Tuesday, August 2, 2016

பரசுராமரின் முடிவும் விசித்திரவீரியனின் மரணமும்!

காங்கேயர் சொன்னதைக் கேட்ட பரசுராமர் கண்கள் பளிச்சிட்டன. பெருங்குரலெடுத்துச் சிரித்தார். மஹா அதர்வணர் பக்கம் திரும்பியவர், “மஹா அதர்வரே! எல்லோரும் இறக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அம்பா நெருப்பில் விழுந்து உயிர் விடத் துடிக்கிறாள். சத்யவதியும் இறக்கவே விரும்புகிறாள். இளவரசன் காங்கேயன் இறக்க விரும்புகிறான். ஒருவேளை தர்மம் அழிந்து விடும் அதற்குத் தோல்வி ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் த்வைபாயனன் கூட இறக்கவே விரும்புவான். அப்போது உங்கள் அருமைக்குமாரி ஜாபாலி புத்திரி தன் கணவனுக்கு முன்னரே தான் இறக்கவேண்டும் என்று இறந்துவிடுவாள்.” இதைச் சொன்ன பரசுராமர் தான் ஓர் மாபெரும் வீரன் என்பதைக் காட்டும் கம்பீரக் குரலில் பேசியவர் அந்தக் குரலிலேயே மீண்டும் பெரும் சிரிப்புச் சிரித்தார். அவர் கண்களில் மிதமிஞ்சிய மகிழ்ச்சி தெரிந்தது. “மஹா அதர்வரே, நீங்களும் நானும் மட்டுமே இவ்வுலகில் இன்னமும் இருக்க விரும்புகிறோம். ஏனெனில் நாம் இருவரும் வாழ்க்கையின் அஸ்தமனத்தில் இருக்கிறோம் அல்லவா!” என்று சொன்னார். மீண்டும் அவர் சிரித்த சிரிப்பில் அவர் முகமே சிவந்துவிட்டது!

“ஆஹா! இங்கே அனைவருமே மரணத்தின் கடவுளான யமதர்மராஜனிடம் காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஜாபாலி? நீர் ஏன் அப்படி இல்லை?” என்று கேட்டவண்ணம் மஹா அதர்வர் பக்கம் திரும்பினார். அவரிடம் ஏதோ மாற்றத்தைக் கண்டவராகப் பேச்சை நிறுத்தினார். அதற்குள்ளாக ஜாபாலி முனிவர் ஆழ்நிலை தியானத்துக்குச் சென்று விட்டிருந்தார். அங்கிருந்த அனைவரும் மௌனமாக இந்த மாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சில நிமிடங்கள் கழிந்தன. பின்னர் மஹா அதர்வரின் குரல் எங்கோ பாதாளத்திலிருந்து கேட்பது போல் தொனிக்க அவர் பேசினார். “மரணத்தின் கடவுள் யமதர்ம ராஜன் நமக்கு மிகவும் அருமையான ஒருவரின் உயிரை எடுத்துவிட்டான். இங்கிருக்கும் அனைவருக்கும் அவர் மிக நெருங்கியவர். எவரோ இந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு நம்மைச் சந்திக்க வருகின்றனர். அவர் இப்போது இந்த மலையின் மேல் ஏறிக் கொண்டிருக்கிறார்.” என்றார். சத்யவதியின் முகம் பயத்தில் வெளுத்தது. அவள் இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்து வந்த அந்த மரண அடி கடைசியில் அவள் மேல் விழுந்து விட்டது. அவள் குரலிலேயே கண்ணீர் நிரம்பி இருந்தது. அந்தக் குரலோடு அவள், “மஹா அதர்வரே! மரணத்தின் கடவுள் யாரை எடுத்து விட்டார் என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?”

திடீரென மஹா அதர்வர் தன்னுடைய தியானத்திலிருந்து எழுந்து விட்டார். சுற்றும் முற்றும் பார்த்தார். அனைவரும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அவர் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர். “எவரோ மலை மேல் ஏறி வந்து கொண்டிருக்கின்றனர். வருபவர் உங்களுக்குச் செய்தியைச் சொல்வார். சுமாந்து, நீ போய் அவரை அழைத்து வா!” என்றார். அங்கிருந்த அனைவரும் பயத்திலும் கலக்கத்திலும் மௌனத்தைக் கடைப்பிடித்தனர். சுமாந்து வெளியே சென்று வந்திருப்பவரை அழைத்து வந்தார். வந்திருப்பவர் இடைவிடாத பயணம் செய்து வந்திருப்பது தெரிந்தது. அவர் உடல் முழுவதும் புழுதி அப்பிக் கிடந்தது. அவர் வந்திருக்கும் அவசரத்தையும் வேகத்தையும் பார்த்தால் அனைவரின் கலக்கமும் அதிகம் ஆயிற்று. வந்தவருக்கும் தான் வந்த அவசரத்தில் அங்கு இருந்த எவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவிக்கக் கூட மறந்து விட்டார். பரசுராமரையும் மஹா அதர்வரையும் கூட வணங்கவில்லை.

காங்கேயர் வந்திருப்பது எவரென்று புரிந்து கொண்டு விட்டார். குரு வம்சத்து முக்கியத் தலைவர்கள் இருவரில் ஒருவரான சுகேது தான் வந்திருப்பது. ஆகவே அவர் அவரிடம், “சுகேது! என்ன விஷயம்?” என்று கேட்டார். சத்யவதி சுகேதுவின் பக்கம் திரும்பி, “சுகேது, என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். அவளால் பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டு கண்ணீர் பெருகியது. சுகேதுவும் பேசக் கடும் முயற்சிகள் செய்தார். ஆனால் அவருக்குப் பேசவே முடியவில்லை! “இளவரசே, இளவரசே! மாட்சிமை பொருந்திய மன்னர்……… சக்கரவர்த்தி…..” என்று மட்டும் சொன்னார். மேலே பேச அவரால் இயலவில்லை. சத்யவதிக்கு அவள் இதயம் எழும்பித் தொண்டையை அடைத்துக் கொண்டாற்போல் ஆகி விட்டது. தன் ஒரு கையால் தொண்டையைப் பிடித்துக் கொண்டாள். அதற்குள்ளாக சுகேது தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டார். “சக்கரவர்த்தி…….” என்று ஆரம்பித்தவர் காங்கேயரைப் பார்த்துத் திரும்பினார். “சக்கரவர்த்தி மேல் மாடத்திலிருந்து கீழே விழுந்து மிகவும் மோசமாக அடிபட்டுக் கொண்டுவிட்டார். அவர் நிலையைப் பார்த்த வணக்கத்துக்கு உரிய நம் ராஜகுரு மஹாராணி சத்யவதியையும் இளவரசர் காங்கேயரையும் உடனே ஹஸ்தினாபுரம் திரும்பும்படி சொல்லச் சொன்னார்.”

“எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்! இப்படி ஏதேனும் நடந்துவிடுமோ என எனக்குத் தெரியும்!” என்று கூவிய சத்யவதி உடனே மயக்கம் அடைந்தாள். வாடிகா அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள். சுமாந்து நீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தார். ஒருவழியாக சத்யவதி கண்களைத் திறந்தாலும் இன்னமும் அவள் மயக்கத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீளவில்லை. த்வைபாயனரும் வாடிகாவும் அவளைக் கீழிருந்து மேலே தூக்கி அமர்த்தி ஆசுவாசப் படுத்தினார்கள். த்வைபாயனர் அங்கிருந்து வெளியேற பரசுராமரின் அனுமதியை வேண்டினார்.

“அனைவரும் இங்கிருந்து செல்லலாம். அனுமதிக்கிறேன். ஆனால் எல்லோரும் இதைக் கேளுங்கள்!” என்றார் பரசுராமர். அவர் குரலில் இயல்பாக இருந்த அதிகாரத் தொனி அப்போது அதிகரித்துக் காணப்பட்டது. அனைவரும் அவரையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்கள். “இங்கிருக்கும் நீங்கள் எல்லாம் முட்டாள்கள். சர்வ முட்டாள்கள்! மரணத்தை வலுவில் அழைக்கும் முட்டாள்கள்! நீங்கள் தேவையில்லாமல் மரணத்தின் கடவுளை அழைக்க அவனோ இங்கே வந்து அவனுக்குத் தேவையானவரை மட்டும் அழைத்துச் சென்றுவிட்டான். காங்கேயன் என்ன பாவம் செய்திருந்தாலும் அதற்கான பரிகாரம் ஒரு மாபெரும் தண்டனையாக மரணக்கடவுள் விதித்து விட்டான்.” பரசுராமர் எழுந்து கொண்டு தன் கோடரியைத் தூக்கித் தோளில் சார்த்திக் கொண்டு சத்யவதியை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தார். விம்மி விம்மி அழுது கொண்டிருந்த சத்யவதியோ, “ஆசாரியரே, என் வாழ்க்கையின் ஜோதி அணைந்துவிட்டது! என் எதிர்காலம் இருண்டு விட்டது!” என்று சொல்லிக் கொண்டே அழுதாள்.

அப்போது பரசுராமர், “சத்யவதி, உன் இரு மகன்களின் மரணம் உன்னளவில் துயரமானதே! தாங்க முடியாத ஒன்று! ஆனால் உனக்கென விதிக்கப்பட்ட வேலைகளுக்கு இந்த மரணங்களால் இடையூறு நேரக் கூடாது. கடவுளரால் ஓர் முக்கியப் பணியை நிறைவேற்றவென நீ நியமிக்கப்பட்டிருக்கிறாய். உன்னுடைய வாழ்க்கை வறண்டு விட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக நிரம்ப வேண்டும். இதோ பார் சத்யவதி! பரதச் சக்கரவர்த்தியின் இந்த மாபெரும் குரு வம்சம் அடியோடு அழிந்து போகாமல் பாதுகாப்பது உன் கைகளில் தான் இருக்கிறது. அது முடியாமல் பார்த்துக் கொள். உங்கள் அனைவரின் உயிரையும் விருப்பத்தையும் விட தர்மத்தின் வெற்றி தான் இங்கே முக்கியம்! தர்மம் அழியாமல் பார்த்துக் கொள்!” என்றார்.

அம்பா அப்போது பலமுறை ஆசாரியரின் வார்த்தைகளில் குறுக்கிட நினைத்தாள். முயலவும் செய்தாள். ஆனால் ஆசாரியர் அவளை மௌனமாக இருக்கும்படி சைகை காட்டி அடக்கி விட்டார். “அம்பா, காங்கேயன் தன் சபதத்தை உடைத்து உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எனில் நீ சத்யவதி சொல்லி இருக்கிறாற்போல் குரு வம்சத்து இளவரசியாக இருந்து வேறொருவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள். இப்போது அவளுக்குத் தேவை அவளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும் ஒரு பெண் தான்! ஒரு பெண்ணால் தான் அவள் இப்போதிருக்கும் நிலையைப் புரிந்து கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்! நீ சத்யவதியின் பெண்ணாக ஆகிவிடு! இந்தக் கடுமையான நேரத்தில் அவளுக்கு இது தான் ஆறுதல் அளிக்கும்.”

“இல்லை, இல்லை, ஒருக்காலும் முடியாது! என்னால் இயலாது! இதோ இந்த மனிதனை யாராவது கொல்லவேண்டும். அதை நான் பார்க்க வேண்டும்! அது தான் நான் விரும்புவது!” என்றாள் அம்பா.  அப்போது பரசுராமர் அவளைக் கடுமையாகப் பார்த்தார். “அப்படி எனில், அம்பா, நீ நெருப்பில் குதி! அதுதான் உனக்கு நல்லது! நீ அடுத்த பிறவியில் காங்கேயனைக் கொல்லலாம். நீயே கொல்லலாம். அக்னிக் கடவுள் ஒருவேளை உன்னை அப்படிச் செய்ய அனுமதித்தாலும் அனுமதிக்கலாம்!” என்றார். பின்னர் பரசுராமர் த்வைபாயனர் பக்கம் திரும்பி, “பராசரரின் புத்திரனே! உனக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். எந்தவேலைகளை முடிக்க எண்ணி இருக்கிறாயோ அவற்றை எல்லாம் வெற்றிகரமாக முடிப்பாய்!” என்று ஆசிகளை வழங்கினார். பின்னர் மஹா அதர்வரின் தோள்களில் தன் கைகளை வைத்த வண்ணம் அங்கிருந்து வெளியேறினார்.

1 comment:

ஸ்ரீராம். said...

அப்போது பரசுராமருக்கும், காங்கேயருக்கும் போர் நடந்ததாக மற்ற இடங்களில் படித்தது?