Thursday, November 15, 2012

வியாசரின் பரிவும், கண்ணனின் நெகிழ்வும்!


****
வாசுதேவா, உனக்கு நூறு வயது.  இல்லை; இல்லை; பல்லாண்டுகள் வாழ்வாய்! உன்னைச் சந்திக்கவேண்டும் என்றே காத்திருந்தேன்.”  வியாசரின் குரலில் ஒரு தந்தையின் பரிவு தென்பட்டது.  நெடுநாள் கழித்துச் சந்திக்கும் மகனைக் கண்ட உற்சாகம் அவர் கண்களில் மட்டுமின்றிக் குரலிலும் தென்பட்டது.  “நான் உன் தந்தையைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் பல்லாண்டுகள் முன்னர்!  ஏன், நீ பிறக்கும் முன்னர் சந்தித்திருக்கிறேன்.” என்றார் வியாச முனி.  அவருடைய முக விலாசத்திலிருந்தும் கண்களில் பெருகிய அன்பிலிருந்தும் அவருடைய உள்ளார்ந்த அன்பைப் புரிந்து கொண்ட கண்ணன், அதில் பூரணமாக நனைந்தான். “என் தாய் தேவகி நீங்கள் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தது குறித்து இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாள்.” என்றான் கண்ணன்.  வியாசரின் பேச்சை விடவும் அவர் முகமே அவனுக்குப் பல்லாயிரம் செய்திகளைச் சொல்லாமல் சொன்னது. 

“அதன் பின்னர் நான் மதுரா வந்தபோது, நீயும், பலராமனும் கோமந்தக பர்வதத்துக்குச் சென்றிருந்தீர்கள்.” என்றார் வியாசர்.   மான் தோலை ஆடையாக உடுத்தி இருந்த வியாசமுனிவர் கறுப்பு நிறத்தோடும், நல்ல வலுவான உடல் கட்டோடும் காணப்பட்டார்.  அவரிடம் இருந்த சொல்ல ஒண்ணாக் கவர்ச்சி என எதைச் சொல்வது எனக் கண்ணன் திகைத்தான்.   அன்பு பெருகி ஊற்றெடுக்கும் அந்த விசாலமான கண்களா?  அந்தக் கண்களால் வியாசர் எவரையேனும் பார்க்கையிலேயே எதிராளிக்குத் தான் அந்தக் கண்களாகிய மாபெரும் கடலின் அன்பு அலைகளில் மூழ்குகிறோம் என்பது புரிந்தது.  வளைந்த அதே சமயம் தீர்க்கமான புருவங்களும், நீளம் கம்மியாக இருந்தாலும் அகலமான மூக்கும் சேர்ந்து ஒரு இணையற்ற கம்பீரத்தை அவருக்கு அளித்தது.  அதோடு தூக்கிக் கட்டிய அந்த வெண்ணிற முடிக்கற்றைகள், வைரங்களால் ஆன கிரீடம் போல அவருக்கு அமைந்து விட்டிருந்தது.  கைலைச் சிகரத்தின் மேல் எப்போதும் மூடி இருக்கும் வெண்பனியைப் போலவும் காட்சி அளித்தது.  எல்லாவற்றுக்கும் மேல் அவரின் சிரிப்பு, புன்னகை கண்ணனை மிகக் கவர்ந்தது.  “என்னிடம் நெருங்கி வாருங்கள் குழந்தைகளே, உங்களுக்கு எந்தத் தடையும் இல்லை;  என்னிடமிருந்து விலகியும் இருக்க வேண்டாம்.  உங்களிடையே எந்தவிதமான வித்தியாசங்களும் வேண்டாம்.  அனைவரும் என் அருகே வாருங்கள்.  அன்பாகிய அமுதத்தை அள்ளித் தருகிறேன்.” என அந்தச் சிரிப்பு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

“சரி, இப்போது நாம் யாகத்தை முடிப்போம்.” என்றார் மாமுனி.
நாகர்களின் தலைவர்கள் அருகேயே அமர்ந்த கிருஷ்ணனும் அவன் தோழர்களும் மந்திர கோஷத்திலும் கலந்து கொண்டனர்.  ஹோமம் முடிந்ததும் வியாசர் கண்ணனிடம் யாதவர்களின் சுக செளக்கியங்களைக் குறித்து விசாரித்தார்.  மேலும் இங்கே கங்கைக்கரைக்கு வரும்படியாக கிருஷ்ணனுக்கு என்ன வேலையோ எனவும் கேட்டார்.  கிருஷ்ணன் இந்தக் கேள்விகளுக்குப்பதில் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தெளம்ய ரிஷி அங்கே காத்துக் கொண்டிருந்த உடல் நலமற்றவர்களுக்குப் பாலை விநியோகம் செய்யும்படியாகத் தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.  ஒவ்வொருவராக வரிசையில் வந்து பாலைப் பெற்றுக் கொண்டனர்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோயால் அவதிப் பட்டனர்.  சிலரால் நடக்கக் கூட முடியவில்லை. நகர்ந்தே வந்தனர்.  சிலர் யாரேனும் பிடித்துக்கொள்ள நகர்ந்து வந்தனர்.  தங்கள் உடல்நிலை எவ்வளவு அனுமதித்ததோ அந்த அளவுக்கு அவர்களால் நகர முடிந்தது.  அங்கிருந்த வியாசரின் பிரதான சீடரான ஜைமினியின் தோள்களில் இருந்த ஒரு பையிலிருந்து ஒரு சிறிய இலையை வியாசர் அங்கே பால் ஊற்றி வைத்திருந்த ஒவ்வொரு மண் சட்டிகளிலும் இட்டார்.  நோயாளிகள் அந்த மண் சட்டியைக் கைகளில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புனிய யாகாக்னியின் முன்னர் அமர்ந்த வண்ணம் தலை குனிந்து பிரார்த்தித்தனர்.  வியாசர் உரத்த குரலில் அஸ்வினி தேவர்களைத் துதித்துப் பாடத் தொடங்கினார்.  அஸ்வினி தேவர்களைப் பிரார்த்தித்துக் கொண்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

சற்று நேரத்தில் அங்கிருந்த சூழ்நிலையே மாறி இனம் தெரியாததொரு அமைதி அங்கே நிலவிற்று.  காற்றும் குளிர்ந்து வீசியது.  மந்திரங்களின் ஏற்ற, இறக்கங்களும் அவைஓதப் பட்ட முறையினாலும்  அனவர் மனதிலும் ஒரு அமைதியை உண்டாக்கியது.  சிறிது நேரத்தில் பிரார்த்தனை முடிந்து, வியாசர் அனைவரையும் அந்தப் பாலைக் குடிக்கச் சொன்னார்.  சிறு குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மார்கள் பாலைப்புகட்டினார்கள்.  தன்னுடைய அதே கவர்ந்திழுக்கும் குரலில், அன்பாக வியாசர் அனைவரையும் தம் அருகே வரச் சொல்லி அழைத்தார்.  “அருகே வாருங்கள் என் குழந்தைகளே, உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன்.” என்றார்.  அவர் குரலின் இனிமையும், அதில் தொனித்த அன்பும் அனைவரையும் அவர் அருகே வரவழைத்தது.  அனைவரும் அவர் அருகே வந்து குனிந்து நமஸ்கரித்தனர்.  சிலர் அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். சிலர்  சாஷ்டாங்கமாக விழுந்து பாதங்களைக் கண்ணீரால் நனைத்தனர்.  சிறு குழந்தைகள் வியாசரின் காலடியில் படுக்க வைக்கப்பட்டன.  வியாசர் அந்தக் குழந்தைகளைத் தூக்கி அவர்கள் நெற்றியில் யாகாக்னியின் புனிதச் சாம்பலை இட்டு ஆசீர்வதித்தார்.  இம்மாதிரியே அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

அனைவரையும் வீட்டுக்குச் செல்லச் சொன்னார் வியாசர்.  அஸ்வினி தேவதைகள் அவர்களை ஆசீர்வதித்து விட்டதாயும், அவர்களின் நோய் குணமடைந்துவிடும் எனவும் கூறினார்.  ஆனந்தக் களிப்பில் கோஷமிட்ட மக்கள் தாங்கள் உண்மையாகவே புத்துணர்ச்சி பெற்றிருப்பதை உணர்ந்தார்கள்.  ஒரு சிலருக்கு உண்மையாகவே நோய் குணமாகி இருக்க, நோய் முற்றிலும் நீங்காத மற்றவர்கள் ஆசாரியரைப் பார்த்து வணங்கிய வண்ணம் அவர் கால்களில் விழுந்தனர்.  அவர்களை, வீட்டிற்குச் சென்று எல்லாம் வல்ல மஹாதேவனை வணங்கிப் பிரார்த்திக்கும்படி ஆசாரியர் கூறினார்.  அவன் ஒருவனே அனைத்தையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லவன்.  அவனாலேயே உங்கள் துன்பங்களை அழிக்க முடியும். " என்றார்.  மக்கள் ஆசாரியரை வணங்கி அவருக்கு ஜெயகோஷம் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Wednesday, November 7, 2012

கிருஷ்ணரைக் கண்ட கிருஷ்ணன்! :)


உத்தவனுக்கு நாகர்கள் தலைவன் ஆர்யகனையும் தங்கள் தேடுதலில் சேர்க்க எண்ணம் ஏற்பட்டது.  கிருஷ்ணனிடம் அதைக் குறித்துச் சொன்னான்.  ஆனால் எந்த அளவுக்கு அவனை நம்புவது எனக் கண்ணனுக்குக் குழப்பம் இருந்தது.  ஆனால் காட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கும் நாகர்கள் நன்கு அறிவார்கள் என்பதால் அவர்கள் தேடுவது இன்னும் எளிது என்றான் உத்தவன்.  அப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டுமெனில் எடுத்தே ஆகவேண்டும்;  அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சமாளிக்க வேண்டும் என இருவரும் முடிவெடுத்தார்கள்.  உத்தவன் தானும் காட்டுக்குள் சென்று பாண்டவர்களைத் தேடுவதாகக் கூறினான்.  அதோடு தான் நேரே நாககூடம் செல்வதால் ஆர்யகனை நம்புவதா வேண்டாமா எனச் சோதிக்கவும் வசதியாக இருக்கும் என்றும் கூறினான்.   ஆனால் கண்ணனோ, குறும்புப் புன்னகையோடு, “உத்தவா, நான் உன்னைக் காம்பில்யத்தில் என்னோடு வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்றான்.

கிருஷ்ணனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட உத்தவனும் சிரித்துக் கொண்டே, “நான் எதுக்கு கிருஷ்ணா?  என்னை விட சாத்யகி இளமையானவன்;  வலுவானவன்.  தன் நண்பனாகிய உன் மனதில் ஓடும் புனிதமான எண்ணங்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுவான்.  நீ அவனிடம் கேட்கக் கூட வேண்டாம்.”  என்றான்.  “நான் உன்னை ஏன் அழைக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டாயே, நீ மிகவும் தந்திரக்காரன் உத்தவா!’ கண்ணன் கலகலவென நகைத்த வண்ணம், “திரெளபதியை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.”  என்றான்.

“ஆஹா, உன் இடத்தில் நானா?  யார் ஒப்புக் கொள்வார்கள்?” உத்தவனுக்கும் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது.  மேலும் தொடர்ந்து, “கிருஷ்ணா, நான் ஒரு சாமானியமான மனிதன்.  எனக்கு எந்தவிதமான அபிலாஷைகளும் இல்லை.  அதுவும் திருமணத்தில்.  மேலும் திரெளபதியைப் போன்ற ஒரு தீவிரமான கொள்கைப் பிடிப்புக் கொண்ட திடமான உறுதி படைத்த இளவரசியை மணப்பது எனில்  என்னால் இயலாது.  உன்னைப் போல் காட்டில் வளர்ந்த பெண்களை அடக்கி ஆளும் வல்லமை என்னிடம் இல்லை.”

“உத்தவா, எத்தனை நாட்களுக்கு நீ உன்னை என்னிடம் ஒப்புக் கொடுத்திருப்பாய்?  நானும் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டியவன் அல்லவா?  உன் சொந்த வாழ்க்கையை என்னைக் கவனிப்பதிலேயே எத்தனை காலம் கழிக்க முடியும்?  எப்பொழுதும் நீ என்னைக்  கவனித்துக் கொண்டிருக்க முடியாது.  சில சமயங்களில் நானும் உன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.  இல்லையா?”

“என்னைப் பற்றி நினைக்காதே.  இப்போது நாம் செய்ய வேண்டியது பாண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றே.  வேறு சிந்தனைகள் தேவையில்லை.”

“உத்தவா, “ கண்ணன் அழைத்த தொனியில் ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்ட உத்தவன் என்னவென நிமிர்ந்து பார்க்கக் கண்ணன் அதற்கு, “சகோதரர்கள் ஐவரும் ஒரு வேளை உயிருடன் இருந்தார்களெனில்…….” என இழுத்தான்.  “இருந்தால்?.....” உத்தவன் மேலே தூண்ட, “  துருபதன் மட்டும் அவர் மகளை…….”

“அர்ஜுனனுக்குக் கொடுத்தால்…..” என உத்தவன் முடித்தான்.  “ம்ம்ம்ம்…. இது என் ஆசைதான்…..நடக்குமோ, நடக்காதோ, எங்கே எனக்குத் தோன்றவில்லை.” என்றான் கண்ணன்.  அவர்களின் படகுப் பயணத்தின் ஓர் நாள் நதிக்கரையில் அவர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்கும் கோஷத்தைக் கேட்க நேர்ந்தது.  வேதங்களின் உச்சரிப்பும், அதை கோஷித்ஹ குரல்கள் இணக்கமாகச் சேர்ந்து ஒலித்த சப்தம் ஒரு இன்னிசையாக ஒலித்ததையும் கேட்டு ஆச்சரியப் பட்டான்.  விசாரிக்கையில் அது தெளம்ய மஹரிஷியின் ஆசிரமம் எனத் தெரிய வந்தது.  அந்தத் தீர்த்தமும் உத்கோசக தீர்த்தம் எனப்பட்டது என்பதையும் அறிந்தான்.   சிறிது நேரத்துக்கெல்லாம் கண்ணன் ஒரு பெரிய படகுத்துறையை அடைந்ததைக் கவனித்தான்.  அதோடு அங்கே பல பெரிய படகுகளும், சிறிய படகுகளும் நிறுத்தப் பட்டிருப்பதையும் கண்டான்.  அந்தப் படகில் வந்தவர்கள் தெளம்ய மஹரிஷியின் ஆசிரமத்தில் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான்.  அவர்கள் படகும் கண்ணன் வேண்டுகோளுக்கிணங்கி அங்கே நிறுத்தப் பட்டது.  படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார்கள்.  அவர்கள் கரையிறங்கியதும் வேத கோஷம் கேட்ட திசையை நோக்கிச் சென்றனர்.  சிறிது நேரத்தில் ஒரு  திறந்த வெளியில் ஒரு பெரிய குடியிருப்பைக் கண்டான்.  அங்கே பல் குடிசைகள் சிறிதும், பெரிதுமாய்க் காணப்பட்டன.  கத்தாழைச் செடிகளும், முட்புதர்களும் சுற்றிலும் வேலியாக அரண் கட்டி இருந்தன.  குடிசைகளுக்கு நடுவே இருந்த திறந்த வெளியில்   விண்ணை நோக்கி எரிந்து கொண்டிருந்த அக்னியும், அதைச் சுற்றி அமர்ந்தவர்களும் தென்பட்டனர்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பாலரும் அங்கே இருந்தனர்.  அவர்களில் நாகர்களும் இருந்தனர்,  நிஷாதர்களும் இருந்தனர்.  அங்கிருந்த மற்றவர்களில் இருந்து நாகர்களின் அலங்காரமும், நிஷாதர்களின் அலங்காரமும் தனித்துத் தெரிந்தது.  சிலர் கைகளில் கோடரி, கதை போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்தனர்.  பெண்கள் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தனர்.  அவர்களில் நோய்வாய்ப்பட்டவர்களும் நிறையக் காணப்பட்டனர்.

தெளம்ய மஹரிஷிக்குக் கண்ணன் வரவு அறிவிக்கப் பட்டது.  கண்ணன் தன் ஆசிரமம் தேடி வந்ததைக் கண்டு ரிஷிக்கு மிகவும் சந்தோஷம்.  ஏற்கெனவே ஸ்வேதகேது கண்ணன் காம்பில்யம் செல்லும் வழியில் தெளம்ய ரிஷியின் ஆசிரமத்துக்கு வருவான் எனச் சொல்லி இருந்தான்.  ஆகவே ரிஷியும் கண்ணனை நேரே சந்திக்க ஆவலுடன் இருந்தார்.  இப்போது கண்ணனைக் கண்டதும், அவன் வரவால் தனக்கு மிகப் பெரிய கெளரவம் கிடைத்ததாகக் கருதினார்.  அவரின் ஆனந்தம் எல்லை மீறியது.  கிருஷ்ணனையும், அவன் தோழர்களையும் ஆசீர்வாதம் செய்த பின்னர் அங்கிருந்த யாக குண்டத்தின் முன்னே அமர்ந்த வண்ணம் மந்திரங்களை ஆழ் மனதிலிருந்து ஸ்பஷ்டமாக உச்சரித்துக் கொண்டிருந்த ஒரு மஹா பெரியவரிடம் அழைத்துச் சென்றார் தெளம்ய ரிஷி.

"வாசுதேவா, இந்தத் தீர்த்தம் மட்டுமின்றி நாங்களும் அதிர்ஷ்டக்காரர்களே.  இதோ இவர் யார் தெரிகிறதா?  வேத வியாசர்.  கண்ணா, நீயும் அதிர்ஷ்டக்காரனே.  வேத வியாசர் விஜயம் செய்திருக்கும் சமயம் நீயும் இங்கே வந்திருக்கிறாய்."  என்றார்.

கண்ணன் வியப்பின் உச்சிக்கே போனான் என்று சொன்னால் அது மிகையல்ல.  இது வரையிலும் இப்படி ஒரு ஆச்சரியத்தை அவன் சந்தித்ததில்லை.  "மஹரிஷி, என்றும், ஆசாரியர் என்றும் அனைவராலும் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட வேத வியாசரைக் கண்ணன் சந்தித்தே விட்டான்.  தர்மத்தின் இருப்பிடம், அதன் அஸ்திவாரம், அனைத்து முனிவர்களும், ரிஷிகளும், மாணவமணிகளும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடும் ஒருவர்.  இதோ அவர் முன்னிலையில் தான் நிற்கிறோமே.  கண்ணன் மிக மரியாதையுடன் சாஷ்டாங்கமாக வேத வியாசர் முன்னால் விழுந்து நமஸ்கரித்தான்.  வேத வியாசரின்  அகன்ற கண்கள் ஒரு கணம் வியப்பைக் காட்டின;  மறுகணம் அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகக் கண்களில் கருணை ததும்பியது.  கிருஷ்ணன் தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டான்.

"நான்,  வாசுதேவ கிருஷ்ணன்,  ஷூரர்களின் தலைவரான வசுதேவரின் மகன், தங்களை வணங்குகிறேன், மஹரிஷியே!  இதோ இவன் உத்தவன், என் சித்தப்பா தேவபாகனின் மகன்.  இவன் என் நண்பன் யுயுதானன், சாத்யகனின் மகன்  சாத்யகி."


Friday, November 2, 2012

தேடுதல் வேட்டையில் கண்ணன்!


கண்ணனும் மற்றச் சில முக்கியமானவர்களும் காம்பில்யத்திற்குச் செல்வதற்காக ஆயத்தம் ஆனார்கள்.  அந்த நாட்களில் கங்கையைக் கடந்தே காம்பில்யம் செல்ல வேண்டும்.  மற்ற யாதவர்கள் அங்கேயே தங்கி கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி துவாரகை செல்லும் முன்னர் நாககூடம் சென்று தன் தாய் வழிப் பாட்டனான ஆர்யகனைச் சந்திக்க எண்ணி இருந்தான்.  ஆகவே அவர்கள் அவனுடன் செல்ல ஆயத்தம் செய்து கொண்டனர்.  கண்ணனும் மற்றவர்களும் பிரம்மாண்டமாகக் காட்சி கொடுத்த கங்கையைக் கடக்கப் படகுகளில் ஏறினார்கள்.  அந்த நாட்களில் படகுகளின் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வகித்தது.  கங்கை, யமுனை போன்ற பெரிய நதிகளைப் படகுகளிலேயே கடக்க இயலும்.  சிறு வயதிலிருந்தே கண்ணனுக்கு கங்கையைக் குறித்தும், அதன் புனிதம் குறித்து அறிய நேர்ந்திருந்தாலும் இன்றே அவளின் பிரம்மாண்டமான இந்தத் தோற்றத்தைப் பார்க்கிறான். 
                                     
கண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.  சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான்.  வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன!  அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள்.  இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது.  ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே!  படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன.  படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன.  விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன.  அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது.  இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன.  அவற்றிலிருந்து  உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது.  மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே.  தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.

இரு கரைகளிலும் மனிதர் சென்றறியாத அடர்ந்த காடுகளும் தென்பட்டன.  சில இடங்களில் மனித நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.  அருகே உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வந்து நீராடிச் செல்வதற்கும், தண்ணீர் கொண்டு செல்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட வழி போலும்.  அந்தப் பிராந்தியத்து மக்களான நாகர்கள் பெரும்பாலும் நிர்வாணமாகக் காணப்பட்டார்கள்.  சிறிய ஓடங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார்கள்.  இதைத் தவிரவும் பெரிய பெரிய குடியிருப்புக்களையும் கண்டனர்.   அவை காட்டை அழித்துக் கட்டப்பட்டிருந்தன.  இவை ஆரிய வர்த்தத்தின்  எல்லைகள் எனவும்,  நாகர்களோடு கலந்து சம்பந்தம் வைத்துக்கொண்ட ஒரு சில ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புகள் என்றும் புரிந்து கொண்டனர்.  அங்கே வசித்த மக்கள் இந்தப் படகுகளின் ஊர்வலத்தைக் கண்டதும், அவர்களை நிறுத்தித் தங்கள் இல்லத்துக்கு வருகை தருமாறு உபசரித்தனர்.  படகுகளில் இருந்தவர்களுக்குப்பல விதங்களில் மரியாதை செய்தனர்.  இரவு அங்கே தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.  அனைவருக்கும் படகில் பயணிப்பது கிருஷ்ணன் எனத் தெரிந்ததும், ஆச்சரியமும், உவகையும் கொண்டு கண்ணனின் பாதங்களை அலம்பி வழிபட்டு அவனை ஒரு கடவுள் போலப் போற்றி வணங்கினர்.  ஜராசந்தனை ஓட ஓட விரட்டியதும், யாதவர்கள் அனைவரையும் துவாரகையில் குடியேற்றியதும் கண்ணனை அவர்களிடையே ஒரு வீர தீரப் பராக்கிரமம் உள்ள கதாநாயகனாகக் காட்டி இருந்தது. 

மேலும் படகுகள் செல்லச் செல்ல ரிஷி, முனிவர்கள் சிலரின் ஆசிரமங்களையும் அவர்கள் கடக்க வேண்டி வந்தது.  அங்கிருந்து வந்த வேத கோஷமும், யாகங்களின் அக்னியிலிருந்து எழுந்த புகையும் விண்ணையே தொடும்போல் கேட்டுக்கொண்டிருந்தது.  கிருஷ்ணனும், அவன் கூட வந்தவர்களும் முக்கியமான ரிஷி, முனிவர்களின் ஆசிரமங்களின் அருகே இறங்கி அவர்களை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.  சத்யவதியைப் பார்க்கும் முன்னர் கண்ணனிடம் இருந்த துக்கம் எல்லாம் பறந்து ஓடி விட்டது.   இரவுகளில் சாந்தமான சந்திரனை கங்கை நீர் பிரதிபலிப்பதைக் கண்டு கண்ணன்மனமும் சாந்தம் அடைந்தது.  அது அவனுக்குப் புதியதோர் பலத்தையும் கொடுத்தது.  அவர்கள் தனியாக இருக்கையில் மட்டுமே உத்தவனோடு பாண்டவர்களைக் கண்டு பிடிப்பது குறித்துக் கண்ணன் ஆலோசித்தான்.  தங்களுடன் வரும் யாதவத் தோழர்கள் கூட அறியாமல் பாண்டவர்கள் இருக்கும் இடம்கண்டுபிடிக்கப் படவேண்டும் எனக் கண்ணன் நினைத்தான்.  சாத்யகிக்குக் கூடத் தெரியக் கூடாது.  அவன் மனதில் ஒன்றும் தங்காது.  வெளியிட்டு விடுவான்.  உத்தவன் ஒருவனே இந்த ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளச் சரியானவன்.  வேறு யாரிடமும் சொல்ல இயலாது. உத்தவனும் ரகசியமாக இந்தத் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டான்.  ஒப்புக் கொண்டான்.