Sunday, August 21, 2016

பிரமிஷ்டரின் ஆலோசனை!

அவ்வளவு நேரமும் த்வைபாயனர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் மௌனமாகவே அமர்ந்திருந்தார். இப்போது காங்கேயர் கேட்கவும் அவர் பதில் சொன்னார். “இளவரசே! குரு வம்சத்தினரின் இந்த ராஜரீக ஆலோசனைகளில் எனக்கு எவ்விதமான இடமோ, பங்களிப்போ சிறிதும் இல்லை. நான் இங்கே வந்திருப்பதே மாட்சிமை பொருந்திய ராஜமாதாவை முன்னிட்டும், அவர் விருப்பத்தை நிறைவேற்றித் தரவும் மட்டுமே!” என்று பணிவுடன் கூறினார். அப்போது தாவி உள்ளே நுழைந்து அனைவரையும் பார்த்த வண்ணம் அனைவருக்குமாகச் சேர்த்து நமஸ்கரித்தாள். அவளுடைய அந்த அலட்சிய சுபாவத்திலிருந்து அவள் அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்ல விருப்பமில்லாதிருப்பது புரிந்தது. அவளுடைய உடல்மொழி நம்முடைய ராஜமாதாவுக்கு இங்கே ஹஸ்தினாபுரத்தில் இடமில்லை என்னும் இந்த நபர்களை நாம் வணங்க வேண்டுமா என்று சொல்லாமல் சொல்லியது. இவர்களை நாம் மதிக்கத் தேவையில்லை என்ற முடிவை அவள் எடுத்துவிட்டாள். அவள் நேரே த்வைபாயனரிடம் வந்தாள். அவரைப் பார்த்துக் கை கூப்பிய வண்ணம், “மாட்சிமை பொருந்திய முனிவரே, என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ராஜமாதா சத்யவதி உங்களையும் மந்திரி கௌண்டின்யரையும் சந்திக்க விரும்புகிறாள். தயவு செய்து வாருங்கள்!” என்று அழைத்தாள்.

த்வைபாயனரும் கௌண்டின்யரும் உடனே எழுந்து தாவியுடன் ராஜமாதாவைப் பார்க்கச் சென்றார்கள். ஆசாரிய விபூதியின் மனதில் சந்தோஷமே இல்லை. இப்போது தர்மத்திற்கே அபாயம் நேரிட்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தர்மத்தைக் காப்பாற்றி தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நி/ருத்தும் பொறுப்பு அவர் தலையில் சுமந்திருப்பதாக உணர்ந்தார். அவர் தான் இதற்கு ஓர் வழியைக் காட்டியாக வேண்டும். “நாம் இப்போது என்ன செய்வது, இளவரசே?” என்று கேட்டுக் கொண்டே காங்கேயர் பக்கம் திரும்பியவர் தொடர்ந்து, “ இதற்கான வழி உங்கள் கைகளிலே உள்ளது. நீங்கள் உங்கள் சபதத்தை இப்போது உடைக்க வேண்டும் அல்லது ராஜமாதாவை கோதுலிக்குச் சென்று வானப்பிரஸ்தம் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும்! வேறு வழியில்லை!” என்றார். தன் உதடுகளை மடித்துக் கொண்டு முகத்தில் கடுமையைக் காட்டினார் காங்கேயர். “மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ராஜகுருவே! என்னை மன்னியுங்கள். சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எனக்கு எதிராக அமைந்து விட்டன. அதோ கடவுளரும் என்னிடம் மிகவும் கோபம் கொண்டு கடுமையைக் காட்டுகின்றனர். ஒவ்வொரு சோதனையாக எனக்கு வருகிறது! சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறேன்.” என்றார்.

“நாம் இவற்றை வெகு எளிதில் கடந்து விடலாம், இளவரசே! நீங்கள் மட்டும் மனம் வைக்க வேண்டும்!” என்றார் ஆசாரிய விபூதி. ஆனால் மிகவும் சோகத்துடனும், மெதுவாகவும் பேச ஆரம்பித்த காங்கேயர், “ ஆம், மக்கள் நிச்சயமாக என்னைத் தூற்றுவார்கள். என் மேல் பழியைப் போடுவார்கள். மாட்சிமை பொருந்திய ராஜமாதாவை ஹஸ்தினாபுரத்தை விட்டு நான் தான் துரத்தி விட்டேன் என்பார்கள்! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது!” என்று கூறினார். அப்போது பிரமிஷ்டர் குறுக்கிட்டு, “நீங்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு இம்மாதிரியான தர்மசங்கடங்களை வலுவில் வரவழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது இதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்!” என்று கசப்புடன் கூறினார். ஆசார்ய விபூதி அப்போது தன் தந்தையிடம், “தந்தையே, தங்களால் மஹாராணியிடம் பேசி அவர் மனதை மாற்றிக்கொள்ளும்படி செய்ய இயலுமா?” என்று கேட்டார்.

“ஆம், என்னிடம் வா! உனக்கு வேறு ஏதேனும் வழி தோன்றவில்லை என்றாலோ அல்லது யோசிக்க முடியவில்லை என்றாலோ உடனே என்னிடம் வந்துவிடுவாய்! உனக்கு வழி கண்டுபிடிக்கச் சோம்பலாக இருந்தால் சொல்! நான் நல்லவழியை உனக்குக் காட்டுகிறேன்.” என்றார் பிரமிஷ்டர். “என்ன வழி அது? ஆசாரியரே?” என்று சுகேது கேட்டார். அதற்கு பிரமிஷ்டர், “நான் என் நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும்? நீயும் அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. குரு வம்சத்தினரும் மாட்டேன் என்றே சொல்லப் போகின்றனர். சர்வ நாசத்துக்கு அவர்கள் போய்ச் சேரட்டும்!” என்று கோபத்துடன் கூறினார் பிரமிஷ்டர்.

அப்போது காங்கேயர், “ஆசாரியரே, நான் என் தாயால் ஏற்கப்படும் எந்தவிதமான வழியானாலும் ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் மட்டும் என் சபதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்; கொடுத்தே ஆகவேண்டும் என்று கேட்காதீர்கள்!” என்றார் காங்கேயர். “ஆனால் அப்படி ஓர் வழி இருக்கிறதா?” என்று ஆசாரிய விபூதி தன் தந்தையிடம் கேட்டார். “ஹூம், அந்த வழியை நான் சொல்லி விட்டால்! நீங்கள் எவரும் அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை! நான் சொல்வது இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நம்மைக்காப்பாற்றும்!” என்றார் பிரமிஷ்டர்.

“அப்படி எல்லாம் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று எதுவும் இல்லை, ஆசாரியரே!” என்றார் சுகேது. “நான் நன்றாகக் கவனித்துப் பார்த்து யோசித்து விட்டேன். நம்மை விட்டு மஹாராணி கோதுலி சென்று விட்டாலோ, அதோடு காங்கேயரும் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்தாலோ, மஹாபஹூ, நீ, உன் மகன் இருவரில் யாரேனும் அரியணையில் அமர உரிமை பெறுவீர்கள். ஆனால் அது குரு வம்சத்தினரிடையே உள்நாட்டுச் சண்டையை மூட்டி விடும்! பெரும்போர் எழும்.” என்றார் சுகேது தொடர்ந்து. “அப்போது இதிலிருந்து தப்ப வழி என்ன?” என்று கேட்டார் காங்கேயர். அவருக்கு விரைவில் இந்தச் சிக்கல் தீர்ந்தால் நல்லது என்னும் எண்ணம் எழுந்தது. ஆசாரிய விபூதியோ, “வேறு எந்த வழியும் இல்லை இளவரசே! நியோக முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியே இல்லை! ஆனால் இளவரசருக்கு அந்த வழி பிடிக்கவும் இல்லை. புலப்படவும் இல்லை!” என்றார் ஆசாரிய விபூதி!

“அது பல பழைய சுவடிகளில் மறுக்கப் பட்டும் வந்திருக்கிறது. அனைவராலும் ஏற்கப்படவில்லை!” என்றார் த்வைபாயனர் முதல்முறையாக வாய் திறந்து. அவர் இம்மாதிரியான ஆராய்ச்சிகளில் மிகவும் தேர்ந்தவர் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். “எனக்கும் அது தெரியும்!” என்றார் ஆசாரிய விபூதி தொடர்ந்து. “ஆனால் சில பழைய சம்பிரதாயமான சடங்குகளில் இவையும் ஒன்றாக இருந்திருக்கிறது. முக்கியமாக ஒரு குடும்பம் அடியோடு வாரிசு இல்லாமல் நசித்துப்போகும் சமயங்களில் முன்னோர்களுக்குச் சிறிதும் ஈமச்சடங்குகளைச் செய்ய ஆண் வாரிசே இல்லாத சமயங்களில் இந்த நியோக முறையே கை கொடுத்து வந்துள்ளது! இது பழக்கத்திலும் இருந்திருப்பதோடு பல ரிஷி, முனிவர்களும் இதை ஆதரித்திருக்கின்றனர்.” என்றார் ஆசாரிய விபூதி.

அப்போது பிரமிஷ்டர் ஓர் வற்புறுத்தலுடன் கூடிய தொனியில் பேசினார். அவருடைய முறுக்கிக் கொண்ட சுருங்கிய உடல் அப்போது ஏற்பட்ட அதீத உணர்ச்சிவசத்தில் நடுங்கியது. “இம்மாதிரியான வேண்டாத வாத விவாதங்களில் மூழ்காதீர்கள்! எனக்கு நேரிடையாக உங்கள் பதிலைத் தெரிவியுங்கள்; காசி தேசத்து அரசகுமாரிகள் நியோக முறையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் உங்களுக்கெல்லாம் விருப்பமா? அதற்கு நீங்கள் அனைவரும் சம்மதிக்கிறீர்களா?” என்று கேட்டார். அனைவரும் அதற்கு ஆமோதித்தனர். ஆசாரிய விபூதியோ, “அதைத் தானே நாம் அனைவரும் இவ்வளவு நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இளவரசர் காங்கேயர் தான் அதைக் குறித்துச் சிறிதும் நினைத்துப் பார்க்கவே இல்லை!” என்றார்.

“நீங்கள் அனைவரும் வரக்கூடிய மாபெரும் பிரளயத்தைக் குறித்து அறிந்து வைத்திருந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லை! உங்களால் அதைச் சந்திப்பதில் சிக்கல் இருக்கிறது! கோழைகளாக இருக்கிறீர்கள்!” என்ற பிரமிஷ்டர், “என்ன, குரு வம்சத்துத் தலைவர்களே! நீங்கள் அனைவரும் என்ன சொல்கிறீர்கள்? நியோக முறையில் காசி தேசத்து அரசகுமாரிகள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் உங்களுக்கெல்லாம் சம்மதமா?” என்று கேட்டார். அவர்கள் ஓர் வறட்சியான சிரிப்பை உதிர்த்தனர். மஹாபஹூ, “குரு வம்சத்துத் தலைவர்களால் ஆரம்பத்தில் வேண்டுமானால் எதிர்ப்புக் காட்ட முடியலாம். போகப் போகச் சரியாகி விடும்! மனது மாற ஆரம்பிக்கும்!” என்றார். பிரமிஷ்டர் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். “அவர்கள் நியோக முறையில் குழந்தை பெறுவதற்கு மாற்றாந்தந்தையின் மகனை ஏற்கத் தயாராக இருக்கிறார்களா? நியோகத்தை அந்தப் பெண்களின் கணவன் வழி வந்த தாய்வழிச் சகோதரன் மூலம் பெற்று எடுக்க ஒத்துக் கொள்வார்களா? தாய் வழிச் சகோதரன், கணவனின் தாய் வழியில் பிறந்த சகோதரன்?” என்று கேட்டார் பிரமிஷ்டர்.


1 comment:

ஸ்ரீராம். said...

விஷயத்துக்கு வருகிறார்...