Sunday, July 28, 2013

பீமனின் சாகசங்களும், உத்தவனின் நடுக்கமும்!

“அப்படி எல்லாம் உற்று உற்றுப் பார்க்காதே உத்தவா, நீ ஒரு முட்டாள். இதற்கு முன்னர் நீ என்னைப் பார்த்ததே இல்லையா? உனக்கு இங்கே வந்து என்னைப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்திருந்தால் நிகும்பனிடம் சொல்லி அனுப்புவது தானே!  நானே ஓடோடி வந்து உன்னை வரவேற்று அழைத்துச் சென்றிருப்பேனே!” என்றான் பீமன்.  உதட்டை முறுக்கிக் கொண்டு கேலியாகச் சிரித்த உத்தவன், “எனக்கென்ன ஜோசியமா தெரியும் ? என் அத்தையின் மகன் இங்கே அரசனாக வீற்றிருக்கிறான் என அறிவேனா நான்?  அதுவும் இந்தக் கொடூரமான ராக்ஷச ஜன்மங்களுக்கு!  ஆனால் உன்னைப் பார்த்தால் நீ ஒன்றும் கவலைப்படவில்லை போல் தெரிகிறது.  உள்ளூர ரசிக்கிறாய் போல் இருக்கிறதே!’ என்றான்.  “ஆஹா, மிக மிக உயர்வாக நினைக்கிறேன்.” என ஆமோதித்தான் பீமன்.  மேலும் தொடர்ந்து, “ அஸ்தினாபுரத்தில் அந்தப் பொல்லாத சகுனியோடும், அவன் மருமகன்களான கெளரவ புத்திரர்களோடும், வாய்ச்சண்டை, நிஜச் சண்டை போடுவதை விட இந்தக் கொடிய ராக்ஷசர்களின் அரசனாக இருப்பதை மிகவும் விரும்பிச் செய்கிறேன்.  இது எத்தனையோ நன்மை தரும் வேலை.  இங்கே உன் நிலைமை என்ன என்பதை நன்கு அறிய முடியும்.  எல்லாம் நேரடியாக நடைபெறும். நீ சண்டையும் போடலாம்.  யாரை வேண்டுமானாலும் கொல்லவும் கொல்லலாம்.  அல்லது கொல்லப்படவும் செய்யலாம்.  ஆனால் உயிர் பிழைத்திருந்தால் நீ விரும்பிய வண்ணம் வாழலாம்.” என்றான்.

“அதெல்லாம் சரி அப்பனே, எவ்வாறு நீ இங்கே வந்து சேர்ந்தாய்? குந்தி அத்தையை எங்கே காணவில்லை?  அதோடு மற்றச் சகோதரர்கள் எங்கே இருக்கின்றனர்?” என்று கேட்டான் உத்தவன்.  “ஓஹோ, அவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர்.  நான் உன்னை அவர்களிடம் அழைத்துச் செல்கிறேன்;  ஆனால் ஒன்று அதற்குள்ளாக இந்த ராக்ஷசர்கள் அவர்களைச் சாப்பிடாமல் இருக்க வேண்டுமே!” கேலியாகச் சொல்லிவிட்டு அதைச் சர்வசாதாரணமான ஒரு நகைச்சுவையாகக் கருதிக் கொண்டு நகைத்த பீமன், “ எல்லாம் என்னால் தான்.  ஐந்து பேரிலும் என் மூலமாகவே இவை அனைத்தும் நடந்தது.  எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்தது! அது தான் ஏன் எனப் புரியவில்லை.” என்றான். “கிருஷ்ணன் மட்டுமில்லை, நாங்கள் அனைவருமே உங்கள் ஐந்து பேரையும் குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தோம்.” என்றான் உத்தவன்.

“ஹாஹாஹா,” நகைத்த பீமன், “நான் ஒருவன் இருக்கையிலே அப்படி எல்லாம் நடக்க விடுவேனா!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.  ஒரு சின்ன விஷமக்காரச் சிறுவனைப் போல் அவன் நகைப்பும், பேச்சும் அமைந்திருப்பதாகத் தோன்றியது உத்தவனுக்கு.  பீமன் தொடர்ந்து, “ ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் விஷயம் தெரியக் கூடாது என்பது சித்தப்பா விதுரரின் கட்டளை. அவருக்கு அதுவே முக்கியக் கவலையாகவும் இருந்தது.  ஆகவே நாங்களும் அப்படியே நடக்கத் தீர்மானித்தோம்.  வாரணாவரத்தை விட்டு நீ சென்ற பின்னர், இந்நிகழ்ச்சி நடந்தது.  சொல்லிவைத்தாற்போல் ஒரு பிச்சைக்காரி ஒருத்தி தன் ஐந்து குழந்தைகளுடன் எங்களை வந்து பார்த்தாள். அவளை அந்த அரக்கு மாளிகையில் எங்களுடன் தங்க வைத்திருந்தோம். பின்னர் சித்தப்பா விதுரரின் ஆலோசனைப்படி அங்கிருந்து தப்ப வேண்டிய நாளை எதிர்நோக்கி இருந்தோம். அரக்கு மாளிகையில் தீப்பற்றிய தகவல் தெரிந்ததும், சித்தப்பாவின் ஆள் பூமிக்கடியில் தோண்டிக் கொடுத்திருந்த சுரங்கப்பாதையில் நாங்கள் தப்பி அரக்கு மாளிகையை விட்டு வெளி வந்தோம்.  வெளிவந்த எங்களுக்கு ஒரு படகு காத்திருந்தது.  அந்தப் படகின் உதவியால் நாங்கள் ஆற்றையும் எளிதாகக்கடந்து அக்கரை சேர்ந்தோம்.  நாங்கள் யார் என்பது வேறு எவருக்கும் தெரிய வேண்டாம் எனச் சித்தப்பா விதுரரின் ஆணை என்பதால் விரைவில் நாங்கள் ஏகச் சக்கரத்தையும் கடந்து காட்டுக்கு உள்ளே வந்துவிட்டோம்.  ஆஹா, உத்தவா, நீ கூட இல்லாமல் போனாயே!  அந்த மாதிரி வரும் போது சிலிர்ப்போடு கூடிய மகிழ்வாக இருந்தது.  ஒரே திக், திக் தான் ஒரு பக்கம் என்றாலும் எனக்கு அந்த உணர்வு மிகவும் பிடித்திருந்தது.  நன்கு அனுபவித்தேன்.” என்று ஏதோ ஒரு சாதாரணமான நிகழ்வை அனுபவித்தது போலச் சொன்னான் பீமன்.

“அதெல்லாம் சரி அப்பனே, இந்த மிக மோசமான, மட்டமான காட்டுப்பகுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்றான் உத்தவன்.

“அது ஒரு பெரிய கதை அப்பனே!  ஆனால் இதை மோசம், மட்டம் என்றெல்லாம் சொல்லாதே!  இப்போது இது என் நாடு.  நான் இதன் அரசன்.   அரசன் விருகோதரன்.  ஆம், இங்கே இது தான் என் பெயர். “ என்றான் பீமன்.  உத்தவன் மார்பில் விளையாட்டாகத் தட்டினான்.  உத்தவனுக்கோ வலி பொறுக்க முடியவில்லை.  சிறிதும் லட்சியம் செய்யாத பீமன், தொடர்ந்து, “நாங்கள் வரும் வழியில் நாகர்களின் ஒரு சில கிராமங்களைக் கடந்து வந்தோம்.  எங்களைக் கண்ட கிராமத்து மக்கள் மிரண்டதோடு மட்டுமில்லாமல் பயப்படவும் செய்தார்கள்.  எங்கே அவர்கள் அரசனிடம் போய்ச் சொல்லிவிடுவார்களோ!  அவன் வந்து எங்களை அடையாளம் கண்டு கொள்வானோ எனக் கவலைப்பட்டோம்.  உனக்குத் தான் தெரியுமே, உத்தவா, நாங்கள் ஒரு விசித்திரமான குடும்பம் என.  எங்களை யார் எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.  எங்களைக் கவனிக்காமல் எவரும் தப்ப மாட்டார்கள்.  ஒரு வயதான பெண்மணி, சரியாக நடக்க முடியாமல் தவிக்கிறாள்.  அவள் பிள்ளை ஒருத்தன் அவ்வப்போது சிங்கம் உறுமுவதைப் போல் கர்ஜிக்கிறான்.  மேலும் நான்கு மனிதர்கள் ஒரு புத்திசாலியான மனிதன், ஒரு சிறந்த மனிதன், ஒரு அறிவற்றவனைப் போன்றவன், இன்னொருத்தன் எப்போப் பார்த்தாலும் விண்ணில் தெரியும் நக்ஷத்திரங்களையே கவனிப்பவன்.  இப்படி ஒரு குடும்பம்.  எவரும் யாரும் எதற்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  அவர்களைக் குறித்தே கவலை கொள்வார்களா என்பது தெரியவில்லை.  இப்படியானதொரு குடும்பம் அனைவர் கண்களையும் கருத்தையும் கவர்ந்துவிடுமே.  ஆகையால் தான் காட்டின் உள்ளே, மிக மிக உள்ளே வந்து சேர்ந்தோம்.” சொல்லும்பொழுதே தன் சகோதரர்களைக் குறித்த தன் விளக்கத்தை எண்ணி எண்ணிச் சிரித்துக் கொண்டே சொன்னான் பீமன்.  பின்னரும் நினைத்து நினைத்துச் சிரித்தான்.

“அத்தை குந்தி அவர்கள் இந்தக் காட்டில் நடக்கவே மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்களே!” எனக் கவலை குரலில் தொனிக்கக் கேட்டான் உத்தவன்.  “ஆ, நான் அப்படி விட்டு விடுவேனா!  அம்மாவின் பாதங்கள், எவ்வளவு மென்மையானவை என்பதை நான் நன்கறிவேன்.  ஆகவே அவரை என் தோள்களில் சுமந்து கொண்டு தான் வந்தேன்.  சில சமயம் சகோதரர்களையும் சுமக்க நேரிட்டது.” மிக அலட்சியமாகச் சொன்ன பீமன், “அவர்கள் அனைவரும் தாங்கள் தான் மிகவும் கெட்டிக்காரர்கள் என நினைக்கின்றனர்.  ஆனால் நான் இல்லாமல் அவர்களால் என்ன செய்ய முடியும்?  ஒரு நிமிடம் கூட அவர்களால் வாழ முடியாது.  எப்போதெல்லாம் ஏதேனும் கஷ்டம் வருகின்றதோ அப்போதெல்லாம் ஆதரவற்ற சிறு குழந்தைகளைப் போல என் தயவை நாடி என்னையே பார்ப்பார்கள்.” சொல்லிக் கொண்டே மிகப் பெருமையுடன் சிரித்தான் பீமன்.  “ஆனால், பீமா, ராக்ஷசர்களின் அரசனாக நீ எப்படி ஆனாய்?  அதைச் சொல்லவே இல்லையே!” என உத்தவன் கேட்டான்.  “ஓ, வேறு யாருக்கும் அந்தத் தகுதி இல்லை.  என் ஒருத்தனுக்கு மட்டுமே அவர்கள் அரசனாகும் தகுதி இருந்தது.” மிகவும் பெருமையுடன் சொன்ன பீமன், “ ஆஹா, இது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது தெரியுமா?  நம் குலத்து முன்னோர்கள், முக்கியமாய் சக்கரவர்த்தி பரதனுக்குக் கூடக் காட்டில் இவ்வாறான அனுபவங்கள் எல்லாம் கிடைத்திருக்காது.  எத்தகைய அனுபவங்கள் அவை எல்லாம்.  கேள்: முழுதாக இரு நாட்கள் நாங்கள் இந்தக் காட்டின் உள்ளே சென்று கொண்டிருந்தோம்.  மிக மிக நடுக்காட்டிற்குச் சென்று விட்டோம். செல்லும்போது மரங்களினடையில் படுத்துத் தூங்கி விட்டு, காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு கொண்டு சென்றோம்.  அப்போது தான் ஹிடும்பன் வந்தான்.”

“ஹிடும்பனா?  இடும்பனா? யார் அது?” என ஆச்சரியத்துடன் உத்தவன் வினவினான்.  “ஓ உனக்குத் தெரியாதல்லவா? ஹிடும்பன் தான் இந்தக் காட்டில் ராக்ஷசர்களின் அரசனாக இருந்தான்.  இந்தக் காட்டின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குத் தன் பரிவாரங்களோடு போய்க் கொண்டிருந்தான்.  அப்போது அவன் எங்களை மோப்பம் பிடித்துவிட்டான்.  இந்த ராக்ஷசர்கள் இருக்கின்றார்களே, ஒரு யோஜனை தூரத்திலேயே மனித வாசனையை மோப்பம் பிடித்துவிடுவார்கள்.” என்றான் பீமன். “ஆஹா, எனக்கு நன்றாகத் தெரியுமே!” என்றான் உத்தவன், தன் அனுபவங்களை நினைத்து அவன் உடல் நடுங்கியது.  “பின்னர் அவர்கள் எங்களைச் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தனர்.  தங்கள் கால்களில் மிருதுவான பட்டைகளைக் கட்டிக் கொண்டு தாங்கள் வருவது தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து அரை வட்ட வடிவில் எங்களைச் சூழ்ந்து கொண்டனர்.”

“ஆஹா, அவர்களின் இந்த வழக்கம் குறித்தும் நான் நன்கறிவேனே!  இப்போது கூட அந்த மோசமான அனுபவங்களை நினைத்தால் என் உடல் நடுங்குகிறது. “ என்ற உத்தவனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.



5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹிடும்பனா? இடும்பனா?

அப்போதுமா "தமிழ்" தகராறு...?

இராஜராஜேஸ்வரி said...



மிக விரிவாக சுவாரஸ்யமான கதை .. பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

பீமன் உத்தவனுக்குச்சொல்லும் கதைகள் கேட்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

பகிர்வுக்கு ந்ன்றிகள்.

ஸ்ரீராம். said...

படிச்சாச்!

வல்லிசிம்ஹன் said...

பீமம் பலசாலிதான். அந்தக் கர்வத்தை அடக்க ஹனுமான் ஜி எப்போ வருவார்னு காத்திருக்கேன்.
வடமொழியில் ஹிடும்பன் தமிழில் இடும்பன் தனபாலன்:)