Thursday, April 28, 2011

ஷாயிபா பழி வாங்கினாள்! கண்ணன் வருவான், 2-ம் பாகம்!

தான் உடுத்தி இருந்த சேலைத் தலைப்பிற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பார்த்தாள் ஷாயிபா. பின்னர் அதை மீண்டும் மறைத்து வைத்துக்கொண்டு, தான் படுத்திருந்த அறையின் ஒரு பக்கத்தில் இருந்த நீண்ட தாழ்வாரத்திற்குச் சென்றாள். அங்கிருந்து அருகே இருந்த பெரிய முற்றத்திற்குச் சென்றாள். அது வரை யாருமே அவளைப்பார்க்கவில்லை. எங்கும் இருட்டு மண்டி இருந்தது. காரிருள். அவள் அங்கிருந்து மெல்ல, மெல்ல கண்ணன் இரவுகளில் படுத்து உறங்கும் மாமரத்தடிக்கு சப்தமின்றி சென்றாள். பூனையை விடவும் மிருதுவாகப் பாதங்களை எடுத்து வைத்த ஷாயிபா, சில நிமிடங்களில் அந்த மாமரத்தடியை அடைந்தாள். மின்னும் மெல்லிய நட்சத்திர ஒளியில் கண்ணன் உறங்குவதும் தெரிந்தது. தன்னிரு கரங்களையே தலைக்கு அணையாக வைத்த வண்ணம் மெல்லிய புன்னகை இழையோட உறங்கினான் கண்ணன். எப்போது பார்த்தாலும் புன்னகை, மென்னகை, நகைமுகம். ஹும் இவன் செத்துப் போகும்போது கூடச் சிரித்துக்கொண்டே சாவானோ? ஷாயிபாவின் ஆத்திரம் எல்லை கடந்தது. ஹும், இருக்கட்டும், இருக்கட்டும், நன்றாய்ச் சிரிக்கட்டும். சில விநாடிகளில் இந்தப் புன்னகை முகம் உயிரை இழக்கப் போகிறது. அப்புறம் இந்த முகத்தை நெருப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்குவார்கள். ஒரு குரூரத் திருப்தி அடைந்தாள் ஷாயிபா.

இன்னும் தாமதம் செய்யக் கூடாது. சீக்கிரம், சீக்கிரம், ஆம், இன்னும் சீக்கிரம். இவனைப் பார்த்துக்கொண்டிருந்தால், இவனின் இந்த வசீகரமான முகத்தின் அழகில் நான் என்னை இழந்து, என் காரியத்தை மறந்துவிடலாம். என் மனதைப் பலவீனமாக்கிவிடும் இந்த முகம். ஹூம்???? ஆமாம், அது என்ன?? யாரோ எதுவோ, எப்போவோ சொன்னார்களே?? ம்ம்ம்ம்ம்??? நான், அதாவது ஷாயிபா இந்தக் கண்ணனை மணக்க விரும்புவதாக யாரோ, எவரோ சொன்னார்கள் அல்லவோ?? யார் சொன்னது அப்படி?? சொன்னவர்கள் மட்டும் இப்போது என் எதிரே வரட்டும். ஒரு கை பார்த்துவிடுகிறேன். நானாவது இந்தக் கொலைகாரனை மணக்க விரும்புவதாவது! ஒரு வேளை…….. ஒரு வேளை…….. இது வேறுவிதமாக நடந்திருக்கக் கூடுமானால்…… ஓ, ஓஓ, ஓஹோ, இல்லை இல்லை, என் பெரியப்பா மேலுலகில் காத்திருக்கிறார். அவருக்கென நான் அளிக்கப் போகும் காணிக்கையை இன்னமுமா அளிக்கவில்லை என வியப்போடு பார்க்கிறார். இதோ, வந்துவிட்டேன், சீக்கிரமாய்ப் பழியை முடித்துக் காணிக்கையை அளிக்கிறேன், என் தேவனே, ஸ்ரீகாலவ வாசுதேவரே, பரம்பொருளே, உம்மை ஒரு வன் அழித்துவிட்டபிறகும் நான் சும்மா இருந்தேனே இவ்வளவு நாட்களாய்!

ஷாயிபா கைகளைத் தூக்கி இரு கைகளாலும் அந்தக் கத்தியைத் தன் எதிரே படுத்திருந்த உருவத்தின் மீது பாய்ச்சினாள். பின்னர் அதை எடுத்து மீண்டும் பாய்ச்சினாள். அடுத்து இன்னொரு முறை. படுத்திருந்த உருவத்திடமிருந்து எவ்வித எதிர்ப்பும் காணமுடியவில்லை. வலி தாங்காமல் ஓலக்குரலும் எழும்பவில்லை. அவ்வளவு ஏன், ஒரு சொட்டு ரத்தம் கூட வந்ததாய்த் தெரியவில்லை. ஆனால் ஷாயிபா அங்கே நிற்கவே இல்லை. கத்தியை அடுத்தடுத்துப் பாய்ச்சிவிட்டு அங்கிருந்து ஓட்டமாய் ஓடினாள். ஓடும்போதே அவளுக்குத் தன்னைச் சுற்றிலும் இருந்த இருள் விலகுவது தெரிந்தது. அவள் மாளிகைக்கு உள்ளே சென்றாள். அங்கே அங்கே தேவகி அம்மா இறந்து கிடந்தாள். ஆஹா, என்னை எவ்வளவு அன்பாகவும், ஆழமாகவும் நேசித்தாள்? இத்தனைக்கும் நான் என்ன கைம்மாறு செய்திருக்கிறேன்?? எப்போது பார்த்தாலும் எரிந்து விழுவேன்? கத்துவேன்! ஆஹா, அது என்ன?? அது,,,, அது தேவகி அம்மா எந்நேரமும் வைத்துப் பூஜிக்கும் கிருஷ்ணனின் குழந்தை பொம்மை அல்லவோ? ஆஹா, அது உடைந்துவிட்டதா என்ன? இல்லை, இல்லை, தேவகி அம்மா அதைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்ட வண்ணம் இறந்திருக்கிறார். தேவகி அம்மா ஏன் இறந்துவிட்டார்?? ஓஹோ, நான் கண்ணனைக் கொன்றுவிட்ட செய்தி அதற்குள் இங்கே வந்துவிட்டது போலும், அருமைப் பிள்ளையின் பிரிவு தாங்காமல் இறந்துவிட்டார் போலும். அதோ வசுதேவர்….. என்னவோ புலம்புகிறாரே……….என் கிருஷ்ணன்,,,,,,,, என் கிருஷ்ணன்,,,,,, ஷாயிபாவுக்குப் புரிந்துவிட்டது. அவள் தான் கண்ணனைக் கொன்றுவிட்டாள் எனத் தெரிந்து கொண்டு விட்டாரோ? திடீரென சுபத்ரா அழும் குரல் கேட்டது.

என் அண்ணாவே, கோவிந்தா, கோவிந்தா, அருமை அண்ணா!

Thursday, April 21, 2011

ஷாயிபாவின் உள் அந்தரங்கம்! கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

சற்று நேரத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு விட்டாள் ஷாயிபா. திரிவக்கரையைப் பார்த்து, "உனக்கு என்ன பைத்தியமா?? நானாவது கண்ணனை மணக்க நினப்பதாவது?? அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை!" என்றாள் ஆத்திரத்துடன். "ஓ, அப்படியா? இல்லை ஷாயிபா, இல்லை, நீ என்ன நினைக்கிறாய் என்பதை நீ நன்கு அறிவாய். உன் உள் மனம் உனக்குத் தெரியும். உன் வழியில், உன் சுபாவமாகக் கண்ணனை நீ உன் வழிக்குக்கொண்டு வர நினைக்கிறாய்." ஆத்திரத்துடன் பேசினாள் திரிவக்கரை. மேலும், "நீ கண்ணனை வெறுப்பது உன் நடிப்பு. ஏனெனில் உனக்கு நன்கு தெரியும், கண்ணன் உன்னை ஒரு நாளும் மணக்கமாட்டான் என்பது. ஆகையால் வெறுப்பதுபோல் நடிக்கிறாய். இவ்வளவு நாட்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் வெளியே வந்துவிட்டது திரிவக்கரைக்கு. கோபத்தை அடக்க முடியாமல் பேசிய திரிவக்கரை ஷாயிபாவின் நெஞ்சை ஊடுருவும் நோக்கில் அவள் மீது தன் பார்வையைப் பதித்தாள். அவள் நெஞ்சின் ஆத்திரம் அத்தனையும் அவள் கண்கள் வழியே ஷாயிபாவின் மீது பாய்ந்தது. அவள் கலங்கினாள். திரிவக்கரையின் இந்தப் புதிய அவதாரம் ஷாயிபா இன்று வரை காணாத ஒன்று. அவள் உள்ளூர நடுங்கினாள். “திரிவக்கரை, நீ ஒரு கொடுங்கோன்மை செய்யும் பெண்மணி. கொடுமைக்காரி. எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.” இதைச் சொல்லும்போது தன்னையும் அறியாமல் சற்று நேரத்தில் தன்னைச் சமாளித்துக்கொன்டு விட்டாள் ஷாயிபா. ஆனாலும் திரிவக்கரையின் குற்றச் சாட்டுகள்?? அவற்றில் உண்மை உள்ளதா? தன்னையும் அறியாமல் தன் குரலில் தன் பலவீனம் வெளிப்பட்டுவிட்டதோ?


ஆனால் திரிவக்கரையோ, “ஆஹா, பெண்ணே, என்னை என்னவென நினைத்தாய்! விபரம் தெரிந்த நாட்களில் இருந்து அரண்மனையில் சேவை செய்து வருகிறேன். அரண்மனையின் அனைத்து விபரங்களும் எனக்கு அத்துபடி. எதுவுமே தெரியாத அப்பாவி என என்னை நினைக்கிறாயா?? நான் சொல்வதை உன்னால் மறுக்க முடியுமா?? நிச்சயமாய் உனக்கு வெளிப்படையாக மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியை நான் சொல்லவில்லைதான். ஒரு வேளை நான் இப்போது உனக்குக் கொடுத்திருப்பது விஷமாக இருக்கலாம். ஆம், விஷம் தான். கஷ்டப்பட்டு விழுங்கு அதை! உன்னால் எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவுக்கு அந்த விஷத்தை ஜீரணமும் செய்து கொள். ஒன்று நீ அவனுக்கு ஒரு நல்ல சகோதரியாக இருக்கவேன்டும், அல்லது என்றென்றைக்கும் அவனை விட்டு நீ விலகவேன்டும். திரும்பக் கண்ணனைச் சந்திக்கவே முடியாத அளவுக்கு எப்போதுமே நீ இல்லாதிருக்கவேன்டும். “ மிகக் கடுமையாகவே தன் வார்த்தைகளை உதிர்த்தாள் திரிவக்கரை. எதிர்பாராத இந்த அவமானத்திலும் அடக்கவே முடியாத கோபத்திலும் ஷாயிபாவும் வாயடைத்துப் போயிருந்தாள். அவளுக்குப் பேச்சே வரவில்லை.

ஆனால் திரிவக்கரையோ தன் கோபத்தை இத்தனை நாள் அடக்கி வைத்திருந்ததே பெரிய விஷயம் என்னும்படியாகக் கோபத்தைக் கொட்டித் தீர்த்தாள். அவளாலேயே அவளை நிதானம் செய்து கொள்ள முடியவில்லை. தன் வசத்தில் இல்லை திரிவக்கரை. “நீ, கம்சாச் சித்தியின் புத்திமதிகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறாய் போல் தெரிகிறது. என்ன சொல்கிறாள் அவள்? தன் கிசுகிசுக்குரலில்! அவளுடைய பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்பவர்கள் காதுதான் புண்ணாகும். விஷமருந்தியவர்களின் குடல் கெட்டுப்போவதைப்போல் அவர்கள் மனமும் கெட்டுப்போகும். இதோ பார் ஷாயிபா! நான் சொல்வதைக் கேள். கம்சாச் சித்தி பேசும்போது அதைக் கவனித்துக் கேட்டுக்கொள்ளாதே. புரிந்ததா?? இது தான் இப்போதைக்கு நான் உனக்குச் சொல்லும் ஆலோசனை, புத்திமதியும் கூட.” கைகளில் ஏந்தி வந்த தாம்பாளத்தை, கலீர், கிண்கிணார்” என்ற சப்தம் வரும்படியாக ஓசையுடன் கீழே வைத்தாள் திரிவக்கரை. “ ஓ, மறந்துவிட்டேனே, உன் அருமைக் கம்சாச் சித்தியிடம் இதைச் சொல். அவள் செல்ல மகன் ப்ருஹத்பாலன் யுவராஜாவாக வேன்டுமெனில் கண்ணன் விரும்பும் வகையில் தான் ஆகவேண்டும். கண்ணன் சொற்படி கேட்க வேண்டும். அவன் தாயின் முந்தானையில் தன் முகத்தை ஒளித்துக்கொண்டு யுவராஜாவாக வேண்டுமெனில் அது ஒருக்காலும் நடக்காத ஒன்று.” போகிற போக்கில் இதைச் சொன்ன திரிவக்கரை அங்கிருந்து சென்றுவிட்டாள்.


அப்பாடா! நிம்மதிப்பெருமூச்சு ஷாயிபாவை உலுக்கி எடுத்தது. ஆனாலும் அவள் தன் மனதை ஆராய ஆரம்பித்தாள். உண்மையில் அவள் கண்ணனை விரும்புகிறாளா என்ன?? ஆனால் ஆனால்?? ஷ்வேதகேது?? அவள் ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென நினைத்தது உண்மைதான். ஆனால் அது எப்போது?? கண்ணனைச் சந்திக்கும் முன்னர் அல்லவோ?? சட்டென ஒரு எண்ணம் அவளைத் தாக்கியது. ஒருவேளை……. ஒரு வேளை……… அவள் பெரியப்பாவே அவளைக்கண்ணனுக்குத் திருமணம் செய்வித்துச் சமரசம் செய்து கொள்ளவேண்டுமென நினைத்திருந்தால்??? அப்போது தான் கண்ணனைப் பூரண விருப்பத்துடன் கணவனாக ஏற்றுக்கொண்டிருப்போமா? “இல்லை, இல்லை, என் அருமைப்பெரியப்பா! ஒருக்காலும் இல்லை. அப்படி எல்லாம் நடைபெறாது. என் கடவுளே, என் தேவனே, நான் ஒருபோதும் உனக்கு துரோகம் செய்ய மாட்டேன். உனக்கு விசுவாசமாகவே இருப்பேன். அந்த கிருஷ்ணனைப்பழி வாங்குவேன். பழி, பழிக்குப்பழி! அவன் இறக்கவேண்டும்.” தன் உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த அந்தக் கத்தியை எடுத்துப் பார்த்த ஷாயிபா அதைத் திரும்ப வைத்தபடியே, “இன்று நடுநிசியில் முடிக்கவேண்டும்.” என்று வாய் விட்டுச் சொல்லிக்கொண்டாள். ஆனாலும் அவள் மனம் அவள் சொல்வதைக் கேட்காமல் தன் போக்கில் வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது.

திரிவக்கரை அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துச் சென்றிருந்தாள். அவள் மேல் தேவகி அம்மா மிகுந்த பாசம் வைத்திருக்கிறாள். ஏன் இந்த திரிவக்கரையும் அவளுக்காக எவ்வளவு வேலைகளைச் செய்து தருகிறாள். இவை எல்லாம் அவள் மேல் உள்ள அன்பாலா? அல்லது அவள் பெரியப்பா மேல் உள்ள மரியாதையினாலும் பாசத்தினாலுமா?? கிடையவே கிடையாது. எல்லாம் அந்த கிருஷ்ணன் இவர்கள் என்னிடம் இப்படி நடக்கவேண்டும் எனச் சொல்கிறான். அவர்கள் அதை நிறைவேற்றுகிறார்கள். அவனும் தான் என்னிடம் அன்பாக இருக்கிறான். இந்த உலகமே ஒரு புதிய உலகம். முற்றிலும் மாறுபட்ட உலகம். அவளிடம் எல்லாரும் இத்தனை பிரியமாகவும், பாசத்துடனும் நடந்து கொள்வதற்கு அந்த அந்த மாட்டிடையன் கண்ணனே காரணம். யோசித்து யோசித்து ஷாயிபாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. இதென்ன தூக்கமா? மயக்கமா? ஒன்றுமே புரியவில்லையே! அவளுக்குத் தான் எங்கேயோ பறக்கிறாற்போல் இருந்தது. எங்கோ எங்கோ செல்கிறாள். மேகக் கூட்டங்களுக்கிடையே மிதந்துமிதந்து செல்கிறாள். மேகங்கள் அவளைக் கடக்கின்றன. அதோ, அது என்ன சூரியனா, சந்திரனா?? சந்திரனாய்த் தான் இருக்கவேண்டும். இல்லை எனில் இத்தனை குளுமை எங்கிருந்து வரும்?? இது பகலா, இரவா? ம்ம்ம்ம்? இரவு! ஆம் இரவு, இரவுதான் வந்துவிட்டது. ஆஹா, நடுநிசியாகிவிட்டதா? கண்ணனைக் கொல்லவேண்டுமே. என் வாழ்நாளின் லட்சியமே கண்ணனைக் கொல்வது தான். இதை விடப் பெரியதொரு தொண்டை அவளால் தன் பெரியப்பனுக்குச் செய்ய முடியாது. பெரியப்பாவின் ஆன்மா அமைதி அடையவேண்டுமானால் அவள் கண்ணனைக் கொன்றே ஆகவேண்டும். பழி வாங்க வேண்டும். ஆம், பழி, பழிக்குப்பழி. அவள் உயிர்வாழ்வதே இந்தப் பழிவாங்கலுக்குத் தான். அவள் வாழ்வின் ஒரே ஆசை, ஒரே குறிக்கோள், ஒரே லட்சியம் இதோ, இப்போது நிறைவேறப் போகிறது. அவள் பெரியப்பாவின் ஆன்மா சாந்தியடையும்.

Sunday, April 17, 2011

ஷாயிபாவின் மனம், கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

அங்கிருந்து ஷ்வேதகேது சென்றதும், அந்த மேடையிலேயே அமர்ந்த ஷாயிபா சற்று நேரம் யோசித்தாள். அவள் பிறந்து வளர்ந்த கரவீரபுரத்தின் மலைப்பகுதிகளில் மக்கள் சுயநலத்தோடும், குறுகிய மனப்பான்மையோடுமே இருந்திருக்கின்றனர். ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள், அவற்றில் ஜெயிப்பவரே தலைவர் என்றிருந்த ஒரு உலகில் இருந்து இப்போது இங்கே அவள் காணும் உலகம் முற்றிலும் மாறுபட்டல்லவோ காண்கின்றது?? இங்கே மன்னனை மக்கள் உளமார்ந்த அன்போடு நேசிக்கின்றனர். அதோடு அரசர்களும் குடிமக்களைக் குறித்துக் கவலைப்படுகின்றனர். குடிமக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என நினைக்கின்றனர். குடிமக்களுக்காகத் தாங்கள் ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழவேண்டும் என்று கூட நினைக்கின்றனர். வாழவும் செய்கின்றனர். இது எப்படி முடியும்? ஆனால்……. ஆனால் …… இவர்களால் அவற்றை வெகு இயல்பாகச் செய்ய முடிகிறது. இது தான் வாழ்க்கைமுறை என ஏற்றுக்கொண்டு எந்தவிதமான மன வருத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் சந்தோஷமாகவும் இருக்கின்றனர். வருவனவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து நியாயமான முறையில் வெளிவருவதைப் பற்றியே யோசிக்கின்றனர்.

அவள் எண்ணம் கரவீரபுரத்தின் சிறைச்சாலையில் மனம் ஒப்பி அடைபட்ட ஆசாரியர்களை நினைத்தது. தங்கள் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மனம் ஒப்பிச் சிறையில் அன்றோ அடைபட்டனர்?? அதிலிருந்து தப்ப எண்ணவே இல்லை. நம் பெரியப்பா ஸ்ரீகாலவர் தரும் பரிசுகளையும், விசேஷ வசதிகளையும், ஆடம்பர வாழ்க்கையையும் விட அந்தச் சிறைச்சாலையே மேன்மை எனக் கருதிச் சென்றார்களே! இந்த தர்மம், தர்மம் எனச் சொல்கின்றனரே, அது என்ன அவ்வளவு உயர்வான ஒன்றா? ம்ம்ம்ம்?? ஆம், ஆம் அப்படித்தான் இருக்கவேண்டும். இப்போது நான் வந்து வாழும் இந்த உலகமே விசித்திரமாக உள்ளது. இந்தக்கண்ணனை நான் தான் கொலைகாரன் என்கிறேன். ஆனால் இங்கேயோ அவனை மாபெரும் ரக்ஷகனாகப் பார்க்கின்றனரே. அவனிடம் எதுவோ ஒன்று இருக்கிறது. அது அனைவரையும் அவன் பால் ஈர்க்கிறது. என்னவென்று தான் புரியவில்லை. ம்ம்ம்ம்ம்ம்??

கரவீரபுரத்தை ஜெயித்த கண்ணன் அதைத் தனக்குக் கீழ்க் கொண்டு வந்து தான் ஆட்சி செய்யவில்லையே! அங்கேயே அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அடுத்த தகுதியான நபர் ஸ்ரீகாலவனின் ஒரே மகனான ஷக்ரதேவனே எனக் கருதி அவனிடம் அல்லவோ ஒப்படைத்தான். அவனுக்கல்லவோ பட்டாபிஷேஹம் செய்து வைத்தான்! அவ்வளவு ஏன்? அங்கே இருந்திருந்தால் நான் ராணி பத்மாவதிக்கு ஒரு தாசியாக அடிமையாக இருந்திருக்கவேண்டும். ஏற்கெனவே அவளுக்கு நான் செய்த கொடுமைகளுக்காக பழி தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தக் கண்ணன் வந்தல்லவோ என்னைக் காத்தான்! அங்கிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது இவன் அன்றோ. இல்லை எனில் பத்மாவதியால் பழிவாங்கப் பட்டுச் சீரழிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பேனோ? ம்ஹும், அதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதுவும் நடக்கும் முன்னர் என்னை நானே அழித்துக்கொண்டிருக்க மாட்டேனா?

ஷாயிபாவின் சிந்தனைகள் திரிவக்கரையின் வரவால் தடைப்பட்டது. அவள் கைகளில் ஒரு பெரிய தாம்பாளத்தை ஏந்திக்கொண்டு இருந்தாள். அதில் நிறைய இனிப்பு வகைகளும், விலை மதிக்க முடியாக் கற்கள் பதிக்கப் பட்ட ஆபரணங்களும் காணப்பட்டன. அவற்றை ஷாயிபாவிடம் நீட்டி திரிவக்கரை,”ஷாயிபாவுக்கு வாழ்த்துகள். தேவகி அம்மாவின் ஆசிகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக! தேவகி அம்மா இந்தப்பரிசுகளை உனக்காக அனுப்பி உள்ளார்கள். இப்போது தான் நீயும் ஷ்வேதகேதுவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாய் நிச்சயம் பண்ணி இருப்பது அம்மாவுக்கும் மற்ற அந்தப்புரப் பெண்களுக்கும் தெரிய வந்தது. தேவகி அம்மாவுக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி. தன் மகிழ்ச்சியை உன்னிடம் வெளிப்படுத்தச் சொன்னார்கள்.”

“நான் ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாய் யார் சொன்னார்கள்?” ஆத்திரம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.

“கண்ணன் தான் கூறினான்.”

“கண்ணன், கண்ணன், கண்ணன், எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் கண்ணனைப் பற்றியே பேச்சு! அவன் யார் என் திருமணம் பற்றி முடிவு செய்ய? நான் ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. என்னை இந்த மாதிரி ஒரு கல்யாணத்தில் தள்ளி விரட்ட நினைக்கிறானா அந்தக் கிருஷ்ணன்! யாரிடம் இந்த வேலை! நான் அவனை வெறுக்கிறேன். “ கத்தினாள் ஷாயிபா.

திரிவக்கரைக்கும் கோபம் அளவுக்கு மீறி வந்தது. “இதோ பார் ஷாயிபா, உன்னுடைய இந்தப் பிதற்றல்களைக் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது.” எல்லை மீறிய கோபத்தை திரிவக்கரையால் கட்டுப்படுத்த இயலவில்லை. “நான் சொல்வதைக் கேள் ஷாயிபா. இத்தனை நாட்களாய் உன்னுடைய சீறல்களையும், வசைமொழிகளையும், இகழ்ச்சியான சொற்களையும் கஷ்டப்பட்டுப் பொறுத்துக்கொண்டிருந்தேன். நீ ஒரு குழந்தை, கோபமான குழந்தை என்றே எண்ணினேன். ஆனால்……. ஆனால்……….வெகுநாட்கள் நீ உன்னை என்னிடமிருந்து மறைக்க இயலாது. நீ ஒரு அழகான பெண். இளம்பெண். அதை மறக்காதே. உன் மனம் என்ன சொல்கிறது என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன். நீயும் அதை ஒத்துக்கொண்டு, மேற்கொண்டு ஆவதைப் பார். அவ்வளவு தான் சொல்வேன். அதுதான் உனக்கும் நல்லது.” திடீரென எழுந்த கோபத்தில் திரிவக்கரை பல்லைக் கடித்துக் கோபத்தை அடக்கியவண்ணம் ஷாயிபாவைப் பார்த்துச் சொன்னாள். “நீ ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஏனெனில் நீ கண்ணன் உன்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என நினைக்கிறாய்.” அடித்தொண்டையில் சீறினாள் திரிவக்கரை.

ஷாயிபாவிற்குப் பேச்சே வரவில்லை.

Thursday, April 14, 2011

ஷாயிபாவின் வெறுப்பு! கண்ணன் வருவான் 2-ம் பாகம்

ஒருகாலும் நடக்காத ஒன்று ஷாயிபா. அவன் சாதாரணமானவனே அல்ல. மஹரிஷி நாரதரும் கூறி உள்ளார். தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் வேத வியாசரும் கூறுகிறார். கண்ணன் சாமானியமானவனே அல்ல. அவன் அதர்மத்தை வேரோடு அழிக்கப்பிறந்தவன். எங்கள் குருதேவர் சாந்தீபனியும் சரி, ஆசாரியர் கர்கரும் சரி கண்ணன் பிறந்ததில் இருந்து அவனின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றனர்? அவர்களுக்குத் தெரியாதா? உண்மையில் எங்கள் உயிரைக் காப்பது தான் கண்ணன் கைகளில் இருக்கின்றது. “

“ஓ, அப்படியா? அப்படிச் சொல்லு, ஒரு வழியாக உண்மையை ஒத்துக்கொண்டு விட்டாய் அல்லவா? இதை முதலிலேயே கூறி இருக்கலாமே?? கண்ணனுக்கு உதவுவது தான் உன் நோக்கம் என்பதைத் தெளிவாய்ச் சொல்லி இருக்கலாம். “ஷாயிபாவின் குரலில் கடுமை ஏறியது. “ஏன் என்னிடம் பொய் சொன்னாய்? என்னை மணந்து செல்வதற்காகவே வந்திருப்பதாய்க் கூறினாயல்லவா? அதில் உண்மை என்பதே இல்லை அல்லவா?”
“ஓஹோ, ஷாயிபா, சற்றுச் சரியான கோணத்திலே உன் பார்வையைச் செலுத்து. ஏன் இவ்விதம் தவறாகவே நினைக்கிறாய்?? இப்போது ஒரு மாபெரும் சதிச் சுழலிலே சிக்கிக்கொண்டிருக்கிறோம். இதிலிருந்து மீள வேண்டுமெனில் நான் மட்டும் அல்ல, அனைவருமே கண்ணன் சொல்வதைத் தான் கேட்கவேண்டும். நாம் இருவரும் மணந்து கொண்டு குண்டினாபுரம் சென்று அங்கே கண்ணன் இட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கவேண்டும்.” ஷ்வேதகேது கூறினான்.

“ஓ, ஓஹோ, ஆஹா, அப்படி எனில் உன்னுடைய கண்ணனின் சதித்திட்டத்தில் நானும் ஒரு கருவியாகச் செயல்படவேண்டும்.” என்றாள் ஷாயிபா.

ஷ்வேதகேதுவுக்கு இத்தனை நேரம் அடக்கி வைத்த கோபம் பீறிட்டெழுந்தது. “உன்னையே ஒரு முறை கேட்டுக்கொள் ஷாயிபா. நான் சதியிலோ அல்லது பாவச் செயல்களிலோ ஈடுபடுவேனா? உன்னையே ஒரு முறை கேட்டுப் பார்த்துக்கொள். இதோ பார், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். பிரபாஸ க்ஷேத்திரத்தில் உன்னை எந்த நிமிடம் கண்டேனோ அந்த நிமிடத்திலிருந்து நீ நடக்கும் பாதையின் தூசியைக் கூட வழிபடத் தயாராக இருக்கிறேன். நீ மட்டும் உன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டால் இந்தக் கணமே கூட உன்னைத் திருமணம் செய்து கொண்டுவிடுவேன். அவ்வளவு நேசிக்கிறேன் உன்னை. மிகவும் போற்றுகிறேன். என் உயிரினும் மேலாகக் கருதுகிறேன். உனக்காக, உன் அன்புக்காக ஏங்குகிறேன். நீ என்னை மணக்க மறுத்து விட்டால்?? ஆம், மறுத்தாயானால்?? உடனே இறந்துவிடமாட்டேன் ஷாயிபா. மரணதேவன் என்னை அழைத்துச் செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அங்கே மேலோகத்தில் உனக்காக மலர்ப்பாதை அமைத்து உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் கண்டார்கள்? அது தான் நடக்கப் போகிறதோ என்னவோ!” ஷ்வேதகேது பெருமூச்சு விட்டான்.

“நீ எப்படி இறந்து போவாய்?? அதெல்லாம் இறக்க மாட்டாய். அது தான் உன் அருமை நண்பன் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என விரும்புகிறானே! அதை நீ மீற மாட்டாயல்லவா?” ஏளனம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.

“என்னால் காத்திருக்க இயலாது.” சர்வ நிச்சயமாய்க் கூறினான் ஷ்வேதகேது. “உன் சம்மதம் தெரியும் வரை, நீ மனம் மாறும் வரை காத்திருக்க இயலாது. உன் முடிவை உடனே கூறு. நாம் இருவரும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பெரிய பணிகள் நமக்காகக் காத்திருக்கின்றன.”

“அப்படி என்ன அரிய பணி?? என் உதவியோடு நீ ஆற்றவேண்டிய சிறந்த பணி என்னவோ?” குரலில் சற்றும் ஏளனம் குறையாமல் கேட்டாள் ஷாயிபா.

“ஜராசந்தனின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். கிருஷ்ணனைக் கொல்லவேண்டும் என்பதற்காகவே சேதி நாட்டு இளவரசன் சிசுபாலனைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறான் ஜராசந்தன். அதை முறியடிக்கவேண்டும். ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் நடக்கவிருக்கும் பொம்மைக் கல்யாணத்தை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும்.”

“ஓ, திரிவக்கரை ஒரு முறை என்னிடம் இளவரசி ருக்மிணி கண்ணனைக் காதலிப்பதாய்க் கூறினாளே?”

“ஆம், அவள் கண்ணன் மேல் பைத்தியமாக இருக்கிறாள் என்றே கூறலாம். இன்னமும் கண்ணனைத் தவிர வேறு எவரையும் ஏற்க அவள் மனம் மறுக்கிறது. முதலில் இந்த பொய்யான சுயம்வரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதன் பின்னர் ருக்மிணி கண்ணனை மணப்பதற்கு உன் மூலம் உதவி செய்ய நினைக்கிறேன். நீ அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.”
“ஆஹா, திட்டம் என்னவோ நன்றாய்த் தான் உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் நீ செய்து முடிக்கும் முன்னர் ருக்மிணிக்கு வேறு எவரோடும் திருமணம் நடந்துவிட்டால்????”

“எனக்கு ருக்மிணியை நன்கு தெரியும். அவள் மனதை நான் புரிந்து கொண்டு விட்டேன். அவள் மன உறுதி கொண்ட ஒரு பெண். தன் மனதைக் கண்ணன் மேல் திடமாக வைத்திருக்கிறாள். கண்ணனைத் தவிர வேறு எவரையேனும் மணக்கும்படியான சந்தர்ப்பம் நேர்ந்தால், அவள் அதை விடத் தன் உயிரை விட்டுவிடுவாள் என எதிர்பார்க்கலாம். இது சர்வ நிச்சயம். அவள் அப்படிப்பட்ட பெண்.”

“ஆஹா, எல்லாப் பெண்களும் அப்படித் தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்வது என்பதோ தாயும், தகப்பனும் சுட்டும் ஒருவனைத் தான்.”

“நீ அப்படி என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிடாதே ஷாயிபா. “ஷ்வேதகேது கொஞ்சம் கவலையுடனேயே கூறினான். “ஷாயிபா, பழைய விஷயங்களை மறந்துவிடு. நாம் இருவருமாகப் புதியதொரு எதிர்காலத்தை ஆரம்பிப்போம். நான் உன்னை இன்னமும் விரும்புகிறேன். மனதார விரும்புகிறேன். என் கண்களில் நீ இல்லாத எதிர்காலத்தை நான் காண விரும்பவில்லை.”

“கிருஷ்ணன் ருக்மிணியை மணந்து கொள்ளச் சம்மதித்துவிட்டானா?”ஷாயிபா கேட்டாள். திடீரென ஷாயிபாவிற்கு இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்தது. “எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் ஷ்வேதகேது. “நீ தான் சொல்லேன்.” என்றான்.

“இதோ பார் ஷ்வேதகேது. நான் இந்தக் கண்ணனை வெறுக்கிறேன். அடியோடு வெறுக்கிறேன். அவனுக்காக எந்த உதவியையும் நான் செய்யத் தயாராக இல்லை. செய்யவும் மாட்டேன். உதவியா உதவி?? என் கண் முன்னால் அந்தக் கண்ணன் சாகவே நான் விரும்புகிறேன். அதே சமயம் நான் உன்னை மணக்கவும் விரும்பவில்லை. என்னையும் என் பெரியப்பனையும் ஏமாற்றி நயவஞ்சகமாக என் பெரியப்பனைக் கொன்று, நாட்டையும் பறித்தாய் நீ. அந்தக் கண்ணனுக்கு அதற்கான உதவியைச் செய்தாய் நீ. அதோடு உன்னை மணந்து கொண்டு அந்தக்கண்ணனுக்கு உதவி செய்யும் ஒரு முக்கியக் கருவியாக நான் விரும்பவில்லை. நீ போகலாம்.”

“கண்மூடித்தனமான கோபத்தில் இருக்கிறாய் ஷாயிபா. அந்தக் கோபத்திலேயே பேசவும் செய்கிறாய். நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கப் போகிறேன். உன்னிடமிருந்து இல்லை என்ற பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. வலுக்கட்டாயமாகவேனும் உன்னைத் தூக்கிக்கொண்டு குண்டினாபுரம் செல்லவே நான் விரும்புகிறேன். உன்னை விட மாட்டேன்.”

“நீ முதலில் இங்கிருந்து செல்!’ சீறினாள் ஷாயிபா.

“இப்போது நான் போனாலும் தினமும் உன்னிடம் தான் வருவேன். நீ சரி என்று சொல்லும் வரை வருவேன்.” என்றான் ஷ்வேதகேது.

Sunday, April 10, 2011

ஷாயிபாவின் கோபமும், ஷ்வேதகேதுவின் ஆவலும்! கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

ஷாயிபாவின் மனதில் எழுந்த கோபத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்றார்கள். அங்கே மெளனம் நீடித்தது. இருவருமே எதுவும் பேசவில்லை. அவர்களோடு சேர்ந்து காலமும் நின்றுவிட்டதோ எனும்படி எங்கும் ஒரே அமைதி. அந்தக் கல்லால் ஆன சிங்காதனத்தின் எதிரே தானும் ஒரு கற்சிலை போல் நின்றிருந்தாள் ஷாயிபா. முதலில் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஷ்வேதகேதுவே பேச ஆரம்பித்தான். “ஷாயிபா, கண்ணன் உன்னிடம் சொல்லி இருப்பானே??என்னால் உன்னை விட்டுவிட்டு வாழ முடியாது. நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே சூனியமாய்த் தெரிகிறது. இரவும், பகலும் நான் உன்னை நினைந்து ஏங்குகிறேன். உன்னோடுசேர்ந்து வாழப்போகும் வாழ்க்கைக்கான கனவுகளில் மூழ்கி விடுகிறேன். நான் இப்போது இங்கே வந்ததே உன்னை என் மனைவியாக்கிக்கொண்டு குண்டினாபுரம் அழைத்துச் சென்று அங்கே அமைதியானதொரு வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்று தான்.” ஷ்வேதகேது ஒரு வழியாகச் சொல்லி முடித்தான்.

“பொய்யனே!” வெடித்தாள் ஷாயிபா. அடக்க முடியாத கோபம் அவள் குரலில் தெரிந்தது. நீ குண்டினாபுரத்திலிருந்து இங்கே வந்ததன் உண்மையான காரணம் எனக்குத் தெரியாதென நினைத்தாயா?? உன் அருமைச் சிநேகிதனும் உன் மாணவன் எனப் பெருமை அடித்துக்கொள்ளும் கிருஷ்ணனுக்காகச் செய்தி கொண்டு வந்திருக்கிறாய். பீஷ்மகன் தன் ஒரே மகள் ருக்மிணிக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கச் சுயம்வரம் வைத்திருக்கும் தகவலை நேரில் தெரிவிக்க வந்துள்ளாய். ஏனெனில் பீஷ்மகனின் அதிகாரபூர்வ அழைப்பு இங்கே வரவில்லை என்பது எனக்குத் தெரியும்.” சற்றே நிறுத்தினாள் ஷாயிபா. கோபத்திலும், ஆத்திரத்திலும் அவள் உடலே துடித்துக்கொண்டிருந்தது. ஷ்வேதகேது அதை மறுப்பான் என எண்ணினால் ஷாயிபா ஏமாற்றமே அடைந்தாள்.

“உண்மைதான் ஷாயிபா. உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றதே. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை நான் கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறாய் அல்லவா?? அங்கே ஒரு பெரிய சதியே நடக்கிறது. அந்தச் சதியின் மூளை ஜராசந்தன். எவ்வாறேனும் யாதவர்களையும், கண்ணனையும் அடியோடு அழிக்கத் துடிக்கிறான் . கண்ணனை எவ்வாறேனும் கொல்வது ஒன்றே அவன் குறிக்கோள். இந்நிலையில்………..” ஆரம்பித்த ஷ்வேதகேதுவை இடைவெட்டினாள் ஷாயிபா. “அப்படிக் கண்ணன் கொல்லப் பட்டால் அது சரியானதே. அவன் செய்த அனைத்துத் தீங்குகளுக்கும் சரியான பதிலாகும். நன்றாய்ச் சாகட்டும்.” ஆத்திரத்துடன் மொழிந்த ஷாயிபா, ஷ்வேதகேதுவைப் பார்த்து, "அதுசரி, என்ன உனக்கு இந்தக் கண்ணனிடம் மட்டும் இவ்வளவு பாசமும், கருணையும் பொங்குகிறது??? இவனிடம் எதைக் கண்டாய்?? இவனுக்காக நீ என்னையும் ஏமாற்றினாய். என் பெரியப்பாவையும் ஏமாற்றினாய். இப்போது நீ ஊழியம் செய்யும் அரசன் பீஷ்மகனையும் ஏமாற்றப்போகிறாயா? உன்னுடைய துரோக சிந்தனைகளுக்கு அளவே இல்லையா? “ ஷாயிபா கோபத்துடன் கேட்டாள்.

“ஷாயிபா, ஷாயிபா, நீ எங்களைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?? நீ ஏன் எப்போதும் கரவீரபுரத்தின் நடைமுறைகளையும், அதன் அளவுகோலாலேயேயும் எங்களை எடை போடுகிறாய்?? இங்கே….” அதற்குள்ளாக ஷாயிபா கடுகெனப் பொரிந்தாள். “எங்கள் அளவுகோல் நீங்கள் வைத்திருப்பதை விட மிக மிக மேலான ஒன்று. நாணயமான ஒன்று.” என்றாள். “இருக்கலாம், இருக்கலாம். ஆனால்…… ஆனால்…….. இங்கே இங்கே ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் வேறு. முற்றிலும் வேறான ஒன்று. கரவீரபுரத்தின் வழக்கங்களை விட முற்றிலும் மாறுபட்டது. இங்கே உள்ள அரச தர்மம் நீடித்து நிலைத்துத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒன்று. எவராலும் அதை மீற இயலாது. இதைக் கேள் ஷாயிபா, எங்கள் முன்னோர்கள் இறந்துவிட்டார்கள் தான். அவர்கள் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் அவர்கள் நிலைநாட்டிய தர்ம்ம் செத்துவிடவில்லை. நிலைத்து நிற்கின்றது. அடுத்தடுத்துத் தொடர்ந்து வரும் அனைத்து மன்னர்களும் இதைத் தொடர்ந்து நிலை நாட்டுகின்றனர். தர்மத்தின் எல்லையைக் கடக்க எவரும் முயலவில்லை. முயலவும் மாட்டார்கள்.” என்றான் ஷ்வேதகேது.

“எனில் என் பெரியப்பாவிடம் அந்த தர்மமே இல்லையா? ஜராசந்தனிடம் இல்லையா?” ஷாயிபா கேட்டாள். “நீ கேட்பது சரியே. உனக்கு விளக்கவேண்டியதும் என் கடமை. இந்த ஜராசந்தன் பல வருடங்களாகச் சிற்றரசர்களைக் கொன்று அவர்களின் ராஜ்ஜியத்தைத் தன் ராஜ்யத்தோடு இணைத்துக்கொண்டுவிடுகிறான். அவர்களின் குடும்பப்பெண்களை மானபங்கம் செய்து தன் அரண்மனையில் பணிப்பெண்களுக்கும் கீழாக நடத்துகிறான். வீரர்களையும் தீரச் செயல்கள் செய்பவர்களையும் அவனுக்குப்பிடிக்கவில்லை. அவர்களை எவ்விதமேனும் அடிமைப் படுத்தி விலங்கிட்டுச் சிறையில் தள்ளுகிறான். பல வித்யாஸ்ரமங்களையும், குருகுலங்களையும் அடியோடு அழித்து ஆசாரியர்களை அவமானம் செய்து நாட்டை விட்டே துரத்தினான். இப்போது…. இப்போது….. இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கண்ணனால் ஏற்படப்போகிறது.” ஷ்வேதகேது நிறுத்தினான்.

“ஓஓஓஓஓ, இந்த கோவிந்தன் என்பவன், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடைச்சிறுவன்….. அவன் தான் உங்களைக் காக்க வந்தவனா??? என் பெரியப்பனைக் கொன்றதோடு அல்லாமல், தன் சொந்த மாமனையும் தன் கரங்களாலேயே கொன்ற பாதகன்!” ஏளனம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.


“ஆஹா, உனக்கு இப்போது எதுவும் புரியாது ஷாயிபா. கரவீரபுரத்தின் நீரின் மகிமை இன்னமும் உன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அது முழுதும் அகன்றால் தான் நீ உண்மையை உள்ளது உள்ளபடி பார்க்க ஆரம்பிப்பாய். “ ஷ்வேதகேது தொடர்ந்து பேசினான். “கடவுளரின் சக்தியும் சரி, மனிதர்களின் மகிழ்ச்சியும் சந்தோஷமும் சரி அனைத்தும் இந்த தர்மத்தாலேயே பிணைக்கப் பட்டிருக்கிறது. இது ஒன்றும் இங்கு ஆளும் அரசர்களின் தனிச் சொத்தும் அல்ல. பூர்வீகமாய் வந்த சொத்தும் அல்ல. பார்க்கப்போனால் தர்மமே இவர்களைத் தங்கள் கருவிகளாய் வைத்துச் செயல்பட்டுக்கொள்கிறது என்றும் கூறலாம். உன் பெரியப்பனும் சரி, கம்சனும் சரி, தர்மத்தைக் கடைப்பிடிக்க வில்லை. தர்மத்தின் வழி ராஜ்யம் ஆளவில்லை. அவரவர் விருப்பத்திற்கிணங்க இருவரும் ஆட்சி செய்தனர். அவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்டும் நபர்கள் எவ்வளவு பெரியவர் ஆனாலும், அவர்களைத் தங்கள் பாதையிலிருந்து அகற்றினர். உன்னுடைய பெரியப்பாவும் அதையே செய்தார். இப்போது ஜராசந்தனும் அதையே செய்து வருகிறான்.”ஷ்வேதகேதுவின் வருத்தம் அவன் குரலில் தெரிந்தது. மேலும் அவன், “தர்மம் கடைப்பிடிக்கப்படவேண்டும். தர்மம் நிலைநாட்டப் படவேண்டும். “ என்றான்.

“ஓஹோ, அப்படி என்றால் நீ இப்போது உன் சிநேகிதன் தர்மத்தை நிலைநாட்டவேண்டி அவனுக்கு உதவி செய்து வருகிறாயா?? ஜராசந்தனை உன் சிநேகிதன் அழிப்பதன் மூலம் தர்மம் நிலை நாட்டப்படுமா?” ஷாயிபாவின் ஏளனம் அகலவே இல்லை.

“இல்லை ஷாயிபா, அங்கேதான் நீ தவறான புரிதலில் இருக்கிறாய். கண்ணன் ஜராசந்தனை தர்மத்தின் பாதையில் திருப்பவே முயல்கிறான்.” என்றான்.

“ஆஹா, ஆனால் அதற்கு உன் நண்பன் உயிரோடு இருக்கவேண்டுமே! ஒருவேளை அவனுக்குக் கூடிய சீக்கிரம் முடிவு வந்துவிட்டால்?” எகத்தாளம் ததும்பி நின்றது ஷாயிபாவின் குரலில்

Thursday, April 7, 2011

ஷாயிபாவிற்குச் சம்மதமா??? கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

ஷாயிபாவிற்கு வந்த கோபத்தில் கையில் இருந்த அந்தப் பெரிய தாம்பாளத்தை அப்படியே கண்ணன் தலையில் கவிழ்த்துவிடலாமா என நினைத்தாள். ஆனால் கண்ணனோ அவள் கோபத்தை லக்ஷியமே செய்யாமல் ஷ்வேதகேதுவைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஷ்வேதகேது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், அதன் விளைவால் எழுந்த நாணத்தையும் மறைக்கப்பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தான். அம்முயற்சியில் அவனுக்குக் கிட்டிய தோல்வியைச் சிவந்த அவன் முகமும் ஒளிரும் கண்களும் காட்டிக்கொடுத்தன. ஷாயிபாவுக்கு தன்னைக் கண்ட நாள் முதலாகத் தன்னிடம் பேசும்போதெல்லாம் இதே மாதிரி வெட்கமும், குழப்பமும், மகிழ்ச்சியும் கலந்த கலவையானதொரு உணர்வில் ஷ்வேதகேது பேசுவான் என்பது நினைவில் மோதியது. எனில்…… எனில்…….. எனில்……


ஷ்வேதகேது அவளை மறக்கவில்லை. இன்னமும் அவன் அவளைத் தான் நினைத்துக்கொண்டிருக்கிறான். இத்தனைக்குப் பிறகும்??? அதுவும் என் பெரியப்பா ஸ்ரீகாலவனுக்குச் செய்த துரோகத்துக்குப் பின்னரும்?? அதன் மூலம் என்னையும் ஏமாற்றினானே! அதன் பின்னருமா என்னை இன்னும் விரும்புகிறான்???? ஷாயிபாவின் கைகள் நடுங்க, பெரும் முயற்சி எடுத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் அங்கிருந்து மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டி நகர்ந்தாள். ஆனாலும் அவள் இதயம் துடிக்கும் துடிப்பு ஓயவே இல்லை. அந்தச் சப்தம் அங்கிருக்கும் அனைவருக்கும் கேட்டுவிடுமோ என அவள் அஞ்சினாள். கீழே விழுந்துவிடாமல் இருக்கப்பெரும் பிரயத்தனம் செய்தாள்.

உணவு முடிந்தது. ஆடவர் அனைவரும் சற்றே ஓய்வு எடுக்க ஓய்வறைக்குச் செல்லப் பெண்கள் சாப்பிட அமர்ந்தனர். ஷாயிபாவால் எதுவுமே உண்ண முடியவில்லை. பரபரப்பிலும் அடுத்து நடக்கப் போவதை எண்ணியும் அவள் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாதவளாயிருந்தாள். உணவு உண்டதும் தன் அறைக்குச் சென்ற ஷாயிபாவால் சற்று நேரம் கூடப் படுக்க முடியவில்லை. கண்களை மூடிச் சிறிது நேரம் தூங்கலாம் என முயன்றால் குறும்பு கூத்தாடும் கண்ணனின் கண்களே எதிரே வந்தன. வேறு ஏதேனும் வேலை செய்யலாம் எனில் வெட்கமும், ஆவலும், ஆசையும் ததும்பிய கோலத்தில் காணப்பட்ட ஷ்வேதகேதுவின் முகம் மட்டுமே தெரிந்தது. செய்வதறியாமல் திகைத்த ஷாயிபாவிற்கு இவர்கள் இருவரும் அன்று அங்கே வரப் போவதை எண்ணியே தலைவலியே வந்துவிட்டது. இனிமேல் முடியாது என நினைத்த வண்ணம் அவர்கள் வரவை எண்ணிக் காத்திருந்தாள் ஷாயிபா.


சற்று நேரத்தில் அறைக்கு வெளியே இருந்த நடைபாதையில் காலடிச் சப்தம் கேட்க ஷாயிபா உற்றுக் கவனித்தாள். சப்தம் அவள் அறைக்கே வந்தது. கதவைத் திறந்தது திரிவக்கரை. சட்டென ஏமாற்றம் ஏற்பட்டாலும் அடுத்த கணம் மீண்டும் ஷாயிபாவின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது. தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை அவளுக்கு. திரிவக்கரையும் நேரத்தை வீணாக்காமல் கண்ணன் அவளை அழைத்துவரச் சொன்னதாய்க் கூறவே, ஒரு கணம் ஏன் நேரில் வந்து அழைத்தால் என்ன? ஆளனுப்பி இருக்கிறானே என்று கண்ணன் மேல் கோபம் வந்தது ஷாயிபாவுக்கு. அடுத்த கணம் அவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆடைகளையும், நகைகளையும் மாற்றிக்கொண்டு திரிவக்கரையுடன் கிளம்பினாள். வெளியே அரண்மனை உத்தியானவனத்தில் ஒரு மாமரத்தின் அடியில் கிடந்த ஒரு கல்லால் ஆன ஆசனத்தின் மீது அமர்ந்திருந்தான் கண்ணன். அருகே ஷ்வேதகேது.

அந்த மாமரத்தடி கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது என்றும் கண்ணன் தன் பொழுதை எல்லாம் இங்கேதான் கழிப்பான் என்றும் அவள் அறிந்திருக்கிறாள். நல்ல மழைக்காலத்திலும், கடும் பனிக்காலத்திலும் தவிர மற்ற நேரங்களில் திருமணம் ஆகாத இளைஞர்கள் இம்மாதிரி வெட்டவெளியிலேயே தங்கள் இரவுகளையும் கழித்தனர். அங்கேயே தூங்கவும் செய்தனர். அப்படிக் கண்ணன் தூங்கும் இடம் இதுதான் எனவும் எப்போதும் கூடவே உத்தவனும் இருப்பான் என்பதையும் ஷாயிபா ஏற்கெனவே அறிந்திருந்தாள். இந்த இடத்திற்குத் தான் நடு இரவில் வந்து கண்ணனைக் கொல்லவும் உத்தேசித்திருந்தாள். அவள் சிந்தனையைத் தடை செய்வது போல் கண்ணன் குரல் கேட்டது.


“இதோ பார் சகோதரி! உன்னுடைய பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவரைச் சாதாரணமானவராக எண்ணாதே. எனக்கு குருவாகவும், ஆயுதப் பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்தவர். இவர் அறியாத அஸ்திர, சஸ்திர வித்தைகளே இல்லை. இப்போது குண்டினாபுரத்தில் ஒரு ஆசிரமம் அமைக்க மன்னனிடம் அநுமதி பெற்றிருக்கிறார். அங்கிருக்கும் இளம் போஜர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் சாஸ்திரப் பயிற்சியும், மற்றும் எல்லா வித்தைகளையும் கற்பிக்கப்போகிறார். தற்சமயம் உன்னுடைய பொறுப்பை நான் ஏற்றிருப்பதால் உன்னை மணக்க என் அநுமதி வேண்டி வந்துள்ளார். இவருக்கு உடனடியாக மனைவிதேவையாம். அதுவும் உன்னைத் தான் மணப்பாராம். வேறு எவரையும் மணக்க மாட்டாராம். சற்றும் பொறுக்க இயலாது என்கிறார்.”


கண்ணனின் குரலில் இனம் காண இயலாததொரு மகிழ்வு. இவற்றைக் கூறிய கண்ணன் கலகலவெனச் சிரித்தான். ஷாயிபாவுக்கு ஆத்திரம் பொங்கியது. இப்போது தன் திருமணத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அதுவும் இந்தப்பாதகன், துரோகி, ஷ்வேதகேதுவின் முன்னிலையில் அதைக் குறித்து ஆலோசிக்கவும் பேசவும் அவள் சற்றும் தயாராக இல்லை. ஆனால் கண்ணன் கண்களில் இவை எதுவுமே படவில்லையா? அவன் மேலும் சொன்னான்:”இப்போது திரிவக்கரைக்கும் எனக்கும் வேறு வேலைகள் இருக்கின்றன. ஆகையால் உங்கள் இருவரையும் இங்கே விட்டுவிட்டு நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்க்கப்போகிறோம்.” கூறிய வண்ணம் கண்ணன் ஷ்வேதகேதுவைப் பார்த்து, “ஆசானே, உமக்கு ஏதேனும் தொந்தரை எனத் தோன்றினால் ஷாயிபாவுடன் அவளையும் கூட்டிக்கொண்டு நீர் இங்கிருந்து தப்பிச் செல்ல்லாம். ஹாஹாஹா, ஆனால் நான் பின் தொடர்ந்து வந்து உம்மைக் குரல் வளையை நெரித்துவிட்டு இவளைத் திரும்பக் கொண்டு வருவது என்றெல்லாம் செய்ய மாட்டேன். கலங்காதீர். இனி உம் பாடு, இவள் பாடு. வா திரிவக்கரை. நாம் செல்ல்லாம்.” கூறியவண்ணம் சிரித்துக்கொண்டே கண்ணன் திரிவக்கரையை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

Tuesday, April 5, 2011

ஷாயிபா காத்திருக்கிறாள், கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

ஷாயிபா ஷ்வேதகேதுவை வெறுக்கிறாள். முழு மனசோடு வெறுக்கிறாள். அந்தக் குரல்….. ஒரு காலத்தில் அவளுக்கு ஒரு இனிமையான சங்கீதம் போலக் கேட்ட அந்தக் குரல், இந்தக் கண்ணன் வந்ததும், எப்படி மாறி விட்டது?? ஆஹா, என்னென்ன கனவுகள் கண்டாள்? இந்த ஷ்வேதகேது தன் பெரியப்பாவை முழுமையாகக் கடவுளாக அனைவரும் வணங்கும் ஒரே ஈசனாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்பது உறுதியானதும், எவ்வாறேனும் பெரியப்பாவின் சம்மதத்தை வாங்கி அவனைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுக்கொண்டிருந்தாளே! திருமணக் கனவுகளில் மூழ்கி இருந்தாளே! எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே! அதுவும் இந்தக் கண்ணனால் தானே! நன்றி கெட்டவன், நன்றி கெட்டவன். என்னென்ன செய்திருக்கிறோம் அவனுக்காக. எல்லாவற்றையும் மறந்து இந்தக் கண்ணனைக் கண்டதும், அவனுடைய இசைக்கு நடனமிடும் பாவையாக மாறிவிட்டானே.

ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட்டது அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது. நடுவே வழக்கமான இடத்தில் வசுதேவர் அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அடுத்து அவருடைய சகோதரர்கள் வரிசைக்கிரமமாக அமர்ந்திருந்தனர். அதன் பின்னர் இளைய தலைமுறையினர் அனைவரும் அவரவர் வரிசைப்படி அமர்ந்தனர். கிருஷ்ணனும், உத்தவனும் அருகருகே அமர்ந்தனர். இந்தக் கண்ணன் மிகத் தந்திரக்காரன். அவனுடைய நடவடிக்கைகளில் குற்றம், குறை காணமுடியாதபடிக்கு தந்திரமாய் நடந்து கொள்கிறான். இந்த ஷ்வேதகேது, ம்ம்ம்ம்……. இப்போது அவனும் ஒரு குருவாம், ஆசாரியனாம், கர்காசாரியாருடனும், மற்ற ஆசாரியர்களோடும் ஆசாரியர்களுக்குரிய உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறான். பல மாதங்களாய் ஷ்வேதகேதுவை ஷாயிபா பார்க்கவே இல்லை. இப்போது வாய்ப்புக் கிடைக்கவும் நன்றாகப் பார்த்தாள். உடல் வலிமை முன்னைக்கிப்போது அதிகமாகி இருந்தாற்போல் தெரிகிறது. தலைமுடியை நன்கு ஒன்று சேர்த்துப் பின்னால் குடுமியாகக் கட்டி இருக்கிறான். இப்போது புதியதாய் தாடி ஒன்றும் வந்துள்ளது. நெற்றியில் எப்போதும் போல் புனித விபூதிச் சாம்பலின் அடையாளக் கீற்றுகள். ஆசாரியர்களுக்குரிய உடையை அணிந்து கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறான். முகத்தின் ஒளியும், முகத்தில் காணப்படும் மகிழ்வும் இதுவரை காணாத ஒன்று. ஆஹா, இவ்வளவு மகிழ்வை கரவீரபுரத்தில் கண்டதே இல்லையே!

ஷ்வேதகேதுவுக்கும் ஷாயிபா தன்னைப் பார்ப்பது தெரிந்திருக்கவேண்டும். உள்ளத்தில் ஏதோ ஒன்று குறுகுறுக்க அவனும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். கடைசியில் ஷாயிபாவைக் கண்டு விட்டான். கண்ட கண்கள் அங்கேயே நின்றன. அதே நேரம் ஷாயிபாவும் அவனைக் கண்டாள். இருவர் கண்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மின்னலை மின்னல் வெட்டியதா? ஷாயிபா தன் கோபத்தையும், ஆத்திரத்தையும், ஆங்காரத்தையும் காட்டவேண்டி கோபமாய்த் தான் பார்த்தாள். அவ்வாறுதான் பார்க்க எண்ணினாள். ஆனால்,,,,,,,,ஆனால்……… அவளையும் அறியாமல் அவள் பார்வை கனிந்து தன் நட்பையும் அன்பையும் தெரியப் படுத்தியது. ஷ்வேதகேதுவுக்கு எதிர்பாரா அதிர்ச்சி. அவன் நட்பாகப் புன்னகைத்தான். ஷாயிபாவுக்கு அப்போது தான் ஏதோ புரிந்தாற்போல் தோன்ற அவள் திரும்பிப் புன்னகை செய்வதைத் தவிர்த்தாள். அவன் மேல் கோபத்தை வரவழைத்துக்கொண்டாள். மோசக்காரன்…..ஏமாற்றுக்காரன், ,,,துரோகி.


ஆனால்…..ஆனால்…….. கொல்லப்பட்ட என் பெரியப்பாவுக்குப் பின்னர் நான் விரும்பிய அன்பு செலுத்திய ஒரே மனிதன் இவன் தான். அவளால் தன் எண்ணங்களைத் தவிர்க்க முடியவில்லை, “ கடவுளே, ஓ கடவுளே, வாசுதேவா, ஸ்ரீகாலவ வாசுதேவரே, இந்த ஷ்வேதகேது கண்ணனுக்கு அடிமையாக மட்டும் இல்லை எனில், கண்ணனால் அவன் மனது மாறாமல் இருந்திருந்தால், நீரும் உயிரோடு இருந்திருந்தீர் எனில்….. ஆஹா, ஆஹா, எத்தகையதொரு அற்புதம் நடந்திருக்கும்? இந்த ஷ்வேதகேதுவை நான் திருமணம் செய்து கொண்டு கரவீரபுரத்தில் ஆனந்த வாழ்க்கைநடத்தி இருப்பேனே.


மற்றப் பெண்களைப் போல் ஷாயிபாவும் பரிமாற ஆரம்பித்தாள். ஒவ்வொருவராய்ப் பரிமாறிக்கொண்டு வர, கண்ணன் அருகேயும், ஷ்வேதகேது அருகேயும் பரிமாற வருகையில் அவள் இதயம் எழும்பிக் குதித்த்து. அவள் நெஞ்சம் போட்ட சப்தத்தில் அந்தச் சாப்பாட்டுக்கூடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைவார்களோ என்ற எண்ணமும் ஏற்பட்டது அவளுக்கு. மேலும் அந்த சப்தம் அனைவருக்கும் கேட்டு விடுமோ என்றும் எண்ணினாள். அவள் கண்ணனுக்குப் பரிமாறுகையில் இன்றிரவு கண்ணனா, ஷ்வேதகேதுவா? இருவரில் ஒருவர் என் கைகளால் கொல்லப் படுவர்கள். இருவரில் யார் கொல்லப் பட்டு மற்றவர் உயிருடன் இருந்தாலும் எனக்கு அதனால் லாபம் ஒன்றுமில்லை. அவள் இதயம் மேலும் படபடவெனத் துடிக்கக் கைகள் நடுங்கப்பரிமாறினாள் ஷாயிபா.
கண்ணன் முகத்தில் குறும்புச் சிரிப்பு. மெதுவாகக் கிசுகிசுவென்ற தொனியில், “இதோ பார் ஷாயிபா, இந்தப் பொல்லாத ஆசாரியனை சாப்பாட்டுக்குப் பின்னர் உன்னிடம் ஒப்படைக்கப் போகிறேன். உன்பாடு, அவன் பாடு.” ஷ்வேதகேதுவைச் சுட்டிக்காட்டிக் கூறிய கண்ணன் கண்கள் குறும்பிலும் சந்தோஷத்திலும் கூத்தாடின.