Friday, January 4, 2013

துருபதனின் வேண்டுகோளும், கண்ணனின் மறுப்பும்!


திரெளபதியின் அழகைக் கண்டதுமே கண்ணன் ஸ்தம்பித்துப் போய்விட்டான் என்று சொன்னால் அது மிகையில்லை.  அழகைக் கண்டவிடத்தில் ஆராதிக்கும் மனமுள்ள கண்ணனுக்கு இந்தப் பெண்ணின் அழகைக் கண்டதும் ஏற்பட்ட வியப்பு மிக அதிகம் தான்.  திரெளபதி உயரமாகவும், அழகாகவும் மட்டுமில்லாமல், எழில் வாய்ந்த உடலமைப்பும், நளினமான நடையுடனும் விளங்கினாள்.  அவளது ஒவ்வொரு அசைவிலும் அவளின் எழில் மட்டும் புலப்படவில்லை.  அவளுடைய தன்னம்பிக்கையும், மன உறுதியும் கூடவே பிரதிபலித்தது.  இத்தனையும் இருந்தும் அவள் காட்டிய அடக்கமும் அவள் சீரான முறையில் சிறப்பாக வளர்க்கப்பட்ட உயர்குடிப் பெண் என்பதை நிரூபித்தது.  

விருந்தின் தரம் மிகவும் உயர்வாகவே இருந்தாலும் மன்னன் துருபதனோ, அவன் மகன்களோ அளவோடு தான் உண்டனர்.  அங்கிருந்த விருந்தாளிகளில் பெரும்பாலோர் மது அருந்தினாலும் துருபதனும், அவன் மகன்களும் அதைத் தொடக் கூட இல்லை.  ஷ்வேதகேது கண்ணன் காதுகளில் மட்டும் விழும்படியாக,  “ மன்னனும் அவன் மக்களும் பாஞ்சாலத்துக்கும் அதன் மன்னனுக்கும் ஏற்பட்ட அவமானத்தை மீட்டு எடுத்து சுய கெளரவத்தை மீண்டும் நிலைநாட்டும் வரை குடிப்பதில்லை என சபதம் செய்திருக்கிறார்கள்.” என்று கூறினான்.   கிருஷ்ணன் முகத்தில் எந்தச் சலனமுமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்டான்.  அன்றிரவு முழுதும் பாஞ்சால மன்னனின் திறமையான ஆட்சியையும், அவன் மக்கள் நடந்து கொள்ளும் பண்பட்ட நாகரிகமான பழக்கங்களையும் கண்டு மனதுக்குள் வியந்தான்.  அதோடு மட்டுமில்லாமல் அவனுடைய இரு மூத்த இளவரசர்களும் அதே போல் கண்டிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.  விபரம் தெரிந்த இந்த வயதிலும் இரு இளவரசர்களும் தந்தையின் பேச்சை மீறாதவர்களாக நடந்து கொள்கின்றனர்.  ம்ம்ம்ம்ம்ம்??? மூன்றாவது இளவரசன் ஆன ஷிகண்டினுக்குத் தான் ஏதோ பிரச்னை.  என்னவெனத் தெரியவில்லை!  அவன் ஏன் அப்படி பயப்படுகிறான்?  தைரியமும், வீரமும் நிறைந்த இரு சகோதரர்களுக்கு நேர் எதிரிடையாக நடந்து கொள்கிறான்.  அவ்வளவு ஏன்?  இளவரசியான கிருஷ்ணா என்னும்பெயர் கொண்ட பாஞ்சாலி கூட தைரியமான இளம்பெண்ணாக உறுதி படைத்த பெண்மணியாக, முடிவுகளை சுயமாகத் தீர்மானிக்கும் தன்மை கொண்டவளாகத் தெரிய வருகிறாளே!  இந்த ஷிகன்டினுக்கு என்ன ஆயிற்று?

மறுநாள் காலை உணவுக்குப் பின்னர் அரண்மனையின் பின்னால் இருந்த மாந்தோப்பில் கண்ணனை மன்னன் துருபதன் சந்தித்தான்.  இப்போது அங்கே இவர்கள் இருவரைத் தவிர வேறெவரும் இல்லை.  நெரித்த புருவங்களுடனும், தீர்க்கமான யோசனையைக் காட்டும் கண்களோடும் கண்ணனையே கூர்ந்து கவனித்தான் துருபதன்.  பின்னர் ஒரு கோணல் சிரிப்புடன், எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே, “வாசுதேவா, உன்னிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை வைக்கவே இங்கே அழைத்தேன்!” என்றான்.

“நான் தங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவேன், மஹாராஜரே, தாங்கள் தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் சொல்லுங்கள்.” என்றான் கண்ணன் தன்னிரு கரங்களையும் கூப்பிக் கொண்டு துருபதனை வணங்கிய வண்ணம்.  தான் தனக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டதொரு தனித்தன்மையை விலக்கிக் கொண்டு இயல்பாகக் கண்ணனிடம் உரையாட துருபதன் மிகவும் போராடுகிறான் என்பது அவன் முகத்திலிருந்து தெளிவாகப்புரிந்தது.  அவன் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லவிடாமல் அவன் சுய கெளரவம் அவனைத் தடுத்தது.  ஆனால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்த துருபதன் விரைவில் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.

“குரு சாந்தீபனி மூலம் உனக்குத் தெரிய வந்திருக்கும் கிருஷ்ணா!” என்று தன் உறுதியான குரலில் கூறியவன் மேலே தொடர்ந்து, “என் அருமை மகள் கிருஷ்ணாவை நீ மனைவியாக ஏற்பாயா?  நான் இந்த வேண்டுகோளை உன்னிடம் வைப்பதில் மிகவும் வெட்கப் படுகிறேன். தர்மசங்கடமான சூழ்நிலையில் இருக்கிறேன்.” என்றான். துருபதனைப் பார்த்தால் கண்ணனுக்கே பரிதாபமாக இருந்தது.  பரம்பரையான மன்னர் குலத்தைச் சேர்ந்தவன் ஆன துருபதன் மிக மிக நேர்மையானவன் கூட.  மிகப் பெரிய அரசனும் ஆவான்.  அப்படிப்பட்டவன் தன் சுய கெளரவத்தை விட்டுவிட்டு, தன் பரம்பரைக் குலப் பெருமையை விட்டுவிட்டு இப்படி ஒரு வேண்டுகோளை வைக்க வேண்டுமெனில் எவ்வளவுக்கு அவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளான் என்பதைக் கண்ணன் முழுவதும் உணர்ந்தான்.  துருபதனுக்காக வருந்தினான்.  “மாட்சிமை பொருந்திய மன்னரே!  உம் வேண்டுகோள் எனக்கு குரு சாந்தீபனி மூலம் தெரிவிக்கப் பட்டது.  நான் ஏற்கெனவே உம் வேண்டுகோளை அறிவேன்.” என்றான் கிருஷ்ணன்.  துருபதன் முகத்தில் வெளிப்படையாகவே ஏமாற்றக் குறி காணப்பட்டது.

“எனில் நீ அதை ஏற்கவில்லையா கண்ணா?” பட்டெனக் கேட்டுவிட்டான் துருபதன்.

“நான் அதை மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை.  என்னிடம் மிகப் பெருந்தன்மையுடன் கேட்கப் பட்ட அந்த வேண்டுகோளை நான் மறக்கவும் இல்லை!”  கிருஷ்ணன் முகத்தில் அவன் வழக்கமாகச் சிரிக்கும் குறும்புச் சிரிப்பு எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டது.  “ மாட்சிமை பொருந்திய மன்னரே!  நான் வெளிப்படையாகப் பேசுவதற்கு என்னை மன்னிக்கவும்.  நான் இதற்குத் தகுதி வாய்ந்தவனே அல்ல.  மேலும் இதன் மூலம் நீங்கள் நிறைவேற்றிக்கொள்ள விரும்பும் காரியங்களை என்னால் நடத்தித் தர முடியுமா என்பது எனக்குப் புரியவில்லை.  என்னால் இயலாத காரியங்களே அவை என எனக்குத் தோன்றுவதால் இந்த வேண்டுகோளை ஏற்பதன் மூலம் ஏற்படும் தர்ம சங்கடமான நிலைமையை நான் தவிர்க்க விரும்புகிறேன்.”

“”நீ துரோணரைப் பார்த்து பயப்படுகிறாயா?” என துருபதன் வினவினான்.

“இல்லை, பிரபுவே, குரு வம்சத்துக்கும், பாஞ்சாலத்துக்கும் ஒரு மாபெரும் யுத்தம் ஏற்படுவதற்கு நான் காரணமாக விரும்பவில்லை.” கிருஷ்ணன் வெளிப்படையாகக் காரணத்தைக் கூறினான்.

“ஏன்?” அடக்கிக் கொண்ட பொறுமையின்மையுடன் துருபதன் கேட்டான்.


“தர்மம் என்பது  என்றென்றும் வளம் பெற்று நிலைத்து நிற்க வேண்டுமானால் குரு வம்சத்தினரும் சரி, பாஞ்சால நாட்டினரும் சரி அதைக் காக்கவேண்டியே போராடலாம்.  நீங்கள் இருவரும் அதை விட்டு விட்டு ஒருவர் மேல் ஒருவர் கசப்புக் கொண்டு தீராப் பகையுடன் போரிட்டால்?? நாமெல்லாம் எங்கே இருப்போம்?  என்ன செய்வோம்?

1 comment:

ஸ்ரீராம். said...

இப்போதுதான் பார்த்தேன். படித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.