Sunday, June 17, 2012

உத்தவன் பேசுகிறான்!


“பாண்டவர்கள் ஐவரையும் கொல்லச் சதித்திட்டம் தீட்டி இருந்தனர். அதைக் கேள்விப் பட்டதும் பீமன் பதிலடி கொடுக்கத் தயார் செய்து கொண்டிருந்தான்.  தாத்தா பீஷ்மருக்கு விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்து, திருதராஷ்டிரனோடு நீண்ட நேரம் கலந்து ஆலோசித்திருக்கிறார்.  அதன் பின்னரே யுதிஷ்டிரனை திருதராஷ்டிரன் அழைத்திருக்க வேண்டும்.” உத்தவன் கூறினான்.  

“ஓஹோ, திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனின் என்ன கூறினாராம்?”

“திருதராஷ்டிரன், துரியோதனன் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயார் செய்து கொண்டிருப்பதாகவும், குரு வம்சம் சகோதரச் சண்டையில் அழிந்துபடும் எனத் தான் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.”

இடையில் ஷ்வேதகேது, “துரியோதனன் எதையும் செய்வான்; செய்யக் கூடியவனே!” எனத் தன் கருத்தைக் கூறினான்.  

உத்தவன் தொடர்ந்து, “ குரு வம்சத்தைக் காக்கவும், பேரழிவில் இருந்து தடுக்கவும், யுதிஷ்டிரன் தன் யுவராஜா பட்டத்தையும், பதவியையும் துறக்க வேண்டியது தான் ஒரே வழி என திருதராஷ்டிரனால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.” என்றான்.

“யுதிஷ்டிரன் அதற்கு ஒத்துக்கொண்டானா?”

“சற்றும் தயங்கவில்லை கண்ணா! உடனே ஒத்துக்கொண்டிருக்கிறான்.” உத்தவன் குரலில் இப்போது லேசாய்க் கோபம் தெரிந்தது. “ஆனால் அந்த அரசனுக்கு இது போதவில்லை;  அவன் மனம் சமாதானம் ஆகவில்லை.  ஏனெனில் பாண்டவர்களை நாட்டுக் குடிமக்கள் கண்ணின் கருமணியாக நேசிக்கின்றனர்.  அவர்கள் மேல் மிகுந்த மதிப்பும், மரியாதையும் காட்டி வருகின்றனர்.  யுதிஷ்டிரனோ, பாண்டவ சகோதரர்களோ ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்வரையிலும் துரியோதனனால் யுவராஜா பட்டத்தை ஏற்க முடியாது.  யுதிஷ்டிரன் எப்போதுமே நாட்டு மக்களுக்கும், படை வீரர்களுக்கும் கண்ணைப் போன்றவனாகவே இருந்து வருவான். அதைத் தாங்கும் சக்தி துரியோதனனுக்கு இல்லை.”

“ஆகவே?”

“யுதிஷ்டிரன் தன் சகோதரர்களுடனும் தாயுடனும் வாராணவதத்தில் போய்ச் சில மாதங்களைக் கழிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டான். அங்கே இப்போது ஒரு மாபெரும் திருவிழா நடைபெறப் போகிறது.  அந்தச் சாக்கில் சென்று அங்கே சில மாதங்கள் தங்கும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறான். இதற்கும் யுதிஷ்டிரன் மறுப்புச் சொல்லவில்லை; ஒத்துக்கொண்டு விட்டான்.”

“பீஷ்மர் என்ன சொன்னாராம் இதற்கு?  பாண்டவர்களிடம் அவர் மிகப் பிரியமும், பாசமும் காட்டுகிறார் என்றல்லவோ எண்ணினேன்?”

“தாத்தா பீஷ்மர் கடுமையான முகபாவத்துடனும், வாய் திறந்து எதுவும் பேசாமலும் அந்தப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளாமலும், அதே சமயம் பேச்சு வார்த்தையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டும் இருந்ததாக யுதிஷ்டிரன் கூறினான்.  ஆனால் அவர் பேசிய ஒரே வார்த்தை, “யுதிஷ்டிரா, உங்களை எவராவது தாக்க வந்தால் பதிலுக்கு நீங்களும் பதிலடி கொடுத்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்! ” என்பதே என்று யுதிஷ்டிரன் கூறினான்.”

“பீமனும், அர்ஜுனனும் இதற்கு ஒத்துக் கொண்டனரா?” கண்ணன் கேட்டான்.

“முதலில் பிடிவாதமாக மறுத்தனர்.  பீமனுக்குக் கடுங்கோபம்.  அர்ஜுனன் எதிர்ப்புத் தெரிவித்தான். நகுல, சகாதேவர்களுக்கு இந்த யோசனையே பிடிக்கவில்லை.  ஆனால் யுதிஷ்டிரன் மன்னனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு வந்து விட்டான்;  ஆகவே குந்தி தேவி யுதிஷ்டிரனுடைய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று கூறி விட்டாள்.  பிறகென்ன?  எவரும் மறுப்புச் சொல்லவில்லை. வெகு அருமையான, அற்புதமான குடும்பம் அவர்களுடையது. ஒவ்வொருவரும் மற்றவரின் அங்கமாகவே இருக்கின்றனர். தனித்துத் தெரிவதில்லை.”

“அவர்களுடைய பலமே அது தான்!  அதுவே அவர்களுக்கு வெற்றியையும், புகழையும் கொடுக்கும்.  உத்தவா, உன்னுடைய கதையை முழுக்கச் சொல்.”

“ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து விட்டது.  ஐந்து சகோதரர்களும், குந்தி தேவியும் வாரணாவதம் திருவிழா எனச் செல்லப்போகிறார்கள் என்பதைக் கேட்டதும், அவர்களுக்கு நம்பிக்கையே வரவில்லை. இதில் ஏதோ சூது இருப்பதாகவே பேசிக் கொண்டனர். யாருமே பாண்டவர்கள் வலுவில் வந்து தங்கள் பதவியையும், செல்வத்தையும், அரச போகத்தையும் துறந்துவிட்டுச் செல்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.  இரண்டு நாட்களில் அவர்கள் கிளம்புகையில் மக்கள் வெள்ளமாகத் திரண்டு அவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.  அனைவரும் கண்ணீர் விட்டனர்.”

“நீ என்ன செய்தாய்?”

“நானும் அவர்களுடன் வாரணாவதம் சென்றேன். அவர்களோடு சில நாட்கள் தங்கினேன்.  பாண்டவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டமாக வந்து அவர்களை வாழ்த்தி வணங்கி ஆர்ப்பரித்தனர்.  ஆனால்…ஆனால் ஏதோ ஒன்று அந்த மாளிகையில் எனக்குப் புரியாத ஏதோ ஒன்று என்னை நெருடிக் கொண்டே இருந்தது.  ஏதோ பேரிழப்பு, அல்லது பேரிடர் வரப்போகிறது என்றே நினைத்தேன்.  அரசமாளிகை எத்தனை வலுவாக இருக்கவேண்டுமோ அத்தனை வலுவாக அது இல்லை.  எதை வைத்துக் கட்டினார்கள் என்று தெரியாவண்ணம் சுவரெல்லாம் மிக மெலிதாகக் கைகளால் தட்டினாலே விழுந்து உடையும் போல் இருந்ததாய் எனக்குத் தோன்றியது.  புரோசனன் என்னும் மிலேச்சப் படை வீரன் பாண்டவர்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப் பட்டிருந்தான்.  ஆனால் எனக்கோ அவன் அவர்களை ஒற்றறிவதாகவே பட்டது. இரவும் பகலும் அவர்களைக் கண்காணிக்க வீரர்களை நியமித்திருந்தான்.”

“இதில் சூது இருப்பதாய்த் தெரிந்ததுமே பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் சென்றிருக்கலாமே?” கண்ணன் கேட்டான்.

“அவர்களால் திரும்ப முடியாது.  யுதிஷ்டிரன் வாக்குக்கொடுத்துவிட்டான்.  அப்படியே அவர்கள் அழைப்பு ஏதும் இல்லாமல் அவர்களாகத் திரும்பினாலும் உடனடியாக அவர்கள் கொல்லப் படுவார்கள். துரியோதனன் அதில் மிகவும் கெட்டிக்காரன்.  ஆகவே கவனமாக இருப்பான்.”



1 comment:

அப்பாதுரை said...

விறுவிறுப்பாக இருக்கிறது.