Thursday, June 30, 2011

ஷாயிபாவும், ருக்மிணியும், நேருக்கு நேர்! கண்ணன் வருவான்!

இதை எல்லாம் யோசித்து விட்டு ருக்மிணி திரிவக்கரையோடு தன்னுடைய தொடர்பை நிரந்தரமாக்கிக் கொண்டாள். அதோடு திரிவக்கரையின் மூலம் தேவகி அம்மாவையும் அவளால் தொடர்பு கொள்ள முடிந்தது. அதன் மூலமே ஷ்வேதகேதுவை போஜ வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும்படி தன் தகப்பனையும், தாத்தாவையும் நிர்ப்பந்திக்க முடிந்தது. அவர்களுக்கு இதில் தடையும் ஏதும் இருக்கவில்லை; ஆகவே அவளால் ஷ்வேதகேதுவைச் சந்தித்து மதுராவுக்குச் சென்று கிருஷ்ணனை உடனே கிளம்பி வந்து தன்னை மீட்டுக் கொண்டு செல்லும்படி தூதும் அனுப்ப முடிந்தது. ஆனால் ஷ்வேதகேது திரும்பிவிட்டான். என்றாலும் ருக்மிணிக்கு எந்தவிதமான உறுதியையும் வாய்மொழியாகவோ, லிகிதம் மூலமோ அளிக்கவில்லை. இது ருக்மிணியின் மனதில் கவலையை உண்டாக்கியது. ஒரே ஆறுதல் என்னவென்றால் அவளுக்கு நடக்கப் போகும் போலியான சுயம்வரத்தைக் கண்ணன் ஆதரிக்கவில்லை என்றும், குறிப்பிட்ட சில அரசர்களுக்கு மட்டுமே சுயம்வர அழைப்புச் சென்றிருப்பதையும் எதிர்க்கிறான் என்பதே. ஆனால் இதனாலெல்லாம் கண்ணன் வந்து அவளை அழைத்துச் செல்வான் என எதிர்பார்க்க முடியுமா? புரியவில்லை. ஏனெனில் ஷ்வேதகேது கூறியதை வைத்துப் பார்த்தால் மதுராவில் கண்ணனின் நிலைமையே மிகவும் மோசமாக இருப்பதாய்த் தெரிய வருகிறதே!

ருக்மிணிக்கு இரவு, பகல் தூக்கமில்லாமல் போனது. கரவீரபுரத்தின் இளவரசி ஷாயிபா ஷ்வேதகேதுவோடு வந்து குண்டினாபுரத்தில் சில நாட்கள் தங்கிச் செல்ல உத்தேசித்திருக்கிறாளாமே. இவள் யாராயிருக்கும்?? மதுராவில் கண்ணனின் தாய் தேவகியின் ஆதரவில் இருந்தாளாம். ருக்மிணியின் ஆவல் எல்லை கடந்தது. ஒருநாள் முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு ஷாயிபாவைப் பார்க்கச் சென்றாள். ஒரு பெண்ணான, அதிலும் இளவரசியுமான அவளுக்கே ஷாயிபாவைப் பார்த்ததுமே மயக்கம் வந்தது. அவளால் ஷாயிபாவின் அழகையும் எழிலையும், கம்பீரத்தையும் போற்றாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் இவள் கண்ணனின் வீட்டில் அவன் தாயின் ஆதரவில் அல்லவோ இருந்திருக்கிறாள்?? இத்தனை அழகான இந்தப் பெண்ணைக் கரவீரபுரத்தில் இருந்து அழைத்து வந்ததும் கண்ணன்; தாயின் பாதுகாப்பில் விட்டதும் அவனே. இவளின் அழகு அவனைக் கவராமலா இருந்திருக்கும்?? ருக்மிணியின் உள்ளத்தில் பொறாமை கொழுந்து விட்டெரிந்தது. கண்ணனின் உள்ளத்தை இவள் கவர்ந்திருப்பாளோ? என்றாலும் ருக்மிணி மிகவும் கஷ்டப்பட்டு தன் உள்ளத்து உணர்வுகளை மறைத்துக்கொண்டு ஷாயிபாவுடன் பேச்சுக் கொடுத்தாள். தன்னுடைய நிலைமை குறித்தும் அவளிடம் கோடி காட்டினாள். ஆனால் ஷாயிபாவோ அவள் நிலையை ஏற்கெனவே அறிந்தவள் போலக் காணப்பட்டாள். அவள் எந்த உதவி கேட்டாலும் அதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் செய்யத் தயாராய் இருப்பதாயும் தெரிவித்தாள்.

ருக்மிணியைச் சமாதானம் செய்த ஷாயிபா அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை யாரும் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்றும் தைரியமாக இருக்குமாறும் அவளிடம் கூறினாள். ஆனால் ருக்மிணியோ இங்கே நடக்கும் காரியங்களைப் பார்த்தால் எந்த நிமிஷம் எது நடக்குமோ எனத் தனக்குக் கவலையாக இருப்பதாய்க் கூறினாள். “எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டது. சரியாக ஒரே மாதம் தான். எல்லா அரசர்களும், இளவரசர்களும் வந்துவிடுவார்கள். சுயம்வரத்திற்கான நாளும் குறிக்கப் பட்டு விட்டது. அந்த நல்ல நாளில் என்னைச் சிசுபாலனுக்கு என் அண்ணன் தாரை வார்த்துவிடுவான். என் அண்ணனும், ஜராசந்தனும் செய்யப் போகும் அக்கிரமமானதொரு யாகத்தின் முதல் பலி நான் தான்.” ருக்மிணியின் கண்ணீர் நிற்கவே இல்லை.

“நீ திடமாக மறுக்க வேண்டும் ருக்மிணி!” ஷாயிபா திட்டவட்டமாய்க் கூறினாள். “ஓ, ஓ,ஓ, அது இயலாது ஷாயிபா. நான் அவ்விதம் கூறினேனால் என் அண்ணன் என்னைச் சும்மா விடமாட்டான். கண்ணன் தான் எனக்கு உதவிக்கு வரவேண்டும். என்னை மீட்டுக்கொண்டு செல்ல வேண்டும். அவன் மட்டும் வராமல் இருந்தானெனில் நான் ஆறையோ, குளத்தையோ , அல்லது கிணறுகளையோ தேடிப் போய் விழவேண்டியதுதான். கடைசியில் அதுதான் நடக்கப் போகிறது.” விரக்தியாகப் பேசினாள் ருக்மிணி. ஷாயிபா விஷமச் சிரிப்போடு, “அது சரி, கோவிந்தன் உன் மனதைக் கவர்ந்துவிட்டானா? அது எப்படி நிகழ்ந்தது?” என்று ஆவலுடன் கேட்டாள். “ஆம், ஷாயிபா, நீ அறிய மாட்டாய்! நான் அவனை முதன்முதல் சந்தித்தபோது! ம்ம்ம என்ன நடந்தது தெரியுமா?? ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே நான் முற்றிலும் மாறிவிட்டேன். புதியதொரு பெண்ணாக ஆகிவிட்டேன்.” ருக்மிணியின் குரலில் இனம் தெரியாததொரு உணர்வு. ஆனால் ஷாயிபாவோ அவள் மனதைப் புரிந்து கொள்ளாதவள் போல, “ஆம், ஆம், கண்ணன் எப்போதுமே அப்படித் தான். நம்மை முற்றிலும் புதியவர்களாக மாற்றிவிடுவான்.” என்று உற்சாகமாய்க் கூற அந்தக் குரலின் உற்சாகத்தையும், கண்களில் தெரிந்த இனம் விளங்காத பாசத்தையும், பரிவையும் கண்ட ருக்மிணி வெயிலில் இட்ட மலர் போல வாடினாள். அவள் முகம் சுருங்கியது. என்ன இருந்தாலும் ஷாயிபா அவளை விடப் பெரியவள். என்றாலும் இங்கிதம் இல்லாமல் பேசுகிறாளோ? ஒரு சின்னப் பெண்ணான ருக்மிணியால் இதைத் தாங்க இயலவில்லை. சூரியன் மறைந்ததும் தாமரை கூம்புவது போல் அவள் முகமும் கூம்பியது.

Tuesday, June 28, 2011

ருக்மிணியின் கனவு! கண்ணன் வந்தான் 2ஆம் பாகம்!

பலநாட்களாக நாம் கண்ணனோடேயே இருந்துவிட்டோம். ருக்மிணியைக் கவனிக்கவே இல்லை. ஏற்கெனவே அவள் மிகுந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் இருக்கிறாள். இப்போ நாம் வேறு கவனிக்கவில்லை என்றால் அவ்வளவு தான்! வாருங்கள், ஷ்வேதகேதுவை விடவும் சீக்கிரமாய்ப் போவோம் விதர்ப்ப நாட்டிற்கு. அந்நாட்டின் அரசனுக்குக் கண்ணின் கருமணியைப் போன்றவள் இளவரசி ருக்மிணி. ருக்மிக்குத் தன் ஒரே தங்கையும் அதிபுத்திசாலியுமான ருக்மிணியின் மேல் அளவு கடந்த வாஞ்சை. அவள் கண்ணால் கண்டதை அவர்கள் வாங்கிக் கொடுத்தார்கள். மனதில் என்ன நினைப்பாள் என முன்கூட்டியே தெரிந்து கொண்டு நிறைவேற்றினார்கள். ஆகவே திருமண விஷயத்திலும் தன்னிஷ்டம் போலவே நடக்கவேண்டும் என ஆசைப்பட்டாள் ருக்மிணி. ஆனால் இந்தப் பெரியவங்க படுத்தற பாடு இருக்கே! அப்பப்பா! தொல்லை தாங்க முடியலை! ஏதோ ராஜாங்க விஷயமாம்; அதற்காகக் கூட்டுச் சேரப்போறாங்களாம். அதற்கு விதர்ப்பநாடும், சேதிநாடும் இணைவது நல்லதாம். ஆகவே ருக்மிணிக்கு சிசுபாலன் தான் கணவன் என நிச்சயப் படுத்தி விட்டார்கள். அதுவும் எப்படி? பெயருக்கு ஒரு சுயம்வரத்தை ஏற்படுத்திவிட்டு. ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப் பட்ட சிசுபாலன் தான் வென்றான் என அறிவிப்பார்கள். சேச்சே! கேவலம்! கேவலம்! இப்படியும் நடக்குமா?

எல்லாம் நாம் நினைப்பதற்கு மாறாகவன்றோ நடக்கிறது! சிசுபாலனுக்கும் எனக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கும் வேகத்தைப் பார்த்தால் தலை சுற்றுகிறதே! மதுராவிற்கு அழைப்பே அனுப்பவில்லையாமே! ம்ம்ம்ம்? அப்படி எனில் கண்ணன் வருவானா? இந்தத் தாத்தாவை நம்பினால் எதுவுமே நடக்காது போல் தெரிகிறது. அவரும் அண்ணனை எதிர்க்கத் தனக்கு வயது பத்தாது என்றும் இந்த முதிர்ந்த வயதில் இளம் வயதும், துடிதுடிப்புடனும் இருக்கும் ருக்மிக்கு எதிராய்ப் பேச முடியவில்லை என்றும் புலம்புகிறார். அப்பா பீஷ்மகரோ பட்டத்து இளவரசனின் வேலைகளில் தான் குறுக்கிடுதல் இயலாது என்று மறைமுகமாய்க் கூறுகிறார். ருக்மிணியும் தன்னால் இயன்றவரை அழுது பார்த்துவிட்டாள்; தன்னைச் சின்னஞ்சிறு வயதினிலே விட்டுவிட்டு மறைந்த தன் தாயைப் பற்றிப் புலம்பித் தீர்த்துவிட்டாள்; அவ்வளவு ஏன்? தகப்பனோடு சண்டையும் போட்டுப் பார்த்துவிட்டாள். ஆனால் பீஷ்மகனோ தன் மகனுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கி அந்தப் பக்கம் போடத் தயாராக இல்லை.

ஜராசந்தனின் நட்புக்காகவும், அவனோடு தான் வைக்கப் போகும் கூட்டுக்காகவும், ருக்மி தன் தங்கை ருக்மிணியின் வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராகிவிட்டான்; ஆம், இப்படித் தான் நினைத்தாள் ருக்மிணி. பதிலுக்கு ஜராசந்தனின் பேத்தி அப்நவியைத் தனக்கு வாழ்க்கைத் துணைவியாகக் கொள்ளப்போகிறான் ருக்மி. அந்நாட்களில் மன்னர்கள் அடிக்கடி யுத்தகளம் செல்ல வேண்டி இருந்ததாலும், பட்டத்து ராணி என ஒருத்தி இருந்தாலும், அவளுக்குக் குழந்தைப் பேறு தாமதமானால் இரண்டு, அல்லது மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொள்வது வழக்கமாய் இருந்தது. இதில் யாரும் எந்தத் தவறும் காணவில்லை. ஏனெனில் ராஜ்ய பரிபாலனம் நடக்கவேண்டுமே! இரண்டு அல்லது மூன்றாம் ராணியாக வருபவர்களும் குறைந்த அந்தஸ்தில் இருந்து தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களும் ஒரு நாட்டுக்கு இளவரசியாகவே இருப்பார்கள். ஆகவே பட்டத்து ராணியாக இருப்பவள் வேறுவழியில்லாமல் அவர்களையும் அநுசரித்து, ஆதரவு காட்டியே நடந்து கொள்வாள். இதிலே எவருக்கு முதலில் ஆண்பிள்ளை பிறக்கிறதோ அவர்களின் அந்தப் பிள்ளையையே அடுத்த பட்டத்துக்குத் தேர்ந்தெடுப்பார்கள். ஆகவே இப்போது ருக்மி செய்யப் போவதில் எவரும் குறை காண இயலாது. இது ருக்மிணிக்கும் நன்கு தெரிந்தே இருந்தது.

நாலாதிசைகளுக்கும் தூதுவர்கள் சென்று சுயம்வரத்திற்கான அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். விதர்ப்ப நாடே திமிலோகப் பட்டுக்கொண்டிருந்தது. ருக்மிணிக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை; நாம் பாட்டுக்கு நம் அரண்மனையின் கன்னிமாடத்தில் போய் மறைவாக அமர்ந்து கொண்டு விடலாமா என யோசித்தாள். ஆனால் வாழ்க்கையில் பிடிப்பும், ஆவலும், எதிர்பார்ப்புக்களும் கொண்ட ருக்மிணியால் அவ்விதம் மறைவாக இருந்து கொண்டு வாழ்வது என்பது அவளால் நினைக்கவும் முடியாத ஒன்று. இன்னமும் அவள் நம்பிக்கையை இழக்கவில்லை. என்றோ ஓர் நாள் அந்தக் கருநீல நிற இடைச்சிறுவன் கண்ணனை அவள் மணந்து கொள்ளத் தான் போகிறாள். அவன் என்ன பிறப்பால் இடையனா? அவனும் ராஜகுலம் தானே? க்ஷத்திரியன் தானே? ஏதோ சந்தர்ப்பக் கோளாறு; சில வருடங்கள், ம்ம்ம்ம்?? பதினாறு வருடங்கள் கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் இடையர்கள் மத்தியில் வளர நேரிட்டுவிட்டது. அதனால் வசுதேவரின் பிள்ளை இல்லை என்றாகிவிடுவானா? ஆஹா, அவனுடைய சாகசங்களைப் பற்றி மக்கள் கதை, கதையாய்ச் சொல்கிறார்களே; என்றோ ஓர்நாள் அவன் இங்கேயும் திடீரென வந்து என்னையும் தூக்கிக் கொண்டு போய்த் திருமணம் செய்து கொள்வான். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

Thursday, June 23, 2011

ஷாயிபாவின் முடிவும், தேவகியின் ஆநந்தமும்.

“அதை நான் நன்கறிவேன் கண்ணா! உன் எதிரிகளில் சிலர் என்னையும் ஒரு துருப்பாகப் பயன்படுத்த எண்ணி இருக்கின்றனர். “

“ஆகவே ஷாயிபா,” கண்ணன் அதே இளநகையோடு தொடர்ந்தான். “ நீ உத்தவனின் மனைவியாகவோ அல்லது ஷ்வேதகேதுவின் மனைவியாகவோ எனக்கு உன்னால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். இருவருமே அருமையான மனிதர்கள் மட்டுமில்லை, தைரியசாலிகளும், வீரர்களும், தர்மத்தின் பாதையிலிருந்து பிறழாமல் நடப்பவர்களும் ஆவார்கள்.”

“ஓ, கண்ணா, கண்ணா! அவர்கள் இருவரில் எவரையும் நான் மணக்க இயலாது. என்னால் இயலுமா? நீயே சொல்! “ ஷாயிபாவின் கண்கள் பளபளத்தன. “அதோடு நீயும் என்னை உன் கருவியாக மட்டுமே பயன்படுத்த எண்ணுகிறாயா?”

“தர்மத்தின் பாதையில் செல்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் அந்த தர்மத்தின் கருவிகளே ஆவார்கள்; நான் தர்மத்தின் பாதையிலேயே செல்ல விரும்புகிறேன். அதற்கெனவே வாழ்கிறேன். நான் வேண்டுவது வேறு எதுவும் இல்லை.”

“ம்ம்ம்ம்?? அந்த இருவரில் எவர் மிக அதிகமாக தைரியசாலியும் வீரனும் ஆவார்கள்? கண்ணா, எவரால் உனக்குப் பயன் அதிகம் கிடைக்கும்? உன் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு ஆணையாகும் கண்ணா, நான் உன் அடிமை என்பதைச் சிறிதும் மறவாதே! நீ என்ன சொல்கிறாயோ அதுவே எனக்கு மிக உயர்ந்த உபதேசம் ஆகும்.”

“உனக்கு இருவரில் எவர் மேல் விருப்பம் உள்ளதோ அவரை மணந்து கொள் ஷாயிபா. இதில் உன் விருப்பமே முக்கியம். “ திடீரென ஏதோ நினைத்துக்கொண்டவன் போல் கண்ணன் குறும்புச் சிரிப்புடன், “என்னை விட்டு விடு.” என்றான்.

ஷாயிபா ஆழ்ந்த யோசனையோடு, “ என் பிரபுவே, உன்னை ஜராசந்தன் அழிக்க இருக்கும் திட்டங்களை வீணாக்கவேண்டும் என ஷ்வேதகேது சொல்வது உண்மையா? அவனால் அது இயலுமா?? மேலும் நான் இங்கிருப்பதை விடவும் குண்டினாபுரத்தில் இருந்தால் உனக்கு வசதியாக இருக்குமோ?”

“ஷாயிபா, ஜராசந்தனை அழிப்பதற்கு நீ மட்டும் உதவினால், உன்னால் அது இயன்றால், இந்த யாதவ குலமும், யாதவர்களும் என்றென்றைக்கும் உனக்குக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். உன்னைப் பெண்தெய்வமாக அவர்கள் குல தெய்வமாக வழிபடுவார்கள்.”

ஷாயிபாவின் கண்கள் பளிச்சிட்டன. அதைக் கண்ட கண்ணனுக்குக் கரவீரபுரத்தில் அதிகாரத்தின் உச்சியில் ஷாயிபா இருந்தபோது அவள் கண்களில் தென்பட்ட அதே உணர்வுகளை இப்போதும் காண்பதாய்த் தோன்றியது. அப்போது அங்கே வாசற்படியில் திடீரென தேவகி அம்மா தோன்றினார். ஏதோ கடுமையானதொரு செய்தியைக் கேட்டதால் மனம் வாடியது போல் அவர் முகம் சோகத்தில் ஆழ்ந்திருந்ததோடு அல்லாமல், கண்களும் நீரைத் தாரையாக வர்ஷித்த வண்ணம் இருந்தன. அவர் பின்னால் திரிவக்கரையும் நின்றிருந்தாள். திரிவக்கரையின் கண்களும் கண்ணீரால் நிறைந்து தளும்பின. அவர்கள் இருவருமே ஷாயிபாவை நோக்கிப் புன்னகை புரிந்து கொண்டிருந்த கண்ணனையும், கண்ணனைப் பார்த்த வண்ணம் கண்கள் சந்தோஷத்தில் தீபமென ஒளிர்விட நின்றிருந்த ஷாயிபாவையுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தேவகி அம்மா மெல்ல, “கண்ணா, இது என்ன? நான் கேள்விப்பட்டது உண்மையா?” என்று கேட்டார்.

கண்ணனும், ஷாயிபாவும் திரும்பிப் பார்த்தனர். தேவகி அம்மாவை அங்கே கண்டதும் இருவரும் மரியாதையுடன் எழுந்திருந்தனர். தேவகி அம்மாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள். தேவகியுடன் வந்திருந்த சுபத்ரா கண்ணனையும், ஷாயிபாவையும் கண்டதும் மகிழ்வோடு அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றிக் கட்டி அணைத்துக்கொண்டாள். தேவகியின் முகத்தையும் அதில் கண்ட இனம் காணா சோகத்தையும் அவள் சொல்ல முடியாமல் தவிக்கும் கோலத்தையும் கண்ட கண்ணன் எந்தச் செய்தியால் அவள் மனம் இவ்வளவு துன்பப் பட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டான். ஷாயிபாவின் பக்கம் திரும்பி, “சகோதரி, ஷாயிபா, அம்மாவிடம் உன் விருப்பத்தைச் சொல்வாயாக. எவரை நீ மணக்கப் போகிறாய் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலில் அம்மா வந்திருக்கிறார்.” என்றான். கண்ணன் குரலில் மட்டுமில்லாமல் முகத்திலும் குறும்பு கூத்தாடியது.

ஷாயிபாவைக் கண்ணன் சகோதரி என விளித்ததால் குழப்பம் அடைந்த தேவகி அம்மா, அந்தக் குழப்பம் மாறாமலேயே ஷாயிபாவிடம், “நீ யாரை மணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என வினவினார். ஷாயிபாவோ,”அம்மா, தற்சமயம் நான் எவரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. தற்சமயம் திருமணம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. நான் முதலில் கரவீரபுரம் சென்று என் பெரியம்மாவும் கரவீரபுரத்து ராணியுமான பத்மாவதி அம்மாவிடம் என் உளமார்ந்த மன்னிப்பைக் கோரிப் பெற வேண்டும். அவர்களின் மகிழ்வான ஆசிகளைப் பெற வேண்டும். அவர் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் துன்பமான பகுதியாக ஆக்கியதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். என் மனதில் உள்ள வெறுப்பு, ஆங்காரம், துவேஷம், பொறாமை, அளவுக்கு அதிகமான ஆசை, அதிகார மோகம் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும். ஷ்வேதகேதுவின் தலைமையில் குண்டினாபுரம் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கும் பயணிகளோடு நானும் செல்லப் போகிறேன். எனக்குத் தக்கத் துணையை அனுப்புவதாக கோவிந்தன் உறுதியளித்திருக்கிறான். “

தேவகி அம்மாவின் ஆநந்தம் அளவுக்கதிகமாகத் திரிவக்கரையின் பால் திரும்பி, “பொய் சொன்னாயா திரிவக்கரை, மோசக்காரி, என் அருமை மகன், என் கோவிந்தன் என்னை ஒருநாளும் ஏமாற்றவே மாட்டான். என் மகனை நான் நன்கறிவேன்.”
“அம்மா, அம்மா,” கண்ணன் பெரும் சிரிப்போடு சொன்னான்.”உன் மகன் ஒரு நல்ல மனைவியை, மணமகளை எப்போதுமே விட்டுவிடுகிறான்.” அங்கே ஏற்பட்ட பலத்த சிரிப்பு அடங்க வெகுநேரமானது.

Thursday, June 2, 2011

கல்லும், முள்ளும் பூவாய் மாறியது! கண்ணன் தொடர்!

முட்டாள்களே, கடைந்தெடுத்த முட்டாள்களே, என்ன பேசிக்கொள்கிறீர்கள் இருவரும்?? நீங்கள் இருவருமாக ஷாயிபாவை எனக்கு, உனக்கு என ஏலமா போடுகிறீர்கள்? உங்களில் எவருக்காவது ஷாயிபா என்ன நினைக்கிறாள் என்பதில் அக்கறை உண்டா? அவள் விருப்பத்தைக் கேட்டதுண்டா?? ஷாயிபா உங்கள் இருவரையுமே நினைத்து நினைத்து உருகுவதாய் நீங்கள் இருவரும் நினைப்பது தவறு. அவள் கண்ணனைத் தனக்குக் கணவனாய்த் தேர்ந்தெடுத்துவிட்டாள். கண்ணனும் ஒத்துக்கொண்டு விட்டான். எனக்குத் தான் இதில் மிகவும் வருத்தம், துக்கம்.” படபடவெனப் பேசிய திரிவக்கரையின் குரலில் மிதமிஞ்சிய கசப்பு உணர்ச்சி தெரிந்தது. அங்கிருந்து அகன்றாள் அவள். ஷ்வேதகேதுவும் உத்தவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் முகத்திலும் அசடு வழிந்தது.

“பெண், அற்புதமான ஒரு பிறவி, ஆனால் எவராலும் புரிந்து கொள்ள முடியாத தன்மை படைத்தவள். இவ்வுலகத்தின் படைப்புக்களிலேயே பெண் தான் அதிசயமானவள்!” என்றான் ஷ்வேதகேது.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! எனக்கு இன்னமும் நம்பமுடியவில்லை. ஆச்சரியமாய் உள்ளதே!” உத்தவன் குரலில் ஆச்சரியம் மிகுந்து காணப்பட்டது.

இங்கே சுபத்ராவைத் தன் தோள்களில் சுமந்து வந்த கிருஷ்ணன் அந்தப் புரத்தில் இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்த வண்ணம், “ சகோதரி, உன்னுடைய இஅந்த மறு பிறப்பைக் குறித்து நான் சந்தோஷம் அடைகிறேன்.” என்றான். அவன் காலடியில் பணிவோடு அமர்ந்தவண்ணம் ஷாயிபா, “என் பிரபுவே, நான் உன் அடிமை. என்னை நீர் சகோதரி என அழைக்காதீர். உம்முடைய கால் தூசிக்குக் கூட நான் சமமாக மாட்டேன். இத்தனை நாட்களாய் உம்மைத் திட்டிக்கொண்டிருந்ததை நினைத்தும், உம்மைக் கொல்ல வேண்டும் என்றே காத்திருந்ததை நினைத்தும் வெட்கம் அடைகிறேன். இந்தப் பாவத்திற்கு என்ன பிராயச் சித்தம் செய்வது?” ஷாயிபாவின் குரலில் சோகம் கப்பி இருந்தது.

“இதைக் குறித்து இனி பேசாமல் இரு ஷாயிபா. நான் உன்னுடைய இந்த மனமாற்றத்திற்கே காத்திருந்தேன். நீ மனம் மாறிவிடுவாய் என எதிர்பார்த்தேன், ஆனால் அது இத்தனை விரைவில் நடக்கும் என நினைக்கவில்லை.” மிதமிஞ்சிய அன்பும், பாசமும் தொனித்தது கண்ணன் குரலில். “ நீ அனைத்தையும் வெற்றி காணவே பிறந்திருக்கிறாய்! நான் சொல்வது சத்தியமான ஒன்று ஷாயிபா! ஆம், நீ வெற்றித் திருமகளே! உன் அளவு கடந்த வெறுப்பையும், கோபத்தையும், எப்படிப்பட்ட வன்முறைக்கும் தயாராய் இருந்த இதயத்தையும் நீ வென்று விட்டாய். உன் கோபம், ஆத்திரம், ஆங்காரம், வெறுப்பு அனைத்தும் சுத்தமாய்க் காணாமல் போனது. பெரிய மஹான்களாலேயே சில சமயம் இயலாத ஒன்று உனக்குக் கை கூடி உள்ளது.முற்றும் துறந்த யோகிகளும் ஞானிகளுக்குமே இயலும் ஒன்றை நீ எளிதில் அடைந்திருக்கிறாய்”

“கண்ணா, இதை நானா செய்தேன்?? எனக்காக நீ அல்லவோ செய்து முடித்திருக்கிறாய்?”
“இல்லை ஷாயிபா, உன் சுயநலம் மறைந்துவிட்டது. அதை நீயே வென்றுவிட்டாய். வேறு எவரும் இல்லை. உன் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நீயே நிச்சயித்துக்கொள்வாயாக!” என்றான் கண்ணன்.

“என் பிரபுவே! நீ என்ன சொல்கிறாயோ அப்படியே நான் செய்ய வேண்டியவளாகிறேன்.” என்றாள் ஷாயிபா.

“இல்லை, இல்லை, உன் விருப்பம் என்னவோ அதை நீ நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். உன் விருப்பத்திற்கு மாறாக நீ எதுவும் செய்ய வேண்டாம்.”

“என் கடவுளே, நீ தான் எனக்கு வழிகாட்ட வேண்டும். நீ காட்டும் வழியில் நான் நடக்கிறேன்.”

“சரி, நான் யாரை மணப்பது நல்லது என நீ நினைக்கிறாய் கண்ணா?” ஷாயிபா கேட்டாள். விருப்போ வெறுப்போ தொனிக்கவில்லை அவள் குரலில்.

“நீ யாரை மணக்க விரும்புகிறாய் ஷாயிபா? ஷ்வேதகேதுவையா? ;உத்தவனையா?” கண்ணன் கேட்டான்.

“ஹூம், ஷ்வேதகேது எனக்குத் துரோகம் செய்தான்.” அவளையும் அறியாமல் ஷாயிபாவின் குரலில் வெறுப்பும், கசப்பும் எட்டிப் பார்க்கச் சட்டெனத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள் ஷாயிபா. திடீரென ஒரு எண்ணம் அவளை மின்னல் போல் தாக்கக் குறும்புப் புன்னகையுடன், “என் பிரபுவே, இந்த இருவரில் ஒருவரையா நான் மணக்கவேண்டும்?? ஏன் மூன்றாவதாய் ஒருவரை நானே தேர்ந்தெடுக்கக் கூடாது?” என்று கேட்டாள். “ஓ, தேர்ந்தெடுக்கலாமே? ஒரே ஒரு நிபந்தனை. அவன் உன்னை உன் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாய் வைத்திருக்க வேண்டும்.” என்றான் கண்ணன்.

“ஓ,ஓஓ, கண்ணா? அவன் என்னை வாழ்நாள் முழுதும் சந்தோஷமாய் வைத்திருப்பான் என எனக்கு உறுதியாய்த் தெரியும். ஆனால்….ஆனால்.,… அவனைத் தேர்ந்தெடுக்க நீ எனக்கு உதவுவாயா? நீ எனக்கு உன் வாக்குறுதியைக் கொடு.” ஷாயிபாவின் தொனி சற்றே பழைய மயக்க வைக்கும் குரலில் மாறியதோ?? ஆனால் கண்ணனோ சற்றும் தயங்காமல், “நீ யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடு, ஆனால் என்னை மட்டும் விட்டுவிடு.” என்று கூறிவிட்டான்.

“ஏன் உன்னைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?” உள்ளடக்கிய கோபத்தோடு கேட்டாள் ஷாயிபா. “நான் உன்னுடைய அடிமை. நான் ஏற்கெனவே தேர்ந்தெடுத்துவிட்டேன்.” ஷாயிபாவின் குரலில் பழைய ஆத்திரம் தென்பட்டதோ? கண்ணன் அசரவில்லை. “இதோ பார் ஷாயிபா, நான் உன்னை ஒரு சகோதரன் என்ற அளவிலே தான் சந்தோஷத்தைத் தர முடியும். நான் இவ்விதம் இருப்பதே நன்மை பயக்கும்.” என்றான். “ஏன் என்னை உன் மனைவியாக ஏற்க இயலாதா?” ஷாயிபா கேட்டாள்.

“இதோ பார் ஷாயிபா. என்னால் சந்தோஷப் படக்கூடிய ஒரு பெண்ணை நான் மனைவியாக அடைய முடியுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. எப்படி ஆனாலும் கரவீரபுரத்தின் இளவரசியைப் போன்ற ஒரு பெண்ணை மனைவியாக அடைந்து அவளை மகிழ்வோடு என்னால் வைத்திருக்க இயலுமா?? தெரியாது. உண்மையில் நான் எனக்குச் சொந்தமில்லை. பலருக்கும் நான் சொந்தம்; பலருக்கும் நான் கடமைப்பட்டவன். எல்லாவற்றுக்கும் மேல் தர்மம் என ஒன்று இருக்கிறதே அதற்கு நான் அடிமை. தற்சமயம்,,,ம்ம்ம்ம்?? என்னால் சரியாகச் சொல்ல இயலவில்லை; எத்தனை வருஷங்கள் ஆகுமோ புரியவும் இல்லை; ஆனால் இப்போது என்னால் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுத் திருமணம் புரிந்து கொள்ள இயலாது. “ கண்ணன் முகத்தில் அதுவரை விளையாடி வந்த இளநகையும் குறும்பும் எங்கோ போனது. கண்ணன் எங்கோ தூரத்தில் பார்ப்பது போல் கண்கள் செருகத் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

சற்றே தீவிரமான குரலில் கண்ணன், “ஷாயிபா, உன் உடலில் அரச பரம்பரையின் ரத்தம் ஓடுகிறது. நான் சொல்வதை நீ புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். இங்கே, இந்த மதுராவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் ஆபத்தில் வாழ்கிறேன். எனக்கு மட்டுமல்ல, இந்த மதுராவும், இதன் யாதவர்களுமே பெருத்த ஆபத்தில் இருக்கின்றனர். மதுராவின் வாயிலில் இந்நகரையும் அதோடு சேர்த்து யாதவர்களையும் விழுங்க வேண்டி அதர்மம் காத்துக்கொண்டிருக்கிறது பல வருடங்களாய். அதற்கு முதல் பலி நான் தான். என்னை அழிக்க வேண்டிப் பல தேசத்து அரசர்களோடும் சக்கரவர்த்திகளோடும் உடன்படிக்கையும் நட்பும், ஏற்படுத்திக்கொண்டு பெரிய பெரிய திட்டங்கள் போடப் படுகின்றன. அவ்வளவு ஏன்?? மதுரா நகரிலேயே எனக்கு எதிராகச் சதித்திட்டங்கள் போடப் படுகின்றன. இத்தனை நபர்களின் அன்பு இருந்தும், நான் இந்த மாபெரும் யுத்தத்தில் தன்னந்தனியாகப் போராட வேண்டியவனாய் இருக்கிறேன். ஒரு சிலரே ஆனாலும் அவர்கள் காட்டும் வெறுப்பை என்னால் சகிக்க இயலவில்லை.”