Sunday, April 24, 2016

ஆஷாடபூர்ணிமை நெருங்குகிறது!

மச்சகந்தி தனக்குள்ளாக அழுகையை அடக்கிக் கொண்டாள். அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பதை அவள் அறிய மாட்டாள். அவர் ஒரு ஆபத்து நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தார். பின்னர் எங்கோ சென்றுவிட்டார். இப்போது மீண்டும் அவள் இருக்குமிடம் தேடி வருவாரா என்பது தெரியாது. பல நாட்கள்/வருடங்கள் முன்னரே அவர் கல்பிக்கு வருவதையும் நிறுத்தி விட்டார் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். ஆனால் அதை எல்லாம் சொன்னால் இந்தச் சின்னக் குழந்தையின் மனம் நொந்து விடும். மொத்தச் சூழ்நிலையுமே மிகவும் வருந்தத் தக்கது. வெறும் ஆறுதல் வார்த்தைகளால் ஆறிவிடக் கூடிய துன்பம் அல்ல இது! அவ்வளவு எளிதில் ஆறுமா? அவள் தந்தையும் அவர்களுடைய மீனவ இனத்திலேயே தக்கதொரு இளைஞனுக்கு அவளை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று முயன்று கொண்டு தான் இருக்கிறார். இதைக் குறித்துத் தங்கள் இனத்தின் மற்றப் பெரியோர்களிடம் ஆலோசனைகளும், வழிமுறைகளும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார். ஆனாலும் அவரால் தக்கதொரு மணாளனை அவளுக்காகத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஏனெனில் வருபவன் அவளுடைய மகனையும் சேர்த்துத் தன் மகனாகப் பார்க்க வேண்டும். அவ்வளவு பெருந்தன்மை உள்ள இளைஞன் எங்கே கிடைப்பான்? தகப்பன் இருந்தும் தகப்பன் அருகில் இல்லாத அவளுடைய மகனைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பிறந்தவனாகவே அங்குள்ளவர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கிருஷ்ணனும் மிகவும் ஆசையும் அன்பும் நிறைந்தவனாக இருந்தாலும் அவன் தன் சொந்தத் தந்தையைத் தான் தன்னை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறானே அன்றி இன்னொரு மனிதனை அல்ல. வேற்று மனிதனைத் தந்தையாக அவனால் ஏற்க இயலாது!

இந்த இக்கட்டான சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டே அவள் தந்தை தன் பேரனின் தந்தை இம்முறை ஆஷாட பூர்ணிமைக்கு வரும்போது அவருடன் செல்வதற்குத்தயாராக இருக்கும்படி கிருஷ்ணனின் மனதைப் பண் படுத்தி வருகிறாரோ! அதனால் தான் கிருஷ்ணாவின் தந்தையைக் குறித்தே அவனிடம் அவர் அதிகம் பேசுகிறார். அவர் ஒரு பெரிய மனிதன் என்று எடுத்துச் சொல்லி அவனை ஊக்குவிக்கிறார். அவளுக்கு மணம் நடக்கவேண்டுமெனில் இந்தக் குழந்தை இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது! ஆகவே தன் மகளின் நன்மைக்காகவே அவள் தந்தை இந்தக் குழந்தையின் தந்தை வந்து அவனை அழைத்துச் சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார். ஒரு தந்தையின் மனோநிலையில் அவர் செய்வது சரியே! ஏனெனில் அவள் தந்தைக்கு மட்டுமின்றி அவள் தாய், சிற்றப்பன்மார் என அனைவருக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஒவ்வொருவராக இறந்துவிட்டால் அவளுக்குக் கடைசி வரை துணைக்கு யாரும் இருக்க மாட்டார்கள். இந்தக் குழந்தை இருப்பான் தான்! ஆனால் அதுவும் சரிப்பட்டு வராது! எத்தனை நாட்களுக்கு? இவன் இங்கே இருக்கும்வரை எந்த இளைஞனும் அவளை மணக்க முன் வரமாட்டான்!

ஆனால், கிருஷ்ணனின் தந்தை இங்கு வந்துவிட்டால் மட்டும் அவனை  அழைத்துச் செல்வது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய ஒன்றா? அவர் ஆரியவர்த்தத்தின் மிகப் பெரிய மஹரிஷிகளில் ஒருவர் தான்! அவருடைய குருகுலம் ஒரு காலத்தில் மிகப் பெரியதாகவும் இருந்தது. மிக மதிப்பாகவும் பேசப்பட்டது. ஆனால் அவருடைய எதிரிகள்? அவரை ஏன் அவர்கள் தாக்கினார்கள் என்பது குறித்து அவளுக்கு விளக்கமாக எதுவும் தெரியாது! என்றாலும் எதிரிகள் இருக்கின்றனரே! அவர் வெளியே வந்தால், அவர் உயிருடன் இருப்பது தெரிந்துவிட்டால் அவர்கள் அவரைக் கொன்று விடுவார்களே! அதனால் தானே அவர்கள் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று அவர் ஒவ்வொரு இடமாக மாறிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டதொரு நிலைமையில் ஒரு மீனவப் பெண்ணுக்குப் பிறந்த ஒரு குழந்தையை என்னதான் தன் மகனாகவே இருந்தாலும் அவர் எப்படி அழைத்துச் செல்வார்? இது மிகவும் ஆபத்தான ஒன்று. இந்த ரகசியம் அவளுக்கு மட்டுமே தெரியும்! எவரிடமும் சொன்னதில்லை. அதே சமயம் தந்தை வரவில்லை என்பது இந்தச் சிறுவன் மனதையும் காயப்படுத்தும் ஒரு விஷயம்.

ஆனால் இந்தக் கிருஷ்ணனோ தன் தந்தையைக் குறித்துப் பேச ஆரம்பித்தானெனில் அதற்கு ஒரு முடிவே இல்லை! அவனுக்கென்று ஒரு அழகான முறையில் எவர் மனதையும் கவரும் வண்ணம் பேசுவான். இந்த விஷயத்தில் அவன் வயதை விட அவன் அதிக புத்திசாலியாகக் காட்சி அளிப்பான். அவ்வளவு ஏன்? அவர்கள் படகில் பயணிக்கும்போது கிருஷ்ணனும் அவர்களுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான் எனில் படகில் உடன் பயணிக்கும் அவர்களுடைய மீனவ உறவினர் மட்டுமின்றி மற்றப் பயணியரும் கிருஷ்ணனின் பேச்சால் கவரப் படுவார்கள். அதிலும் அவன் தன் தந்தை எவ்வளவு பெரியவர் என்பதையும், அவரால் எப்படிக் கடவுளரிடம் பேச முடியும் என்பதையும் சொல்வதோடு அவன் இன்னம் கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவனையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார் என்பதையும் அழகாக எடுத்துக் கூறுவான். அவருக்கு அனைத்தும் தெரியும்! நக்ஷத்திரங்களின் போக்கைக் குறித்து, கிரஹங்களின் சஞ்சாரம் குறித்து, சூரிய, சந்திரர் குறித்து, இதோ இந்த யமுனையின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்கிருந்து எப்படி வருகிறது என்பது குறித்து, யமுனையில் குடி இருக்கும் மீன்கள், முதலைகள் குறித்து! அனைத்தையும் அவன் தந்தை அறிவார். அதனால் தான் அவனும் தன் தந்தையுடன் செல்லப் போகிறான். அனைத்தையும் அவர் அவனுக்குக் கற்பிப்பார். அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டாலும் பயணிகளும் சரி, மீனவர்களும் சரி, குழந்தை ஏதோ எதிர்பார்ப்பில் ஆசை மிகுந்து பேசுகிறான் என்றே நினைப்பார்கள். அந்த மனிதன், அதுதான் கிருஷ்ணனின் தந்தை அவன் யாராக இருந்தாலும் இவனை எங்கே கூட்டிச் செல்வான்! நடக்கப் போவதே இல்லை.

ஆனாலும் இனிமையாகவும் அனைவர் மனதையும் கவரும் வண்ணமும் பேசும் இந்தச் சிறுவனின் பேச்சைக் கேட்பதால் என்ன வந்துவிடப் போகிறது! ஆகவே அவர்கள் மிகவும் ஆவலோடு அவன் சொல்வதை எல்லாம் கேட்டாலும் கடைசியில் பிரிந்து செல்கையில் தங்கள் தலையை சோகமாகவும் வருத்தமாகவும் ஆட்டி மறுப்புத் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். எவ்வளவு அழகான புத்திசாலிக் குழந்தை! ஆனால் உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறானே! மெல்ல மெல்ல ஆஷாட பூர்ணிமை தினமும் வந்தது. கிருஷ்ணனின் பொறுமை எல்லை கடந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவன் உற்சாகமாகவே இருந்தான். விரைவில் தந்தையைப் பார்க்கப்போகும் ஆவல் மீதூறியது. ஆனால் அவன் தாயும் சரி, அவள் பெற்றோர்களும் சரி நடுக்கத்துடனேயே இருந்தனர். இது நடக்கப் போவதில்லை. அவர் வரப்போவதும் இல்லை. அதன் பின்னர் என்ன நடக்கும்? இந்தச் சிறுவன் என்ன செய்யப் போகிறான்? அவனால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? ஆனால் கிருஷ்ணன் இவற்றை எல்லாம் கவனிக்கும் மனோநிலையில் இல்லை. அவன் தன் தந்தை வந்தால் என்ன செய்யவேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்று யோசிப்பதில் முழுகி விட்டான். தன் தந்தைக்காக யமுனையிலிருந்து ஒரு பெரியமீனைப் பிடித்தான். அதை நன்கு சுத்தம் செய்துத் தன் பாட்டியிடம் கொடுத்துத் தந்தைக்காகச் சிறப்பு உணவு அந்த மீனிலிருந்து தயார் செய்யச் சொன்னான். அவன் தன் கைகளால் பிடித்த மீனைச் சமைத்துச் சாப்பிடவேண்டும் அவன் தந்தை! இல்லை எனில் அவனால் வேறு என்ன விதத்தில் தந்தைக்கு சேவை செய்ய முடியும்? அவர் மகன் அல்லவோ அவன்! அவருக்குத் தக்க முறையில் நன்கு சமைக்கப்பட்ட மீனை உண்ண அளிப்பது அவன் கடமையன்றோ!

அவன் தன் பாட்டியிடம் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறினான். அவன் கனவுகளில் அவன் தந்தை வந்து அவனை அழைத்துச் செல்வதாகச் சத்தியம் செய்திருப்பதைக் கூறினான். அவர் கட்டாயம் வந்துவிடுவார் என்றான். அது மட்டுமல்ல. அவன் தன் தாயையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவான். இங்கே விட்டு வைக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அவன் பாட்டி தலையை மட்டும் ஆட்டினாள். மச்சகந்திக்கு அழுகை தான் மீண்டும் மீண்டும் வந்தது. மறுபடியும் கண்ணீர்க் கடலில் கண்கள் தத்தளிக்க மகனை அணைத்துக் கொண்ட அவள் அவனுக்குத் தன் தந்தை வரப்போவதில்லை என்னும் சோகமான முடிவுக்குத் தயார் செய்ய யத்தனித்தாள். கிருஷ்ணனைப் பார்த்து, “கிருஷ்ணா, ஒருவேளை அவர் வரவில்லை எனில்? என்ன செய்வாய் அப்பா?”

“அப்படி எனில் தாயே, நாம் அவரைத் தேடிக் கொண்டு நம் படகில் செல்வோம். அவரைத் தேடிக் கண்டுபிடிப்போம்.”

“ஆனால் குழந்தாய், நான் திரும்பத் திரும்ப உன்னிடம் சொல்லி இருக்கிறேன். இப்போது மீண்டும் சொல்கிறேன். அவர் எங்கே இருக்கிறார் என்பதை நான் அறிய மாட்டேன்! எனக்குத் தெரியாது குழந்தாய்!” என்று பொறுமை இழந்து கூறினாள் மச்சகந்தி. அவன் தன்னை நம்பவில்லையே என்று அவள் வேதனைப்பட்டாள். ஆனால் அப்படியும் அந்தக்குழந்தை அவளிடம், “தாயே, நான் இன்று அன்னை யமுனையிடம் பேசினேன். அவள் மிகவும் கருணை மிக்கவள். நமக்கு நல்வழி காட்டுவாள் அன்னையே! சீக்கிரம் தயாராகுங்கள். அழாதீர்கள். நல்லதே நடக்கும். தந்தைக்கூ முன்னால் நீங்கள் அழுதீர்கள் எனில் அவர் என்னை என்னவென்று நினைத்துக் கொள்வார்? நான் தான் உங்களைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை என்றல்லவோ நினைப்பார்கள்! தாயே அழாதீர்கள்!” என்ற கிருஷ்ணன் அன்போடு தன் தாயைக் கட்டிக் கொண்டான். மச்சகந்தியின் மனம் மிகவும் கனத்தது. அதிலும் தந்தை வரப்போவதில்லை என்பதை அறிந்து கொண்டால் கிருஷ்ணனுக்கு ஏற்படப் போகும் வேதனையை நினைத்து நினைத்து அது அவனுக்குக் கொடுக்கப் போகும் அதிர்ச்சியை நினைத்து நினைத்து அவள் வேதனையில் ஆழ்ந்தாள்.