Monday, February 21, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

"கண்ணா, கண்ணா, ராதை உன்னைக் காண துடிதுடித்துக்கொண்டிருப்பாள். அதை மறவாதே!"

இல்லை அண்ணா, ராதையைத் தவிர்க்கவேண்டியே நான் செல்லவில்லை. "

"தம்பி உன் மனம் என்ன கல்லா?? இவ்வளவு கடினமானவனாக நீ எப்போது மாறினாய்? "

"இல்லை அண்ணா, இல்லை. நான் இப்போது அங்கே போனால் என்னைக் கண்டதும் அவர்கள் நிச்சயமாய்ச் சந்தோஷம் அடைவார்கள். ஆனால் அது எத்தனை நாளைக்கு?? கொஞ்ச நாட்கள் தானே? நான் அங்கேயே இருக்க முடியாதே! திரும்பவேண்டியவன் அல்லவா? நான் திரும்புகையில் மீண்டும் அவர்களோடு இருக்கமுடியாது என்பதில் அவர்களுக்கு மனம் துன்பத்தை அடையும். என்னைப் பிரிய முடியாமல் துன்பப் படுவார்கள். அதனால் தான் அவர்களுக்குத் துன்பத்தைத் தரவேண்டாம் என்பதாலேயே நான் போக மாட்டேன் என்று கூறுகிறேன். அவர்கள் மனத்தை திரும்பத் திரும்ப துன்புறுத்த நான் விரும்பவில்லை. "

"உனக்கு இதயமே இல்லையா கண்ணா? உன்னை அவ்வளவு அதிகம் நேசிக்கிறவர்களைப் பிரிய உனக்குக்கஷ்டமாய் இருக்காதா? அதை நீ உணர்ந்ததே இல்லையா?"

"நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அதனால் தான் அவர்கள் துன்பத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களைப்பற்றித் தான் நினைக்கிறேன். என்னைப் பற்றி அல்ல. "

"ஆஹா, ஆஹா, என்ன அருமையான நினைவுகள் உனக்கு?? உன் மனதுக்கு இனியவர்களை நீ இப்படித்தான் நினைக்கிறாயா? அதாவது அவர்களைப் போய்ப் பார்க்கமாட்டாய்! அவர்களுக்கு ஆறுதல் கூற மாட்டாய்! அதுவும் நீ அங்கிருந்து கிளம்பி எவ்வளவு நாட்கள் ஆகிறது?? என்ன, ஏது என விசாரிக்கக் கூட மாட்டாய்?"

"அண்ணா, இன்று அவர்கள் மனம் புண்பட்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், பழைய நினைவுகள் இனிமையானவையாக இருந்தன அன்றோ? அவர்களுக்கு என்னை நினைக்கையில் அவர்களின் கண்ணின் கருமணி போல் உயர்வான கோவிந்தன் என்றே என்னை நினைப்பார்கள். அந்த கோவிந்தன்...... கோவிந்தன்....... இப்போது, அண்ணா, இப்போது அவர்கள் என்னைப் பார்க்கையில் அந்த கோவிந்தனையா பார்ப்பார்கள்? இல்லை அண்ணா, இல்லை, அவர்கள் பார்க்கப் போவது கிருஷ்ண வாசுதேவனை. கோவிந்தனை அவர்கள் காணமாட்டார்கள். ஜராசந்தனை ஓட ஓட விரட்டிய, ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்ற கிருஷ்ண வாசுதேவனைத் தான் காணப் போகின்றனர். அவர்கள் கண்ணின் கருமணியான கோவிந்தனை யாரோ எவரோ அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு விட்டனர் என்பதை உணர்வார்கள். அந்த கோவிந்தன் அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் எவ்வாறு ஒரு மாபெரும் பொக்கிஷமாக மாற்றிக் கொண்டிருந்தான், இவன் யாரோ, எவரோ என நினைப்பார்கள். கோவிந்தனுக்காக அவர்கள் பாடிய பாடல்களை இப்போது பாட நினைத்து இந்தச் சூழ்நிலைக்கு அவை பொருந்தாதவை என அடக்கிக்கொள்வார்கள். நான் அவர்களுக்கான கோவிந்தனாக இருக்கவே விரும்புகிறேன் அண்ணா, அதுவும் அந்தச் சின்னஞ்சிறு இடைச்சிறுவன் கோவிந்தனாக. வேறு யாராகவும் இல்லை. ராதைக்கு ஏற்ற கானாவாக. கிருஷ்ண வாசுதேவனாக அல்ல."

"அப்போ நான் மட்டுமா போவது?? என்னை மட்டும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?"

"அண்ணா, நீர் எப்போதுமே ஒரு பெரிய அண்ணனாகவே இருந்து வந்திருக்கிறீர். எப்போதுமே அவர்களுக்கு ஓர் உற்ற நண்பனாக, அவர்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் கொடுப்பவராகவே இருந்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் யமுனையைத் திரும்பக் கொண்டு வந்து விருந்தாவன வாசிகளை மகிழ்வித்தீர்களானால் அதை விடச் சிறந்த பரிசு அவர்களுக்கு வேறு ஏதும் இருக்கப் போவதில்லை. உங்களை அவர்கள் ஜென்மஜென்மத்திற்கும் போற்றிக்கொண்டிருப்பார்கள். "

"கண்ணா, எனக்குத் தெரியும், உன்னை ஒரு விவேகமான காரியம் செய்ய வைப்பது மிகக் கடினம் என்று அறிவேன். உன்னிடமிருந்து அதை நான் எதிர்பார்த்திருக்க முடியாது." பலராமன் குரலில் கசப்பு மிகுந்திருந்தது.

"அண்ணா, என் அண்ணா, விருந்தாவன வாசிகளுக்காக நீர் தான் விவேகமானஒரு செயலைச் செய்ய வேண்டும். அது உங்களாலேயே முடியும். உங்கள் கலப்பையை எடுத்துச் செல்லுங்கள். யமுநையை என்ன ஏது என விசாரித்து மீண்டும் விருந்தாவனத்தை மகிழ்விக்க வர வையுங்கள். விருந்தாவனத்தின் அனைத்து கோபர்களும், கோபியர்களும் உம்மைத் தங்கள் கடவுளாக எண்ணி வழிபடுவார்கள். "

"அவ்வளவு தானா? அவர்களுக்காக ஒரு வார்த்தை, ஒரு சொல் கூட நீ சொல்லப் போவதில்லையா?"

"ஏன் இல்லை? இருக்கிறதே! அவர்களிடம் சொல்லுங்கள். நான் என்றென்றும் அவர்களுடையவனே. அவர்களுக்காகவே வாழ்கிறேன், அவர்களுள் இருப்பதும் நான் தான். எப்போதும் அவர்கள் நினைவாகவே இருக்கிறேன். நான் எங்கே இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் விருந்தாவனமே என் தாய் மண் என்பதை நான் மறக்கவே மாட்டேன் என்பதைச் சொல்லுங்கள். அங்கே நான் நிரந்தரமாக வசிக்கிறேன் என்றும் கூறுங்கள்." என்றான் கண்ணன்.

பலராமன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். அவன் சென்றதும் மதுராவிற்கு ஷ்வேதகேது திரும்பிவிட்ட செய்தி கிடைத்தது. கிருஷ்ணனைச் சந்தித்தான் ஷ்வேதகேது. குண்டினாபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தான். ஜராசந்தனும், அவனுடைய நண்பர்களும் சேர்ந்து இப்போது புதியதொரு திட்டத்தைப் போட்டிருப்பதாய்க் கூறினான். மேலும் சிசுபாலனுக்கு இளவரசி ருக்மிணியை மணமுடிப்பதன் மூலம் சேதிநாட்டுக்கும், விதர்ப்ப நாட்டிற்கும் இடையே புதியதொரு உறவை சிருஷ்டிக்க முயல்வதையும் கூறினான். தாமகோஷனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஜராசந்தன் மிக மிகச் சாமர்த்தியமாக அவன் தன்னுடைய கண்காணிப்பிலிருந்தும் தன்னுடைய ஆட்சியிலிருந்தும் விலகிவிடாதபடிக்கு நெருக்கமான சூழ்ச்சி வலையைப் பின்னி வருவதாய்த் தெரிவித்தான். ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் திருமணம் முடிந்ததும், ருக்மிக்கும் ஜராசந்தனின் பேத்தியான அப்நவிக்கும் திருமணம் நடக்கப் போவதாய்ப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதையும் தெரிவித்தான். இந்தத் திருமணத்தின் மூலம் ருக்மிக்குக் கம்சன் வகித்த முக்கியப்பதவி கிடைக்கக் கூடும் எனவும் கூறினான்.

என்றாலும் இந்தப் பேச்சு வார்த்தைகளை சம்பிரதாயத்தின்படி நியாயப் படுத்தவும், மற்ற நாட்டு அரசர்களைத் திருப்திப் படுத்தவும், சுயம்வரம் என்ற ஒன்றை ஏற்படுத்தப் போவதாயும், முன் கூட்டியே மற்ற அரசர்களுக்கு சிசுபாலனே தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என ரகசியமாக அறிவுறுத்தப்படும் என்பதையும் கூறினான். அதுவும் சுயம்வரத்திற்கான அழைப்பு ருக்மிக்கு மிகவும் நெருங்கிய அரசர்கள், இளவரசர்கள் போன்றவர்களுக்கே அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்தான். பொதுவாக சுயம்வரங்களில் போட்டி முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டால் போட்டியில் ஜெயிப்பவரையே இளவரசி மாலையிடுவாள் என அறிவிப்பது வழக்கம். சில சமயங்களில் போட்டி எதுவும் இல்லாமல் இளவரசி வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களின் வீரதீரப் பிரதாபங்களைக் கேட்டுக்கொண்டு அவற்றின் மூலம் தனக்குப் பிடித்த மணமகனைச் சுயமாய் அவளே தேர்ந்தெடுக்கலாம் என்பதும் உண்டு. ஆனால் இங்கே அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை. மணமகன் யார் என்பது தீர்மானிக்கப் பட்டுவிட்டது. முன் கூட்டித் தீர்மானிக்கப்பட்ட சுயம்வரம் என்ற ஒன்று நிகழ்ச்சிக்குச் சாட்சிகளாகவே மற்ற விருந்தினர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாய் எடுத்துக் கூறினான் ஷ்வேதகேது.

2 comments:

எல் கே said...

ஹ்ம்ம் தொடருங்கள் பின் வந்துகொண்டே இருக்கிறோம்

priya.r said...

நல்ல பதிவு
இந்த 45 அத்தியாயத்தை படித்து விட்டேன்

பதிவுக்கு நன்றி கீதாம்மா

// அவர்களிடம் சொல்லுங்கள். நான் என்றென்றும் அவர்களுடையவனே. அவர்களுக்காகவே வாழ்கிறேன், அவர்களுள் இருப்பதும் நான் தான். எப்போதும் அவர்கள் நினைவாகவே இருக்கிறேன். நான் எங்கே இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் விருந்தாவனமே என் தாய் மண் என்பதை நான் மறக்கவே மாட்டேன் என்பதைச் சொல்லுங்கள். அங்கே நான் நிரந்தரமாக வசிக்கிறேன் என்றும் கூறுங்கள்." என்றான் கண்ணன்//
மனதை கொள்ளை கொண்ட வரிகள்!