Sunday, April 10, 2016

சத்ராஜித் மனம் கொதிக்கிறான்!

துவாரகை! சத்ராஜித்தின் மாளிகை! மதிய நேரம்! இரவு பூராவும் தூங்காமல் சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருந்த சத்ராஜித் காலையில் தான் தூங்கினான். ஆகவே அன்று எழுந்து கொள்ளவே அவனுக்கு மதியம் ஆகிவிட்டது! தூக்கிவாரிப் போட்டு எழுந்த அவன் சுற்றிலும் பிரகாசமான மதிய வெளிச்சத்தைப் பார்த்துத் தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டான். தன் நினைவுகளை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்தான். இந்தச் சில வாரங்களில் அவன் முற்றிலும் புதியதொரு மனிதனாகி விட்டிருந்தான். அவனை அவனாலேயே இப்போது அடையாளம் காண இயலாத வண்ணம் மாறிப்போயிருந்தான். அவனுக்குத் தூக்கம் இல்லை; கடந்த சிலவாரங்களில் பல இரவுகளைத் தூங்காமலேயே கழித்திருக்கிறான். விடியற்காலையில் தான் சிறிது தூங்குவான். ஆனால் அந்தத் தூக்கமும் கெட்ட கனவுகளினால் தடைபெறும்! இப்போதெல்லாம் அவனுக்குப் பசி இருந்தாலும் உணவில் நாட்டம் இல்லை. சுத்தமாக உணவருந்தும் எண்ணமே தோன்றுவதில்லை! எதைப் பார்த்தாலும் எரிச்சல் மிகுந்து வந்தது! அவனுடைய மனைவிமாரைப் பார்க்கவோ, குழந்தைகளைப் பார்க்கவோ மனதில்லாமல் வெறுத்தான். அவர்களைக் கண்டாலே எரிச்சல் மிகுந்தது. அவனருகே குடும்பத்து நபர்கள் எவர் வந்தாலும் அவர்களைக் கண்டால் கூச்சல் போடுவான் சத்ராஜித்! அதற்குப் பயந்தே எவரும் அவனருகே வருவதில்லை.

மதிய நேரங்களில் விழித்திருந்தாலும் அவன் அறைக்கருகிலிருந்து தாழ்வாரத்தில் ஓர் ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் எங்கோ சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். கண்கள் என்னமோ திறந்திருக்கும். ஆனால் காட்சிகள் மனதில் பதியாது! திரும்பத் திரும்ப அவன் கண்கள் முன்னர் ஒரே காட்சிகள் வந்து போய்க் கொண்டிருந்தன! கிருஷ்ணன் சத்ராஜித்திடம் ச்யமந்தகத்தைக் கேட்கிறான்; சத்ராஜித் மறுக்கிறான். பதிலாகக் கிருஷ்ணனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்கிறான். பின்னர் தைரியமாக உக்ரசேனரைச் சென்று சந்திக்கிறான். அவரிடம் ச்யமந்தகத்தைத் திருடியது கிருஷ்ணன் தான் என்று பொய் சொல்லிக் கிருஷ்ணனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயல்கிறான். அப்போது கிருஷ்ணன் சபதம் செய்கிறான். ச்யமந்தகத்தைத் தான் தேடிக் கண்டுபிடித்துத் திரும்பக் கொண்டுவருவதாகவும், இல்லையேல் தான் தீக்குளிப்பதாகவும் சபதம் செய்கிறான். அதன் பின்! அதன் பின்! பின்னர்!

சத்ராஜித்திற்கு மானம் போகும்படியான நிகழ்வு நடந்துவிட்டது! அவன் மகள் அவனுடைய அருமை மகள் சத்யபாமா அவனை ஏமாற்றினாள். சொந்தத் தந்தையை ஏமாற்றிவிட்டாள். பாவிப் பெண்! வெட்கம் கெட்டவள். பொறுப்பற்றவள்! அவன் சாத்யகன் தன் மகன் யுயுதானா சாத்யகிக்கு பாமாவை மணமுடிக்க விரும்பாமல் தட்டிக் கழித்ததற்குப் பழி வாங்க விரும்பினான். சாத்யகனுக்கு ஓர் பாடம் புகட்ட விரும்பினான். ஆனால் அதற்குள்ளாக நடந்தது என்ன? அவன் அருமை மகள் அந்த சாத்யகியுடனேயே ஓடிப் போய்விட்டாள்! தந்தையை ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டாள்! இந்த அவமானத்தை எத்தனை வருஷங்கள் ஆனாலும் சத்ராஜித்தால் சகிக்க முடியாது! சொல்லொணா அவமானத்தில் ஆழ்த்திவிட்டாள் பாவிப் பெண்! ஆனால் அவன் பத்திரமாக இருக்கட்டும் என்று நினைத்துத் தன் சகோதரன் பிரசேனனிடம் கொடுத்த ச்யமந்தகம்? அது பத்திரமாக இருக்கிறதா? பல விசித்திரமான சம்பவங்கள் அன்றோ நடந்து விட்டன! சூரியனால் அளிக்கப்பட்ட அந்த ஒப்பற்ற விலை உயர்ந்த ச்யமந்தகமணிமாலை பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே அவன் விருப்பம். ஆகவே கிருஷ்ணன் அதைத் திருடிச் சென்றுவிடுவானோ என்னும் எண்ணத்தில் பிரசேனனிடம் கொடுத்துப் புனிதக் குகையிலேயே அதை வைத்து வழிபட்டு வருமாறு சொல்லி அனுப்பினான்.

ஆனால் பிரசேனனுடன் அவன் அனுப்பி வைத்த அவன் ஊழியன் திரும்பி வந்து சொன்ன கதையைக் கேட்ட சத்ராஜித்துக்கு ஏற்பட்ட நடுக்கம் இப்போது அதைக் குறித்து யோசிக்கையிலும் ஏற்பட்டது. பிரசேனன் ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டான் என்பதைத் தான் அந்த ஊழியன் சொன்னான். இதைக் கேட்ட சத்ராஜித் தன் மகன் பங்ககராவுடன் அந்தக் காட்டிற்குப் பயணம் மேற்கொண்டான். அங்கே போய்ப் பார்த்தால் பசியுடன் பல பிணந்தின்னிக் கழுகுகள் எஞ்சி இருந்த பிரசேனனின் உடலைக் கொத்திக் கொண்டிருக்கும் பயங்கரக் காட்சியைக் கண்டான். ஒரு சில குறைந்த அடையாளங்களினாலும், உடுத்தி இருந்த துணியின் மூலமே அது பிரசேனன் என்று தெரிந்தது. அந்த அளவுக்கு அவன் உடலைக் கொத்தித் தின்றிருந்தன கழுகுகள். இதைப் பார்த்த சத்ராஜித் மனம் உடைந்து போனான். தன் தம்பியின் இந்த நிலை குறித்து வருந்திய அவன் எஞ்சிய உடலையாவது முறைப்படி கிரியைகள் செய்வோம் என நினைத்து எஞ்சிய உடல் பாகத்தைக் கைப்பற்றி அங்கேயே எரித்தான். துவாரகை வரை அவற்றைக் கொண்டு செல்ல முடியாதபடி சின்னாபின்னமாய் ஆகிவிட்டது அந்த உடல்!

அவன் ஊழியன் சொன்னது சரியே. பிரசேனன் ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டிருந்தான். சத்ராஜித் ச்யமந்தகத்தை அங்குமிங்கும் புதர்களிலும் தேடினான். எங்கும் அது கிடைக்கவில்லை. பதிலாக பிரசேனனின் ஆயுதங்களும், அவனுடைய விலை உயர்ந்த அரைக்கச்சையும் மற்றும் ஒரு சில நகைகளும் பூமிக்குள்ளே எவராலோ புதைத்து வைக்கப்பட்டிருந்தது கிடைத்தது. அந்தச் சிங்கத்தின் காலடிச் சுவடுகளைப் பிடித்துக்கொண்டு முன்னேறினான் சத்ராஜித். ஆனால் அந்தச் சிங்கமும் கொஞ்ச தூரத்தில் பிணமாகக் கிடந்தது. அதையும் பிணம் தின்னிக் கழுகுகள் கொத்திக் கொண்டிருந்தன. ச்யமந்தகம் எங்கே தான் போயிற்று? இந்தச் சிங்கம் எடுத்துச் சென்றிருந்தால் அது இப்போது யாரிடம் இருக்கும்? இந்தச் சிங்கத்தைக் கரடிகள் கொன்றிருப்பதாகத் தெரிய வருகிறது. அப்போது அந்தக் கரடிகள் சிங்கத்தைக் கொன்றுவிட்டு ச்யமந்தகத்தை எடுத்துச் சென்றுவிட்டதா? அங்குமிங்கும் கூர்ந்து பார்த்த சத்ராஜித்திற்குப் பல மனிதர்கள், மிருகங்கள் அங்கே வந்து சென்றிருப்பது காலடிகளிலிருந்து தெரிந்தது. அவற்றைக் கவனமாக ஆராய்ந்ததில் இந்தச் சிங்கத்தைக் கொன்ற கரடிக்கு ஒரு நண்பன் கூடவே இருந்திருக்கிறான் என்பது தெரிந்தது. அது மனிதனா அல்லது மிருகமா எனப் புரியாவண்ணம் காலடிச் சுவடுகள் குழப்பமாக இருந்தன. அப்போது தான் அவனுக்கு ஜாம்பவானின் நினைவு வந்தது! ஆஹா! இவை ஜாம்பவானின் காலடித் தடங்களா? அப்படி எனில் இந்தக் கரடி அவனுடைய மருமகன் கரடியாகத் தான் இருக்க வேண்டும். அதனால் தான் இந்தக் காலடித் தடங்கள் இத்தனை பெரிதாக இருக்கின்றன.

சற்று தூரத்தில் ஓர் பெண்ணின் உடையில் சில கிழிந்த பகுதிகளும் கிடைத்தன. அவை எதிரே காணப்பட்ட புதர்களுக்குள்ளிருந்து கிடைத்தன. இந்தப் புதர்களைத் தாண்டி அப்புறம் செல்ல அவள் முயன்றிருக்க வேண்டும். அப்போது அவள் உடை கிழிந்திருக்க வேண்டும். புதர்களுக்கிடையே தெரிந்த இடைவெளி வழியாக பங்ககரா துணை வர சத்ராஜித்தும் தாண்டிக் கொண்டு அப்புறம் சென்று பார்த்தான். ஆனால், அங்கே எந்தப் பெண்ணும் காணப்படவில்லை. ஆனால் பெண்ணின் காலடித்தடங்கள் மட்டும் தென்பட்டன. அது சத்யாவின் காலடித்தடஙக்ளா? சத்யாவும் சாத்யகியும் இங்கே வரை வந்திருந்தார்களா? கிழிந்திருந்த சத்யாவுடையதாக இருந்து காலடித்தடங்களும் அவளுடையதாக இருந்தால் அந்தக் கரடிகள் அவளையும் கொன்றிருக்க வேண்டும். விட்டு வைத்திருக்காது! அல்லது சிங்கத்தைக் கொன்றுவிட்டு ச்யமந்தகத்தோடு அவன் பெண்ணையும் தங்கள் கரடி உலகுக்குத் தூக்கிச் சென்றிருக்கவேண்டும். இங்கே பெண்ணின் சடலம் ஏதும் காணப்படாததால் இரண்டாவது தான் நடந்திருக்கும். சத்ராஜித்தின் மனம் துவண்டது! மேலும் மேலும் பார்த்தான். பலருடைய காலடிச்சுவடுகள் அங்கே வந்து போயிருந்தன. அவற்றுக்கான அடையாளங்களும் தெரிந்தன. கவனமாகப் பார்த்தவன், அந்தக் காலடிச் சுவடுகளில் சில புனிதக்குகையை நோக்கிச் சென்றிருப்பதைக் கண்டான். அவற்றைப் பின் தொடர்ந்தான்.புனிதக் குகையை அடைந்தான். தான் நினைத்தது சரியாக இருந்திருக்கிறது என்பதைப்புரிந்து கொண்டான். சில மனிதர்களும், சில கரடிகளும் அந்தக் குகையில் தங்கி இருந்திருக்கின்
றனர்.

கரடி அரசனும், அவனுடைய மற்றக் கரடி நண்பர்களும் சேர்ந்து சத்யபாமாவைக் கரடி உலகுக்குத் தான் தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கே செல்ல வேண்டியது தான் என முடிவெடுத்தான் சத்ராஜித்! ஆனால்????? பல வருடங்களாக ஜாம்பவானோடு அறிமுகம் ஆனதிலிருந்து அவன் மகள் ரோகிணியைத் தன் மகன் பங்ககராவுக்கு மணமுடித்துக் கொள்வதாக ஜாம்பவானுக்கு வாக்குக் கொடுத்திருந்தான் சத்ராஜித்! அதை ரோகிணி பருவம் அடைந்ததிலிருந்தே ஜாம்பவானும் சத்ராஜித்துக்கு அவ்வப்போது நினைவூட்டி வந்தான். அவனும் மறுக்காமல் அதை உறுதிமொழியாகவே கொடுத்து வந்தான். அப்படித் தான் ஜாம்பவானை அந்த நதிப்பிரவாகத்திலிருந்து தங்கம் கலந்த மணலை எடுத்துவரச் செய்ய அவனால் இயன்றது. இப்படியான வாக்குறுதிகளின் மூலமே ஜாம்பவானிடமிருந்து அந்தத் தங்கத் துகள்களைப் பெற முடிந்தது. அவற்றை ச்யமந்தகத்திற்கு அர்ப்பணிப்பதாகச் சொல்லிவிட்டு துவாரகைக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. ஜாம்பவானும் சத்ராஜித்தை முழு மனதுடன் நம்பினான். சத்ராஜித்தும் பங்ககராவும் நகர நாகரிகங்களில் மூழ்கியவர்கள் என்பதும், தானும் ரோகிணியும் நாகரிக வாழ்க்கை குறித்து அறியாத காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதையும் ஜாம்பவான் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு அவன் சத்ராஜித்தின் வாக்குறுதியை நம்பினான். பங்ககரா ஓர் அதிரதியாகத் திகழ்ந்தான். பல்வேறு போர்ப்பயிற்சிகளிலும் நிபுணன். அவன் வழிமுறைகள் அவன் தேர்ந்தெடுத்த வல்லுனன். அப்படிப் பட்டவன் தன் காட்டுமிராண்டி மகளை மணப்பானா என ஜாம்பவான் நினைத்தும் பார்க்கவில்லை.

இதை எல்லாம் யோசித்த சத்ராஜித் எப்படி இருந்தாலும் இப்போது பங்ககரா தன்னுடன் இருப்பது தனக்குப் பாதுகாப்பும் வலுவும் சேர்க்கும் என்று நினைத்தான். ஆகவே இப்போதே கரடி உலகுக்குப் போய் ரோகிணியை பங்ககராவுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டுப் பதிலுக்குச் சீதனமாக ச்யமந்தகத்தைத் திரும்பப் பெற்றே ஆகவேண்டும். ஆகவே அவன் அங்கே தெரிந்த அந்த நதிப்பிரவாகம் ஆரம்பிக்கும் இடத்துக்குச் சென்று குகைக்குள் மேலே நுழைய யத்தனித்தான். ஆனால்! துரதிர்ஷ்டவசமாக மேல் குகை மூடிக் கிடந்தது. அதன் வழியாகத் தான் ஜாம்பவான் இந்தப் புனிதக்குகைக்கு வந்து செல்வான். இப்போது அது மூடிக் கிடக்கிறது! அதிலும் பெரிய பெரிய பாறைகளைப் போட்டு அடைத்திருக்கின்றனர். இவற்றை அப்புறப்படுத்துவது மிகக் கடினம். தலையில் அடித்துக் கொண்டான் சத்ராஜித்! இனிமேல் கரடி உலகுக்கு அவன் செல்வது மிகக் கடினம். என்றாலும் நம்பிக்கையை இழக்காத சத்ராஜித் அந்தப் புனிதக் குகையிலேயே மேலும் இரண்டு நாட்கள் தங்கினான். ஏதேனும் அதிசயங்கள் நடக்குமா என எதிர்பார்த்தான். கரடிகளின் அரசன் ஜாம்பவான் எப்படியானும் தான் வந்திருப்பதை அறிந்து அங்கு வருவான் என நினைத்தான். ஆனால் எதுவும் நடக்கவில்லை! ச்யமந்தகம் போய்விட்டது! அவன் மகள் சத்யபாமாவும் போய்விட்டாள்! கரடி உலகுக்குப் போக முடியாதபடி வழியும் அடைக்கப்பட்டு விட்டது. பல வருடங்களாக அவன் ஜாம்பவானிடமிருந்து பெற்று வந்த தங்கத் துகள்கள், சின்னச் சின்ன தங்க மணிகள் அனைத்துக்கும் இப்போது மூடுவிழா நடந்து விட்டது. இனி அவன் ஜாம்பவானையும் பார்க்க முடியாது! ச்யமந்தகமும் அவனிடம் இல்லை! தங்கமும் இனி கிடைக்காது!

2 comments:

ஸ்ரீராம். said...

முடிச்சுகள்தான் எவ்வளவு சுலபமாக அவிழ்கின்றன!

வல்லிசிம்ஹன் said...

கறுப்பு நாகத்துடன் விடப் பட்டவர்கள் என்ன ஆனார்கள்.
எந்த பாகம் நான் படிக்காமல் விட்டேன்.