Wednesday, August 3, 2016

பீஷ்மருக்கு நெருக்கடி!

தன்னுடைய மாளிகையின் மேன்மாடத்தில் கங்கையைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார் தேவவிரதன் காங்கேயன். அவர் கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பார்வையில் மிகவும் மரியாதையும், பக்தியும், பாசமும் தெரிந்தது. அவர் கங்கையைத் தன் தாயாகவே மதித்தார். தாயாகவே நினைத்தார். அந்தத் தாயை வணங்கி இப்போது நாட்டை எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்னைகளையும் தன்னால் சமாளிக்க வேண்டிய வலிமையைக் கொடுக்கும்படி பிரார்த்தித்தார். சத்யவதி எப்போது வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம். அந்த அழைப்புக்காக அவர் காத்திருந்தார். இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரிடரை அவளால் சமாளிக்க முடியவில்லை. அவளுடைய நடவடிக்கைகள், பழக்க, வழக்கங்கள் அனைத்தும் மாறி விட்டிருந்தன. ஆம், விசித்திர வீரியனின் மரணம் சத்யவதியை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆகவே பீஷ்மர் என்று பெயர் வாங்கிவிட்டிருந்த காங்கேயனின் சபதத்தை உடைப்பதே அவளுக்கு இப்போது மிக முக்கியமாகத் தெரிந்தது. திசை தெரியாமல் அலைந்து  கொண்டிருந்த அவள் வாழ்க்கைப் படகின் நங்கூரமாக அந்தச் சபதத்தை உடைப்பதை அவள் கருதினாள்.

ஆகவே காங்கேயரைத் திரும்பத் திரும்பக் கெஞ்சினாள். சபதத்தை உடைக்குமாறு வேண்டினாள். அவளுடைய இரு பிள்ளைகளும் உயிருடன் இருந்தவரையில் அந்த சபதத்திற்குத் தேவையும் இருந்தது; பொருளும் இருந்தது. இப்போதோ தலைவன் இல்லாம மரக்கலம் போல ஹஸ்தினாபுரத்து சாம்ராஜ்யம் தள்ளாடுகிறது. இதை காங்கேயர் ஒருவரால் மட்டுமே நிலைக்குக் கொண்டு வர முடியும். ஆகவே காங்கேயரை ஹஸ்தினாபுரத்தின் அரியணையை ஏற்றுக் கொள்ளும்படியும் தக்கதொரு பெண்ணைப் பார்த்து மணந்து கொண்டு பரதனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டு வரவும் வேண்டினாள். காங்கேயர் மணந்து கொள்ளுவதன் மூலம் குரு வம்சத்திற்கு வாரிசு கிடைக்கும் என்பதோடு பித்ரு லோகம் போய் விட்டிருக்கும் ஷாந்தனு போன்ற முன்னோர்களுக்கும் அதன் மூலம் நற்கதியும் மோக்ஷமும் கிட்டும். இப்போது இறந்துவிட்டிருக்கும் அவளுடைய இரு மகன்களுக்கும் கூட நற்கதி கிடைக்கும். அவள் இதை எல்லாம் காங்கேயரிடம் எடுத்துச் சொல்லி நன்கு யோசிக்கும்படியும் அவருக்கு 2 நாட்கள் அவகாசம் தருவதாகவும் கூறி இருந்தாள்.

காங்கேயர் தன் தந்தை இறந்தபின்னர் ஹஸ்தினாபுரத்தையும் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தையும் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சோர்வு மனப்பான்மையை நினைத்து நினைத்து வருந்தினார். அவர் தந்தை ஷாந்தனு இந்த பரத கண்டம் முழுமைக்கும் தெரிந்தவராக இருந்ததோடு அல்லாமல் அனைவரும் அவரை மதித்தனர். மரியாதை செய்தனர். அவருடைய சாதனைகள் அனைத்தும் குரு வம்சத்துக்கு மாபெரும் புகழைத் தேடித்தந்தன. அவருடைய தலைமையின் கீழ் ஆர்ய வர்த்தம் முழுவதும் அவர்கள் கட்டுப்பாடின் கீழ் வந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளின் விளைவாக அடுத்தடுத்து ஏற்பட்ட தாக்கங்கள்! அது இந்தக் குரு வம்சத்தினருக்கு மனதிலேயே ஓர் வெறுப்பையும் விரக்தியையும் உண்டாக்கி விட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சியான நிகழ்வு அம்பாவால் ஏற்பட்டது. அது மரண அடியாக விழுந்து விட்டது. காசி தேசத்து அரசனின் மூத்த மகளான அவளால் ஏற்பட்ட அந்தக் கொடுமையான நிகழ்வுகளை இப்போது நினைத்துப் பார்த்தாலும் காங்கேயரின் உடலையும் உள்ளத்தையும் உலுக்கியது. எவ்வளவு கொடுமையான கடூரமான எண்ணங்கள் உள்ள பெண்!

இதை எல்லாம் சமாளிப்பதற்குள்ளாக அதை விட மோசமாக விசித்திரவீரியனின் மரணம் பெரிய துக்கமாக சம்பவித்து விட்டது. இதை எவரும் எதிர்பார்க்கவே இல்லை! அந்த மரணத்தின் மூலம் மேலும் மேலும் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை எப்படிச் சரி செய்வது என்றே புரியவில்லை. மிகவும் கஷ்டமான பிரச்னைகளாக உள்ளன! அவனுடைய இளம் மனைவியர் இருவரும் இப்போது விதவைகளாக இருக்கின்றனர். அதோடு மட்டுமா? இந்த மாபெரும் பாரம்பரியத்தைக் கொண்ட அரசகுலத்தில் இப்போது வாரிசுகளே இல்லை! ஆகவே அவர் மேல் அனைவரும் தங்கள் விருப்பங்களைத் திணிக்க ஆரம்பித்துவிட்டனர். அவருடைய சபதத்தை அவரே உடைத்துவிட்டுத் திருமணம் செய்து கொண்டாக வேண்டுமாம். வாரிசுகளைப் பெற்று அரசகுலத்துக்கு அளிக்க வேண்டுமாம். அவர் ஹஸ்தினாபுரத்தின் அரியணையிலும் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாம். இவை எல்லாம் மற்றவர்கள் மட்டுமல்லாமல் ராஜமாதாவான சத்யவதிக்கும் இவைதான் இப்போது விருப்பமாக இருந்து வருகிறது.

ராஜமாதா சத்யவதி சாமானிய மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தாள். அவளை மக்கள் அளவுக்கு மீறி நேசித்தனர். அவள் மனம் எப்போதும் ஏழைகள் பாலும் துன்பப்படுபவர்கள் பாலும் இரங்கியது. அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்தாள். அவளுடைய பெருந்தன்மையான போக்காலும், உண்மையான பிரியத்தினாலும் குரு வம்சத்தின் தலைவர்களில் பலரும் மஹாராணியை ஆதரித்தனர். அவளை மிகவும் மரியாதை செய்து வந்தனர். அவளுடைய புத்திசாலித்தனத்தை நினைத்து மகிழ்ந்து பேசிக் கொண்டனர். ஆகவே இப்படி இருக்கையில் வெளியிலிருந்து உள்ள கிளை வம்சத்தினரில் எவராவது இந்த அரியணைக்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வந்து அமர்ந்து விட்டால்? மஹாராணியின் நிலைமையும் மோசமாகிவிடும். அவளுக்கும் சரி, அவளுடைய இரு இளம் மருமகள்களான காசி தேசத்து இளவரசிகளுக்கும் சரி உரிய அரச மரியாதையும், அரண்மனை வாசமும், உரிமைகளும் கிடைப்பது கடினமாகி விடும். அவர்கள் அனைவரும் அரியணையில் இருக்கும் அரசனின் விருப்பத்துக்கு ஏற்றவாறு எங்காவது ஒரு மூலையில் இருந்து கொள்ள வேண்டியதாகிவிடும். அப்படி நடக்கக் கூடாது!

இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்த காங்கேயரின் நினைவலைகள் அப்போது அங்கே வந்த ஒரு மந்திரி கௌண்டின்யர் என்பவரல் தடைப்பட்டது. அவர் காங்கேயரிடம், “ராஜமாதா இளவரசர் காங்கேயரை வரவேற்கச் சித்தமாகக் காத்திருக்கிறார்கள்!” என்றார். “ம்ம்ம்ம்ம், ஆனால் நான் அவர்களைச் சந்திக்கச் சித்தமாக இருக்கிறேனா? தெரியவில்லையே!” என்று தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டார் இளவரசர் காங்கேயர். ராஜமாதாவைச் சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் அவருக்குள்ளாக ஓர் உத்வேகம், ஊக்கம் ஏற்படும். ஆனால் இப்போதோ! அவருக்குத் தான் கொலைக்களத்துக்குச் செல்வது போல் உணர்ந்தார். மெல்ல மெல்ல நடந்தார் காங்கேயர். ராஜமாதா எப்போதும் போல் அரண்மனையின் சின்னஞ்சிறிய கோயிலில் அந்த விக்ரஹத்துக்கு அருகே அமர்ந்திருந்தாள். இது அவள் எப்போது நினைத்தாலும் வழிபட வசதியாக அவளுக்கென கட்டிக் கொடுக்கப்பட்டது. அவள் முகம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தது. கண்கள் எப்போது வேண்டுமானாலும் கண்ணீரைக் கொட்டி விடும்போல் நிரம்பி வழிந்தன. அவள் பின்னால் வாடிகா அமர்ந்திருக்க சற்றுத் தொலைவில் தாவி நின்று கொண்டிருந்தாள். கதவுக்கருகே நின்று கொண்டு வேறு எவரும் உள்ளே நுழைந்துவிடாதவாறு காவல் காத்துக் கொண்டிருந்தாள் தாவி.

இவர்களைத் தவிர ராஜமாதாவின் இன்னொரு புறத்தில் த்வைபாயனரும் அமர்ந்திருந்தார். அவரை இப்போது பராசரையர் என்ற பெயரிலும் அழைத்து வந்தனர். அவர் அருகே அவருடைய சீடனும், வாடிகாவின் சகோதரனும் ஆன சுமாந்து அமர்ந்திருந்தான். இன்னொரு பக்கம் குரு வம்சத்தின் வயது முதிர்ந்த தலைவர்களான மஹாபஹுவும், சுகேதுவும் அமர்ந்திருக்க அவர்கள் அருகே மந்திரி குனிகரும் காணப்பட்டார். மேலும் ராஜமாதாவின் எதிரே போடப்பட்டிருந்த ஆசனங்களில் ராஜகுருவான ஆசாரிய விபூதியும் மற்ற குரு வம்சத் தலைவர்களும் அமர்ந்திருந்தனர். அவர் அருகே அவருடைய வயது முதிர்ந்த தந்தை பிரமிஷ்டரும், விபூதியின் துணைவரான ஆசாரிய தேவயானரும் கூட அமர்ந்திருந்தனர். காங்கேயர் தன் அன்னையை வணங்கினார். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சத்யவதி தன் வலக்கையை உயர்த்தி காங்கேயரை ஆசீர்வதித்தாள். காங்கேயர் மேலும் அங்கிருந்த முனிவர் த்வைபாயனர், ஆசாரிய விபூதி, அவருடைய தந்தை, மற்ற ஆசாரியர்கள், குரு வம்சத்தலைவர்கள் அனைவரையும் வணங்கினார். பின்னர் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார். அனைவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர். அனைவர் முகமும் உள்ளார்ந்த பெருமிதத்தில் இருந்தது. ஆனால் ஆசாரிய விபூதி பேச ஆரம்பிக்கையில் அவர் குரலில் சோகமே கப்பி இருந்தது.

“பரத குலத்து வாரிசான இளவரசே, இங்கே ஏற்கெனவே இந்த விஷயம்பல முறை விவாதிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு முனையிலும் இந்த விஷயம் பல முறை ஒரு நாளும் ஒரு பகலுமாகக் கூடி இருந்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துக் கோணங்களிலும் இதைக் குறித்து ஆராய்ந்தோம். எங்களுடைய ஒரே முடிவு நீங்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றே. அதில் எங்கள் அனைவருக்கும் மிகவும் சம்மதம். இந்த பரத குலத்துக்கு ஓர் ஆண் வாரிசு வேண்டும். ஆண் வாரிசு இல்லாமல் உங்கள் தந்தை, மற்றும் உங்கள் குலத்து முன்னோர்கள், அவ்வளவு ஏன்? நீங்களும் ஒரு நாளில் உங்கள் முன்னோர்களான பித்ருலோகம் அடைவீர்கள். அப்போது உங்களுக்கும் இது தேவை. உங்கள் அனைவரையும் பித்ருலோகத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க வைக்கத் தேவையான சடங்குகளை ஓர் ஆண் வாரிசாலேயே செய்ய முடியும். ஆகவே ஓர் ஆண் வாரிசு இல்லை எனில் அது அவமானத்துக்கு உரியது! நம்முடைய புராதனமான குரு வம்சமே மெல்ல மெல்ல தாழ்வு நிலைக்கு வந்துவிடும். நீங்களும் உங்கள் தந்தையும் மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டிய க்ஷத்திரிய தர்மமும், தர்ம சாம்ராஜ்யமும் சுக்கு நூறாகி விடும். அனைத்தும் வீணாகி விடும். மாட்சிமை பொருந்திய ராஜமாதாவும் இதை ஒப்புக் கொள்கிறார்.”

ராஜமாதா தலையை அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். த்வைபாயனரைப் பார்த்து காங்கேயர், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள், பாலமுனி?” என்று கேட்டார். “நான் எல்லாவற்றையும் மாட்சிமை பொருந்திய ராஜமாதாவின் கைகளில் விட்டுவிட்டேன்.” என்றார் த்வைபாயனர். அப்போது மூத்த தலைவரான மஹாபஹூ பேசத் தொடங்கினார்.

“காங்கேயா, நீ மட்டும் மணந்து கொள்ளவில்லை என்றாலோ அல்லது அரியணை ஏற மறுத்தாலோ இந்தக் குரு வம்சமே ஓர் மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும். இது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம். இந்தச் சூழ்நிலையின் தாக்கங்களையும் எதிர்விளைவுகளையும் நீ நன்றாகப் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். நீ இந்த அரியணையில் அமரச் சம்மதிக்கவில்லை எனில், உனக்கு அடுத்து நான் தான் அந்த நிலையில் இருக்கிறேன். ஆகவே நான் அரியணையில் அமர்ந்து விடுவேன். ஆனால் என் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. குரு வம்சத்து முன்னேற்றங்களை உத்தேசித்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன். ஆனால் என்னைப் போல் என் மகன்கள் சும்மா இருக்க மாட்டார்கள். என் மூத்த மகன் எப்போது வேண்டுமானாலும் இந்த அரியணையில் அமரக் காத்திருக்கிறான். அதோடு அது அவன் உரிமையும் கூட. அவனுக்கு இந்த அரியணையில் அமர முழு உரிமையும் உள்ளது. ஆனால் அவனால் அனைத்துக் குரு வம்சத்துத் தலைவர்களையும் ஒரு சேரக் கட்டிக் காக்க இயலாது. ஆகவே இதை நான் தியாகம் செய்வது இயற்கையாக இல்லை தான்! ஆனாலும் வேறு வழியில்லை! ஹஸ்தினாபுரத்தை நான் அளவுக்கதிகமாக நேசிக்கிறேன். அது நொறுங்கி விடக் கூடாது என்றும் எப்போதும் இதே மாதிரியான முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.”

1 comment:

ஸ்ரீராம். said...

மஹாபஹூ என்கிற பெயரை முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்.