Monday, April 4, 2016

தப்பித்துச் செல், வாசுதேவா! தப்பித்துச் செல்!

“ஹூம், சத்ராஜித் என்னிடம் ஆசை காட்டி இருந்தான். ஒவ்வொரு முழு நிலவு நாளன்றும் நான் எங்கள் நதியிலிருந்து கிடைக்கும் மஞ்சள் நிறமான ஜ்வலிக்கும் தங்கநிற மணலை எடுத்து வந்து அவன் ச்யமந்தகமணிமாலையை வழிபடக் கொடுக்கவேண்டும். அந்தத் தங்கம் ஒவ்வொரு முழு நிலவிலும் அவனுக்குக் கிடைக்கவேண்டும் எனச் சொல்லி இருந்தான். அப்போது அவன் ஏதேனும் ஓர் முறை தன்னுடைய மகனை அழைத்து வருவதாகவும், ரோகிணியை அவனுக்கு மணம் செய்து கொடுக்கலாம் என்றும் சொல்லி இருந்தான். ஆனால் ரோகிணி அப்போது சிறுமியாக இருந்தாள். ஆகவே ரோகிணி ஓர் வளர்ந்த இளம்பெண்ணாக ஆனதும் அதைச் செய்வதாக வாக்குக் கொடுத்திருந்தான்.”

“அப்படி எத்தனை நாட்களாக/வருடங்களாக நீங்கள் இந்த நம்பிக்கையில் வாழ்ந்து வந்தீர்கள்?”

“அவள் வளர்ந்து இளமங்கையாகி விட்டாள். அப்போது நான் சத்ராஜித்திடம் நினைவூட்டினேன். திரும்பத் திரும்ப நினைவூட்டினேன், அவனுடைய உறுதி மொழியை எடுத்துச் சொல்லி நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவன் அதை லட்சியம் செய்யவே இல்லை. பின்னர் தான் எனக்குப் புரிந்தது. இங்குள்ள தங்கத்தை அடைவதற்காக அவன் பொய்யான வாக்குறுதியை அளித்து வந்திருக்கிறான் என்பதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டேன். அவனுக்கு இங்குள்ள தங்க நிற மணலில் கிடைக்கும் தங்கம் தான் வேண்டும். அந்தத் தங்க மணிகளை அவன் அடைந்து மிகப் பெரும் பணக்காரனாக ஆகவேண்டும். இது தான் அவனுக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது. வாழ்க்கையில் அவன் மிகவும் மதித்தது இத்தகைய செல்வங்களையே!எனக்குக் கோபம் மிகுந்து வந்தது. என்னுடைய மருமகன் ஆன கரடியை அவன் மேல் ஏவி விடலாமா என்று கூடப் பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். ஆனால் அதை மட்டும் நான் செய்திருந்தால் ரோகிணிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டது எல்லாம் வீணாகிவிடும். ஆகவே பொறுமை காத்தேன்.”

“அப்படியா? என் நண்பன் சாத்யகி உங்களிடம் எப்படி வந்து சேர்ந்தான்?”

“சில நாட்களுக்கு முன்னர் எனக்கு ஓர் கனவு வந்தது. அந்த ச்யமந்தகமணி மாலை என்னிடம் வருவதாகவும் அது ரோகிணிக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாகவும் கனவு கண்டேன். ஆகவே அந்த மணிமாலை இங்கு எங்கோ தான் இருக்கிறதோ என்னும் எண்ணத்தில் நான் என் மருமகன் கரடியையும் அழைத்துக் கொண்டு ச்யமந்தகத்தைத் தேடிச் சென்றேன். என் கனவு நனவானதை அப்போது கண்டேன். அந்த ச்யமந்தமணியானது ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்டு அதன் ஒரு பகுதியை ஒரு சிங்கத்தின் வாயில் கண்டேன். உடனே என் மருமகன் கரடியை அந்தச் சிங்கத்தைக் கொல்லும்படிக் கட்டளை இட்டேன். அப்படியே அவனும் அதைக் கொன்றான்.” என்று சொல்லியவண்ணம், குகையின் வாயிலுக்காகத் திரும்பிய ஜாம்பவான் அங்கே காவல் காத்துக் கொண்டு நின்றிருந்த தன் மருமகனைப் பார்த்துப் பாசத்துடன் புன்னகைத்தார். அந்தக் கரடி மருமகன் மினியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஜாம்பவான் பின்னர் தொடர்ந்து, “என் மருமகன் மிகவும் பாசமானவன். அதோடு விசுவாசமானவனும் கூட! ஆனால் அவனுக்குக் கோபம் வந்து விட்டால் தாங்காது! மிகக் கொடூரமானவனாக மாறிவிடுவான்.” என்றார்.

“அப்போது நீங்கள் என் சிநேகிதனை அந்த நாளில் பார்க்கவில்லையா? பின் எப்போது பார்த்தீர்கள்?”

“இல்லை, அந்த மந்திர மணிமாலை என் கைகளுக்கு வந்தது. எனக்கு அப்போதே நிச்சயமாக ஏதோ அதிர்ஷ்டம் எனக்கும், என் அருமை மகளுக்கும் காத்திருக்கிறது என்பது தெரிய வந்தது. ஆகவே மறுநாள் மீண்டும் வெளியே சென்று எந்த மனிதனால் ரோகிணிக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று பார்த்து அந்த மனிதனைக் கொண்டு வரச் சென்றோம். தேடினோம். அப்போது தான் உன் நண்பனை நான் பார்த்தேன், வாசுதேவக் கிருஷ்ணா!”

“நாங்கள் புனிதக் குகைக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?”

“உன் நண்பனுடன் இந்தப் பூனைகளின் யஜமானியும் வந்திருப்பதை அறிந்து கொண்டேன். உன் சிநேகிதன் அந்தப் பெண்ணையும் பூனையையும் தேடிக் கண்டுபிடிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டான். ஆகவே ரோகிணியை நான் மேல் பக்கம் உள்ள குகைக்கு அனுப்பி வைத்தேன். அங்கே யாரானும் தங்கி இருக்கிறார்களா என்று பார்த்து வரச் சொன்னேன். அவள் தான் பூனைகளோடு ஒரு இளம்பெண்ணும், இன்னொரு இளைஞரும் அங்கே இருப்பதைத் தெரிவித்தாள். பின்னரே நான் அவளை விட்டு உன்னை இந்தக் கரடி உலகுக்குக் கொண்டு வரச் சொல்லி கீதங்களை இசைக்கச் சொன்னேன். அந்தக் கீதத்தின் ஆனந்தத்தில் மயங்கி நீ வருவாய் என்பது என் எண்ணம். அப்படியே நடந்தது. மேலும் இந்த மந்திரமணிமாலையின் உதவியால் ரோகிணியும் இந்தக் கரடி உலகிலிருந்து தப்பி வெளியேறலாம் என்பதும் என் எண்ணமாக இருந்தது. அதற்கு நீ உதவி செய்வாய் என்றும் நம்பினேன்.”

“இதை முதலிலேயே என்னிடம் ஏன் நீங்கள் சொல்லவில்லை?”

“ஹூம், சொல்லத் தான் நினைத்திருந்தேன். ஆனால் நான் ஏதும் சொல்வதற்கு முன்னரே நீ அநாவசியமாக சாம்பனைக் கொன்று எங்கள் மக்களின் கோபத்தையும், கருநிறக்கடவுளின் சாபத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டாய்!”

“அதிர்ஷ்டத்தைக் குறித்துப் பேசுவதில் பலன் என்ன அரசே? ஒன்றுமில்லை! இன்னம் மூன்று நாட்களில் என்னை உங்கள் கருநிறக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் போகிறீர்கள். அதன் பின்னர் ரோகிணி, அவள் உங்கள் மக்களைப் போல் இருக்க மாட்டாள்! எங்கள் ஆரிய இனப் பெண்களைப் போல் இருப்பாள் என நம்புகிறேன். ஆகவே நான் உங்கள் கடவுளிடம் ஒப்படைக்கப்பட்டதுமே அவள் தானும் என்னுடன் இறந்துவிடுவாள். இங்கே எனக்கு அடுத்து வரப் போகும் இன்னொரு ஆசாரியனை மணம் புரிந்து கொள்ளச் சம்மதிக்க மாட்டாள்! இல்லையா ரோகிணி! நான் சொல்வது சரிதானே?” என்ற வண்ணம் அவளைத் திரும்பிப் பார்த்தான் கிருஷ்ணன்.

“ஆம் பிரபுவே, நீங்கள் சொல்வது சரியே!” என்று ரோகிணியும் திட்டவட்டமாகக் கூறினாள். “நான் அடுத்து வரப் போகும் ஆசாரியனை, கடவுளுக்கு உகந்தவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டேன்!” என்றாள்.

கிருஷ்ணன் ஜாம்பவானைப் பார்த்து, “நீங்கள் மிகவும் கடுமையாக இருந்தீர்கள். சாம்பன் இறந்த மறுதினம் என்னை சபைக்கு அழைத்தபோது மிகக் கடுமை காட்டினீர்கள்!” என்றான். “ஆம், அப்படித் தான்! அப்போது என் மக்கள் என்னுடன் இருந்தனர். எனக்கு உள்ளூர ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் எப்படி வெளிக்காட்டுவேன்! நீ என்னிடம் அன்பைக் குறித்தும், கருணையைக் குறித்தும், பெருந்தன்மை குறித்தும் பேசினாய். அவை ஏதும் நாங்கள் இன்றளவும் அறியாதவை! நாங்கள் எப்படி அதைப் புரிந்து கொள்வது? எனக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான்! என் அருமை ரோகிணி உன்னுடன் சந்தோஷமாக இருப்பாள் என்பதே! சரி, இப்போது நாம் நேரத்தைப் பேசி வீணாக்க வேண்டாம். நீ, ரோகிணியுடனும், உன் மற்ற இரு நண்பர்களுடனும் இங்கிருந்து தப்பிச் சென்று விடு!”

கிருஷ்ணனுக்கு ஆச்சரியம் அடங்கவே இல்லை. ஜாம்பவானின் இந்த யோசனை அவனுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. “ஆனால் அரசே, புனிதக் குகை வழியாகத் தானே தப்பிக்க முடியும்! அதைத் தான் நீங்கள் மூடி விட்டீர்களே!” என்று கேட்டான். “ஆம், கிருஷ்ணா! நான் அதைச் செய்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அவர்கள் மிகவும் வற்புறுத்தினார்கள். அந்தக் குகை மூடப்படவேண்டும் என்று விரும்பினார்கள். மேலும் அவர்கள் கற்களையும் அங்கே நிரப்பி இனி யாரும் அங்கே வரவோ, அவ்வழியாகச் செல்லவோ முடியாதபடி பண்ணி விட்டனர்.”

“ம்ம்ம்ம்ம், அரசே, நீங்கள் “தப்பிச் செல்ல”ச் சொன்னீர்கள் அல்லவா?” என்று மீண்டும் கேட்டான் கிருஷ்ணன்.

அதைச் சரியாகப் புரிந்து கொண்ட ஜாம்பவானும், “ஆம், நீங்கள் “தப்பித் தான் செல்ல” வேண்டும்.” என்றார். “ஆனால் எப்படி?” என்றான் கிருஷ்ணன்.

“இதோ பார் கிருஷ்ணா! இந்த நதிப் பிரவாகத்தோடு ஒரு சிறு பாதை மேலே மலை உச்சிக்குச் செல்கிறது. அவ்வழியில் தான் நீங்கள் செல்ல வேண்டி இருக்கும், எங்கள் கருநிறக் கடவுளால் அனுமதிக்கப்பட்டால், நீ மலையின் மறுபக்கம் செல்ல முடியும். கீழே பள்ளத்தாக்கிலும் இறங்கலாம். அங்கே கரடிகள் ஓர் பாதை அமைத்துள்ளன, அதை நீ தொடர்ந்து சென்றால் வழி கிடைத்துவிடும். அது உன்னைப் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் செல்லும். ஆனால் மிகக் கடுமையான வழி! ஆபத்தானதும் கூட!” என்றார் ஜாம்பவான். பின்னர் அவர் அங்கிருந்து செல்லும் பாவனையில் எழுந்து கொண்டார்.

“நீங்கள் மிகவும் பெரிய மனம் படைத்தவர் அரசே! இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூட எங்களுடைய நன்மையையும், பாதுகாப்பையும் விரும்புகிறீர்களே! நான் மீண்டும் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ரோகிணி என்னுடன் மிகவும் சந்தோஷமாக அவள் வாழ்க்கையைக் கழிப்பாள். அதில் உங்களுக்குச் சிறிதும் சந்தேகமே வேண்டாம்.” என்ற வண்ணம் கிருஷ்ணனும் எழுந்து நிற்க ரோகிணியும் எழுந்து கொண்டாள்.

“ஏற்கெனவே மிகத் தாமதம் ஆகிவிட்டது வாசுதேவா! விரைவில் இங்கிருந்து கிளம்பி வெளியேறு! நான் சொன்ன வழித்தடத்தை நினைவில் கொள்! உன்னுடைய அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வை! எல்லாம் இனிதே நடக்கும்!”