Monday, September 10, 2012

பீஷ்மரின் கோபமும், சத்யவதியின் அழைப்பும்


விதுரரிடம் சென்ற அர்ச்சகர்கள் பானுமதியின் நந்தவனத்திலும், அதை ஒட்டிய கெளரி அம்மன் சந்நிதியிலும் தாங்கள் கண்டவற்றைச் சொல்லவே ஆச்சரியமும், திகைப்பும், அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்த விதுரர் தன் நம்பிக்கைக்கு உகந்த நாலைந்து ஆட்களை அழைத்துக் கொண்டு, அங்கே சென்றார்.  சென்றவர் தாம் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ச்சியோடு அருவருப்பும் அடைந்தார்.  முதலில் பட்டத்து இளவரசனாக முடி சூட்டிக் கொண்ட துரியோதனனை அப்புறப்படுத்த வேண்டும்.  ஆனால் அவன் உடல் வலுவானவன்.  ஆளும் கட்டுமஸ்தாக இரண்டு, மூன்று பேரால் தூக்க முடியாத அளவுக்கு இருக்கிறான்.  மேலும் முந்தைய இரவின் கோலாகலக் கொண்டாட்டங்களின் நினைவோடேயே தூங்கி இருந்த துரியோதனன் இப்போது எழுப்பப் பட்ட போதும் அந்த நினைப்போடயே இருந்தான்.  அதோடு அவனை முழுக்கச் சுயநினைவுக்குக் கொண்டு வரவும் முடியவில்லை.  முந்தைய இரவின் மயக்கத்திலிருந்து அவனை மீட்டு எடுப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும் போல் இருந்தது.  மற்றவர்களை விதுரர் தன் மாளிகைக்கு எடுத்துச் செல்லச் சொல்லி அங்கே அவர்களை அவரே சுயநினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தார்.  துரியோதனன் மிகவும் சிரமத்தோடு அவன் மாளிகைக்கு எடுத்துச் செல்லப் பட்டான்.  அனைத்து இளைஞர்களும், இளம்பெண்களுமே உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பதால் மெல்ல மெல்லச் செய்தி அனைத்துத் தரப்பினரையும் எட்டியதோடு அது ஒரு கலவரத்தையும் உண்டாக்கும் நிலை தோன்றியது.

பீஷ்மர் காதுகளையும் இந்தச் செய்தி போய் எட்டியது.  கோபத்திலும், ஆத்திரத்திலும் கொதித்துப் போனார் பீஷ்மர்.  தன் வாழ்நாள் முழுதும் பிரமசரியம் காத்து ராஜ்யத்தின் நலனைத் தவிர வேறொன்றை நினையாத அவருக்கு இப்படி எல்லாம் நடந்தது கேட்டதில் இருந்து  இந்த சாம்ராஜ்யத்தின் கதி என்ன என்ற கவலை உண்டானது.  இன்னமும் தனது அதிகாரத்திலேயே இருக்கும் சபையைக் கூட்டி, தன் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  சபையின் முக்கிய அதிகாரிகள் அந்தக் கட்டளைகளால் திக்கு முக்காடிப் போனார்கள்.  துரியோதனனும், ஒரு மாதத்திற்குக் குருக்ஷேத்திரம் சென்று அங்கே ஆன்மீகச் சிந்தனைகளில் இருந்து தவம் செய்து தங்கள் தண்டனையைக் கழிக்க வேண்டும்.  மற்ற இளைஞர்கள் ஒரு வருடம் பதரிகாசிரமம் செல்ல வேண்டும்.   பானுமதியுடன் காசியிலிருந்து வந்திருந்த அவள்  உறவினர்களான இளவரசிகள் இருவரையும் காசிக்கே திரும்பி அனுப்பச் சொல்லிக் கட்டளையிட்டார்.  மற்ற இளம்பெண்கள் சந்திராயன விரதம் அநுஷ்டிக்க வேண்டும்.  அதுவும் ஒரு வருஷத்துக்குக் குரு வம்சத்தினரின் குருக்களில்  தலைமை வகிப்பவரின் மேற்பார்வையில்  அந்த விரதம் எல்லாவிதமான நியம நிஷ்டைகளோடு கடுமையாக அநுஷ்டிக்கப்படவேண்டும். பானுமதியின் அழகான நந்தவனம் அடியோடு அழிக்கப்பட்டு, அவள் ஏற்படுத்தி இருந்த கெளரி அம்மன் சந்நிதிக்குப் பதிலாக அங்கே கூடவே அவள் கணவன் ஆன சங்கரமஹாதேவனையும் குடி ஏற்றினார்.  அந்த இடமே ஒரு உண்மையான கோயிலாக ஆயிற்று.  கோபுரங்கள் எழுப்ப ஆணை பிறப்பிக்கப் பட்டது.  தன்னுடைய மோசமான விதியை நினைத்து நொந்து அழுது கொண்டிருந்த பானுமதிக்குக் கடுமையான ஜ்வரம் ஏற்பட்டுத் தன் நினைவை இழந்தாள்.

கண்ணன் ஹஸ்தினாபுரத்தை விட்டுக் கிளம்புவதற்கு முதல் நாள் விதுரர் அவனைக் காண வந்தார். வந்தவர், மாதேவியான சத்யவதி கண்ணனைப் பார்க்க விரும்புவதாய்ச் சொன்னார்.  கண்ணனுக்கே ஆச்சரியமாக இருந்தது.  அந்தக் குருவம்சத்தின் மஹாராணியான சத்யவதி இப்போதெல்லாம் தன்னை யாரும் வந்து பார்ப்பதை விரும்புவதில்லை எனவும், அவசியம் நேர்ந்தால் தன் மூத்தாள் மகனான பீஷ்மரையோ அல்லது தன் சொந்த மகனான வியாசரையோ மட்டுமே பார்ப்பாள் எனவும், விதுரருக்கு மட்டும் பிரத்யேக அநுமதி என்றும் கேள்விப் பட்டிருந்தான்.  ஆகவே இது தனக்குக் கிடைத்த மிகப்  பெரிய கெளரவம் என எண்ணினான்.  கூடவே அவளுடைய பூர்வீகமும் நினைவில் வந்தது.

ஒரு மீனவப் பெண்ணான மத்ஸ்யகந்தி (சத்யவதியின் அப்போதைய பெயர்) குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் பிள்ளை இந்த உலகுக்கே குருவாக இருப்பான் எனவும், அவனால் பலவிதமான நன்மைகள் அனைவருக்கும் ஏற்படும் எனவும் சொல்லிக் கொண்டு தன் படகில் ஏறிய பராசரரை அக்கரைக்குக் கொண்டு போக நினைத்துத் துடுப்பு வலித்துக் கொண்டிருந்தாள்.  ஆனால் மேலே விண்ணையே பார்த்துக் கொண்டிருந்த பராசரரோ, அந்தக் குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டதால், சத்யவதியையே அந்தக் குழந்தையைத் தன்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டார்.  மத்ஸ்யகந்தி தயங்க, “கவலைப்பட வேண்டாம்;  இதன் மூலம் அவள் எதிர்காலத்துக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாது.” என உறுதியளித்தார் பராசரர்.  அருகே இருந்த ஒரு தீவில் இருவரும் இணைந்தனர்.  ரிஷியின் மூலம் என்பதால் உடனே ஒரு பிள்ளையும் பிறந்தது.  அந்தப் பிள்ளை கறுப்பாக இருந்ததாலும், தீவில் பிறந்ததாலும் க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரை வைத்துப் பராசரர் தன்னுடன் பிள்ளையை அழைத்துச் சென்றார்.  மத்ஸ்யகந்தி பிள்ளையை நினைக்கையில் அவன் வருவான் என்னும் உறுதிமொழியுடன் பிள்ளை அழைத்துச் செல்லப்பட்டு, குருக்ஷேத்திரத்தில் உள்ள பராசரருடைய ஆசிரமத்தில் வளர்க்கப் பட்டு சகல கலைகளும் போதிக்கப்பட்டார்.

வசிஷ்டரின் பாரம்பரியத்தில் வந்த அந்தப் பிள்ளைதான் பின்னால் முனிவர்களுக்குள் சிரேஷ்டமானவன் என அனைவராலும் புகழப்பட்ட வேத வியாசர்.  இதன் பின்னர் தன் கன்னித்தன்மையை மீண்டும் பெற்ற மத்ஸ்யகந்தி ஒரு நாள் கங்கைக்கரையோரம் உலவிக்கொண்டிருந்தாள். அப்போது வேட்டையாடிவிட்டு அங்கே இளைப்பாற வந்த மன்னம் சாந்தனு அவளைக்கண்டதும் அவள் அழகில் மயங்கினான்.  அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவளிடம் காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளச் சம்மதம் கேட்டான்.  ஆனால் அவளோ தன் தகப்பன் சம்மதிக்க வேண்டும் என்று கூற, மன்னன் அந்த மீனவனைப் பார்த்து மத்ஸ்யகந்தியை மணக்கச் சம்மதம் கேட்கிறான்.  மீனவனோ தன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே பட்டம் என்ற உறுதிமொழியைக் கொடுத்தால் உடனே மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாய்ச் சொல்கிறான்.  ஷாந்தனு மனம் வருந்தி அரண்மனைக்குத் திரும்புகிறான்.  ஏனெனில் அவனுக்கு ஏற்கெனவே கங்கையுடன் திருமணம் ஆகி ஏழு பிள்ளைகள் பிறந்து ஏழையும் கங்கைக்குக் கொடுத்து எட்டாவது பிள்ளையை மட்டும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.  அந்தப் பிள்ளையின் பெயர் தேவ விரதன்.  எல்லாக்கலைகளையும் கற்றதோடு அல்லாமல் கங்கையின் வெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டிருந்தான்.  பரிபூர்ண ராஜ அம்சத்தோடு எல்லாவிதமான மக்களின் கருத்தையும் கவர்ந்து மக்களின் பேரபிமானத்துக்குப் பாத்திரமாகி விளங்கினான்.  அவனை விடுத்து வேறொருவனை மன்னன் ஆக்குவதை நாட்டு மக்களே எதிர்ப்பார்கள்.  அதோடு ஷாந்தனுவுக்கும் அது சம்மதம் இல்லை.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது சூடு பிடித்திருக்கிறது... தொடர்கிறேன்... நன்றி அம்மா...

ஸ்ரீராம். said...

-சம்பவம் நடந்தது அறிந்ததும் பீஷ்மர் எடுக்கும் முடிவுகளுக்கு 'துரி' கட்டுப் படுகிறானே... அதுவே பெரிது!
-தேவ விரதனின் கதை தியாகத்தின் உச்சம்.
-//மற்ற இளம்பெண்கள் சந்திராயன விரதம் அநுஷ்டிக்க வேண்டும்//
பானுவும் சேர்ந்துதானே?

பித்தனின் வாக்கு said...

ithu ponra seithikal padippathu ithuthan muthal murai.

innamum eluthungal. nanri