Monday, August 1, 2016

"நான் உயிர் விடத் தயார்!" காங்கேயர் அறிவிப்பு!

அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பா அவரைக் கேலியாகப்பார்த்தாள். பின்னர் ஏளனம் நிறைந்த குரலில், “ஆஹா! இங்கே ஒரு மாபெரும் துறவி இருக்கிறார்!” என்று கேலியாகக் கூறினாள். அப்போது த்வைபாயனர் பரசுராமரிடம், “ஆசாரியர் அனுமதி கொடுத்தால் நான் சிறிது பேச விரும்புகிறேன்.” என்று கூறினார். ஆசாரியர் பரசுராமர் அவருக்கு அனுமதி அளித்தார். த்வைபாயனர் பேச ஆரம்பித்தார். “இந்தப் பரந்த கண்டத்தை ஆட்சி புரிந்த பரதச் சக்கரவர்த்தியின் இந்த மாபெரும் சாம்ராஜ்யம் நிலைத்திருக்குமா அல்லது வீழ்ந்துவிடுமா என்பது இப்போது இதோ நிற்கிறாரே, காங்கேயர் இவர் கைகளில் தான் இருக்கிறது!” அமைதியாகவும், சாந்தமாகவும் கூறிய த்வைபாயனர் சற்று நிறுத்தினார். “இந்தப் பரந்த பரதக் கண்டத்து க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் இவர் ஓர் முன் மாதிரியாக இருக்கிறார். அனைவருக்கும் ஒளி வீசிப் பிரகாசிக்கும் வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் இருந்து வருகிறார். க்ஷத்திரிய தர்மம் இவர் மூலம் மேலும் தழைத்து ஓங்கும், புகழ் அடையும் என்றும் நினைக்கிறார்கள். இவருடைய இந்த சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட சபதத்தை நினைத்து பிரமிப்புடனும், பயபக்தியுடனும் இவரைப் பார்க்கின்றனர்.” மீண்டும் நிறுத்தினார் த்வைபாயனர்.

“இவர் தன்னுடைய சபதத்தை உடைத்து எறிந்தால் நஷ்டம் இவருக்கு மட்டுமல்ல; மக்கள் இவர் மேல் வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையும் கெட்டுவிடும். இவர் மேல் மக்களுக்கு இப்போது இருக்கும் மரியாதை போய்விடும். க்ஷத்திரிய தேஜஸுக்கும், பிரம தேஜஸுக்கும் இணைப்பு ஏற்படும் சந்தர்ப்பமே இல்லாமல் போய்விடும். தர்மம் அழியும்! எங்கும் அதர்மம் சூழ்ந்துவிடும்.” என்று நிதானமாகச் சொன்னார். பரசுராமர் அவர் சொன்னவற்றை மிகவும் உன்னிப்பாகவும் ஆர்வத்துடனும் கவனித்துக் கேட்டார். த்வைபாயனர் மேலும் பேசினார்;”நான் மட்டும் இளவரசன் காங்கேயனாக இருந்தேன் எனில் ஒருக்காலும் என் சபதத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன். அதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றப் பாடுபடுவேன். அதே போல் உங்களுடனும் யுத்தம் செய்ய மாட்டேன். ஏனெனில் நீங்கள் என் ஆசான். என் குரு! என் தெய்வம்! நான் என் சபதத்தை உடைத்தாலும் சரி, அல்லது உங்களுடன் போரிட்டாலும் சரி! இருவகையிலும் அது தர்மத்திற்கு ஏற்றது அல்ல! தர்மம் வலுவிழந்து போய்விடும்!” என்றார்.

அப்போது மஹாராணி சத்யவதி தன் அழுகையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டுப் பேச ஆரம்பித்தாள். “நான் அம்பாவை காங்கேயனைத் தவிர மற்ற எந்த இளவரசனின் பெயரையும் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவளுடைய இத்தகைய துன்பத்திற்கு எல்லாம் நான் தான் காரணம் என அவள் முழுமையாக நம்பினாள் எனில் நான் என் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.” என்றாள். அதற்கு அம்பா பலத்த குரலில் கத்தினாள். “நான் உன்னுடைய உயிரைக் கேட்கவில்லை! புரிந்ததா? காங்கேயருக்கு மட்டும் தான் சபதம் போடத் தெரியுமா? எனக்கும் தெரியும்! நானும் சபதம் போட்டிருக்கிறேன். ஒன்று அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவர் கொல்லப்படுவதை நான் பார்க்க வேண்டும்.” என்று உரத்த குரலில் கூவினாள். மேலும் மிகவும் கோபத்துடன் சத்யவதியைப் பார்த்தாள். “உன்னுடைய உயிரைக் குறித்த அக்கறை ஏதும் எனக்கு இல்லை! நீ இருந்தால் என்ன? செத்தால் என்ன?” என்றவள் பரசுராமர் பக்கம் திரும்பினாள். “இந்தப் பெண்மணி…………..” என்று ஆரம்பித்தாள்.

பரசுராமர் அதற்குக் கொஞ்சம் கடுமையுடனேயே குறுக்கிட்டு மறுமொழி சொன்னார். “மாட்சிமை பொருந்திய ராஜமாதா! அது நினைவிருக்கட்டும். இவள் அப்படித் தான் அழைக்கப்பட வேண்டும்!” என்றார். “ஹூம், இவள் தன் நாக்கில் தேனைத் தடவிக் கொண்டு பேசுகிறாள் ஆசாரியரே!” என்று மீண்டும் ஏளனமாகச் சொன்னாள் அம்பா! அதற்குள்ளாகப் பரசுராமர் பேச ஆரம்பித்தார். “காங்கேயா, நீ உன் சபதத்தை எல்லாம் விட்டு விடு! சூழ்நிலைகள் மாறி விட்டன. இப்போது உன் சபதத்தை ஏற்கும் சூழ்நிலையோ அதை நடத்தும் நிலையிலோ நீ இல்லை! நீ எதற்காக சபதம் செய்தாயோ அது நிறைவேறி விட்டது அல்லவா? இப்போது சத்யவதியின் மகன் விசித்திரவீரியன் தானே ஹஸ்தினாபுரத்துச் சக்கரவர்த்தியாக இருக்கிறான். அவன் தான் அம்பாவின் மற்ற இரு சகோதரிகளைத் திருமணம் புரிந்திருக்கிறான்?” என்று கேட்டார். அப்போது அம்பா மீண்டும் கோபத்துடன் பேச யத்தனிக்கப் பரசுராமர் கையமர்த்தி அவளைப் பேச விடாமல் தடுத்தார்.

“காங்கேயா, நான் அம்பாவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடித் தருவதாய்ச் சொல்லி இருக்கிறேன். இப்போது இதற்கு இருக்கும் ஒரே வழி நீ அம்பாவைத் திருமணம் செய்து கொள்வதை நான் பார்க்க வேண்டும்; அல்லது நீ என்னுடன் போரிட வேண்டும். இதன் உட்பொருளை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று எண்ணுகிறேன்.” என்றார் பரசுராமர் தீர்மானமாக! அதற்கு காங்கேயர், “ஆசானே, தாங்கள் சொல்லுவதை நான் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுடன் பனிரண்டு முழு வருடங்கள் இருந்திருக்கிறேனே! அவை எல்லாம் வெட்டிப் பொழுது போக்கவா இருந்தேன்! அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன் ஆசானே!” என்று உறுதிபடக் கூறினார் காங்கேயர். “அப்படியா? அப்படி எனில் நீ உன் சபதத்தை உடைக்கப் போவதில்லை?” என்று கேட்டார் பரசுராமர்.  “இல்லை, ஆசாரியரே! ஆனால் என் மனம் கலங்குகிறது. ஆசாரியரின் வேண்டுகோளுக்கு அவருடைய உத்தரவுக்கு இணங்க முடியவில்லையே என்பது என் மனதை அறுக்கிறது. என் மனதைப் புண்ணாக்குகிறது!” என்றார் காங்கேயர்.

“எனில் நீ என்னுடன் போருக்குத் தயாரா?” என்று கேட்ட பரசுராமரின் கண்கள் சிரித்தன. அவற்றில் குறும்பும் உல்லாசமும் கூத்தாடியது. காங்கேயரோ அவரைப் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும் பார்த்தார். “இல்லை, ஆசாரியரே, இல்லை! நான் என்னுடைய சபதத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன். நீங்கள் அம்பாவுக்கு அளித்த சத்தியத்தைக் காப்பாற்றவும் நான் பாடுபடுவேன். அதற்காக உண்மையாக உழைப்பேன். ஏனெனில் என் உயிரை விட இது தான் எனக்கு மிகவும் முக்கியம், விலைமதிப்பில்லாததும் கூட!”  பரசுராமர் யோசனையுடன் தன் தாடியைத் தடவி விட்டுக் கொண்டார். அப்போது த்வைபாயனர் மீண்டும், “நான் இப்போது கொஞ்சம் பேசலாமா ஆசாரியரே!” என்று வணக்கத்துடன் கேட்டார். பரசுராமர் தன் தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்தார். “ஐயா, ஆசாரியரே, நான் மரியாதையுடனும் பக்தியுடனும் ஒரு சில விஷயங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆசாரியரே! சக்கரவர்த்தி பரதனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம், முக்கியமாக ஆரியவர்த்தம் முழுவதும் காங்கேயரின் ஆணைகளுக்கும், அவருடைய நிர்வாகத்துக்கும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய வலிமையும், நம்பிக்கையுமே இந்த ஆரியவர்த்தத்தை முழுதும் காப்பாற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகை அல்ல! அவர் சத்தியப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டுள்ளார். சத்தியமே உருவானவர். சத்தியத்தின் தர்மத்தின் காவலர், அதன் அவதாரம் என்றாலும் மிகையல்ல! அவரால் அவர் செய்த பிரதிக்ஞையை மீற முடியாது. அப்படி மீற வேண்டுமெனில் அது அவர் உயிரைக் கொடுத்தால் தான் முடியும்! அப்போது தான் நடக்கும்!” என்று கைகளைக் கூப்பிய வண்ணம் வணக்கத்துடன் சொன்னார் த்வைபாயனர்.

அப்போது சத்யவதி மீண்டும் தன் கருத்தை வலியுறுத்தினாள். “நான் அம்பாவிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அவளுக்கு மனதுக்குப் பிடித்த வேறு எந்த அரசகுமாரனையோ அல்லது அரசனையோ தெரிவிக்கட்டும். நான் ஏற்கெனவே சொன்னது போல் அப்படி நான் ஒரு மந்திரக்காரியாகவும் ,சூனியக்காரியாகவும் இருந்தால், அப்படி அவள் நினைத்தால் என் உயிரையே விட்டு விடுகிறேன்.” என்றாள். ஆனால் அம்பாவோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை! “நான் காங்கேயரை என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறேன். காங்கேயரை மட்டும்! ஆம் காங்கேயர் மட்டுமே என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்று ஓங்கிக் குரலெடுத்துக் கத்தினாள் அம்பா. “ஆம், அது மட்டுமே எனக்கு வேண்டும், என் விருப்பம் அது தான்! அது மட்டுமே! வேறெதுவும் இல்லை! அதைவிட அதிகமாயும் தேவை இல்லை! குறைவாகவும் தேவை இல்லை!” என்ற வண்ணம் தன் கோபமான பார்வையை சத்யவதி பக்கம் திருப்பி அவளை முறைத்தாள் அம்பா. பின்னர் பரசுராமர் பக்கம் திரும்பி, “ஆசாரியரே, நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? காங்கேயர் தன் சபதத்தை உடைத்து எறிந்து விட்டு என்னை மணக்க மறுக்கிறார்.” என்றாள் குற்றம் சாட்டும் தோரணையில்.

“வேறு வழியே இல்லை! நான் அவனுடன் போரிட்டே ஆகவேண்டும்!” என்ற பரசுராமர் தன் பரந்த முகம் முழுவதும் தெரியும்படி புன்னகைத்தார். இந்தப் புன்னகை அவர் சொன்னதன் உண்மையான தாத்பரியத்தைச் சற்றே மறக்கடித்தது. அப்போது த்வைபாயனர் குறுக்கிட்டு, “காசி தேசத்து இளவரசிக்கு காங்கேயர் உயிர் துறந்தால் அதன் மூலம் ஏற்படப் போகும் பெருங்கொடுமைகளைக் குறித்துச் சரிவரப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.” என்றார். அதற்குள்ளாக அம்பாவின் கோபத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் மீண்டும் சத்யவதி குறுக்கிட்டாள். “நான் இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். அம்பா தனக்குப் பிடித்த வேறோர் மணாளனைத் தேர்ந்தெடுக்கட்டும். நான் சொல்லும் யோசனையை அவள் ஏற்கட்டும். அல்லது அவள் விசித்திர வீரியனையே திருமணம் செய்து கொண்டு இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தினியாக பட்டமகிஷியாக ஆகட்டும்! எனக்கு அதில் சந்தோஷமே! அதன் பின்னர் நான் ஹஸ்தினாபுரத்திலேயே இருக்க மாட்டேன்; காட்டிற்குச் சென்று வானப் பிரஸ்தம் மேற்கொள்வேன்.” என்றாள் முழு மனதுடன்.

அதற்குச் சற்று அலட்சியம் கலந்த குரலில் அம்பா, “நீ என்னவேண்டுமானாலும் செய்து கொள், சூனியக்காரியே! எனக்கு அதைக் குறித்து எந்தக் கவலையும் இல்லை!” என்று கடுங்குரலில் கூறினாள். பரசுராமர் குறுக்கிட்டு, “காங்கேயா, இது என்ன? உன்னுடன் போரிடுவதைத் தவிர எனக்கு வேறு வழி ஏதும் தெரியவில்லை!” என்றார். அதற்கு காங்கேயர் கம்பீரமான குரலில், “உங்களுடன் நான் போர் புரிவதா? ஒருக்காலும் நடவாது ஆசாரியரே, ஒருக்காலும் நடவாது! நான் உங்களைக் காசி தேசத்து அரசகுமாரிக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அழைக்கிறேன் குருவே! இதோ! உங்களுடைய மாபெரும் ஆயுதமான கோடரி உங்கள் அருகிலேயே கிடக்கிறது! அதைக் கையில் எடுங்கள்! என் கழுத்தில் ஒரே போடு போடுங்கள்! தீர்ந்தது வேலை!” என்று கூறிய காங்கேயர் கீழே குனிந்து தன் தலையைப் பரசுராமரின் காலடியில் கிடத்தினார்.

1 comment:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு உணர்ச்சிகரமான காட்சிகள்!