Saturday, April 30, 2016

கேள்வியும், பதிலும்!

மிகவும் முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்ட த்வைபாயனன், தந்தையிடம், “தந்தையே, எனக்கு உபநயனம் செய்வித்துப் பூணூல் அணிய வைக்கப்பட்டால், அதற்கென சில வாழ்க்கை முறைகள் இருப்பதாகவும், சில வாக்குறுதிகளையும், சில நெறிமுறைகளையும் நான் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் கூறினீர்கள் அல்லவா? அவை என்ன? எப்படிப்பட்ட வாழ்க்கை முறை? என்னிடம் இப்போது விளக்கிச் சொன்னீர்கள் எனில் நான் விரைவில் அதர்குத் தயாராக இருப்பேன். அவற்றை அப்படியே கடைப்பிடிப்பேன்.”

“குழந்தாய், உன்னுடைய வயதில் அது அவ்வளவு எளிதன்று. நீ சுத்தமான பிரமசரிய விரதம் கடைப்பிடிக்கவேண்டும். அது மிகக் கடினமானது. உன்னுடைய குருவுடன் குருகுலத்தில் தான் வசிக்க வேண்டும். ரிஷிகளும், முனிவர்களும் வாழ்ந்து காட்டிய பாரம்பரியமான அந்த தவ வாழ்க்கையை நீ மேற்கொள்ள வேண்டும். அனுதினமும் நீ ஒரு பிரமசாரியாக உன் உணவை இரந்து பெற்றுத் தான் குருவின் சம்மதத்தின் பேரில் உட்கொள்ளவேண்டும். அதோடு இல்லாமல் உனக்களிக்கப்பட்ட இந்த பிரமசரியத்தை மட்டுமல்லாது அப்போது நீ எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு வாக்குறுதிகளையும், கடுமையான நெறிமுறையையும் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கவேண்டும். அதற்காக நீ சத்தியம் செய்ய வேண்டும். அந்தச் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்.”

“நிச்சயம் நான் எல்லாவற்றையும் கருத்துடனும், கட்டுப்பாட்டுடனும் கடைபிடிப்பேன் தந்தையே! இதோ உங்கள் சீடர் பைலர் இப்படித் தானே இருந்து வருகிறார். இத்தனைக்கும் அவர் என்னை விடப் பெரியவர். எட்டு வயது மூத்தவர்! அவரால் இயலும்போது என்னால் முடியாதா என்ன? நிச்சயம் முடியும், தந்தையே!”

மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் பராசரர். “குழந்தாய்! இந்த மந்திரங்களை சும்மா உச்சரிப்பதனால் எவ்வித பலனும் விளையாது; மந்திரங்களின் உட்பொருளும் புரிந்து கொள்ள வேண்டும். உச்சரிப்பும் சரியானபடி இருக்க வேண்டும். மந்திரங்கள் அனைத்தும் தெய்விகமானது. அந்த மந்திரங்களின் உட்பொருளை உணர உணர உனக்கு வருண பகவான் விண்ணுலகின் அதிசயங்களையும் கிரஹங்களின் சுழற்சியையும் நக்ஷத்திரங்களின் பிரயாணத்தையும் விண்ணகத்து ஒழுங்குமுறையையும் புரிய வைப்பார்.” மத்தியான நேரத்தில் அவர்கள் பயணத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு சம்பிரதாயமான சடங்குகளைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்து முடித்தார்கள். அங்கிருந்த ஜனங்கள் அவர்களை வரவேற்று உணவு அளித்து உபசரித்தார்கள். இவை எல்லாம் முறைப்படி முடிந்த பின்னர் அவர்கள் பயணத்தை மேலும் தொடர்ந்தார்கள். த்வைபாயனன் தன் தந்தை மகிழ்வுடன் இருக்கக் கண்டான். தந்தையிடம், “தந்தையே, எப்போது உங்கள் மந்திர உச்சாடனத்தை ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். முனிவர் சிரித்தார். தன் மகன் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டான். சிரித்த வண்ணம், அவர், “அது ஒரு மாபெரும் ரகசியம், குழந்தாய்!” என்றார்.

உடனே த்வைபாயனன் தந்தையிடம், “என்னிடம் மறைக்கும் அளவுக்கு அதில் என்ன ரகசியம் இருக்கிறது, தந்தையே அதிலும் நான் உங்கள் மகன் அல்லவா?!” என்று உடனே கேட்டான். “நான் சொன்னேன் எனில் உன்னால் அதை நம்ப முடியாது!” என்றார் தந்தை! த்வைபாயனனுக்குத் தந்தை தன்னிடம் நம்பிக்கை வைக்கவில்லை என்று வருத்தம் வந்தது. ஒருவேளை அந்த ரகசியத்தைச் சொல்லும்படி தந்தையிடம் வற்புறுத்தினால் அவருக்குக் கோபம் வந்து தன்னை மீண்டும் தாயிடம் அனுப்பினாலும் அனுப்பி வைப்பார். பராசரருக்குப் புரிந்து விட்டது. த்வைபாயனனுக்கு மன வருத்தம் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டார்.தனக்கும் மகனுக்கும் இடையில் வேறு எதுவும் குறுக்கே வர அவர் விரும்பவில்லை. ஆகவே மகனிடம், “நான் சொல்கிறேன் உன்னிடம், ஆனால் நீ அதை உன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எவருக்கும் சொல்லக் கூடாது!” என்றார்.

“நிச்சயமாக தந்தையே, என்னிடம் நம்பிக்கை வையுங்கள்!”

என்னுடைய தாத்தா, வசிஷ்டர் ஆர்யவர்த்தத்தின் அனைத்து ரிஷிகளுக்கும் மூலாதாரமான பரம்பரைத் தலைவர் ஆவார். அவர் கடவுளரிடம் பேசும் வல்லமை படைத்தவர். அப்படிப் பேசிப் பேசித் தான் வேதங்களை அறிந்து கொண்டார். அவற்றின் உச்சாடனத்தையும் எந்த இடத்தில் ஏற்றி எந்த இடத்தில் இறக்கி உச்சரிக்கவேண்டும் என்பதெல்லாம் அவருக்குக் கடவுளர் மூலம் அறிய வந்தது. அதோடு அதன் புனிதத்தன்மையையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.”

“அப்படியா?” ஆச்சரியத்துடன் கண்கள் விரியக் கேட்ட த்வைபாயனன், “தாத்தா அவர்கள் உண்மையிலேயே கடவுளரிடம் பேசும் வல்லமை படைத்தவரா?” என்று கேட்டான். “ஆம்!” என்ற பராசரரிடம், “நீங்களும் கடவுளரிடம் பேசுவீர்களா, தந்தையே?” என்று கேட்டான் த்வைபாயனன். அதற்கு பராசரர், “ஒரு காலத்தில் என்னால் முடிந்தது; ஆனால் இப்போது முடியாது!” என்று வருத்தத்துடன் கூறிய பராசரர் மகனிடம், “உனக்குக் களைப்பாக இல்லையா குழந்தாய்? கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறாயே?” என்று புன்னகையுடன் கேட்டார். தன்னுடைய வழக்கமான அடக்கத்துடன் கூடிய புன்னகை புரிந்த த்வைபாயனன், “உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் நானும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன், தந்தையே!” என்றான். பராசரருக்கு மகனின் இந்த பதிலில் மிகவும் சந்தோஷம் வந்தது. மகனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். சற்று நேரம் சும்மா இருந்த த்வைபாயனன், மீண்டும் தன் கேள்வியை ஆரம்பித்தான். “உங்களுக்கு வேதங்கள் கற்றுக் கொடுக்கையில் உங்களுக்கு என்ன வயது ஆகி இருந்தது தந்தையே!” என்று கேட்டான்.

“தாத்தா உச்சரிக்கையில் அதைப் பார்த்துப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன்.”

“ஏன், உங்கள் தந்தை உங்களுக்கு எதுவுமே சொல்லிக் கொடுக்கவில்லையா?” த்வைபாயனன் கேட்டான்.

“என் தந்தையால் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் தந்தை ஒரு யுத்தத்தில் கொல்லப்பட்டார். நான் அப்போது என் தாயின் கர்ப்பத்தில் இருந்தேன்.” பரிதாபமான ஒரு புன்னகையுடன் கூறினார் பராசரர். அவரையே சற்று நேரம் பார்த்த த்வைபாயனன், மீண்டும் தன் வழக்கமான புன்னகையுடன், “தந்தையே, நான் கேள்வி மேலே கேள்வி கேட்டுக் கொண்டு போனால் உங்களுக்குக் கோபம் வராதே?” என்று கேட்டான்.

முனிவர் கலகலவெனச் சிரித்தார். “குழந்தாய், நான் கோபமே கொள்ளக் கூடாது என்று சபதம் ஏற்றிருக்கிறேன். அப்படி இருக்கையில் உன்னிடம் நான் கோபம் கொள்வேனா? நிச்சயம் மாட்டேன். இல்லை மகனே, இல்லை! நான் ஏன் உன் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயங்குகிறேன் எனில், எனக்கு உள்ளூர ஒரு பயம், கவலை உள்ளது. அது என்னவென்றால், உன் வயதுக்கும் அனுபவங்களுக்கும் நீ நான் சொல்லிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையோ, அல்லது என் பதில்களின் முக்கியத்துவத்தையோ புரிந்து கொள்வாயா என்பதே! சரி, குழந்தாய், இப்போது உனக்கு என்ன தெரிய வேண்டும்?”

1 comment:

வல்லிசிம்ஹன் said...

பராசரர் மகன் கிருஷ்ண த்வைபாயனரின்
பாடங்கள் ஆரம்பிக்கும் போது நாங்களும் கலந்து கொள்கிறோம்.