாலையாகப்போட்டுக் கொள்வேன். உன் நெஞ்சைப் பிளப்பேன். பொறுத்திருந்து பார்! இன்னும் பதினான்கே வருடங்கள். அதன் பின்னர் நீங்கள் எல்லோரும் கூண்டோடு அழிவீர்கள்!” என்றான். அதன் பின்னர் அனைத்தும் வேகமாக நடந்தேறின.

யுதிஷ்டிரன் அங்கிருந்த பெரியோர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டான்.  உண்மையில் அவன் சந்தோஷமாகவே இருந்தான். குறைந்தது பனிரண்டு வருடங்களுக்காவது அவனால் சமாதானத்தை வாங்க முடிந்ததே! இதை நினைத்துத் தான் அவனுக்கு சந்தோஷம்! அவர்கள் விடைபெறுகையில் விதுரர் கண்ணீருடன் அவர்களை ஆசீர்வதித்து விடை கொடுத்தார். “உங்களை எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் காப்பாற்றி ரக்ஷிப்பான். நீங்கள் உங்கள் சபதத்தை நிறைவேற்றவும் அவன் உதவி செய்வான். திருதராஷ்டிரனின் மக்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள். உங்கள் தாய் குந்தியை என் பொறுப்பில் விட்டுச் செல்லுங்கள். அவள் மிகவும் பலஹீனமாக இருக்கிறாள். ஆகையால் இந்தக் கடினமான பிரயாணத்தை அவள் உடல் தாங்காது!” என்றார். அதற்குள்ளாக நகரம் முழுவதும் பாண்டவ சகோதரர்கள் காட்டிற்குச் செல்லும் செய்தி பரவியது.

அரண்மனை வாயிலிலும் நிலாமுற்றத்திலும் மக்கள் கூட்டம் கூடியது. அனைவருக்கும் கண்ணீர் பொங்கியது. அதிலும் அரச குமாரர்கள் மட்டுமின்றி திரௌபதியும் மரவுரி தரித்திருந்ததைக் கண்டதும் அனைவரும் அவளுடைய அரசகுலப்பாரம்பரியத்தையும் இப்போதிருக்கும் நிலையையும் நினைத்து நினைத்து வருந்தினர். முடியப்படாத அவள் தலைமுடி அவள் முகத்தையும் தோள்களையும் மூடி இருந்ததையும் கண்டார்கள். அவள் செய்திருந்த சபதத்தையும் நினைத்துக் கொண்டு அவளை இந்நிலைக்கு ஆளாக்கின கௌரவர்களைத் தூஷித்தார்கள்.  தன்னுடைய அழகும் பெருமையும் வாய்ந்த மருமகளின் இந்நிலையைப் பார்த்துக் குந்தி அவளுடைய துரதிர்ஷ்டமான நிலையைக் கண்டு மனம் உடைந்தாள். அவளை அணைத்துக் கொண்ட குந்தி அவளிடம், “ என் மகன்களிடம் அன்பாக இரு! அவர்களைக் கடிந்து கொள்ளாதே! இப்போது நடந்தவற்றுக்கு எல்லாம் அவர்களே பொறுப்பு என்பதை நான் நன்கறிவேன். அவர்கள் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமே உன் மீது அவர்களுக்கு உள்ள அன்பினாலும் நீ அவர்களிடம் வைத்திருக்கும் அன்பினாலும் தான்!” என்றாள்.

தங்கள் ராஜகுருவான தௌமியர் உடன் வரப் பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தையும் இந்திரப் பிரஸ்தத்தையும் விட்டு விட்டுக் காட்டை நோக்கிக் கால்நடையாகப் பயணப்பட்டார்கள். பீமன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். அர்ஜுனர் போர் எப்போது ஆரம்பிக்கும் என நாட்களை எண்ண ஆரம்பிக்க, நகுலன் தன் பிரியமான குதிரைகளைப் பழக்கப்படுத்தத் தயாராக, சஹாதேவனோ எப்போதையும் விட இப்போது யாருடைய புலனுக்கும் எட்டாதவாறு நடந்து கொள்ள, யுதிஷ்டிரன் இது எதையும் குறித்துக் கவலைப்படாமல் வர, ராஜகுரு தௌமியரோ துயரத்தினால் பரிதாபமாகவும் வருத்தத்துடனும் அவர்களுடன் நடந்தார்.
ஹஸ்தினாபுரம். சஞ்சயன் திருதராஷ்டிரன் அருகே அமர்ந்திருந்தவனால் தன்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அடக்கி வைக்க முடியாமல் தவித்தான். திருதராஷ்டிரனிடம் அவன், “அரசே, உங்கள் நடத்தை தர்பார் மண்டபத்தில் மிகவும் மோசமாகவும் மன்னிக்க முடியாததாகவும் இருந்தது.  உங்கள் மகன்களை விட நீங்கள் மிக மோசமானவராக இருக்கிறீர்கள். இனிமேல் உங்களுக்கு ஒரு மோசமான துயரமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை காத்திருக்கிறது. அதை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.” என்று கடுமையாகச் சொன்னான். திருதராஷ்டிரன் அதற்கு பதில் சொல்லாமல் விதுரரிடம் பாண்டவ குமாரர்கள் காட்டை நோக்கிப் பயணப்படுகையில் ஹஸ்தினாபுரத்தில் எப்படி இருந்தது என்று கேட்டான். விதுரர் அதற்கு, “ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் பாண்டவர்களுடன் செல்லத் தயாராக இருந்தனர். ஆனால் யுதிஷ்டிரன் அவர்களை அவரவர் வீட்டுக்குச் செல்லும்படி கட்டளை இட்டான். அதனால் திரும்பினார்கள்.” என்றார்.

இத்துடன் ஏழாம்பாகம் யுதிஷ்டிரர் குறித்த பதிவுகள் முடிவடைந்தன. அடுத்து ஆரம்பிக்கப் போவது குருக்ஷேத்திரம்!

2 comments:

ஸ்ரீராம். said...

காந்தாரியிடம் நியாயம் இருந்திருக்கிறது.

இராய செல்லப்பா said...

இப்போதுதான் உங்களின் இந்தப் பதிவுக்கு வருகிறேன். குருக்ஷேத்திரம் வரப்போகிறது. ...இனிய எழுத்து. புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியுஜெர்சி.