Tuesday, August 16, 2016

பீஷ்மரின் மறுப்பு!

மாட்சிமை பொருந்திய குருவே, இப்போதிருக்கும் இந்த துரதிருஷ்டமான சூழ்நிலை குறித்தும், அதைச் சரி செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் ராஜமாதா சத்யவதி தேவி என்னுடன் பல முறை ஆலோசித்து விட்டார். அவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தான் வேண்டுகிறார். அவருடைய இந்த வேண்டுகோளை நான் பல கோணங்களிலும் ஆராய்ந்து யோசித்துப் பார்த்துவிட்டேன்.” என்றார் காங்கேயர்.
“பின்னர் உங்கள் முடிவுதான் என்ன? இளவரசே!” என்று ஆசாரியர் கேட்க, மஹாராணி சத்யவதியோ, தன் முகத்தின் உணர்வுகளை மறைக்கும் விதமாகக் கீழே முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். மெல்லிய குரலில், “அப்போது என் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுவிட்டதா?” என்று வினவினாள். அடிபட்ட மிருகத்தைப் போன்றதொரு சோகமான முகபாவமும் அவள் தொனியும் பார்ப்போர் அனைவரையும் கலங்கச் செய்தது. “தாயே, என்னை மன்னியுங்கள். உங்களை நான் அவமதித்துவிட்டதாக நினைக்க வேண்டாம். என் நிலைமையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். என் வாக்குறுதி, என் சபதம் அது என்னாவது? என்னுடைய அவலமான நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!” என்று தயவாகக் கேட்டுக் கொண்டார் காங்கேயர். மேலும் முறையிடுகின்ற தொனியில் பேசினார். “தாயே, என் சபதம் என்ன ஆவது? அதை நான் உடைக்க முடியுமா? எப்படி உடைப்பேன்? அந்த சபதத்தை நான் எடுக்கும்போது எத்தகையதொரு மனோநிலையில் இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதை நிறைவேற்றி வைப்பதற்காக நான் பட்ட சிரமங்களை, மன உளைச்சல்களை, உடல் வேதனைகளை அறிவீர்களா? பலத்த போராட்டங்களைச் சந்தித்தேன். இரவும், பகலும் அதை நிறைவேற்றி வைக்க வேண்டியே பாடுபட்டு வந்தேன். பற்பல சோதனைகளைச் சந்தித்து அவற்றில் வெற்றி கண்டு மிக்க பிரயாசையுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். கடைசியில் நான் என் உணர்வுகளை வெற்றி கொண்டு இன்று பெண்களையே என் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக அகற்றி இருக்கிறேன். இவ்வளவு பாடுபட்டுப் பெற்ற வெற்றியை இன்று நான் நாசமாக்கலாமா? எப்படி நான் ஒரு பெண்ணை மணந்து வாழ முடியும்? எப்படி என் சபதத்தை மீறுவதிலிருந்து என்னை நானே சமரசம் செய்து கொள்ள முடியும்?”

அப்போது மஹாபஹூ நடுவில் பேச முயற்சித்தார். ஆனால் காங்கேயர் தன் சைகையினால் அவரைத் தடுத்தார். “சற்றுப் பொறுங்கள், மாமா! சிறிது நேரம் எனக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவும் அவன் செயலோ? கடவுளருக்கு நான் என்னுடைய பிரதிக்ஞையை உடைத்து எறியவேண்டும் என்னும் ஆசையோ? அல்லது அவர்கள் எனக்குக் கொடுக்கும் சோதனையோ இது? தெரியவில்லை! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் மட்டும் என் சபதத்தை உடைத்துத் திருமணம் செய்து கொண்டு வாரிசைப் பெற்று எடுக்காவில்லை எனில் இந்தக் குருவம்சத்தினரின் கண்கள் முன்னர் நான் ஓர் ஏமாற்றுக்காரனாகவும், பிடிவாதம் பிடிக்கும் முட்டாளாகவும், ஓர் பாபியாகவும் காட்சி அளிப்பேன். அதுவும் எனக்குப் புரிகிறது!”

“ஆம், இளவரசே, நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். உங்களுக்கே நிலைமை புரிந்திருக்கும்போது ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறீர்கள்?” ஆசாரிய விபூதி மீண்டும் கேட்டார். “எங்கள் அனைவரின் ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றும் கூறினார். காங்கேயர் அவரைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம் அடக்கத்துடன் பேசினார்.” உங்கள் அனைவரையும் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள ஸ்ரோத்திரியர்கள் மற்றும் மரியாதைக்கு உரிய உறவினர்கள், மதிப்புக்குரிய ராஜமாதா, நான் உங்களை எவ்வளவு மதிக்கிறேன், மதித்துப் போற்றுகிறேன் என்பதைச் சொல்லவே வேண்டாம். இவ்வுலகில் உள்ள அனைவரிலும் என் மரியாதைக்கு உரியவர் நீங்கள்! தயவு செய்து என் முன்னிருக்கும் தேர்வுகளைக் கூர்ந்து கவனியுங்கள். நான் சத்யப்பிரதிக்ஞனாக அங்கீகாரம் பெற்றிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதனாலேயே மக்களுக்கு என் மேல் மதிப்பும், மரியாதையும் அதிகம் என்பதையும் அறிவீர்கள். என்னை தர்மத்தின் அவதாரமாகவே மக்கள் கருதுகின்றனர். கடவுளுக்கும் மேல் உயர்ந்தவனாக என்னை மதித்துப் போற்றுகின்றனர். ஏனெனில் நான் சத்யப் பிரதிக்ஞையை உடைப்பதை விட இறப்பதே மேல் என நினைப்பவன். அதையும் மக்கள் அறிந்திருக்கின்றனர்.”

“கடந்த இருநாட்களாக நான் பட்ட மனவேதனையை யார் அறிவார்? என்னைத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை வாழும்படி நீங்கள் கூறியவற்றை ஏற்றுக்கொள்ள நான் பட்ட பாடு! யார் அறிவார்? உங்கள் வேண்டுகோளை ஏற்க என் மனம் சிறிதும் ஒப்பவில்லை. என் மனதை மீறி என்னால் என்ன செய்யமுடியும்? உங்கள் வேண்டுகோளை ஏற்கவேண்டும் என்ற என் முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டன. என்னால் முடியவில்லை. அதற்காக நான் பட்ட பாட்டை யார் அறிவார்? என் மனம் நடத்திய போராட்டங்கள்! நான் நரகத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதிலிருந்து மீள்வேனா என்னும் அச்சம் எனக்குள் வந்துவிட்டது!” சற்றே நிறுத்திவிட்டு உணர்ச்சி வசப்பட்டதால் வியர்த்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்ட காங்கேயர் மேலும் பேசினார். “தயவு செய்து என் சபதத்தை உடைக்கும்படி என்னிடம் சொல்லாதீர்கள்! அது என்னால் இயலாத ஒன்று! நான் அதன் பின்னர் நடைப்பிணமாகத் தான் வாழ வேண்டும். அது இறந்து போவதைவிடக் கொடூரமானது. அது என்னுள்ளே இருக்கும் என் ஆன்மாவையே கொன்று விடும் சக்தி படைத்தது. என்னுடைய சுயதர்மம் அழிந்து விடும். தர்மத்தை அழித்துவிட்டு நான் உயிர் வாழ்வது ஆன்மா இறந்த பின்னரும் உயிர்வாழ்வதை விடக் கொடுமையானது. என் ஆன்மாவே அழிந்து விடும். இதற்கு நான் ஒருக்காலும் ஒப்ப மாட்டேன்.”

காங்கேயரின் முகம் அவர் உள்ளத்து உணர்சிகளை அப்படியே காட்டியது. அவர் முகம் சிவந்து உணர்ச்சிகரமாகக் காட்சி அளித்தது. அனைவருக்கும் அவரின் உள்ளம் புரிந்தது. அவரின் மனப்போராட்டங்களை அனைவரும் உணர்ந்து கொண்டனர். எத்தகையதொரு கடினமான சூழ்நிலையில் அவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். எல்லோருக்கும் மேல் அதிகமாக இதைப் புரிந்து கொண்டது ராஜமாதா சத்யவதி தான். தன்னுடைய உலர்ந்த சுருங்கிய கரங்களை உயர்த்தியவண்ணம் கரகரத்த குரலில் பேச ஆரம்பித்தார் ஆசாரிய விபூதியின் வயது முதிர்ந்த தந்தை பிரமிஷ்டர். “குரு வம்சத்தின் சிறந்தவனே! உனக்கு என் ஆசிகள். உன் மனப்போராட்டங்களை நாங்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். உன்னுடைய சபதத்தை உடைக்க வேண்டுமெனில் நீ அனுபவிக்கும் மனப் போராட்டங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதன் சிரமங்களையும் உணர்ந்து கொள்கிறோம். ஆனால் மகனே, இதற்கு வேறு ஓர் வழி இருக்கிறது. அதை உன் தாய் ராஜமாதா சத்யவதியும் ஏற்றுக் கொள்வாள் என்றே நம்புகிறேன். நீயும் உன் சபதத்தை உடைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதே சமயம் சக்கரவர்த்தி ஷாந்தனுவின் வம்சமும் பட்டுப் போகாமல் துளிர்த்துத் தழைக்கும்.”

“என்ன வழி  இருக்கிறது? எனக்கு எதுவும் தெரியவில்லையே!” என்றார் காங்கேயர்.

தன் நடுங்கும் கரங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துப் பிடித்துக் கொண்ட பிரமிஷ்டர் மெதுவாகப் பேச ஆரம்பித்தார். “மகனே, நியோக முறையில் நீ உதவ முடியும். அது ஒன்றே வழி. இந்தக் காலத்துக்கு இது ஒவ்வாது தான். இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லை தான். ஆனால் இந்தச் சூழ்நிலையில் வேறு வழியே இல்லை! இது நம் ரிஷி, முனிவர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று! இதை முயன்று பார்க்கலாம்!” என்றார் ஆசாரிய பிரமிஷ்டர். காங்கேயருக்குத் தூக்கி வாரிப் போட்டது! என்ன நியோக முறையா? இருக்காது! சீச்சீ, ஆசாரியர் அப்படி எல்லாம் சொல்லி இருக்கவே மாட்டார். தனக்குத் தான் காதுகள் சரியாகக் கேட்கவில்லை போலும்! என்றாலும் காங்கேயர் ஆசாரிய பிரமிஷ்டரைப் பார்த்து, “குருவே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்னுடைய இளைய சகோதரனின் மனைவிமார்கள் மூலம் நான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு ஆசாரிய பிரமிஷ்டர், “இது ஒரு புராதனமான வழிமுறை! நம் ரிஷி, முனிவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று!” என்றார். காங்கேயருக்கு உள்ளூரக் கோபம் கொதித்து எழுந்தது. தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொள்ளவே முதலில் அவர் நினைத்தார். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அதாவது நான் என் சொந்தப் பெண்களைப் போல் கருதும் காசி தேசத்து இளவரசிகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டார். “என்னால் இதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை!” என்றும் கூறினார்.

“மகனே, இது ஒரு தலையாய கடமை! குடும்பச் சங்கிலி அறுந்து போகாமல் பாரம்பரியம் அழியாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உயிர் வாழ்ந்திருக்கும் சகோதரனைச் சார்ந்தது ஆகி விடும். அவன் தான் குடும்பச் சங்கிலி அறுந்து போகாமல் காப்பாற்ற வேண்டும், இது அவன் பொறுப்பு! கடமையும் கூட! வேதங்கள் கூட, “உன் குடும்பச் சங்கிலி, பாரம்பரியம் அழியாமல் பாதுகாத்துக் கொள்!” என்று தான் சொல்கிறது!” என்றார் ஆசாரிய பிரமிஷ்டர்! மஹாபஹூவிற்கு மனதிற்குள்ளாக நம்பிக்கைக்கீற்றுத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. “இளவரசே, எங்கள் குடும்பத்தில் கூட நியோக முறையில் ஓர் குழந்தை பிறந்துள்ளது. அது யார் தெரியுமா? என் தாத்தா தான்! ஆகவே இதை நாம் ஏற்கலாம்!” என்றார். ஆனால் இந்த அதிர்ச்சியிலிருந்து மெதுவாக வெளியே வந்துவிட்ட காங்கேயரோ, “என்னால் முடியாது! நியோகமும் ஒரு திருமணத்தைப் போலத் தான்!” என்று திட்டவட்டமாக மறுத்தார்.






2 comments:

பித்தனின் வாக்கு said...

என்ன ஒரு நெருக்கடியான நிலமை, ஆனாலும் அவர் சபதத்துக்காக சொல்வதில் நியாயம் இருக்கு. இருந்தாலும் திரெளபதி வஸ்திர சம்பத்தின் போது அவர் சபதத்துக்காக மொளனம் சாதித்தது தவறு.

ஸ்ரீராம். said...

படிப்படியாக அடுத்த கட்டத்தை நோக்கி..