Saturday, March 31, 2012

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே!

அன்று காலை உத்தவன் அங்கே வந்து சேர்ந்தபோது பீமனும், அர்ஜுனனுமே கோட்டை வாயிலுக்குச் சென்று அவனை எதிர் கொண்டு அழைத்து வந்தனர். சம்பிரதாயப்படி குந்தியைச் சந்தித்து வணங்கி மூத்தவரான யுதிஷ்டிரரையும் பார்த்துத் தான் கிருஷ்ண வாசுதேவனின் செய்தியைச் சுமந்து வந்திருப்பதை உத்தவன் தெரிவித்தான். கிருஷ்ண வாசுதேவன் ஹஸ்தினாபுரத்துக்கு வரப் போகிறான் என்பதைக் கேட்டுக் கொண்டு யுதிஷ்டிரர் அன்றாட ராஜரீக நிர்வாகங்கள் குறித்தான ஆலோசனைகளில் கலந்து கொள்வதற்காக அரச சபைக்குப் புறப்பட்டுச் சென்றார். சாத்திரங்களில் வல்ல சஹாதேவனும் உடன் சென்றிருந்தான். அவன் இந்த ராஜநீதியிலும், நிர்வாக சம்பந்தமான விஷயங்களிலும் மற்ற சாத்திரங்களிலும் நிபுணனாக இருந்ததோடு இத்தனை சிறிய வயதில் ராஜரீக நிர்வாகக் குழுவில் முக்கியமானதொரு உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டிருந்தான். இந்த ராஜரீக நிர்வாகக் குழுவே யுதிஷ்டிரருக்கு அவ்வப்போது தக்க ஆலோசனைகளை வழங்கி வந்தது.

பீமனும், நகுலனும் தங்கள் தங்கள் வேலைகளைக் கவனிக்க குந்தியோ அன்றாட வீட்டு நிர்வாகங்களைக் கவனிக்கவும், அன்றைய மதிய உணவுக்கான சிறப்பு ஏற்பாடுகளைக் குறித்துச் சொல்லவும் சென்றுவிட்டாள். உத்தவன் மெல்ல அர்ஜுனனிடம் ஹஸ்தினாபுரத்தின் அப்போதைய சூழ்நிலையைக் குறித்து விசாரித்தான். அர்ஜுனனும் சிறிதும் மறைக்காமல் அனைத்தையும் உத்தவனிடம் பகிர்ந்து கொண்டான். யுதிஷ்டிரரை யுவராஜாவாக ஆக்கினாலும் கூட அவர்களுக்கு நிம்மதி என்பதோ, மனதிலே உற்சாகமோ ஏற்படவில்லை என்பதையும் குறிப்பாகத் தெரிவித்தான். உத்தவனோ பிதாமஹர் பீஷ்மரின் ஆதரவும், நாட்டு மக்களின் ஆதரவும் குறைவற இருக்கும்வரையில் ஏன் கவலைப்படவேண்டும் எனக் கேட்டான். அர்ஜுனன் அவனை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் விசித்திரக் கலவையானதொரு உணர்வு.

வேறொரு அம்பை எடுத்து அதன் கூர்மையைத் தன் கைகளால் பரிசோதித்த அர்ஜுனன், அதைத் தீட்டிய வண்ணமே பேச ஆரம்பித்தான். “ஆம், எங்கள் மூத்தவர் யுவராஜாதான். இந்த நாட்டு மக்களுக்குக் கட்டளையிடக் கூடிய அதிகாரம் படைத்தவரே. ஆனால் அவருடைய கட்டளைகள் எங்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆன பெரியப்பா மகன்களிடம் சிறிதும் எடுபடவில்லை; அவர்கள் யுவராஜா யுதிஷ்டிரரையோ அவரிடும் கட்டளைகளையோ ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. மக்கள் எங்களை எவ்வளவு ஆழ்ந்து நேசித்தாலும், இவர்கள் செய்யும் காரியங்களும் போடும் திட்டங்களும் எங்களைப் படுகுழியில் தள்ளிவிடும் போல் உள்ளன. அவர்கள் எங்களை அடியோடு அழிக்க நினைக்கின்றனர்.” ஒரு சிரிப்போடு சொன்ன அர்ஜுனனைக் கூர்ந்து கவனித்தான் உத்தவன்.

அவனால் அர்ஜுனனின் இந்தச் சிரிப்பைக் கண்ணனின் சிரிப்போடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ம்ம்ம்ம்?? அர்ஜுனனும் கண்ணனும் ஒரே மாதிரிச் சிரிக்கின்றார்களே?? இல்லை; இல்லை. ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஆம், கண்ணனின் புன்னகை மனதை மயக்குவதோடு அல்லாமல் அனைவரின் இதயத்தையும் கவரும்; இல்லை; அது கூடச் சொல்ல முடியாது. அனைவரின் இதயத்தையும் வெல்லும் தன்மையுடையது. அர்ஜுனனின் சிரிப்போ கண்களைக் கவர்வது என்னவோ உண்மைதான்; அதில் நட்பும் தெரிகிறது தான். ஆனால் கண்ணனின் புன்னகையை விட அந்த மாசு மருவில்லாச் சிரிப்பை விட இதயத்தின் ஆழத்தில் சென்று நமக்கு நம்பிக்கையையும், உறுதியையும், பாதுகாப்பையும் கொடுக்கும் புன்னகையை விட இந்த அர்ஜுனனின் புன்னகை பல மாற்றுக் குறைவுதான்.

அர்ஜுனன் இது எதையும் அறியாதவனாகத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். உத்தவன் உடனே, “ உங்கள் ஐவரால் குரு வம்சத்திற்கு எவ்வளவு பெருமை சேர்ந்திருக்கிறது என்பதை அறிவாய் அல்லவா?? தன்னுடைய நியாயமான நேர்மையான வழிகளா யுதிஷ்டிரனும், பீமனும், நீயும் உங்கள் திறமையாலும், வலிமையாலும், மூத்தவனை மதிக்கும் பண்பாலும், நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும், உங்களோடு ஒத்து இருப்பதிலும், “ உத்தவன் பேசுகையில் அர்ஜுனன் குறுக்கிட்டு, “அதே போல் சஹாதேவன் இந்த இளம் வயதில் சாத்திரங்களைப் பூரணமாக அறிந்திருப்பதோடு எங்கள் அனைவருக்கும் கட்டுப்பட்டு இருப்பதிலும், எங்கள் ஐவரின் ஒற்றுமையும், பலமும் குருவம்சத்துக்கு மேன்மேலும் பெருமையைத் தேடித் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.” உத்தவன் நகுலனையும், சஹாதேவனையும் விட்டுவிட்டதில் அர்ஜுனனுக்கு இருந்த வருத்தத்தை அவன் புரிந்து கொண்டான். தன் மாற்றாந்தாயின் மகன்களாக இருந்தாலும் அவர்களைத் தன் சொந்த சகோதரர்களாகவே அவன் மட்டுமின்றி மற்ற இருவரும் கருதுவதையும் புரிந்து கொண்டான்.

Friday, March 30, 2012

அர்ஜுனனும், உத்தவனும் பேசுகின்றனர்.

ஹஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்த திருதராஷ்டிரனின் அரண்மனைக்குப்பக்கத்திலேயே ஒரு அழகான அரண்மனை. அதன் வாயிலில் பலத்த காவல் போடப் பட்டிருந்தது. அதோடு பல்வேறு மக்களும் அங்கே காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் யாரோ முக்கியமானவர்கள் அங்கே வசிப்பதாய்த் தெரிய வருகிறது. அதோடு அரசவையின் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட தளபதிகள், அமைச்சர்கள் என வந்து போய்க் கொண்டிருந்தனர். அதன் நீள நீளமான தாழ்வாரங்களில் ஆங்காங்கே விற்கள், அம்புகள், கதைகள், வாள்கள், வேல்கள் எனக் குவிந்து கிடந்தன. பார்த்தால் ஒரு ஆயுதசாலையே அங்கே இருந்தது எனலாம். அங்கே கங்கையைப் பார்த்த வண்ணம் ஒரு நீண்ட தாழ்வாரம். அங்கே உத்தவன் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே பாண்டுவின் புத்திரர்களில் மூன்றாவதான அர்ஜுனன் தன்னருகே இருந்த மாபெரும் வில்லின் அம்புகளின் கூரைச் சரிபார்த்துக்கொண்டு மேலும் கூர் தீட்டிக் கொண்டிருந்தான். அவன் முகத்தின் பாவமும், உத்தவன் முகத்தின் பாவமும் விஷயம் ஏதோ முக்கியமானது என்பதைச் சுட்டிக் காட்டியது.

அர்ஜுனன் வில் வித்தையில் மட்டும் சிறந்து விளங்காமல், ஆயுதங்கள் தயாரிப்பதில் அவனுக்கு நிகரில்லை என்னும்படி விளங்கினான். தனக்குத் தேவையான ஆயுதங்களை அவனே தயாரித்துக் கொண்டதோடு அல்லாமல் அதில் ஏதேனும் ஒரு தனிப்பட்ட சிறப்பம்சத்தைப் புகுத்தியும் சோதனைகள் செய்து அதில் வெற்றியடைந்தான். அவனுக்கு இருந்த கூரிய கண் பார்வையும், திறமையும் அவனுக்குக் கடவுள் தந்த வரம் என்றே அனைவரும் பேசிக்கொண்டனர். கிட்டத்தட்டச் சம வயது இளைஞர்களான இருவரும் உயரம், பருமன், ஆகிருதியில் ஒன்றாகத் தெரிந்தாலும், அவர்களுக்குள்ளே வித்தியாசங்களும் காணப்பட்டன. வெளிப்பார்வைக்குக் கவர்ச்சியாகக் காணப்பட்டாலும் உத்தவனின் கண்டிப்பான மனம் அவன் கண்களிலும், முகபாவத்திலும் தெரிந்தது. அவன் வயது இளைஞர்களிடம் காணப்படாத ஒரு தீவிரமான பொறுப்பும், மன முதிர்ச்சியும் அவனிடம் காணப்பட்டது.

ஆனால் அர்ஜுனனோ? உத்தவனுக்கும் அவன் அத்தை மகன் தான். அவன் தந்தை தேவபாகனுக்கும் குந்தி சகோதரியே. அர்ஜுனன் நன்றாக ஆகிருதியோடு இருந்ததோடு அல்லாமல் நல்ல சிவந்த முகத்துடனும், அழகான முகத்துடனும் எடுப்பான உடல்கட்டோடும் காணப்பட்டான். அவனுடைய ஒவ்வொரு அங்கமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போல் வசீகரத்துடனும், இணையற்ற எழிலுடனும் காணப்பட்டது. பார்ப்பவர்களை மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் விதம் அவன் காணப்பட்டான். ஈடு இணையற்ற புத்திசாலித் தனம் பளிச்சிட்ட கண்களில் மேலே வளைந்திருந்த புருவங்கள் பெண்களுக்கு இருப்பது போல் வில்லைப் போல் காணப்பட்டது. உணர்ச்சிகள் ததும்பும் கண்களைக் கொண்டிருந்த அவன் குரலும் வசீகரமாக இருந்ததோடு பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்வுகளில் தோய்ந்து எதிராளியைக் கவர்ந்தது. அவன் அணிந்திருந்த உடையும், ஆபரணங்களும் கூட அவன் உணர்வுகளை எடுத்துக்காட்டுவது போல் அமைந்திருந்தது. இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள்?????

Tuesday, March 27, 2012

ஏகலவ்யனின் தியாகம்!

அஸ்வத்தாமா வேகமாய்ச் சென்றுவிட்டான்; துரோணர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு மீண்டும் மீன்களுக்கு உணவிடும் வேலையை ஆரம்பித்தார். அவர் கைகள் இயந்திரத்தனமாய் அந்த வேலையைச் செய்கையில் மனம் பின்னோக்கிச் சென்றது. தன்னைத் தானே மெச்சிக்கொண்டார் துரோணர். எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அவரால் எப்படிப்பட்ட சிக்கலான அரசியல், வாழ்நாள் சூழ்நிலைகளையும் அவற்றின் புதிர்களையும் அவிழ்த்துத் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்க முடியும். ஆம்! அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன எண்ணுகிறாரோ அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் திறன் அவரிடம் உள்ளது. இதற்கானதொரு அழிக்க முடியாச் சான்றும் கடந்த காலங்களில் உண்டு. ம்ம்ம்ம்ம்??? அந்த நிஷாத இளவரசன் ஏகலவ்யன்!

துரோணரின் முன்னே சில வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சிகள் விரிந்தன. துரோணரின் வில் வித்தைத் திறமை குறித்தும், ஆயுதப் பயிற்சி குறித்தும் அறிந்த நிஷாத இளவரசன் ஏகலவ்யன் அவரிடம் வந்து பாதம் பணிந்து தன்னையும் அவர் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டினான். ஆனால் துரோணர் அவனாலோ அவனின் நிஷாத நாட்டினாலோ தனக்குப் பயன் ஏதும் விளையாது என்பதைப் புரிந்து கொண்டார். ஆகவே தனக்கு இவன் சீடனாக ஆனால் பிற்காலத்தில் இவனால் பயன் ஏதும் இராது என்பதைத் தெரிந்து கொண்டார். தன்னுடைய திறமையைப் பயனற்ற சீடர்களிடம் செலுத்த விருப்பமில்லாத துரோணர் அவனை நிராகரித்துவிட்டார். குரு வம்சத்து இளவரசர்களை, முக்கியமாய் அர்ஜுனனை, தன்னிரு கைகளாலும் மாற்றி, மாற்றி ஒரே வேகத்தோடு வில்லையும் அம்பையும் பிரயோகிக்கத் தெரிந்தவனை மேலும் திறமைசாலியாக்க வேண்டும். ஏகலவ்யன் சென்றுவிட்டான். காட்டில் அவனுடைய வேடுவ நாட்டுக்குச் சென்றவன் துரோணரிடம் கொண்டிருந்த கண்மூடித்தனமான பக்தியில், அவரைப் போன்றதொரு சிலையைச் செதுக்கி, தனக்கு குருவாக மேற்கொண்டு தன் வில் வித்தையைத் தானே ஆரம்பித்துக் கொண்டான். விரைவில் அர்ஜுனனை விடவும் திறமைசாலியாக மாறினான்.

தற்செயலாக இது குறித்து அறிய நேர்ந்தார் துரோணர். முதலில் தன்னுடைய நேரடியான இருப்பை விடவும் தன்னுடைய நினைவிலேயே ஒருவன் வில் வித்தையில் தேர்ந்தது குறித்துப் பெருமையும், கர்வமும் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஏகலவ்யனின் வித்தையை நேரில் பரிசோதிக்கச் சென்றார். அவனுடைய திறமையும், வேகமும், ஒழுங்கும் கட்டுப்பாடான பிரயோகத்தையும் கண்டு பிரமித்தார். ஒரு வேட்டுவ நாட்டு இளவரசனிடம் இத்தனை திறமையா என வியந்தார்! ஆனால்,,,, ஆனால் இது நமக்கு நன்மை தருமா?? ஒரு வேட்டுவனிடம் இத்தனை திறமைகள் குவிந்திருப்பது; அதுவும் வில் வித்தையில் நவீனமான பாணிகளை அவன் புகுத்தித் திறமையுடன் பிரயோகம் செய்வது நாட்டுக்கும், அதன் அரசர்களுக்கும் நன்மை பயக்குமா? அவன் யாருக்கு உதவி செய்கிறானோ அவர்கள் பக்கமே நிச்சயம் ஜெயம் ஏற்படும். கூடாது; இதை வளரவிடக் கூடாது. துரோணருக்குத் தன் நிலைமை குறித்த அச்சமும் ஏற்பட்டது. என்றாவது ஒரு நாள் இந்த இளைஞன் அர்ஜுனனை விடவும் சிறந்து விளங்குவான். ஆஹா, குரு வம்சத்து இளவரசர்கள் மூலம் என் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள இருக்கும் என் கதி என்னாவது! இவனை வளரவிட்டால் அதோகதிதான். என்ன செய்யலாம்??

அப்போது அந்த இளைஞனே அதற்கும் வழி வகுத்துக் கொடுத்தான். தான் குருவின் நேரடி மேற்பார்வையில் வித்தைகள் கற்காவிட்டாலும் துரோணரின் பெயரையும், அவரின் உருவச் சிலையையும் வைத்துக் கற்றிருப்பதால் இப்போது நேரடியாகத் தன்னை வாழ்த்த வந்திருக்கும் குருவுக்கு குரு தக்ஷிணை கொடுக்க ஆசைப் பட்டான். துரோணரிடம் குரு தக்ஷிணையாக எது வேண்டுமெனக் கேட்டான். உடனே துரோணரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அவனைப் பார்த்து அவன் வலக்கைக் கட்டை விரலைத் தனக்குக் காணிக்கையாகக் கொடுக்கும்படி சொல்ல இளைஞன் திகைத்தான். துரோணரின் கால்களில் வீழ்ந்து வேறு எதை வேண்டுமானாலும் கேட்கும்படி வேண்ட, துரோணரோ பிடிவாதமாய் அவன் வலக்கைக் கட்டைவிரலைத் தவிர வேறெதையும் தனக்கு குரு தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டாம் எனச் சொல்லிவிடுகிறார். இல்லை எனில் தாம் அவனுக்கு இலவசமாய்க் கற்றுக் கொடுத்ததாய் இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டு எழுந்து விடுகிறார். குருவுக்கு தக்ஷிணை கொடுக்கவில்லை எனில் வித்தை பூர்த்தி இல்லை என்பதை அறிந்த ஏகலவ்யன் கண்ணீர் மல்கும் கண்களோடு தன் வலக்கைக் கட்டை விரலை அறுத்து துரோணரின் காலடிகளில் வைக்கிறான். ஒரு நிமிடம் துரோணரின் மனம் கலங்கியது. பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டார். கூடாது; கூடாது; இத்தகையதொரு பாசத்தினால் என் மனதை நான் இளக வைக்கக் கூடாது. பின்னர் என்னுடைய விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் நிறைவேறுவது எங்கனம்?? அந்த ரத்தம் ஒழுகும் கட்டைவிரலை ஏற்றுக்கொண்டு ஏகலவ்யனை ஆசீர்வதித்துவிட்டு துரோணர் அங்கிருந்து கிளம்பினார்.

இப்போதும்…. இப்போதும் கிட்டத்தட்ட அப்படி ஒரு சூழ்நிலைதான். ஆனால்…..ஆனால் இப்போது கட்டை விரல் தேவை இல்லை துரோணருக்கு. அவருக்கு மிகவும் பிடித்த அவருடைய பாசத்துக்கும், நேசத்துக்கும் உகந்த ஐந்து மாணவர்களை அவர் அப்புறப்படுத்தியே ஆகவேண்டும்; அவர்களில் ஒருவன் ஆன அர்ஜுனன் அவருக்கு மிகவும் நெருங்கியவனாகவும், பாசத்துக்கு உகந்தவனாகவும் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரனாகவும் இருந்தால் கூட.

அவர் யார்? துரோணர்! தன் வழியில், தன் கனவுகளை நிறைவேற்றுவதில் தடையாக எவர் வந்தாலும் அவர்களை அப்புறப் படுத்தியே ஆவார். அவர் வழியில் யாரும் குறுக்கே வரக் கூடாது!

Saturday, March 24, 2012

அஸ்வத்தாமாவின் ஆச்சரியம்!

வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் திருதராஷ்டிரனுக்குப் பாண்டுவின் புத்திரன் யுவராஜாவானது உள்ளூரப் பிடிக்கவில்லை என்பதை துரோணர் அறிவார். திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் இருக்கப் பாண்டு புத்திரன் யுவராஜா ஆனதைக் கெளரவர்கள் எவருமே விரும்பவில்லை. துரியோதனனோ கொதித்துக்கொண்டிருந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிப் புலம்பினான். அவனை அடக்கி வைத்துக்கொண்டிருப்பது அஸ்வத்தாமா தான். மீண்டும் துரோணருக்குப் பெருமை ஏற்பட்டது. ஆம், துரியோதனன் எப்படி இருந்தாலும் அஸ்வத்தாமாவுடனான அவன் நட்பு பிரிக்க முடியாத ஒன்று. தன் வசதிக்காகவே துரோணர் தன் அருமைப் பிள்ளை அஸ்வத்தாமா மூலம் துரியோதனனை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ நிலைமை மாறுகிறது. குருவம்சத்தினருக்கும், யாதவர்களுக்கும் வாசுதேவ கிருஷ்ணன் மூலம் கூட்டணி ஏற்பட்டுவிட்டால்?? இந்தக் கூட்டணிக்குப் பிதாமகர் பீஷ்மர் முழு மனதோடு சம்மதமும் கொடுப்பார்! அப்படி மட்டும் நடக்கக் கூடாதெனில்! துரியோதனின் பொறாமைத் தீக்கு நெய் வார்க்க வேண்டும். துரியோதனன் யுவராஜாவாக இருந்தால் மட்டுமே துரோணர் நினைத்தது நடைபெறும். அதிகாரமும், செல்வாக்கும் அவர் கையில் இருக்கும்.

துரியோதனன் நம்பிக்கைக்கு உகந்தவன் அல்லதான். துடுக்காகவும் அவமரியாதையாகவும் பேசக் கூடியவனே. அவனுக்கு ஆலோசனைகள் சொல்பவர்களும் நல்லவிதமாய்ச் சொல்வதில்லை; என்றாலும் எல்லா விதத்தில் திறமையும், வலிமையும், நீதி, நேர்மை, நியாயத்துக்குக் கட்டுப்பட்டவனாயும் இருக்கும் யுதிஷ்டிரனைக் காட்டிலும் துரியோதனனைச் சீக்கிரம் நம் இஷ்டத்துக்கு வளைக்க முடியும். தனக்குள் புன்னகைத்துக்கொண்ட துரோணர் கைகளைத் தட்டி ஒரு வேலையாளை அழைத்துத் தன் மகன் அஸ்வத்தாமாவை உடனடியாகக் கூட்டி வரச் சொன்னார். பின்னர் மீண்டும் மீன்களுக்கும், ஆமைகளுக்கும் உணவு கொடுப்பதில் முனைந்தார். சற்று நேரத்தில் அஸ்வத்தாமா வந்தான்.

நல்ல உயரமாகவும், வலிமையான உடல்கட்டோடும் காணப்பட்ட அஸ்வத்தாமா சிறிதும் பொறுமையின்றிக் காணப்பட்டான். அதுதான் அவன் இயல்பான குணமோ என்னும்படிக்குக் காணப்பட்டான். தந்தையை வணங்கிவிட்டு அவரின் உத்தரவுக்குக் காத்திருந்தான். “மகனே, உன்னிடம் சிறிது பேசவேண்டும்.” என்றார் துரோணர். “காத்திருக்கிறேன் தந்தையே!” என்ற அஸ்வத்தாமன் தந்தையைக் கூர்ந்து நோக்கினான்.

“அஸ்வத்தாமா, நான் பாண்டவர்களுக்கு ஆதரவாகவும், யுதிஷ்டிரன் யுவராஜாவாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவும் ஆசிகளும் தெரிவித்த போது உனக்கு என் மீது பயங்கரக் கோபம் இல்லையா? கெளரவர்களுக்கு, முக்கியமாய் துரியோதனனுக்கு நான் கேடு இழைத்துவிட்டதாய்க் கூறினாய். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், நானும் அதற்குத் துணை போனதாகவும் கூறினாய்.”

அஸ்வத்தாமாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. தந்தையிடம் உள்ள மரியாதையை நினைவு கூர்ந்து தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டான் அவன். “அதனால் என்ன தந்தையாரே! நான் சொன்னது தவறாகவும் இருக்கலாம். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன். ஆனால் என் மனதில் உள்ளவற்றைத் தங்களிடம் அல்லாமல் வேறு எவரிடம் நான் பகிர்ந்து கொள்ள இயலும்?” பணிவோடு பேசுவது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளூரத் தனக்கு இருந்த வெறுப்பை அஸ்வத்தாமாவால் மறைக்க இயலவில்லை. துரோணருக்கும் அது புரியவே செய்தது.

புன்னகையுடன், “மகனே! நான் அநீதி தான் செய்துவிட்டேன். என் மாணாக்கர்களுக்குள் நான் வேறுபாடுகளைக் காட்டி வருகிறேன். நீ சொல்வதில் உண்மை உள்ளது. “ தூக்கிவாரிப் போட்டது அஸ்வத்தாமாவுக்கு. அவனுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து தான் தவறு செய்துவிட்டதாக துரோணர் ஒத்துக்கொண்டது இதுவே முதல் முறை. அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதற்குக் காத்திருந்தான் அஸ்வத்தாமா. “நாம் பேசிக்கொள்வதை துரியோதனனுடம் பகிர்ந்து கொள்வாயா மகனே?”

“ஆம் தந்தையே, அவன் என் நெருங்கிய நண்பன்.”

“எனில் இப்போதும் அவனிடம் இதைக் கூறு. கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான இடையே உள்ள பங்கீட்டுப் பிரச்னைகளில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. நான் எவர் பக்கமும் சார்ந்து எதுவும் கூறப்போவதில்லை. இதை நீ துரியோதனனிடம் தாராளமாய்க் கூறலாம்.”

“தந்தையே, மகிழ்ந்தேன். உண்மையாக மகிழ்ந்தேன். “ ஆனந்தக் கூச்சலிட்ட அஸ்வத்தாமா, “இதை நான் இப்போதே போய் துரியோதனனிடம் சொல்லி அவனும் மகிழ்வதைக் காண வேண்டும். தங்கள் அனுமதியுடன் போய்ச் சொல்லட்டுமா? கடைசியில் இதற்கு ஒரு வழி கிடைத்ததே!”

“சென்று வா மகனே, உனக்கு என் ஆசிகள்.”

Friday, March 23, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

ஆகவே பீஷ்ம பிதாமகரால் யுதிஷ்டிரன் யுவராஜாவாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டதில் துரோணருக்கு மனதுக்குள் மகிழ்ச்சியே. யுதிஷ்டிரன் அனைத்துத் தரப்பினராலும் விரும்பப் பட்டான். அதோடு அனைவரையும் விட அதிக ஞானம் உள்ளவனாகவும் இருந்தான். வயதிலும் மூத்தவன்! வேறென்ன வேண்டும்! யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆனதுமே அவன் மெல்ல மெல்லத் தன் பொறுப்புக்களை அதிகப் படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். ஒரு யுவராஜாவாகத் தன் கடமைகளைச் சரிவரச் செய்ய ஆரம்பித்தான். பிதாமகர் பீஷ்மராலும், அமைச்சர்களில் சிறந்தவரான விதுரராலும் பாராட்டுக்களைப் பெற்றான். அவனுடைய நேர்மையும் தர்மத்திலிருந்து வழுவாத் தன்மையும் அனைத்து அமைச்சர்களையும், தளபதிகளையும் மிகவும் கவர்ந்தது. துரோணர் யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆனதால் தனக்கு மிகவும் முக்கியத்துவம் கிடைக்கும் எனவும், தன் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது எனவும் பூரணமாக நம்பி வந்தார். ஆனால்???? நிலைமை வேறாக இருந்தது.

யுத்தசாலையிலும், குருகுலத்திலும் வித்தைகள் கற்கையில் இருந்த யுதிஷ்டிரனுக்கும், யுவராஜாவான யுதிஷ்டிரனுக்கும் பலத்த வேறுபாடுகள் காணப்பட்டன. தனிப்பட்ட முறையில் ஆசாரியரான துரோணரைச் சந்திக்கையில் அவருடைய சீடனாகவே நடந்து கொண்ட யுதிஷ்டிரன், யுவராஜா என்ற பதவியில் அதிகாரத்தில் இருக்கையில் நடக்கும் முறையே வேறாகக் காணப்பட்டது. இது துரோணருக்குச் சிறிதும் உவப்பாய் இல்லை; அவர் நினைத்தது வேறு. இங்கு நடப்பது வேறு. துரோணரிடம் உள்ள தன் சொந்த விசுவாசத்தை யுவராஜாவாக இருக்கையில் சிறிதும் காட்ட மறுத்தான் யுதிஷ்டிரன். அரசாங்க நிர்வாகங்களில் அந்த அந்தத் துறைக்கேற்ற அமைச்சர்களிடம் மட்டுமே கலந்து ஆலோசித்தான்; அதேபோல் யுத்த சம்பந்தமான ஆலோசனைகளில் துரோணரின் உதவியையும் ஆலோசனைகளையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான் தான். ஆனால் அதைத் தவிர மற்ற விஷயங்களைக் குறித்து எதுவுமே பேச மறுத்தான்.

பலவிதங்களிலும் துரோணர் முயன்று பார்த்தும் அவரால் தன் ஆளுமையை யுதிஷ்டிரனிடம் காட்ட முடியவில்லை. ஆசாரியர் என்ற மதிப்பும், மரியாதையும் காட்டிய அதே சமயம் தன் யுவராஜா பதவிக்குண்டான ராஜரீக விஷயங்களில் தன் மனசாட்சிக்கு உட்பட்டு, நியாயத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டான். சிறிதும் யாருக்காகவும், எவருக்காகவும், எதையும் விட்டுக் கொடுக்க மறுத்தான். இது தன் கடமை என்பதில் அவன் காட்டிய உறுதி அபாரமானதாய் இருந்தது. எல்லாரையும் கலந்து ஆலோசித்தாலும் கடைசியில் பீஷ்ம பிதாமகரின் வழிகாட்டுதலிலேயே அவன் ராஜ்யத்தை நடத்தி வந்ததோடு எவருக்கும் குறையில்லாமலும் பார்த்துக்கொண்டான். அப்போது தான் இடி விழுந்தாற்போன்றதொரு செய்தி துரோணர் காதுகளில் விழுந்தது.

யாதவர்களின் தலைவனான கிருஷ்ண வாசுதேவனை ஹஸ்தினாபுரத்துக்கு விருந்தினனாக அழைத்தான் யுதிஷ்டிரன். இந்த அழைப்பை விடுக்கும் முன்னர் ஆசாரியர் என்ற முறையில் துரோணரை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை; கிருஷ்ண வாசுதேவன் யுதிஷ்டிரனின் அத்தை மகன். அழைக்கின்றான் என்ற ஹோதாவிலே அழைத்திருப்பான் போலும்! அதோடு மட்டுமா?? பாஞ்சாலத்து துருபதனின் மகளான கிருஷ்ணாவை கிருஷ்ண வாசுதேவனுக்கு மணமுடிக்கவேண்டும் என துருபதன் விரும்புவதாயும் தகவல்கள் கசிந்தன.


துரோணர் மனம் கொதித்தார். யோசித்து யோசித்து அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் போட்டிருந்த திட்டங்கள் நொறுங்கிவிடுமோ?? கிருஷ்ண வாசுதேவனின் வீர, தீரப் பராக்கிரமங்களைக் குறித்த செய்திகள் அவ்வப்போது அவர் காதுகளிலும் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவன் எங்கோ தூரத்தில் செளராஷ்டிரக் கடற்கரையோரம் இருந்தவரைக்கும் பிரச்னை இல்லை. இப்போது ஹஸ்தினாபுரத்துக்கு வரப் போகிறானாமே! அதை அறிவிக்கவேண்டி அவன் சித்தப்பன் மகன் உத்தவனாமே, அவன் வந்திருக்கிறான். ம்ஹும், கூடாது, கிருஷ்ண வாசுதேவன் இங்கே வந்து விட்டால் யுதிஷ்டிரனுக்குப் புதியதொரு பலம் கிடைத்துவிடும். அதைக் கிடைக்கவிட முடியாது. ம்ம்ம்ம்ம்??? ஆனால்?? அவன் துருபதன் மகள் கிருஷ்ணாவை மணந்துவிடுவானா? பார்க்கலாம்!

யுதிஷ்டிரன் அவ்வளவு எளிதில் செல்வாக்கிற்கு அசைந்து கொடுக்கும் நபர் இல்லை; அவனை எளிதில் வளைக்க முடியாது. ஆனால் பீமனும், அர்ஜுனனும் அண்ணன் சொல்வதைத் தட்ட மாட்டார்கள். யாதவர்களின் துணையும், வலிமையும், படைகளும் உதவிக்குக் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்லப் போகின்றார்கள்? ஆஹா! அப்படி மட்டும் நடந்துவிட்டால்! பாண்டவர்களை எவராலும் அசைக்க முடியாது! இல்லை…. இல்லை….. இதுவல்ல நான் எதிர்பார்ப்பது! நான் நினைப்பது! இவர்களில் எவரும் யுவராஜாவாக இருத்தல் நமக்கு நன்மை பயக்காது. நான் நினைத்தது நடக்கவேண்டுமெனில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை ஆள்வதில் இருந்து தடுக்கப்படவேண்டும். அதற்கு என்ன வழி?? ஆ, துரியோதனன். ஆம்,,, அதுதான் சரி.. அவன் தான் சரியான நபர். துரோணர் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.

Wednesday, March 21, 2012

ஆசாரியரின் பெருமிதம்!

துரோணர் குருவம்சத்து இளவரசர்களுக்கு ஆசாரியராக அமர்ந்ததன் பலனை முழுவதும் அனுபவித்தார். அதுவும் பாண்டுவின் புத்திரன் ஆன அர்ஜுனனின் வில் வித்தையின் மூலம் துருபதனைத் தோற்கடித்து நாட்டைப் பங்கிட வைத்தது. ஒரு கோடி தான் காட்டினார் அர்ஜுனனிடம். திடீரென ஒரு நாள் அர்ஜுனன் தன் வலிமையைப் பிரயோகித்து துருபதனை துரோணரின் காலடியில் விழச் செய்தான். அர்ஜுனனின் அபார யுத்தத் திறமையின் முன்னர் துருபதன் தோற்றே போனான். அதோடு அரை மனதாகத் தன் நாட்டைப் பங்கிடவும் சம்மதித்தான். ஆம், இப்போது கங்கைக்கு வடக்கே உள்ள பாஞ்சாலப் பிரதேசங்கள் துரோணரின் ஆளுமைக்கு உட்பட்டவை. ஆனால் ஆஹிசாத்ரா என்னும் அந்தப் பிரதேசத்தின் அரசனாக ஆனதோடு துரோணரின் ஆசைகள் நின்றுவிடவில்லை. அவருக்கு மேலும் மேலும் குறிக்கோள்கள் பரந்து விரிந்தன. வெறும் அரசனாக இருப்பதோடு மட்டுமே திருப்தி அடைய முடியுமா என்ன?? குருவம்சத்தின், பலம் பொருந்திய குரு வம்சத்தின் மாபெரும் தலைவனாக இருப்பதில் தான் துரோணரின் வாழ்நாளின் லட்சியமே நிறைவேறுகிறது. இதன் மூலம் பல நாட்டு அரசர்களும் அவரையே நாடுவதோடு அவருடைய உதவியையே எதிர்பார்த்துக் காத்தும் கிடப்பார்கள் அல்லவா! எத்தனை பெரிய பதவி இது! இறுமாப்பில் முகம் மலர்ந்தார் துரோணர்.

அதோடு ஹஸ்தினாபுரத்தின் சூழ்நிலைகளும் துரோணரின் விருப்பத்துக்குச் சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஏதேனும் கொஞ்சம் மாறுதல் தென்பட்டாலும் துரோணர் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிவிடுவார். பீஷ்மபிதாமகர் இருக்கிறார்தான். அவரிடமே அனைத்து அதிகாரங்களும் கொட்டிக்கிடக்கிறது என்பது வெறும் ஊருக்காகத் தான். அவருக்கோ வயதாகி வருகிறது. திருதராஷ்டிரனோ கண் தெரியாதவன். அத்தோடு தன் மக்களிடம் உள்ள பாசத்தாலும், பாண்டவர்களுக்கு உரிய நாட்டைத் தான் அபகரிக்கக் கூடாது என்ற நியாய உணர்வுக்கும் இடையில் தத்தளிக்கிறான். இதில் அவன் மக்களிடம் அவன் கொண்டுள்ள பாசமே வென்று வருகிறது. அவன் மக்களான கெளரவர்களோ! கேட்கவே வேண்டாம்; பொறாமை, பேராசை, வெறுப்பு, பாண்டவர்களிடம் அன்பில்லாமல் அவர்களைக் கண்ணால் கண்டாலே தூற்றுவது என இருக்கின்றனர். ஆனால் என்ன இருந்தாலும் பாண்டுவின் புத்திரர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் தான்; அதை மறுக்கவே முடியாது. அவர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகவும் நடந்து கொள்கின்றனர். இந்தச் சூழ்நிலையை துரோணர் தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டார்.

பாண்டவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்களே துரோணருக்கு முழு உதவியும் செய்தும் வந்தனர். அர்ஜுனன் தன் ஆசாரியரான குரு துரோணரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். திருதராஷ்டிரன் மகனான துரியோதனனோ அவ்வளவு பக்தி சிரத்தை கொண்டிருக்கவில்லை என்பதோடு தான் ஒரு அரசகுமாரன் என்பதை ஒவ்வொரு கணமும் உணர்த்திக்கொண்டிருப்பான். அவனை நம்பவே முடியாது. ஆனால் ஆனால் துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமாவுக்கோ துரியோதனன் தான் ஆப்த நண்பன். இது தான் துரோணருக்குக் கொஞ்சம் உறுத்தியது. பாண்டவர்களால் தான் குரு வம்சமும் சாம்ராஜ்யமும் உன்னதத்துக்கு வரமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை. அதிலும் யுதிஷ்டிரனைப் போன்ற ஒரு நேர்மையும், தர்மவானுமான அரசன் கிடைப்பதே அரிது. பீமனும் அர்ஜுனனும் நல்ல வீரர்கள். நகுலனுக்கோ குதிரைகளைப் பழக்க நன்கு தெரியும். இதில் அவனை விடச் சிறந்தவர் எவரும் இல்லை. சகாதேவனோ வருங்காலத்தை நன்கு அறிந்து சொல்வதில் வல்லவன். சாத்திரங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவன். அவனைப் போல் படித்தவர்கள் எவரும் இலர். இவர்கள் ஐவரும் ஒன்று சேர்ந்தால் இவர்கள் வலிமையை எவனாலும் வெல்ல இயலாது. “ம்ம்ம்ம்ம்ம்ம்… இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லி வழிநடத்த என்னை விட்டால் வேறு எவர் இருக்கின்றனர்.” துரோணருக்கு மீண்டும் பெருமிதம் ஏற்பட்டது.

Monday, March 5, 2012

துரோணர் திட்டம் போடுகிறார்!

தன் கடமைகளையும், நாட்டுக்கான பொறுப்புக்களையும் சரியாக உணரமுடியாத அறியாப் பருவத்தில் துருபதன் கொடுத்த வாக்குறுதியோ உறுதிமொழியோ இப்போது நடைமுறைப் படுத்த இயலாது எனப் பாஞ்சால தேசத்து அறிஞர்கள் நிறைந்த சபையில் கூறப்பட்டதை நினைத்து நினைத்து துரோணர் மனம் எரிச்சல் அடைந்தது. கடுமையான துவேஷம் ஏற்பட்டது. எப்படியாவது இந்த துருபதனின் அகம்பாவத்தை அடக்க வேண்டும். அவனைத் தன் காலடியில் விழச் செய்ய வேண்டும். தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது. ஒருக்காலும் முடியாது. ஆனால் துருபதனை ஜெயிக்க வேண்டுமெனில் பெரும்படை தேவைப்படும். எங்கே போவது பெரும்படைக்கு? இப்போது தான் குருகுலத்திலிருந்து வெளியே வந்துள்ளோம். வாழ்க்கைப் போராட்டத்தில் தான் எவ்வாறு செயல்பட்டால் முன்னேற முடியும் என்பதைக் கணிப்பதில் துரோணருக்கு எந்தவிதமான கஷ்டமும் இருக்கவில்லை. “வெறும் படிப்பும், ஞானமும் மட்டுமே எந்தவிதமான பலனையும் அளித்துவிடப் போவதில்லை. நல்லதொரு திட்டம் போட்டு அதைத் திறமையாகச் செயலாற்றி நிறைவேற்ற வேண்டும். ம்ம்ம்ம்ம்??? ஆம், அது தான் சரி. மகான் பரசுராமரிடம் சென்று அவருக்குத் தெரிந்த வித்தைகளை அனைத்தையும் கற்றுக்கொண்டு ஆயுதங்களைப் பிரயோகிப்பதிலும், அஸ்திரங்களைப் பிரயோகிப்பதிலும் ஈடு இணையற்றவனாக மாற வேண்டும். இதற்குப் பரசுராமர் தான் சரி. அவரிடம் சென்று மீண்டும் பாடம் கற்றுக்கொள்கிறேன்.”

துரோணர் ஷூர்பரகாவில் இருந்த பரசுராமரின் ஆசிரமத்தை நோக்கி நடந்தார். மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த அதை நோக்கிச் செல்கையில் பல காடுகளைத் தாண்ட வேண்டி வந்தது. பல நேரங்களில் திறந்த வானத்தின் கீழேயே படுக்க வேண்டி இருந்தது. சில நாட்கள் சரியான உணவு கூடக் கிடைக்கவில்லை. துரோணர் எதையும் பொருட்படுத்தாமல் பரசுராமரின் ஆசிரமத்தை அடைந்தார். இவர் வரவைக் கண்ட பரசுராமர் மனம் மகிழ்ந்தார். வித்தைகள் கற்பதிலும், ஆயுத, அஸ்திரப் பிரயோகத்திலும் துரோணரின் ஆவலையும் துடிதுடிப்பையும் கண்டு மனம் மகிழ்ந்தார். ஆயுதங்களைப் பிரயோகம் செய்ய மட்டும் சொல்லிக் கொடுக்காமல் அவற்றைத் தயாரிப்பதிலும், அஸ்திரங்களின் பலனையும், அவற்றைச் சரியான முறையில் பிரயோகிப்பதையும் சொல்லிக் கொடுத்த பரசுராமர், யுத்தம் என்றால் எம்மாதிரித் திட்டங்கள் போட்டு எதிரியை முறியடிப்பது என்பதையும், வியூகங்கள் குறித்தும் கற்பித்தார். எம்மாதிரியான வியூகங்கள் மூலம் எதிரியைப் பலவீனன் ஆக்கலாம் எனவும் கற்பித்தார். அனைத்தையும் பல நாட்கள் பசியுடனும், தாகத்துடனும் இருக்கும் ஒருவன், உணவைக் கண்டதும் எப்படி ஆவலுடனும், விருப்பத்துடனும் உண்பானோ அத்தகைய விருப்பத்துடனும், ஆவலுடனும் துரோணர் கற்றுக்கொண்டார். துரோணரின் வேகம் பரசுராமரை அசர வைத்தது.

வெகு விரைவில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் துரோணர். மேலும் அப்போது நவீனமயமாகிக் கொண்டிருந்த ஆயுதங்களிலும் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தனக்கு நிகரில்லை எனும் அளவுக்குச் சிறந்து விளங்கினார். கோடரிகளையும், வாள்களையும், சூலங்களையும், ஈட்டிகளையும் பழமையாக்கி இவை மீண்டும் திரும்பி வராதோ என்னும்படியாக வில்லையும், அம்புகளையும், அஸ்திரப் பிரயோகங்களையும் தனது சிறப்பாக ஆக்கிக் கொண்டார். அவர் வில்லில் இருந்து கிளம்பும் அம்பு ஒரு ஏவுகணை போல் குறிப்பிட்ட இடத்தைச் சரியான நேரத்தில் போய்த் தாக்கியது. வில்லும், அம்புகளும் அவரிடம் கைகட்டிச் சேவகம் செய்தது. பரசுராமரின் ஆசிரமத்திலிருந்து கிளம்பிய துரோணர் கிருபியை மணந்தார். அவள் கிருபாசாரியாரின் தங்கை. அவளுடனும், கிருபாசாரியாருடனும் அங்கிருந்து கிளம்பினார்.

துருபதனைப் பழிவாங்க வேண்டும்; அது ஒன்றே துரோணரின் லட்சியமாக இருந்தது. அதற்கு ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் எவராவது துணை செய்ய வேண்டும். கிருபாசாரியாருக்கு ஏற்கெனவே ஹஸ்தினாபுரத்தின் அரச குடும்பத்தோடு பரிச்சயம் இருந்தது. அவர் மூலம் பிதாமகர் பீஷ்மரின் அன்பைப் பெற்றார் துரோணர். துரோணரின் திறமைகளைக் கண்டு வியந்த பீஷ்மர், துரோணர் பரசுராமரின் சீடர் எனக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார். பீஷ்மரும் பரசுராமரின் சீடராக இருந்தவரே; ஆகவே அவருக்கு துரோணர் மேல் மிகவும் அன்பும், பாசமும் பெருகி வர, ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு ஆசாரியராக துரோணரை நியமித்தார். கிருபரையும் அங்கேயே தங்கச் சொன்னார். மாபெரும் ஆசிரமம் அமைக்கவும், அதில் யுத்தசாலை அமைத்து இளவரசர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். அங்கே வந்தது தனது அதிர்ஷ்டமே என்பதைப் புரிந்து கொண்ட துரோணர் அரசகுமாரர்களுக்குத் தன் முழுத் திறமையையும் காட்டி ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ஆனால் துரோணருக்கு இவை மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. மெல்ல மெல்ல, யுத்த விஷயங்களில் ஆலோசனை சொல்ல ஆரம்பித்து ராஜரீக விவகாரங்களிலும் பீஷ்மருக்கு ஆலோசனைகள் சொல்லும் அளவுக்கு முன்னேறினார். பீஷ்மரின் நம்பிக்கைக்கு உகந்தவராக ஆனார்.

குரு வம்சத்து இளவரசர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்து விளங்கினார்கள். துரியோதனனும், பீமனும் கதைப் பயிற்சியில் சிறந்து விளங்கினார்கள். யுதிஷ்டிரனோ ஆயுதப் பயிற்சிகளில் சிறந்து விளங்கினான். ஆனால் அர்ஜுனனோ வில்லையும், அம்பையும் எடுத்தால் அவனுக்கு நிகரில்லை என்னும்படி சிறந்து விளங்கினான். அர்ஜுனனைப் போலவே சிறப்பாக வில்லையும், அம்புகளையும் கையாண்டது தேரோட்டி ராதேயன் மகன் ஆன கர்ணன். அவனும் ராதேயனின் சொந்த மகன் அல்லவாம். வளர்ப்பு மகனாம். ஆனாலும் அவனுடைய வீரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. துரோணரின் மகன் அஷ்வத்தாமாவோ அனைத்துக் கலைகளையும் கற்று வல்லமை மிக்க ஒரு சிங்கத்தைப் போல் விளங்கினான்.

Friday, March 2, 2012

எல்லாம் வல்ல இறைவனின் ஆணை! சத்தியம், இது சத்தியம்

சில நாட்களில் நண்பர்கள் பிரிந்தனர். துருபதன் தன் நாட்டிற்குச் சென்றுவிட்டான். துரோணரோ மேலும் மேலும் அஸ்திரப் பயிற்சிகளில் தன்னை மேம்படுத்திக்கொள்ள அதிலேயே மூழ்கிப் போனார். சில வருடங்களில் பாஞ்சால மன்னன் இறந்து போகப் பட்டத்து இளவரசன் ஆன துருபதன் அரியணை ஏறினான். இந்தச் செய்தி காதில் விழுந்ததுமே துரோணருக்கு ஆனந்தம் அளப்பரியதாக இருந்தது. ஆஹா, கடைசியில் தான் நினைத்த தருணம் வந்தேவிட்டது. அவர் தன் படிப்பு முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்தார். குருகுலத்தை விட்டு வெளியே வந்ததுமே பாஞ்சாலத்திற்குச் சென்றார். காம்பில்யத்தில் அரசாட்சி புரிந்து வந்த துருபதனைக் கண்டார். துருபதனும் துரோணரை மறக்கவில்லை. தக்க முறையில் வரவேற்று உபசரித்தான். துரோணரும் உபசாரங்களை ஏற்றுக்கொண்டதோடு நிற்காமல் துருபதன் கங்கையை சாட்சியாக வைத்துத் தனக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை நினைவூட்டினார். இப்போது பாஞ்சாலம் முழுதும் துருபதன் கைகளுக்கு வந்துவிட்டதால் தன்னோடு நாட்டைப் பகிர்ந்து கொள்ள இதுவே தக்க தருணம் என்றும் அவன் எடுத்துக்கொண்ட சத்தியத்தை நிறைவேற்றவேண்டிய சமயம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

“சத்தியமா? நானா! இது என்ன துரோணரே! விளையாடுகிறீரா? நான் ஏன் அப்படி எல்லாம் சத்தியம் செய்கிறேன். கனவு ஏதும் கண்டீரா? என் நாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்வதாவது! துரோணரே, அரச பதவியைப் பற்றி ஏதேனும் அறிந்திருக்கிறீரா? இது என் தந்தை வழிச் சொத்து. இதை நான் எனக்குப் பின்னர் என் மகன்களோடு தான் பகிர்ந்து கொள்வேன். உங்களுடன் ஏன் பகிரவேண்டும்? அப்படி எந்தச் சத்தியமும் நான் செய்து கொடுத்ததாக நினைவில் இல்லையே!”

உண்மையில் துருபதன் மறந்து தான் போயிருந்தான். ஓடி, ஆடி, விளையாடிய சின்னஞ்சிறு பிள்ளைகளாய் இருந்தபோது எத்தனையோ கனவுகள்! கொள்கைகள்! சத்தியங்கள், உறுதிமொழிகள்! அனைத்தும் இப்போது நினைவில் கொள்ள முடியுமா என்ன? இது என்ன இந்த ஆசாரியன் இப்படி ஒரு முட்டாளாய் இருக்கிறானே! என்ன படித்து என்ன! அஸ்திரப் பிரயோகங்களில் வல்லவனாய் இருந்து என்ன! இது கூடத் தெரியவில்லையே! என் ராஜ்யத்தை நான் இவனோடு பகிர்ந்து கொள்வதாவது! துருபதனுக்கு உள்ளூர இகழ்ச்சி மேலோங்கியது. வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கப் பார்த்தும் அவனால் முடியவில்லை. மேலும் தன் நாடு எத்தனை வலிமையான நாடு என்பதை அவன் அரியணையில் ஏறிய இந்தக் கொஞ்ச காலத்திற்குள் நன்கு புரிந்து கொண்டிருந்தான் துருபதன். ஆர்யவர்த்தத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாட்டிற்கு அரசனாகி இருக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

ஆனாலும் நட்பை மறக்காமல், பொன்னாலும், பொருளாலும், ஆடை, ஆபரணங்களாலும் துரோணரை மூழ்கடித்தான். துரோணருக்கு குருகுலம் அமைக்க விருப்பம் இருந்தால் பாஞ்சாலத்தில் அமைக்குமாறும் அதற்கு வேண்டிய நிலம், மற்ற வசதிகளைத் தான் செய்து தருவதாகவும் வாக்களித்தான். ஆனால்!!! துரோணரோ, பிள்ளைப் பருவத்துச் சத்தியத்தை இன்னமும் உண்மை என நம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்து உணர்வில் துருபதன் செய்து கொடுத்த சத்தியத்தை அவன் காப்பாற்றுவான் என்றும் தனக்குப் பாஞ்சாலத்தில் சரிபாதி கிடைக்கும் எனவும் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். துரோணரால் இந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சத்தியம் செய்துவிட்டு இப்போது செல்வமும், செல்வாக்கும், அதிகாரமும் வந்ததும் மனம் மாறித் தனக்கு துரோகம் செய்கிறான் துருபதன் என நினைத்தார். இங்கே ஆசாரியராகவோ அல்லது மந்திரி பதவி ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டு துருபதனுக்குக் கீழ் வேலை செய்யவோ அவர் வரவில்லை. அவருக்கு வேண்டியது சமமான பதவியே! துருபதன் எப்படி ஒரு அரசனாக இருக்கிறானோ அவ்வாறே அவரும் அரசனாக இருக்க வேண்டியவரே. அதை எப்படி துருபதன் மறுக்கலாம்! துரோணருக்குக் கோபம் குமுறிக்கொண்டு வந்தது.

துருபதன் தன் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்தினார். நாட்டு விவகாரங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் இப்போது மிகவும் தேர்ச்சி அடைந்திருந்த துருபதன் தன் மந்திரிகளைக் கலந்து ஆலோசித்துவிட்டும் தன் தகப்பன் காலத்திலிருந்து ஊழியம் செய்யும் ஊழியர்களோடு பேசியும் தன் சிறு வயதில் அறியாப் பருவத்தில் செய்த சத்தியத்தை இப்போது தான் நிறைவேற்ற வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை என்பதை எடுத்துக் கூறினான்.

“துரோணரே, நீர் என் நண்பர் தான்! அருமையானவரும் கூட! திறமை வாய்ந்தவரும் தான். ஆனால் அதற்காக என் நாட்டை உம்முடன் நான் பகிர்ந்து கொள்வது என்பது இயலாது. “ தன்னால் இயன்றவரை துரோணரிடம் மரியாதையுடனும், மிகப் பணிவோடும் எடுத்துக் கூறினான் துருபதன். ஆனால் துரோணருக்குக் குரோதம் பொங்கியது. அவனைக் கண்டவாறு வசைமாரி பொழிந்தார். எனினும் துருபதன் நிதானம் இழக்காமல் தன் நாட்டின் மேல் தான் கொண்டிருக்கும் பொறுப்புக்களை நட்புக்காகத் தியாகம் செய்ய முடியாது என்பதை வலியுறுத்தினான். துருபதனின் சபை கூடியது. படைத்தளபதிகள், அமைச்சர்கள், மற்றப் பெரியோர்கள், பாஞ்சாலத்தின் சிற்றரசர்கள் என நிறைந்திருந்த சபையில் துரோணரின் வேண்டுகோள் முழுமனதாக நிராகரிக்கப் பட்டது. துரோணர் நிறைந்த சபையிலேயே துருபதனை எவ்வளவு அவமானம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தார். சாபங்கள் கொடுத்தார். துருபதன் மனம் வருந்தினான். வேறு வழியில்லாமல் தன் வீரர்களைக் கொண்டு அவரை நாட்டை விட்டு அப்புறப் படுத்துமாறு கூறினான்.

“துருபதா, உன்னை நான் ஜெயித்து இந்த நாட்டைச் சரிபாதி உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்.”

துரோணர் காம்பில்யத்தை விட்டு வெளியேறினார்.