Tuesday, April 10, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த பீமன் ,”நான் துரியோதனனின் மண்டையையும், அவன் நண்பன் அந்தத் தேரோட்டி மகன் கர்ணனின் கழுத்தையும் முறிக்க ஆசைப்படுகிறேன்.” இதைச் சொல்கையிலேயே தான் அந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்டாற்போல் பூரணத் திருப்தி அடைந்தான் பீமன். “அண்ணா, நடு அண்ணா, இவ்வளவு கொடூரக் காரனாய் இருக்காதே. நமக்கெல்லாம் எதுவும் ஆகாது; நாம் நன்றாகவே இருப்போம்.” அர்ஜுனன் பீமனைக் கண்டிக்கும் தோரணையில் கூறினான். அதே சமயம் உத்தவனைப் பார்த்துச் சிரித்ததில் இருந்து இது அடிக்கடி நடக்கும் ஒன்று என உத்தவன் புரிந்து கொண்டு அவனும் சிரித்தான். பீமனோ அதை லக்ஷியம் செய்யாமல், “நான் தீமைகளை அழிக்கவே பிறந்துள்ளேன்.” என்று பெருமையுடன் கூறினான். மேலும், அர்ஜுனனைப் பார்த்து, “நான் உன்னைப் போல் மனம் பலஹீனமானவன் அல்ல; அதே சமயம் பெரியண்ணா யுதிஷ்டிரனைப் போல் ஒரு துறவியும் அல்ல. நான் யதார்த்தமான விஷயங்களை அதன் போக்கிலேயே புரிந்து கொண்டு நடப்பவன். அவங்க என்னோடு சண்டை போட்டாங்கன்னா நானும் சண்டை போடுவேன். சும்மா விட மாட்டேன்.” என்றான்.

“ஓஹோ, பீமா, நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி அடித்துக் கொண்டால் உங்கள் வம்சமே பாழாகிவிடுமே! இந்தக் குருவம்சத்தினரின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும் போல் இருக்கிறதே. இது உங்களை மட்டுமில்லாமல் ஆர்யவர்த்தத்தையே பாதிக்கும். “ என்று உத்தவன் கவலையுடன் கூறினான். பீமனோ அதைக் குறித்துக் கவலைப்படாமல், “ஆர்யவர்த்தம் இதை அனுபவித்தே ஆகவேண்டும். அதன் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதெனில் பலப்படுத்த உதவியாக இருக்கும். எத்தனை நாட்கள் இப்படிப் பயந்து கொண்டு வாய் மூடி மெளனியாக இருப்பது? எப்போது, எங்கே இருந்து, எம்முறையில் தாக்கப் போகிறார்கள் என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் எப்படி வாழ்வது? உண்ணும் உணவில் கூட விஷத்தைக் கலந்தார்கள். எத்தனை நாட்கள் பயந்து பயந்து உணவு உண்ண முடியும்?? அவர்கள் பக்கம் நீதியோ, நியாயமோ, உண்மையோ இல்லை. இந்த அநீதிக்குப் பயந்தல்லவோ வாழவேண்டி உள்ளது? ஆகவே அர்ஜுனா, உன் ஆயுதங்களை நன்கு கூர் தீட்டி வைத்துக்கொள். இப்போது நிஜமாகவே துரியோதனாதியரோடு யுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.” பீமன் பெருமூச்சு விட்டான்.

அப்போது அவர்களை மதிய உணவு உண்ண வேண்டி அழைக்க வந்த குந்தி, பீமனின் கடைசி வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டாள். ஆனால் இளைஞர்கள் மூவரும் அதை அறியவில்லை. “பீமா, எப்போதும் யுத்தம், போர் என்றே பேசாதே! எனக்குப் பயமாய் இருக்கிறது.” என்று கவலையோடு கூறினாள் குந்தி. குந்தியின் உண்மைப் பெயர் ப்ரீத்தா என்பதாகும். குந்திபோஜனுக்கு தத்துக் கொடுக்கப்பட்டு அவனால் வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற காரணப்பெயரைப் பெற்றாள். பார்த்தாலே மரியாதை கொடுக்கும் விதமாய்க் காணப்பட்டாள் குந்தி. முக காந்தி மெய் சிலிர்க்க வைத்தாலும் அதில் காணப்பட்ட நிரந்தர சோகம் அனைவர் மனதையும் வருத்தியது. தன் மக்களைப் பார்க்கையில் அவள் கண்கள் அன்பு நிரம்பியதொரு கடல் போல் காணப்பட்டது. அதோடு தன் குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக ஆகி இருப்பதை ஏற்காதவள் போல அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள் என்று தோன்றும்படியாகப் பேசினாள் குந்தி.

“அம்மா, நாம் க்ஷத்திரியர்கள். போர் செய்வதும் ரத்தம் சிந்துவதும் நம் தொழில்; தர்மம்; கடமை. “

“தர்மத்தைக் காக்க மட்டுமே ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும் பீமா!” குந்தி கண்டிப்பான குரலில் கூறினாள்.

“அதே தான் தாயே! நம் அனைவரையும் அதர்மத்தில் இருந்தும் அதர்மமான முறையில் நாம் தாக்கப்படுவதில் இருந்து காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. துரியோதனாதியரின் அதர்மமான செயல்களில் இருந்து நம் அனைவரையும் காக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதற்காகவே போர் செய்ய எண்ணுகிறேன். உங்கள் மகனான எனக்கு இது கடமையன்றோ!” பீமன் கூற, “உத்தவன் போன்ற சிறந்த வீரர்கள் துணை இருக்க உங்களுக்கு ஆபத்து எங்கிருந்து வரும்?” என்று கூறினாள் குந்தி.

“அத்தையாரே, எங்களில் கூட ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது தான் எதிரிகளிடம் மட்டுமே சண்டையிடுவது என வைத்திருக்கிறோம். இதை எங்களுக்கு உணர்த்திய வாசுதேவ கிருஷ்ணனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் உத்தவன்.

“ஆஹா, கிருஷ்ணன் மட்டும் இங்கிருந்தால்?” குந்தி பெருமூச்சு விட்டாள்.

Wednesday, April 4, 2012

பீமன் விவரிக்கிறான்!

“உத்தவா, தாத்தாவைக் குறை சொல்லாதே! அவர் என்ன செய்வார் பாவம்! இந்த மாபெரும் சாம்ராஜ்யச் சுமையைத் தன்னந்தனியாகத் தோள்களில் சுமந்து கொண்டு வந்திருக்கிறார். அவருடைய நீண்ட நெடிய வாழ்க்கையில் அவர் கண்ட சுகம் தான் என்ன?? வாலிபப் பருவத்திலேயே தன் தந்தையார் ஷாந்தனுவுக்காக, அவருடைய இல்வாழ்க்கைக்காக மாபெரும் சபதம் ஒன்றைச் செய்தார். அப்போதே தன் தந்தையாரிடம் தாம் உயிருடன் இருக்கும்வரையில் இந்தக் குருவம்சத்தினரின் மேன்மையைக் குறித்து மட்டுமே நினைப்பது, அதற்காகாவே பாடுபடுவது, தர்மத்தின் வழியில் அரசாட்சி நடைபெறுகிறதா எனக் கண்காணிப்பது என்ற பொறுப்புக்களையும் தாம் ஏற்றுக்கொண்டு இன்று வரை அதைச் செவ்வனே நிறைவேற்றியும் வருகிறார். இந்த நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர் செய்திருக்கும் தியாகம் அளப்பரியது. வேறு எவரும் செய்யக் கூடியதல்ல. இப்போது என் பெரியப்பா குமாரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வராமல், அடங்காமல் இருப்பதைக் கண்டு அவர் மனம் நொந்து போயிருக்கிறார் என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களாலேயே ஓரளவுக்கு சாந்தி அவருக்குக் கிடைத்து வருகிறது. இந்த நாட்டிற்காக அவர் படும் கஷ்டங்கள் அனைத்தும் எங்களால் தீர்த்து வைக்கப்படும் எனவும் நம்புகிறார்.”

“இன்னொரு விஷயம் அறிவாயா நீ? இதே தான் பகவான் வேதவியாசரும் நினைக்கிறார். சென்ற முறை இங்கே அவர் வந்திருந்த சமயம், எங்களை அழைத்து என்ன கூறினார் தெரியுமா, “குழந்தைகளே, அரச தர்மத்திலிருந்தும், க்ஷத்திரிய தர்மத்திலிருந்தும் சிறிதும் பிறழாமல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் இந்த ஹஸ்தினாபுரத்தின் அரியணை ஏறுகையில் தர்மத்தின் பாதையில் செல்வதைக் குறிக்கோளாய்க் கொள்ளுங்கள்.” என்று கூறினார். “ அர்ஜுனன் நீண்டதொரு பிரசங்கம் செய்த களைப்பில் காணப்பட்டான்.

“பின் ஏன் அவர்களால் துரியோதனாதியரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை?” உத்தவனுக்குப் புரியவே இல்லை. அர்ஜுனன் சிரித்துக் கொண்டான். “நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கும் போர் இது. இதில் எப்போது சரியான சமயம் வருகிறதோ அப்போதே நீதி ஜெயிக்கும். அதுவரை காத்திருக்க வேண்டியது தான். இப்போதைக்கு துரியோதனாதியர் தங்களுக்கென ஓர் அணி அமைத்துக் கொண்டிருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்.” சட்டெனத் தன் குரலைத் தழைத்துக் கொண்ட அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்த்து அங்கே யாரும் இல்லை என்பதையும் வேறு யாரும் கதவருகிலேயோ, சாளரத்தருகிலேயோ நின்று ஒட்டுக் கேட்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு ரகசியம் பேசும் குரலில் உத்தவனிடம் கூறினான்:”ஆசாரியர் துரோணர் கூட இப்போது எங்களை ஆதரிக்கவில்லை என்று செய்தி காதில் விழுகிறது.” அர்ஜுனன் பேசிக் கொண்டிருக்கையிலேயே தடதடவெனக் காலடிச் சப்தங்கள் கேட்டன. இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். பீமனின் உற்சாகக் குரலும், உற்சாகம் ததும்பும் முகமும் தென்பட்டன.

பீமனே உள்ளே நுழைந்தான். பாண்டவர்களில் இரண்டாவது ஆன பீமன் அர்ஜுனனை விடவும் நல்ல உயரமாகவும், அவன் கழுத்தே ஒரு தூண் போல நின்று கொண்டு அவனிரு தோள்களும் அந்தக் கழுத்தைத் தாங்குவது போலவும் தோன்றியது உத்தவனுக்கு. சாதாரண மனிதனை விடவும் உயரமும், பருமனும் அதிகம் கொண்டிருந்த அவன் உத்தவனை வரவேற்கும் தோரணையில் பார்த்துவிட்டு, “அர்ஜுனா, நான் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன்.” என்று அறிவித்தான். மீண்டும் தன்னுடைய விசாலமான முகமே மேலும் விசாலம் ஆகும்படியான புன்னகை ஒன்றைச் செய்து கொண்டு உத்தவனைக் கட்டியணைத்துக் கொண்டு ஆசிகளை வழங்கினான். “நடு அண்ணா, என்ன ஏற்பாடுகள்? எதைச் செய்துவிட்டீர்?” அர்ஜுனன் புரியாமல் கேட்டான். அவர்களுக்கு எதிரே இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான் பீமன். “துரியோதனனும், அவன் சகோதரர்களும், அவர்களின் தாய்க்கு சகோதரரும், காந்தார இளவரசரும் ஆன சகுனி மாமாவுடன் சேர்ந்து கொண்டு ஒரு மோசமான திட்டம் போட்டு நம்மைக் கவிழ்க்க அல்லது அடியோடு அழிக்க இருந்தனர். அஸ்வத்தாமாவும் இந்தப் போட்டா போட்டியில் தீவிரமான உணர்வுகளோடு கலந்து கொண்டிருக்கிறான். வரும் இரவுகளில் ஓர் இரவு நம் அனைவரையும், அவர்கள் கொன்றுவிடத் திட்டம் போட்டிருக்கின்றனர். “ பீமன் சொல்லி முடிக்கையில் ஏதோ வேடிக்கை விளையாட்டைப் பற்றிப் பேசுவது போன்ற தொனியில் கூறினான். கூறிவிட்டு இடி இடியெனச் சிரிக்கவும் செய்தான்.

“நீர் இதை எவ்வாறு அறிந்தீர்?” அர்ஜுனன் கேட்க, பீமன், “சஹாதேவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஒருவேளை சித்தப்பா விதுரர் கூறி இருக்கலாம். அவன் என்னிடம் கூறினான். அவர்கள் நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளின் மூலமே அவர்களைக் கவிழ்க்க ஏற்பாடுகள் செய்கிறேன்.” ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கூறிய பீமன், “அர்ஜுனா, உன் வில், அம்புகளைத் தயார் செய்து கொள். இவ்வளவு நேரம் பாடுபட்டு அவற்றை நீ தீட்டிக் கூர் செய்து வைத்தது வீணாகலாமா?? இந்த மாளிகையைச் சுற்றிலும் நான் பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். அவர்கள் நம்மைத் தாக்கவேண்டியது தான். நாம் அவர்களை உடனே முடித்துவிடலாம். என்ன அர்ஜுனா, நான் சொல்வது சரிதானே?” பீமன் குதூகலம் பொங்கக் கேட்டான்.

Tuesday, April 3, 2012

அர்ஜுனனுக்குக் கலக்கம்!

சற்று நேரம் அர்ஜுனன் தான் பேசவேண்டியதை யோசித்துப் பின்னர் பேசத் தொடங்கினான். அவன் நிதானமாகப் பேசுவதில் இருந்து தான் அதன் முக்கியத்துவத்தை உத்தவன் உணர்ந்து கொண்டான். “உத்தவா, எங்கள் பெரியப்பாவின் மக்களுக்கு எங்களைக் கண்டால் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மனப்பூர்வமாய் வெறுக்கின்றனர். அதுவும் எங்கள் மூத்தவரான யுதிஷ்டிரர் யுவராஜா ஆனதை துரியோதனனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்குச் சேரவேண்டிய உரிமையை அவர் பிடுங்கிக் கொண்டதாகவே நினைக்கிறான். தன் தந்தை திருதராஷ்டிரன் இப்படிப் பிறவிக் குருடாகப் பிறந்ததை அவனால் ஏற்கவும் முடியவில்லை; அதற்காகத் தந்தையை அவன் மன்னிக்கப் போவதும் இல்லை. ஏனெனில் அவர் பிறவிக் குருடராகப் பிறந்ததன் காரணமாகவே அரசுக்கட்டில் ஏறமுடியவில்லை. எங்கள் தந்தையான பாண்டு அரசரானார். திருதராஷ்டிரனுக்குச் சேரவேண்டியதைப் பாண்டு பிடுங்கிக் கொண்டு எங்களிடம் கொடுத்துவிட்டார் என்றே எண்ணுகிறான். “ அர்ஜுனன் மீண்டும் சிரித்தான்.

“ம்ம்ம்ம்… உன் தந்தை தானே குருவம்சத்தில் கடைசி அரசராக இருந்தார். மக்கள் போற்றும் நல்ல அரசராகவும் ஆட்சிபுரிந்தார். “ உத்தவன் தொடர்ந்தான். “நம் நாட்டின் அரசகுல வழக்கப்படி யார் அரசராக இருந்தார்களோ அவர்களின் மூத்தமகனே அடுத்த அரசனாக முடியும்; ஆகவேண்டும். அதோடு வயதில் மூத்தவரே அரியணை ஏறுவதும் வழக்கம். அப்படிப் பார்த்தாலும் யுதிஷ்டிரனுக்கே அந்தத் தகுதி இருக்கிறது. ஆகவே இது முறைகேடானது அல்ல.”

“உண்மைதான். அதனால் தான் தாத்தா பீஷ்மர் அவர்கள் மூத்தவனான யுதிஷ்டிரனை யுவராஜாவாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் எங்கள் பெரியப்பாவின் குமாரர்களுக்கு இது பிடிக்கவில்லை; அவர்கள் யுதிஷ்டிரனை ஒத்துக்கொள்ளவும் இல்லை.” அர்ஜுனனுக்குத் தன் தகப்பனைக் குறித்துக் கொஞ்சம் பெருமையும் ஏற்பட்டது.
“எப்படிப் பார்த்தாலும் நீங்கள் பாண்டுவின் புத்திரர்களே அரசாளத் தகுதி படைத்தவர்கள். “ உத்தவன் கூறினான். “பிரச்னையே அது தான்.” அர்ஜுனன் புன்னகை புரிந்தான். “எங்கள் பெரியப்பாவின் குமாரர்கள் எங்களை வெறுக்கின்றனர். எங்கள் திறமையை வெறுக்கின்றனர். நாங்கள் எல்லாவற்றிலும் திறமைசாலிகளாக இருப்பதையும் வெறுக்கின்றனர். நாங்கள் ஹஸ்தினாபுரத்துக்காக நடந்த சில போர்களில் கலந்து கொண்டு ஹஸ்தினாபுரத்துக்கு செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்ததை அவர்களால் சகிக்க முடியவில்லை. இதனால் நாட்டு மக்களுக்கு எங்கள் மேல் அளவற்ற அபிமானம் இருப்பதையும் அவர்களால் பொறுக்க முடியவில்லை. குறிப்பாக பீமனை அவர்கள் எப்படியேனும் கொல்லவே முயன்றார்கள். ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களை அவர்கள் அவமானம் செய்ய நினைத்தபோதெல்லாம் பீமன் அவர்களை முட்டாளாக்கிவிட்டுச் சிரிப்பான். “

“அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அல்லவா?” உத்தவன் கொஞ்சம் நடுநிலையோடு பேசினான். “ஏனெனில் நீங்கள் ஐவருமே திறமைசாலிகளாகவும், தைரியசாலிகளாகவும், அனைவராலும் விரும்பப் படுபவர்களாகவும் இருக்கின்றீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்கே பொறாமை வருகிறதே.”

“சகோதரா, உத்தவா! நாங்கள் அரச குடும்பத்தில் பிறக்காமல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். “ பெருமூச்சு விட்டான் அர்ஜுனன். “அப்போது நாங்கள் ஐவரும் துவாரகைக்கு வந்து உன்னோடும், கிருஷ்ணனோடும், பலராமனோடும் எங்கள் வாழ்நாட்களை கழிக்கலாம். இன்பமயமாக இருந்திருக்கும்.”

“நீங்கள் எங்களைத் தேடி வந்தால் நாங்கள் கட்டாயமாய் முழுமனதோடு உங்களை வரவேற்போம்.” உத்தவன் குரலில் ஒரு ஆதுரம் தொனித்தது. “அதிலும் கிருஷ்ணனுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உன்னை அதிகமாய் நேசிக்கிறான். உன்னுடன் கழித்த இனிய நாட்களை அவன் மறக்கவில்லை.”

அர்ஜுனன் மன்னிப்புக் கேட்கும் குரலில், “பீமனுக்கு கிருஷ்ணனும், பலராமனும் செய்திருக்கும் உதவிகளை நாங்கள் மறக்க முடியுமா? மதுராவில் இருக்கையில் கழிந்த அந்த ஆனந்தமயமான நாட்கள். நானும், கிருஷ்ணனும் அருகருகே படுத்துக் கொண்டு இரவு முழுதும் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் விண்ணில் சுக்கிரோதயம் கூட ஆகிவிடும். அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.” அர்ஜுனன் கண்கள் அந்தப் பழைய நினைவுகளில் ஆழ்ந்தது. “பீமனின் வெகுளித்தனத்தையும், அவனுடைய நல்ல குணத்தையும் மறக்க இயலுமா? அவனும் எங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறான்.” உத்தவன் ஆமோதிக்க, அர்ஜுனன் கொஞ்சம் யோசனையோடு கூறினான். “ஹஸ்தினாபுரத்தை விட்டு நாங்கள் எப்போதோ வெளியே செல்ல எண்ணினோம். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் தாத்தா பீஷ்மரின் அன்பு எங்களைக் கட்டிப் போட்டு வருகிறது. நாங்கள் இங்கிருந்து கிளம்பினால் அவர் மனம் உடைந்து போவார்.”

“ஏன்? உங்கள் பெரியப்பா குமாரர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவரால் இயலவில்லை எனில் உங்களுக்கென ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்துத் தனியாக உங்களை அனுப்பி வைக்கலாமே? அவருக்கு அத்தகைய அதிகாரம் இல்லையா என்ன? இம்மாதிரி தினம் தினம் நீங்கள் படும் அவஸ்தைகளுக்கும், மன வேதனைகளுக்கும் ஒரு முடிவு வருமே! அவர் அதைச் செய்யலாமே!” உத்தவன் கொஞ்சம் கோபமாகவே சொன்னான்.