Wednesday, August 31, 2016

கோதுலி ஆசிரமம் எரிக்கப்பட்டது!

அரண்மனைப் படகுகளுடனும் தக்க ஆட்களுடனும் சென்ற மந்திரி குனிகருக்கு த்வைபாயனரைக் கண்டு பிடிப்பது கஷ்டமாக இல்லை. எந்த ஆசிரமத்துக்குச் சென்றாலும் அங்குள்ளவர்கள் அவர் வந்து சென்றதையும் அடுத்து இந்த ஆசிரமம் சென்றார் எனவும் தகவல்கள் கொடுத்தனர். அரண்மனைப் படகும் இருபது திறமை வாய்ந்த படகோட்டிகளால் செலுத்தப்பட்டது. வேகமாகச் சென்ற  அது விரைவில் த்வைபாயனரைக் கண்டு பிடித்தும் விட்டது. அவரைக் கண்ட மந்திரி குனிகர் சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பின்னர் அவரிடம் ராஜமாதாவின் செய்தியையும் வாடிகாவின் செய்தியையும் தெரிவித்தார். ராஜமாதாவின் செய்திக்காக மகிழ்ச்சியுறுவதாகக் கூறிய த்வைபாயனர் மேலும் தொடர்ந்து, “நாளை மறுநாள் நாம் கோதுலியை அடைந்து விடுவோம். சில மாதங்கள் முன்னர் நான் சுகனை அங்கே பார்த்தேன். ஆசாரிய கௌதமர் அவனைக் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவன் இன்னமும் அங்கே தான் இருப்பான் என நம்புகிறேன்.” என்றார். அதற்குக் குனிகர்,
“மாட்சிமை பொருந்திய மஹாராணியும், மரியாதைக்குரிய வாடிகா அம்மையாரும் சுகர் விரைவில் தனக்கென இல்லறத்தை அமைத்துக் கொண்டு வாழவேண்டும் என்று விரும்புகின்றனர்.” என்றார்.

“ஆம், எனக்கும் அதே எண்ணம் தான்! நானும் அப்படித் தான் நினைக்கிறேன்!” என்ற த்வைபாயனர் தொடர்ந்து, “பனிரண்டு வருட பிரமசரியமே ஒரு மனிதனுக்குப் போதுமானது! இயற்கைக்கும் உட்பட்டது! ஆனாலும் சுகனுக்கு இதில் வேறு மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் நாம் என்னவென்று ஆராய வேண்டும். சுகன் பொதுவில் நல்ல பையனே! ஆனாலும் அவன் தன் தாயின் கருத்திலிருந்து மாறுபட்டான் எனில் அதற்குத் தக்க காரணம் கட்டாயமாய் இருக்கும்!” என்றார். தொடர்ந்து அரண்மனைப் படகு வேகமாய்ச் செலுத்தப்பட த்வைபாயனரின் படகையோ கயிறு கட்டி இழுக்க வேண்டி இருந்தது, அனைவரும் சாம்பல் பள்ளத்தாக்குக்கு வந்து சேர்ந்தனர். அந்த சபிக்கப்பட்ட பகுதியில் படகோட்டிகள் தங்கள் படகுகளை நிறுத்துவதில்லை. அங்கே சாபம் காரணமாகப் படகுகளுக்கு விபத்தோ அல்லது பேரழிவோ ஏற்படும் என்ற பொதுவானதொரு நம்பிக்கை பரவி இருந்தது. ஆகவே மறுகரைக்குப் படகுகளை ஓட்டிச் சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்து திரும்பி சாம்பல் பிரதேசத்துக்கு அருகே வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து கோதுலிக்கும் வந்து சேர்ந்தனர். கோதுலியில் அனைவரும் வியக்கும் வண்ணம் ஓர் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. பார்க்கவே அது பயங்கரமாக இருந்தது. அந்தக் காட்டில் குடியிருந்த காட்டுவாசிகள் தங்கள் கைகளில் விற்களையும், அம்புகளையும் ஏந்தியவண்ணம் இருந்ததோடு இன்னும் சிலர் கைகளில் ஈட்டிகளும், மூங்கிலில் இருந்து வெட்டப்பட்ட கூரிய கம்புகளும் காட்சி அளித்தன. அனைவரும் அங்கிருந்த ஆசிரமப் பகுதியைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஆசிரமம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருந்தது. முற்றிலும் எரிக்கப்பட்டிருந்தது. ஆசிரமக் குடிசைகளில் இருந்த சில மரங்கள் இன்னமும் எரிந்து கொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த ஒரு மிருகத்தைத் தார்க்கோல் கொண்டும் அம்புகளைக் கொண்டும் அந்தக் காட்டுவாசிகள் குத்திக் கொண்டிருந்தனர். ஆசிரமவாசிகள் அங்கே இருப்பதற்கான அடையாளங்களோ, இருந்ததற்கான அடையாளங்களோ தெரியவே இல்லை!

த்வைபாயனருக்குப் பல வருடங்களாக வாடிக்கையாகப் படகு ஓட்டும் க்ரிவி என்பான் அவரைப் பார்த்து, “பாலமுனி! இது என்னமோ விசித்திரமாக இருக்கிறதே!” என்று ரகசியமாக முணுமுணுத்தான். பின்னர் மீண்டும், “ஏழெட்டு நாட்களுக்கு முன்னர் நான் கோதுலியைக் கடந்து வந்தபோது ஆசிரமங்கள் எல்லாமே நன்றாகவே நடந்து கொண்டிருந்தன. மஹரிஷி கௌதமர் கூட எங்களை அழைத்து உணவு உண்டுவிட்டுச் செல்லும்படி கூறினார். இது ஒரு வேளை இந்தக் காட்டுவாசிகளின் புதிய தலைவன் மோசா என்பவனின் வேலையாக இருக்கலாம். “ என்று மரியாதையுடனும், அதே சமயம் பல வருடப் பழக்கத்தின் உரிமையோடும் கூறினான். “நீ எப்போது பார்த்தாய் இந்தப் புதிய தலைவனை? பழைய தலைவன் ப்ரோப்பா இறந்து விட்டான் என்பது உனக்கு எப்போது தெரியும்? மோசா புதிய தலைவனாகி விட்டான் என்பதையும் நீ அறிவாயா?” என்று கேட்டார் த்வைபாயனர்.

“நாங்கள் அப்போது ஆசிரமத்தில் தங்கி விட்டுப் பின்னர் மீண்டும் கிளம்பியபோது இது பற்றிய தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன.” என்றான் க்ரிவி. “ம்ம்ம்ம், எனக்கும் ஓரளவு தெரியும்! ப்ரோப்பாவுக்கும் அவன் மகனுக்கும் அவ்வளவாக ஒத்துக்கொள்ளவில்லை என்றும் மோசாவுக்கு ஆசிரமங்கள் மேல் அளவு கடந்த வெறுப்பு என்பதையும் நானும் அறிவேன்.  ஆனால் ஆசாரிய கௌதமர் மோசா காட்டுவாசிகளின் தலைவனாக ஆனாலும் தன்னால் அவனை நல்வழிக்குத் திருப்ப முடியும்; அவனை மாற்ற இயலும் என்று நம்பினார். ஹூம்! அவர் மிக மிக நல்லவராக இருந்து விட்டார். அதனால் தான் மோசா போன்றவர்களை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை!” என்றார் த்வைபாயனர் துயரத்துடன்.

“மோசா அடிப்படையில் நல்லவனாக இருக்கக் கூடும். பாலமுனி, பழைய தலைவனைப்பிடிக்காத ஓர் கூட்டத்திடம் அவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் இப்படி!” என்றான் க்ரிவி! “எப்படியோ இருக்கட்டுமே! ஆசிரமங்கள் என்ன செய்தன? மோசா ஏன் ஆசிரமங்களின் மேல் தாக்குதல் நடத்த வேண்டும்? அதுதான் எனக்குப் புரியவில்லை! ஆசிரமங்கள் இங்கே இருந்ததால் என்ன கெடுதல்கள் வந்துவிட்டன! நன்மையே நடந்து வந்திருக்கிறது. பெருமளவு வன்முறைக் குற்றங்கள் குறைந்து காட்டுவாசிப் பெண்கள் இப்போது சந்தோஷமாக இருந்து வந்திருக்கிறார்கள்.” என்றார்.

“ஓ, அது ஒன்றும் இல்லை, பாலமுனி! இந்தக் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு அவர்களின் பெண்களோ, அக்கா, தங்கைகளோ ஆசிரமவாசிகளைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வது பிடிக்கவில்லை. ஆனால் காட்டுவாசிப் பெண்களோ ஷார்மி அம்மாவின் தூண்டுதலாலும் அவர்களின் ஆலோசனைப்படியும் ஆசிரமவாசிகளைத் திருமணம் செய்து கொண்டு கௌரவமான வாழ்க்கை வாழவே நினைக்கின்றனர்.”  “சரிதான், இப்போது எனக்கும் எல்லாம் புரிகிறது!” என்றார் த்வைபாயனர்.

“ஆசிரமங்களை எரிப்பது தான் அவன் தன் முக்கியமான வேலையாகவும், முதல் வேலையாகவும் வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவன் ஆசாரிய கௌதமரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் கொன்றிருக்கலாம். அவன் மிகவும் கொடூரமானவன். கொடுமைக்காரன். நீங்கள் அங்கே உள்ளே செல்வது உசிதமே அல்ல. உங்களை அங்கே செல்லவேண்டாம் என்றே நான் எச்சரிக்கிறேன்.” என்றான் க்ரிவி. அப்போது அங்கே வந்து சேர்ந்த மந்திரி குனிகரும் அனைத்தையும் கேட்டுவிட்டு த்வைபாயனரை அங்கே செல்லவேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் த்வைபாயனர் மறுத்தார்.

“இல்லை, குனிகரே! இல்லை! நாம் ஆசாரியர் கௌதமருக்கும் மற்ற ஆசிரமவாசிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்தே ஆகவேண்டும். ஆசாரிய கௌதமர் தான் என்னைத் தந்தை போலவும் ஷார்மி அம்மை என்னைத் தனது புத்திரன் போலவும் நடத்தினார்கள். எனக்குப் பனிரண்டு வருடம் அனைத்தையும் கற்பித்த குரு ஆசாரிய கௌதமர். ஒருவேளை சுகனும் அங்கே அவர்களுடன் இருந்திருந்தால்?” என்றார் த்வைபாயனர். “ஆம், ஐயா! அப்படி நடந்திருக்கும் சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அந்த மோசா ஆசிரமத்தை முழுதும் எரிக்கும் முன்னர் அனைவரையும் கொன்றிருப்பான்.”

“ஷார்மி அன்னைக்கும் மற்ற ஆசிரமப் பெண்மணிகளுக்கும் என்ன நடந்திருக்கும்?” த்வைபாயனர் கவலையுடன் கேட்டார். “அவர்களை இந்தக் காட்டுவாசிகள் வசிக்குமிடத்துக்குத் தூக்கிச் சென்றிருக்கலாம். அல்லது அந்தப் பெண்களாகத் தப்பி சாம்பல் பிரதேசத்துக்குள் புகுந்திருக்கலாம்!” என்று க்ரிவி சொன்னான்.  த்வைபாயனர் அப்போது குனிகரைப் பார்த்து, “ஒரு வேண்டுகோள், குனிகரே! என்னுடைய மாணாக்கர்களை எல்லாம் உங்கள் படகில் ஏற்றிக்கொள்ளுங்கள். இதோ இந்தக் க்ரிவியும் இந்தக் காட்டுவாசிக் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான். மோசாவுக்கு உறவினனும் கூட! ஆனாலும் அவனும் அவனுடைய ஆட்களும் என்னிடம் பூரணமாக விசுவாசத்துடன் நடந்து கொள்கின்றனர். ஆகவே அவர்கள் என்னை அந்தக் கரைக்கு அழைத்துச் செல்லட்டும்!” என்றார் த்வைபாயனர்.

“நீங்கள் தனியாகச் சென்றே ஆகவேண்டுமா? ஐயா, இரண்டு வில்லாளிகளை மட்டுமாவது உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்!” என்றார் குனிகர் அப்போது. “இல்லை, குனிகரே, வேண்டாம். நான் ஆயுதம் தரித்த வில்லாளிகளுடன் அங்கே வருவதைப் பார்த்தால், அந்தக் காட்டுவாசிகளின் தலைவன் அங்கே சிறைப்பட்டிருக்கும் நம் ஆட்களின் தொண்டையை அறுத்து அவர்களைக் கொன்றாலும் கொல்லலாம்.” என்றார் த்வைபாயனர் கவலையுடன்.

“ஆனால், ஐயா, உங்கள் உயிர்? அது மிகவும் விலை மதிப்பற்றது! நீங்கள் தர்மத்தின் பாதுகாவலர்! தர்ம சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தும் சிற்பி நீங்கள்!” என்றார் குனிகர்.

1 comment:

ஸ்ரீராம். said...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.