Tuesday, March 27, 2012

ஏகலவ்யனின் தியாகம்!

அஸ்வத்தாமா வேகமாய்ச் சென்றுவிட்டான்; துரோணர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு மீண்டும் மீன்களுக்கு உணவிடும் வேலையை ஆரம்பித்தார். அவர் கைகள் இயந்திரத்தனமாய் அந்த வேலையைச் செய்கையில் மனம் பின்னோக்கிச் சென்றது. தன்னைத் தானே மெச்சிக்கொண்டார் துரோணர். எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அவரால் எப்படிப்பட்ட சிக்கலான அரசியல், வாழ்நாள் சூழ்நிலைகளையும் அவற்றின் புதிர்களையும் அவிழ்த்துத் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்க முடியும். ஆம்! அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன எண்ணுகிறாரோ அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் திறன் அவரிடம் உள்ளது. இதற்கானதொரு அழிக்க முடியாச் சான்றும் கடந்த காலங்களில் உண்டு. ம்ம்ம்ம்ம்??? அந்த நிஷாத இளவரசன் ஏகலவ்யன்!

துரோணரின் முன்னே சில வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சிகள் விரிந்தன. துரோணரின் வில் வித்தைத் திறமை குறித்தும், ஆயுதப் பயிற்சி குறித்தும் அறிந்த நிஷாத இளவரசன் ஏகலவ்யன் அவரிடம் வந்து பாதம் பணிந்து தன்னையும் அவர் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டினான். ஆனால் துரோணர் அவனாலோ அவனின் நிஷாத நாட்டினாலோ தனக்குப் பயன் ஏதும் விளையாது என்பதைப் புரிந்து கொண்டார். ஆகவே தனக்கு இவன் சீடனாக ஆனால் பிற்காலத்தில் இவனால் பயன் ஏதும் இராது என்பதைத் தெரிந்து கொண்டார். தன்னுடைய திறமையைப் பயனற்ற சீடர்களிடம் செலுத்த விருப்பமில்லாத துரோணர் அவனை நிராகரித்துவிட்டார். குரு வம்சத்து இளவரசர்களை, முக்கியமாய் அர்ஜுனனை, தன்னிரு கைகளாலும் மாற்றி, மாற்றி ஒரே வேகத்தோடு வில்லையும் அம்பையும் பிரயோகிக்கத் தெரிந்தவனை மேலும் திறமைசாலியாக்க வேண்டும். ஏகலவ்யன் சென்றுவிட்டான். காட்டில் அவனுடைய வேடுவ நாட்டுக்குச் சென்றவன் துரோணரிடம் கொண்டிருந்த கண்மூடித்தனமான பக்தியில், அவரைப் போன்றதொரு சிலையைச் செதுக்கி, தனக்கு குருவாக மேற்கொண்டு தன் வில் வித்தையைத் தானே ஆரம்பித்துக் கொண்டான். விரைவில் அர்ஜுனனை விடவும் திறமைசாலியாக மாறினான்.

தற்செயலாக இது குறித்து அறிய நேர்ந்தார் துரோணர். முதலில் தன்னுடைய நேரடியான இருப்பை விடவும் தன்னுடைய நினைவிலேயே ஒருவன் வில் வித்தையில் தேர்ந்தது குறித்துப் பெருமையும், கர்வமும் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஏகலவ்யனின் வித்தையை நேரில் பரிசோதிக்கச் சென்றார். அவனுடைய திறமையும், வேகமும், ஒழுங்கும் கட்டுப்பாடான பிரயோகத்தையும் கண்டு பிரமித்தார். ஒரு வேட்டுவ நாட்டு இளவரசனிடம் இத்தனை திறமையா என வியந்தார்! ஆனால்,,,, ஆனால் இது நமக்கு நன்மை தருமா?? ஒரு வேட்டுவனிடம் இத்தனை திறமைகள் குவிந்திருப்பது; அதுவும் வில் வித்தையில் நவீனமான பாணிகளை அவன் புகுத்தித் திறமையுடன் பிரயோகம் செய்வது நாட்டுக்கும், அதன் அரசர்களுக்கும் நன்மை பயக்குமா? அவன் யாருக்கு உதவி செய்கிறானோ அவர்கள் பக்கமே நிச்சயம் ஜெயம் ஏற்படும். கூடாது; இதை வளரவிடக் கூடாது. துரோணருக்குத் தன் நிலைமை குறித்த அச்சமும் ஏற்பட்டது. என்றாவது ஒரு நாள் இந்த இளைஞன் அர்ஜுனனை விடவும் சிறந்து விளங்குவான். ஆஹா, குரு வம்சத்து இளவரசர்கள் மூலம் என் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள இருக்கும் என் கதி என்னாவது! இவனை வளரவிட்டால் அதோகதிதான். என்ன செய்யலாம்??

அப்போது அந்த இளைஞனே அதற்கும் வழி வகுத்துக் கொடுத்தான். தான் குருவின் நேரடி மேற்பார்வையில் வித்தைகள் கற்காவிட்டாலும் துரோணரின் பெயரையும், அவரின் உருவச் சிலையையும் வைத்துக் கற்றிருப்பதால் இப்போது நேரடியாகத் தன்னை வாழ்த்த வந்திருக்கும் குருவுக்கு குரு தக்ஷிணை கொடுக்க ஆசைப் பட்டான். துரோணரிடம் குரு தக்ஷிணையாக எது வேண்டுமெனக் கேட்டான். உடனே துரோணரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அவனைப் பார்த்து அவன் வலக்கைக் கட்டை விரலைத் தனக்குக் காணிக்கையாகக் கொடுக்கும்படி சொல்ல இளைஞன் திகைத்தான். துரோணரின் கால்களில் வீழ்ந்து வேறு எதை வேண்டுமானாலும் கேட்கும்படி வேண்ட, துரோணரோ பிடிவாதமாய் அவன் வலக்கைக் கட்டைவிரலைத் தவிர வேறெதையும் தனக்கு குரு தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டாம் எனச் சொல்லிவிடுகிறார். இல்லை எனில் தாம் அவனுக்கு இலவசமாய்க் கற்றுக் கொடுத்ததாய் இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டு எழுந்து விடுகிறார். குருவுக்கு தக்ஷிணை கொடுக்கவில்லை எனில் வித்தை பூர்த்தி இல்லை என்பதை அறிந்த ஏகலவ்யன் கண்ணீர் மல்கும் கண்களோடு தன் வலக்கைக் கட்டை விரலை அறுத்து துரோணரின் காலடிகளில் வைக்கிறான். ஒரு நிமிடம் துரோணரின் மனம் கலங்கியது. பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டார். கூடாது; கூடாது; இத்தகையதொரு பாசத்தினால் என் மனதை நான் இளக வைக்கக் கூடாது. பின்னர் என்னுடைய விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் நிறைவேறுவது எங்கனம்?? அந்த ரத்தம் ஒழுகும் கட்டைவிரலை ஏற்றுக்கொண்டு ஏகலவ்யனை ஆசீர்வதித்துவிட்டு துரோணர் அங்கிருந்து கிளம்பினார்.

இப்போதும்…. இப்போதும் கிட்டத்தட்ட அப்படி ஒரு சூழ்நிலைதான். ஆனால்…..ஆனால் இப்போது கட்டை விரல் தேவை இல்லை துரோணருக்கு. அவருக்கு மிகவும் பிடித்த அவருடைய பாசத்துக்கும், நேசத்துக்கும் உகந்த ஐந்து மாணவர்களை அவர் அப்புறப்படுத்தியே ஆகவேண்டும்; அவர்களில் ஒருவன் ஆன அர்ஜுனன் அவருக்கு மிகவும் நெருங்கியவனாகவும், பாசத்துக்கு உகந்தவனாகவும் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரனாகவும் இருந்தால் கூட.

அவர் யார்? துரோணர்! தன் வழியில், தன் கனவுகளை நிறைவேற்றுவதில் தடையாக எவர் வந்தாலும் அவர்களை அப்புறப் படுத்தியே ஆவார். அவர் வழியில் யாரும் குறுக்கே வரக் கூடாது!

1 comment:

பித்தனின் வாக்கு said...

this is first time i am reading negative concepts regarding thronar.

Good i came to know unknown details.
thank you mamm