Wednesday, October 31, 2012

சத்யவதியின் வேண்டுகோள்



கிருஷ்ணன் வியப்பின் உச்சத்துக்கே சென்றான் என்றால் அது மிகையில்லை.  பின்னர் எப்படி அவர்களுக்கு ஈமக்கிரியைகள் நடந்தன?  சத்யவதி மீண்டும் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  மிகக் கவனமாகத் தன் எதிரே அமர்ந்திருக்கும் விதுரரையும், கண்ணனையும் தவிர அங்கு வேறும் எவரும் இல்லை என்பதையும் நிச்சயம் செய்துகொண்டாள்.  பின்னர் ரகசியம் பேசும் குரலில், “வாசுதேவா, அவர்கள் தப்பி விட்டனர்.  எரியும் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார்கள்.” என்றாள்.  “தப்பி விட்டார்களா?” கண்ணனால் இன்னமும் நம்ப முடியவில்லை.  “ஆனால்…..ஆனால்……. தாயே, அவர்கள் உடலும், குந்தி அத்தையின் உடலும் எரியூட்டப்பட்டு ஈமக்கிரியைகள் நடந்தனவே!”  சத்யவதி கண்ணனை அடக்கினாள்.  “உஷ் ஷ் ஷ் ஷ் ஷ்ஷ் ஷ்ஷ்” பின்னர் அதே மெதுவான குரலில்,”விதுரனின் ஆட்கள் தோண்டிக் கொடுத்த சுரங்கப்பாதையின் மூலம் அவர்கள் தப்பி விட்டனர்.”  என்றாள்.

“ஆனால் தாயே, உயிரிழந்த உடல்கள்?”
“அவை குந்தியும் பாண்டவர்களும் அல்ல.” சத்யவதி மேலே தொடர்ந்தாள். “ அப்படி செத்த உடல்கள் கிடைக்கவில்லை எனில் துரியோதனனும், சகுனியும் அவர்கள் தப்பியதை அறிந்திருப்பார்கள்.  பின்னர் எப்படியோ அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தையும் கண்டு பிடித்துத் தொல்லை அளிப்பார்கள்.  மீண்டும் கொலை முயற்சி நடக்கும்.  நிறுத்த மாட்டார்கள்.” 

“அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”
“விதுரன் அவர்களுக்காக ஒரு படகைத் தயார் நிலையில் வைத்திருந்தான்.  அதில் ஏறி கங்கையைக் கடந்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தான்.  ஆனால் கங்கையைக் கடந்ததும், அவர்கள் காட்டிற்குள் மறைந்துவிட்டனர்.”

“”அவர்கள் எங்கே எனக் கண்டுபிடிக்க முடியவில்லையா?”
“அதான் எங்களுடைய பிரச்னையே!” என்றாள் சத்யவதி. “எங்களால் இந்த ஹஸ்தினாபுரத்தில் எவரையும் நம்ப முடியவில்லை.  பின்னர் யாரிடம் சொல்லி அவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்வது?  அப்படிச் செய்தாய் எவரேனும் துரியோதனனிடமோ, சகுனியிடமோ அவர்கள் இருப்பிடத்தைச் சொல்வார்கள்.  பின்னர் என்ன நடக்கும்?  மீண்டும் மனித வேட்டை தான்! கண்ணா, இதற்குத் தான் நான் உன் உதவியை நாடுகிறேன் குழந்தாய்.  நீ எவ்வாறேனும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பத்திரமாகவும் செளகரியமாகவும் இருக்கிறார்களா என்பதையும் பார்த்துச் சொல்ல வேண்டும்.  உன்னை யாரும் சந்தேகப் படமாட்டார்கள் என எண்ணுகிறேன்.”

“அதோடு அவர்கள் மறைந்திருக்கும் காடும் நாகர்கள் வசிக்கும், அவர்கள் ஆளும் பகுதியாகும்.  உன்னால் அங்கே சுலபமாய்த் தேட முடியும்.  உன் தாய்வழிப் பாட்டன் ஆன ஆர்யகன் நாகர்களில் தலைவன் உன்னிடம் அன்புள்ளவன்.  உனக்கு உதவிகள் செய்வான் என நம்புகிறேன்.  ஆனால் அவனை முழுதும் நம்பி நம் ரகசியத்தை, பாண்டவர்கள் பற்றிய செய்தியைச் சொல்ல முடியாது.  எவரை நம்புவது என்பது புரியவில்லை.  சகுனி அவர்களையும் விலைக்கு வாங்கினாலும் வாங்கிவிடுவான்.  நீ மட்டும் அவர்களைக் கண்டு பிடித்துவிட்டால், உன்னோடு துவாரகைக்கு அழைத்துச் செல்.  எவருக்கும் தெரியவே வேண்டாம்.”

“மாட்சிமை பொருந்திய ராணி அம்மா, உங்கள் கட்டளைகள் ஏற்கப் பட்டன. அவற்றைத் துளியும் பிசகாமல் நிறைவேற்றுவேன். பாண்டவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப் படும். “இதைச் சொல்கையில் உள்ளூர எழுந்த திருப்தியிலும், சந்தோஷத்திலும் ஏற்கெனவே மலர்ந்திருக்கும் கண்ணனின் முகம் மேலும் மலர்ந்து பிரகாசித்தது. 
“குழந்தாய், நீ செல்லும் பாதையில் வெற்றியே அடைவாயாக!”  கண்ணனை ஆசீர்வதித்த சத்யவதியின் குரலில் பூரண திருப்தியும், இனம் காணா அமைதியும் நிறைந்திருந்தது.


Saturday, October 27, 2012

சத்யவதி மனம் திறக்கிறாள்!

கண்ணா, நீ எத்தனை நல்லவனாக இருக்கிறாய்!  உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.” என்றாள் சத்யவதி. கண்ணன் நகைத்தான்.  “தாயே, நான் நல்லவன் என எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள்?  நான் மிக மிகப் பொல்லாதவனாக்கும்.  நான் என் தாய் மாமனைக் கொன்றிருக்கிறேன்;  அதோடு பீஷ்மகன் மகளைக் கடத்திச் சென்று திருமணமும் செய்து கொண்டிருக்கிறேன்.  அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை உங்களால் சொல்ல முடியாது.” என்றான் கண்ணன்.  சத்யவதி ஹஸ்தினாபுரத்தின் அரசியலில் தன்னுடைய நிபந்தனைகளற்ற ஆதரவை எங்கேனும் கேட்டுப் பெற்றுக் கொண்டுவிடுவாளோ என உள்ளூறக் கண்ணனுக்கு சந்தேகம் இருந்ததால் தன்னை ஒரு பொல்லாதவனாகவும், சூழ்ச்சிக்காரனாகவும் காட்டிக் கொண்டான். 

“குழந்தாய்!  இத்தனை வருடங்கள் இந்த அரண்மனையிலே வீணே கழித்தேன் என எண்ணுகிறாயா?  இல்லை அப்பா, யார் உண்மையான, நேர்மையான பாதையில் செல்லுகின்றனர் என்பதை அவர்கள் செய்யும் காரியங்களிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறேன்.  நீ இங்கே வரும் முன்னரே உன்னைப் பற்றிய செய்திகளை நான் அறிந்திருக்கிறேன்.  மேலும் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் தவறு செய்ய மாட்டான்.  அவன் கணிப்புப் பொய்க்காது.  அவன் உன்னைப் பற்றிச் சிறிதும் மிகையாகக் கூறவில்லை.”

“ஆஹா, முனி சிரேஷ்டர் என்னைக் குறித்து என்ன கூறினார்?”

சத்யவதியின் புன்னகை பெருநகையாக விரிந்தது:”நீ தர்மத்தை நிலைநாட்டவென அவதரித்திருக்கிறாய் எனக் கூறினான்.”

“ஓ, தாயே, நீங்கள் அனைவருமே என்னிடம் மிகவும் அன்போடும், கருணையும் காட்டி வருகிறீர்கள்.  இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வது!  நான் அப்படி ஒன்றும் நன்மை செய்துவிடவில்லை;  என்னால் இயன்றதைச் செய்கிறேன். எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் கருணையினால் அவற்றுக்கு வெற்றி கிடைக்கிறது.  இதில் என் செயல் எதுவும் இல்லை.”  கண்ணன் மிகப் பணிவோடு பேசினான்.

“கண்ணா, எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உன் மூலமாக என்ன என்ன வேலைகளை நிகழ்த்திக்கொள்ளப் போகிறானோ!  தெரியவில்லை.  வாசுதேவா, நான் உன்னை கிருஷ்ணா என அழைக்கட்டுமா?  அப்படி அழைத்தால் ஒரு நெருக்கம் வரும் என நினைக்கிறேன்.  மேலும் இந்தப்பெயர் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா?  என் அருமை மகனுக்கும் இதே பெயர் அல்லவா? “சத்யவதியின் முகம் பிள்ளையைக் குறித்த பெருமையால் விகசித்து மலர்ந்தது. அவள் கண்ணனிடம், “கண்ணா, நான் உன்னிடம் ஒன்று கேட்கப்போகிறேன்.  நீ எனக்கு அதைச் செய்வேன் எனத் தட்டாமல் வாக்குறுதி கொடுப்பாயா? வெளிப்படையாய்ச் சொல்லி விடு.  உன்னால் முடியுமா, முடியாதா?”

“உங்களுக்கு என் வெளிப்படையான பேச்சிலும், நேர்மையிலும் சந்தேகமா அம்மா?”கண்ணன் மனதில் ஏதோ ஒரு தாக்கம்.  அந்தக் கேள்வியின் உள்ளே அவன் உணர்ந்த ஆத்மார்த்தமான நோக்கத்தை பூரணமாகப் புரிந்து கொண்டான்.  சத்யவதி சிரித்தாள்.  கண்ணனை ஒரு சின்னக் குழந்தையாகவே பாவிக்கிறாள் என்பதை அந்தச் சிரிப்பு எடுத்துச் சொன்னது.  “கண்ணா, என் கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே?  என் பக்கம், எனது அணியில் நீ இருந்து எனக்குத் துணை செய்வாயா?”

“மாட்சிமை பொருந்திய மஹாராணி அவர்களே!  நான் உங்கள் பக்கமே இருப்பேன். உங்களைப் போன்ற வலிமை பொருந்திய மஹாராணியை இந்த ஆர்யவர்த்தம் இதற்கு முன்னர் கண்டதில்லை.  அதோடு அதிக அதிகாரமும் படைத்தவர் தாங்கள்.  தங்களை விட்டு விட்டு வேறு பக்கம் நிற்க முடியுமா? அதோடு பீஷ்மர் வேறு உங்கள் அணியில் இருக்கையில் உங்களைத் தவிர்க்க முடியுமா?  நீங்கள் தவிர்க்க முடியாதவர் அம்மா!”

“ஆனால் விதியை வெல்ல முடியுமா?  அதை எதிர்த்து நம்மால் நிற்க முடியுமா?” மெல்லிய குரலில் இதைச் சொல்கையிலேயே அங்கே கண்ணனையும் விதுரரையும் தவிர வேறு யாரும் இல்லையே என உறுதி செய்து கொண்டாள் சத்யவதி.

“நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன் தாயே!” கண்ணன் உறுதிபடக் கூறினான்.  மெல்ல விதுரரை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டாள் சத்யவதி.  அதன் மூலம் விதுரரிடம் இருந்து ஏதோ செய்தியை வாங்கிக் கொண்டாளோ என்னும்படி இருந்தது.  பின்னர் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, ரகசியம் பேசும் குரலில்,, “கண்ணா, நீ பாண்டவர்கள் பக்கம் இருப்பாய் அல்லவா?  அவர்களுக்கு உதவி செய்வாய் அல்லவா?”

“பாண்டவர்கள் பக்கமா? அவர்களுக்கு உதவியா?” கண்ணன் பரிபூரணமாகத் திகைத்துப் போயிருந்தான் என்பது அவன் குரலிலும், முகத்திலும் வெளிப்படையாகவே தெரிந்தது.  “எனில் அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? தாயே,  இது எப்படி முடியும்?  அவர்களின் சவங்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன.  அனைத்து கிரியைகளும் சம்பிரதாயப்படி நடந்திருக்கின்றன.  தாயே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?”




Monday, October 15, 2012

சத்யவதியின் மனோதிடம்--தொடர்ச்சி!


எந்தவிதமான தடங்கல்களோ, யோசனைகளோ இல்லாமல் சத்யவதி நேரடியாகக் கண்ணனிடம் விசாரித்தாள்:”வாசுதேவா, நாளை நீ காம்பில்யத்துக்குப் பயணமாகப் போவதாய்க் கேள்விப் பட்டேன். “அவள் குரலின் வருத்தம் கண்ணனைக் கவர்ந்தது.  “நீ ஹஸ்தினாபுரம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.  ஆனால் வேறு ஏதேனும் சந்தோஷமான நிகழ்வுக்காக வந்திருக்கலாம்.  இப்படி துக்கம் விசாரிக்க வேண்டி வந்திருக்க வேண்டாம்.  ஒரு மாபெரும் பிரச்னையில் நாங்கள் இப்போது மூழ்கி இருக்கிறோம்.  இதிலிருந்து எப்படி வெளிவரப் போகிறோம் எனப் புரியவில்லை.”

“ஆம், அன்னையே, நானும் பாண்டவ சகோதரர்கள் ஐவராலும் பரதனால் ஏற்படுத்தப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் புனர்வாழ்வு அடையப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  மீண்டும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அவர்களால் ஏற்படும் எனவும் எண்ணி இருந்தேன்.”

“ஆம், வாசுதேவா, நானும் அவ்வாறே நினைத்தேன்.  ஆனால் கடவுளின் விருப்பம் வேறு மாதிரி இருக்கிறது.  என்ன செய்ய முடியும்!” தொடர்ந்தாள் சத்யவதி.  “வாசுதேவா, நீ துவாரகை சென்றதும் உன் தந்தைக்கும், தாய்க்கும், மற்றும் உன் அண்ணன் பலராமனுக்கும் எங்கள் கனிவான விசாரணைகளைச் சொல்லு.  உன் தந்தையைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகச் சிலரே.  ஏன் உன் தாயும் அதிர்ஷ்டம் செய்தவள் தான்.  உன் பெற்றோரைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகக் குறைவு.  நீயும், பலராமனும் அவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை விடவும் மாபெரும் அதிர்ஷ்டம் வேறென்ன வேண்டும்!”  சத்யவதியின் குரல் தழுதழுத்தது.  அவள் பாசத்தோடும், நேசத்தோடும் வளர்த்து வந்த பாண்டவர்களின் நினைவுகள் அவள் மனதில் வந்து அலைகளைப் போல் மோதின.  அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என எண்ணினாள்.  தன்னைத் தானே சமாளித்துக்கொள்ளப் பார்த்தாள்.

“மாட்சிமை பொருந்திய தாயே, தங்கள் அன்பான விசாரிப்புக்களை நான் என் பெற்றோரிடமும், அண்ணனிடமும் தெரிவிக்கிறேன்.  உங்கள் அன்பான விருந்தோம்பலையும் சொல்லியே ஆகவேண்டும்.”

“கண்ணா, உனக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?”

“ஒரு மகன் இருக்கின்றான் தாயே!”
“யார் மூலம், விதர்ப்ப இளவரசி ருக்மிணி மூலமா?”
“ஆம் தாயே.”
“பெயர் என்ன?”
“ப்ரத்யும்னன்”
“அவனுக்கு என் ஆசிகளைத் தெரிவித்துவிடு கிருஷ்ணா!”
“தங்கள் ஆணைப்படியே தாயே!” கிருஷ்ணன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான்.
“நாங்கள் உனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், வாசுதேவா, பானுமதியை மட்டும் நீ காப்பாற்றி இருக்காவிட்டால்!”  இப்போது ஒரு மஹாராணியின் கம்பீரம் அவள் குரலிலும் புகுந்து கொண்டதைக் கண்ணன் ஆச்சரியத்துடன் கவனித்தான்.  தோரணையும் மாறி விட்டது.  “குரு வம்சமே உனக்குக் கடமைப்பட்டிருக்கிறது.  நீ குருவம்சத்தின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறாய்.”
“ஓஓ, தாயே,  அதெல்லாம் எதுவும் இல்லை,  உங்கள் வரையில் இந்த விஷயம் வெளிவந்துவிட்டதா?”
சத்யவதி புன்னகை புரிந்தாள்:  “வாசுதேவா, இது என் குடும்பம்.  நான் உயிருடன் இருக்கும்வரையில் இதன் சுக, துக்கங்களில் நான் பங்கெடுக்காமல் இருக்க முடியுமா?  என் கவனிப்பைத் தான் நான் தராமல் இருக்கலாமா?  மூத்தவளான என் கவனிப்பு இருந்தே ஆகவேண்டும் இல்லையா!  நாங்கள் உனக்கு எப்படித் திரும்ப இந்த நன்றியைச் செலுத்தப் போகிறோம் என்பதுதான் புரியவில்லை.”

“ஓ, தாயே, இதைக் குறித்துச் சிந்தனையே செய்யாதீர்கள்.  இதையே யோசித்துக் கொண்டிருந்தால் சூழ்நிலை தலைகீழாகவும் மாறிவிடலாம்.   இதை முற்றிலும் மறந்துவிடுங்கள்.  பாவம், பானுமதி,  ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்.   கணவன் சொல்வதைத் தட்டக்கூடாது என்ற பாடம் மட்டுமே அறிந்திருக்கிறாள்.  அவள் மேல் தவறு எதுவும் இல்லை.  அவளைக் குற்றம் சொல்லாதீர்கள்.   அவள் மனது தூய்மையானது.  ஒருநாள் மஹா பெரிய அறிவாளியாகவும், சிறந்ததொரு பெண்மணியாகவும் வருவாள்.  பொறுத்திருந்து பாருங்கள்.”

“இது துரியோதனனின் வேலைதான் என்பதை நீ நிச்சயமாக அறிந்திருக்கிறாயா?”

“தாயே, இதன் பின்னர் யார் இருக்கிறார்கள், அல்லது யார் இருந்தார்கள் என்பதை நான் அறிய மாட்டேன்.  ஆனால் அவள் சிறு பெண்ணாக இருந்தபோதில் இருந்தே, என்னைக் குறித்துக் கேள்விப் பட்டு என் பரம ரசிகையாக இருந்து வந்திருக்கிறாள்.  இதை நன்கறிந்த யாரோ அவளை நன்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டனர். என்னை அவர்கள் பக்கம் இழுக்க ஒரு வலை விரித்துப் பார்த்திருக்கிறார்கள்.”
“உன்னை இழுக்க வலை விரித்தார்களா?  என்ன காரணத்துக்காக?”
“ம்ம்ம்ம் பட்டத்து இளவரசனுக்குத் துணைபோகவேண்டி இருக்கலாம்.  அதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்.”
“அப்படியா? உண்மையாகவா சொல்கிறாய்?”
“ஆம், தாயே,  இது உண்மையே.  ஆனால் இந்த கொடுமைக்கு எல்லாம் பானுமதியைத் தேர்ந்தெடுத்தது தவறு.  அவளால் இதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு அன்பான இளைய சகோதரியாக எனக்குப் பரிசுகள் அனுப்பி வைத்திருக்கிறாள்.  நானும் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உண்மையானதொரு சகோதரனாக இருப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளேன்.