Saturday, August 27, 2016

நியோகத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கின்றன!

காலச் சக்கரம் இறக்கைகள் கட்டிக்கொண்டு பறந்தது. வாடிகாவுக்குத் தன் கணவன் ஷ்ரௌத்த சத்ரா செய்வதற்கு உதவியாகவும், குடும்ப வேலைகளைக் கவனிக்கவுமே நேரம் சரியாக இருந்தது. அதைத் தவிரவும் அவ்வப்போது அவள் ஹஸ்தினாபுரம் சென்று தன் மாமியாரும் ராஜமாதாவும் ஆன சத்யவதியுடன் சில நாட்கள் செலவிட்டும் வந்தாள். வாடிகா இயல்பாகவே தைரியம் நிறைந்தவளாகவும் சமயோசித புத்தி படைத்தவளாகவும் இருந்து வந்தாள். இயற்கையை மிகவும் நேசித்தாள். இவளுடைய நல்ல குணங்களால் கவரப்பட்ட ராஜமாதாவும் இவளை முழுவதும் நம்பித் தன் கஷ்டமான சமயங்களில் வாடிகாவின் உதவியையே நாடினாள். ராஜமாதா  ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற நினைத்ததை நினைத்து நினைத்துத் திகைப்பிலும் பயத்திலும் ஆழ்ந்திருந்த குரு வம்சத்தினர் அவள் இப்போது ஹஸ்தினாபுரத்தில் தங்கியதை நினைத்து மகிழ்ச்சியுற்றனர். முன்னை விட அதிகமாக அவளை நேசித்தனர். அவர்கள் குடும்பத்துப் பெண்மணிகளெல்லாம் மாளிகைக்கு வந்து ராணிமாதாவைச் சந்தித்து ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறும் எண்ணத்தைக் கைவிடச் சொல்லி வேண்டினார்கள். இதை எல்லாம் பார்த்த ராணிமாதாவுக்குத் தன் நாட்டு மக்களும், குரு வம்சத்து ஆண், பெண் அனைவரும் தன் மேல் வைத்திருக்கும் அன்பைக் கண்டு சந்தோஷம் மிகுந்தது. இந்த நாட்டிற்காகத் தான் பாடுபட்டதும், தன் சிறிய தியாகங்களும் வீண் போகவில்லை என்பதில் மகிழ்ந்தாள்.

இந்தச் சமயத்தில் பயங்கரமான தன் சபதங்களால் காங்கேயரை மக்கள் மட்டுமின்றி அனைவருமே பீஷ்மர் என அழைக்கத் தொடங்கி இருந்தனர். சபதங்கள் மட்டும் பயங்கரமாக இல்லாமல் அவற்றைக் கடுமையாகக் கடைப்பிடித்ததாலும் அனைவருக்குமே அவரை பீஷ்மர் என்று அழைப்பது தான் சரி என்று தோன்றியது. பீஷ்மர் என்றாலே பயங்கரமான சபதம் செய்தவர் என்ற பொருளிலேயே வரும். பீஷ்மர் தன் ஆற்றலினால் ஹஸ்தினாபுரத்துக்கு அடங்காத பல சிற்றரசர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விஸ்தரித்தார். நேர்மையாகவும், ஆரிய வம்சக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தும் வாழ்பவர்களைப் பெரிதும் மதித்தார். கிராமங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார். ஆசிரமங்களைப் பாதுகாத்தார். ஸ்ரோத்திரியர்களுக்கு எல்லாவிதமான உதவிகளும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப் பெற்றது. க்ஷத்திரிய தேஜஸுக்கு ஓர் முன்னுதாரணமாக விளங்கினார். எப்போதும் அரச தர்மத்தை மீறாமல் நீதி நெறிகள் தவறாமல் ஹஸ்தினாபுரத்து அரியணையின் செங்கோல் வழுவாமல் பாதுகாத்து வந்தார். அவருடைய செம்மையான வழிகாட்டுதலின் பேரில் குரு வம்சத்துத் தலைவர்கள் பலரும் நேர்மையான வழிக்குத் திரும்பினார்கள். சஹஸ்ரார்ஜுனனின் தொல்லைகள் காரணமாகவும் அவனுடன் நடந்த மாபெரும் போர் காரணமாகவும் மறந்திருந்த சம்பிரதாயப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தனர் ஆரியர்கள் அனைவரும்.

இங்கே தர்மக்ஷேத்திரத்தில் த்வைபாயனரின் தலைமையில் வேதங்களை ஒழுங்கு செய்து வரிசைப் படுத்தி அவற்றை நான்காகத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இது கொஞ்சம் சிரமமான வேலையாகவே இருந்தது. ஆனால் த்வைபாயனர் கடும் முயற்சிகள் எடுத்து அனைத்தையும் ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வந்தார். உச்சரிப்பின் மெல்லிய ஏற்றத் தாழ்வுகளைக் கூடச் சரியாகக் கண்டறிந்து அவற்றை வரிசைப் படுத்தினார். ரிக் வேதத்தைச் சேகரித்துத் தொகுக்கப் பைலரை த்வைபாயனர் நியமித்தார். அதே போல் சாம வேதத்துக்கு ஜைமினியும், வைசம்பாயனர் யஜுர் வேதத்துக்கும் நியமிக்கப்பட்டார். வாடிகாவின் சகோதரன் ஆன சுமாந்து அதர்வ வேதத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டான். ஒவ்வொருவருக்கும் கீழே பல ஸ்ரோத்திரியர்கள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஷ்ரௌத்த சத்ரா நடந்த அந்தப் பனிரண்டு வருடங்களிலும் தர்ம க்ஷேத்திரத்தை நோக்கிப் பல இடங்களிலிருந்தும் ஸ்ரோத்திரியர்களும், பிரமசாரிகளும் கூட்டம் கூட்டமாக வந்தனர். ஆரியவர்த்தத்தில் இருந்த அனைத்து ஆசிரமங்களின் பிரமசாரிகளும் இந்த வேலைகளைப் பார்க்கவும் அவற்றில் பங்கெடுக்கவும் ஆர்வம் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அனைவரும் இதில் பங்கெடுப்பதோடு மட்டுமில்லாமல் ஓர் குறிப்பிட்ட வேதத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதில் த்வைபாயனரின் உதவியுடன் மேலும் புலமை பெற வேண்டும் என்றும் எண்ணினார்கள்.

அந்தக் காலங்களில் எல்லாம் வேதங்களை எழுதி வைத்து யாரும் படிக்கவில்லை! “எழுதாக்கிளவி” என்று சொல்வதைப் போல் மனனமாகவே பாடம் செய்திருந்தனர். மனனம் செய்வதும் அத்தனை எளிதும் இல்லை. உச்சரிப்புச் சரியாக இருக்க வேண்டும். ஏற்ற இறக்கங்களைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சரியானபடி உச்சரித்தால் தான் அதன் பலனும் முழுமையாகக் கிட்டும்.ஏதேனும் சின்ன மாற்றமோ தவறான உச்சரிப்போ, அலட்சியமான வரிசைக்கிரமத்திலோ அமைந்து விட்டால் அதன் தெய்விகத் தன்மையே முழுவதும் போய்விடும். ஒன்றுக்கும் உதவாமல் ஆகி விடும். இந்தத் தவறைச் செய்பவரும் தன் ஸ்ரோத்திரியன் என்னும் தகுதியை முற்றிலும் இழந்து விடுவான்.  ஆகவே இங்கே த்வைபாயனரிடமும், அவரின் சீடர்களிடமும் அனைவரும் தக்க பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் தங்கள் சொந்த ஆசிரமங்களுக்குச் சென்று அங்கே கற்பிக்க ஆரம்பித்தனர். அல்லது சிலர் புதிய ஆசிரமங்களை ஆரம்பித்து மாணாக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்தனர். இதன் மூலம் த்வைபாயனரின் புகழ் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. அவருடைய தர்ம வேத பரிபாலன சாம்ராஜ்யம் மேலும் மேலும் விஸ்தரித்தது.

த்வைபாயனரின் விடாமுயற்சியால் பல ஆசிரமங்களும் தனியாக பிரக்யாதி பெற்றுத் திகழ்ந்தன. கற்பிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு கற்பித்து வந்ததால் பல ஆசிரமங்களின் புகழ் எங்கும் பரவியது. இதன் மூலம் மிகப் பெரிய அளவில் பக்தி இலக்கியங்களும், சடங்குகளைச் செய்யும் மந்திரங்களும், விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றிற்கான மந்திரங்களும் வேதங்களால் காப்பாற்றப்பட்டு வந்தவை இப்போது வெளி உலகுக்கு முற்றிலும் சரியானபடி தெரியவந்து பயன்பாட்டிலும் இருக்க ஆரம்பித்தன. ஷ்ரௌத்த சத்ராவின் முடிவு நாளன்று த்வைபாயனர் அனைத்து ஸ்ரோத்திரியர்களாலும் தக்கபடி கௌரவிக்கப்பட்டார். பல தேசத்து அரசர்களும், தலைவர்களும் வந்து கலந்து கொண்டிருந்த அந்த விழாவில் த்வைபாயனரின் முயற்சிகளும், அவை வெற்றி பெற்ற விதமும் பரவலாகப் பேசப்பட்டது. காங்கேயர் என்னும் பீஷ்மர் மிக முயற்சி எடுத்து இந்த விழாவை முன்னின்று நடத்தி அனைவரையும் கௌரவப்படுத்தினார். பலரும் நிறைந்திருந்த அந்த மாபெரும் சபையில் த்வைபாயனருக்கு “வேத வியாசன்” என்னும் பட்டப்பெயரைச் சூட்டியதோடு அல்லாமல், வேதம் என்றாலே வியாசர் என்னும் க்ருஷ்ண த்வைபாயனர் ஒருவரே என்றும் அங்கிருந்த அனைவருக்கும் மட்டுமில்லாமல் பாரத வர்ஷத்துக்கே அவர் ஆசாரியர் என்றும் போற்றிப் பாராட்டினார்கள்.

இவை எல்லாம் ஒரு பக்கம் செம்மையாக நிகழ்கையில் ஹஸ்தினாபுரத்தையும் அதன் குருவம்சத்தையும் சூழ்ந்திருந்த கெட்ட கிரஹங்களால் வந்த விளைவுகள் மோசமாகவே இருந்தன. ஹஸ்தினாபுரத்தின் நான்கு எல்லைகளையும் அவை சூழ்ந்து கொண்டு விட்டிருப்பதாகத் தோன்றியது. ராணிமாதா சத்யவதிக்கும் காங்கேயர் என்ற பீஷ்மருக்கும் அடுத்தடுத்துப் பல சோதனைகள் தோன்றின. இந்த நாட்களில் எல்லாம் வாடிகாவுக்கு அடிக்கடி ஹஸ்தினாபுரம் சென்று சத்யவதிக்குத் துணையாகவும் ஆலோசனைகள் கூறவும் செல்ல வேண்டி இருந்தது. ராணிமாதாவுடன் சென்று இருப்பதும் மிகவும் எளிதான வேலையாகவும் இல்லை! ஏனெனில் அவளுக்கு ஒன்று மாற்றி ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அதில் இருந்து மீள்வதற்கு வாடிகாவின் உதவி தேவையாகவும் இருந்தது. ஒவ்வொரு பிரச்னையும் ராணி சத்யவதிக்கு பயங்கரமான மன அழுத்தத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அம்பாவால் விளைந்த துன்பங்கள் போதாது என்பது போல் அது முடிவதற்குள்ளாக விசித்திர வீரியனின் மரணம் ஏற்பட்டு அதனால் தன் மருமகள்கள் இருவருக்கும் நியோகத்தின் மூலம் குழந்தை பெற வைக்க வேண்டிய பொறுப்பு அவளைச் சுமந்து விட்டது. இந்த நியோகப் பிரச்னை ஆசாரிய பிரமிஷ்டரால் ஒரு வழியாகத் தீர்த்து வைக்கப்பட்டாலும் அதனால் பிரச்னைகள் எதுவும் ஓயவே இல்லை. தொடரத்தான் செய்தன.

காசி தேசத்து இரண்டாவது இளவரசி அம்பிகா நியோகத்தின் மூலம் ஓர் ஆண் குழந்தையையே பெற்றெடுத்தாள். வலுவான ஆரோக்கியமுள்ள குழந்தையையே அவள் பெற்றெடுத்திருந்தாள்! ஆனால்! அந்தோ! அந்தக் குழந்தையை முதன் முதலில் பார்க்கும்போது மஹாராணி சத்யவதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தக் குழந்தையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு உச்சி முகர்ந்து அணைக்கையில் தான் அவளுக்குக் குழந்தை பிறவிக்குருடு என்பது தெரிய வந்தது. ஹூம்! கடைசியில் இதுவும் வியர்த்தமாகிப் போய்விட்டதா? ஏனெனில் ஆரியர்களின் வழக்கப்படியும், குரு வம்சத்தினரின் வழக்கப்படியும் பிறவிக்குருடாக இருக்கும் ஓர் இளவரசனால் பாரம்பரிய அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய இயலாது. அரியணை அவனைச் சேராது! அவள் மனம் சுக்குச் சுக்காக நொறுங்கியது. இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்துப் பரிதாபகரமான நிலைமையில் இருக்கும் அம்பிகாவை மனம் நோகச் செய்ய அவளுக்கு இஷ்டமில்லை. ஆகவே தன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரை மறைத்த வண்ணம் கீழே குனிந்து குழந்தையைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

‘இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், அம்பிகா?” என்று மஹாராணி கேட்டாள்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அப்படியே வைக்கலாம், அம்மா!” என்றாள் அம்பிகா. “நான் இவனை திருதராஷ்டிரன் என்னும் பெயரால் அழைக்க விரும்புகிறேன். இந்த மாபெரும் தேசத்தை நிலை நிறுத்துபவன் என்னும் பொருளில் வரும் பெயர் அது!” என்றாள் ராணிமாதா. இதைக் கேட்ட அம்பிகா மனம் மகிழ்ந்தாள். “ஆம், தாயே, இவன் இந்த தேசத்தை நிச்சயமாக நிலை நிறுத்திப் பெரும் புகழ் பெறுவான்!” என்றாள். அதன் பின்னர் அவள் தங்கை அம்பாலிகாவுக்கும் ஆண் குழந்தையே பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே ரத்தமில்லாமல் உடல் வெளுத்து சோகையாகவும் மெல்லிய உடலுடனும் வெகுநாட்கள் வாழ மாட்டான் என்பது போலவும் இருந்தான். இவனுக்குப் பாண்டு என்று பெயர் வைத்தனர். வெளுப்பாக இருந்ததாலும் பாண்டு என்ற பெயர் வைக்கப்பட்டது. சத்யவதிக்கு மனம் நிம்மதி இல்லை. ஆகவே அம்பிகாவிடம் கூறி த்வைபாயனரை மீண்டும் ஓர் முறை வரவழைக்கச் சொன்னாள். ஆனால் அம்பிகாவுக்கு இதில் மீண்டும் ஈடுபட முற்றிலும் விருப்பம் இல்லை. ஆகவே தன்னுடைய அந்தரங்கத் தோழியை அழைத்துத் தனக்குப் பதிலாக இந்தச் சடங்கை அவள் செய்து இதில் ஈடுபடட்டும் என்று விரும்பி அவளைத் தயார் செய்தாள். அந்தத் தோழியோ இந்த ஏற்பாட்டில் மெய்ம்மறந்து போனாள். பாலமுனியின் பெயரும் புகழும் எத்தகையது என்பது அவள் அறிந்ததே. ஆகவே அவருடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டும் என்னும் நினைப்பே அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவள் முழு மனதுடனும் விருப்பத்துடனும் இந்த நியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக அவளுக்கும் ஓர் ஆண் குழந்தையே பிறந்தது. பிறக்கும்போதே அலாதியான ஒளியோடும் வலுவான உடலுடனும் திடகாத்திரமாகவும் பிறந்த அந்தக் குழந்தைக்கு விதுரன் என்று பெயர் சூட்டப்பட்டது.

2 comments:

ஸ்ரீராம். said...

.

வல்லிசிம்ஹன் said...

மிக அருமை. பாரதம் வளருகிறது.