Monday, October 7, 2013

மனம் மாறிய துரோணர்!

கண்ணன் தன்னிடம் கூறியதை அப்படியே எடுத்து உரைத்த ஷிகண்டினைப் பார்த்த துரோணர், “நீ அதற்கு என்ன மறுமொழி கூறினாய்?” என்று கேட்டார். 

“நான் அவனிடம் கேட்டேன்:”வாசுதேவா, துரோணாசாரியார் என்னைத் தன் சீடனாக ஏற்க மறுத்துவிட்டால்? அப்போது நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டேன்.”

“வாசுதேவன் என்ன சொன்னான்?” துரோணர் கேட்டார்.

“ஆசாரியரே, வாசுதேவன் இவ்விதம் கூறினான்:”துரோணர் ஒரு நல்ல திறமையுள்ள குரு. உண்மையான, பிராமணர்.  பிராமணருக்குரிய அனைத்து நியதிகளையும் கடைப்பிடிக்கிறவர்.  அத்தகையவர் ஒரு சீடன் தன்னிடம் வந்து மாணாக்கனாக ஏற்றுக்கொள்ளச் சொல்லி வேண்டுகையில், அவனை, “நான் ஏற்க மாட்டேன்.” என்று சொல்லக் கூடியவர் அல்ல.  அதுவும் கற்றலில் ஆர்வம் உடைய, அதற்கேற்ற தகுதிகள் உள்ள ஒரு மாணாக்கனைத் திருப்பி அனுப்ப மாட்டார்.  ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள் ஷிகண்டின்.  அவரிடம் நீ செல்கையில் உன் மனத்திலிருந்து வெறுப்பின் கடைசிச் சுவடு கூட இல்லாமல் மனதைப் பளிங்கு போல் சுத்தமாக வைத்துக் கொண்டு செல்வாயாக!  

"நேர்மையுடனும், வெளிப்படையாகவும் உண்மையைத் தவிர வேறொன்றும் பேசாதே!  அவருக்கு ஒரு மகனைப் போல் சேவைகள் செய்து வா.  இன்னும் சொல்லப் போனால் நீ அவர் பெற்ற மகனைப்போல் நடந்து கொள்.  உன் தகப்பன் துருபதன் என்பதை அடியோடு மறந்து துரோணரின் பெற்ற மகன் அவரிடம் எவ்விதம் நடந்து கொள்வானோ அவ்வாறு நடந்து கொள்.  எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாய்த் தெரியும் ஷிகண்டின்.  உன்னை எவராவது ஆண்மகனாக ஆக்க முடியும் எனில் அது துரோணரால் மட்டும் தான் இயலும். “ இவ்வாறு வாசுதேவன் கூறினான்.” ஷிகண்டின் இவற்றைச் சொல்கையில் கடைசி வாக்கியங்களைச் சொல்லும்போது அவன் குரல் உணர்ச்சிவசத்தில் தழுதழுத்தது.  எதற்கும் அசைந்து கொடுக்காத துரோணரைக் கூட அந்த உணர்வு வெள்ளம் அசைத்துப் பார்த்தது.

“நீ ஒத்துக்கொண்டாயா?” என்று கேட்டார்.

“இதில் கேள்விக்கே இடமில்லை குருதேவரே!  வாசுதேவ கிருஷ்ணன் என்னைக் காப்பாற்றி விட்டான்.  அவன் என் ரக்ஷகன்.  நான் அவன் காலடியில் விழுந்தேன்.  நான் உடனே ஒரு பிரமசாரிக்குரிய உடைகளை அணிந்து கொண்டேன்.  ஆசாரியர் ஷ்வேதகேது என்னை ஒரு படகுக்கு அழைத்துச் சென்றார்.  அந்தக் கும்மிருட்டில் அந்தப் படகில் பயணித்தேன்.  பின்னர் மெல்ல மெல்ல நீங்கள் இருக்கும் இந்தக் குருகுலத்துக்கு வந்து யுத்தசாலைக்கும் வந்து சேர்ந்தேன்.”


துரோணாசாரியாரின் மனம் விசித்திரமாக ஷிகண்டினின் பால் கவரப் பட்டது.  என்றாலும் அவருள் எழுந்த சந்தேகங்களையும் அவரால் தவிர்க்க முடியவில்லை.  “ உன் தந்தைக்கு உதவி செய்வதற்காகக் கிருஷ்ண வாசுதேவன் உன்னை ஏன் இங்கே உளவாளியாக அனுப்பி இருக்கக் கூடாது?” என்று கேட்டார். தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம் துரோணரை நமஸ்கரித்தான் ஷிகண்டின்.

“ஆசாரியரே, என்னைத் தங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள்.  என்னைப் பலவிதங்களிலும் சோதித்துப் பாருங்கள்.  என் நினைவுகளிலோ, வார்த்தைகளிலோ, செயல்களிலோ நான் ஒரு மோசடிக்காரன், வஞ்சகன், சூழ்ச்சிக்காரன் என்பது நிரூபணம் ஆனால்  நான் உங்கள் காலடியில் என் உயிரைச் சமர்ப்பிக்கிறேன்.  என் உயிர் உங்களுடையது.  நீங்கள் என் ஞானகுரு.  ஆன்மிகத் தந்தை!” என்றான்.  துரோணாசாரியார் உடனே எதுவும் பேசவில்லை.  சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தார்.  “ஷிகண்டின், உனக்கு ஒரு ஆண் மகனாக மாறவேண்டும் அல்லவா?  உண்மையான ஒரு தீரம் மிக்க ஆண்மகனாக?” என்று கேட்டார்.

“நான் ஒரு ஆணாக இருக்கத் தான் விரும்புகிறேன்.  ஆனால் அது நடக்கக் கூடியதா?” என்றான் ஷிகண்டின் பெருமூச்சுடன்.

“ஒருவேளை நடக்கக் கூடாதது என்னால் நடத்தி வைக்கப்பட்டால்?  மிகக் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.  அவற்றுக்கு நீ தயாராக இருக்கிறாயா?  எவ்வளவு கடுமையான சோதனைகளானாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.  மன உறுதி வேண்டும். “

ஷிகண்டினின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. “ஆசாரியரே, நான் நீங்கள் சொல்லுவதைக் கேட்கிறேன்.  தயவு செய்து என்னை ஒரு ஆண்மகனாக தீரம் மிக்கவனாக மாற்றுங்கள்.”

“ஷிகண்டின், எனக்கு ஒரு யக்ஷனைத் தெரியும்.  அவன் பெயர் ஸ்தூனகர்ணன். அவனுக்கு ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் தெரியும். அவனுக்கு அந்த வித்தை நன்கு தெரியும்.   ஆனால் பல மாதங்களுக்கு நீ கடுமையான, பயப்படுத்தக் கூடிய கஷ்டங்களை அனுபவித்தே தீரவேண்டும்.  நீ அவனிடம் சென்று கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராகி இருக்கிறாயா?”


“என் குருவான நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதற்கு நான் கீழ்ப்படிகிறேன்.  என்ன சோதனைகள் இருந்தாலும் எதிர்கொள்கிறேன்.  உங்கள் இஷ்டம் போல் என்னிடம் நீங்கள் நடந்து கொள்ளலாம்.” என்றான் ஷிகண்டின்.



1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“இதில் கேள்விக்கே இடமில்லை குருதேவரே! வாசுதேவ கிருஷ்ணன் என்னைக் காப்பாற்றி விட்டான். அவன் என் ரக்ஷகன். நான் அவன் காலடியில் விழுந்தேன்.//

அருமையாகச் செல்கிறது கதை. பகிர்வுக்கு நன்றிகள்.