Monday, June 11, 2012

திருதராஷ்டிரனுக்கு நிம்மதி!


திருதராஷ்டிரன் பெரிதும் நிம்மதி அடைந்தான் என்பது அவன் பேசியதில் இருந்து புரிந்தது.  “குழந்தாய், அங்கே உனக்கு ஒரு அழகான மாளிகைக் கட்டப்பட்டிருக்கிறது.  எந்தவிதமான தொந்திரவுகளும், வேலைகளும் இல்லாமல் நீ நிம்மதியாய்ப்பொழுதைக் கழிக்கலாம்.  ஆனால்,….ஆனால்…… பீமனும், அர்ஜுனனும் சம்மதிப்பார்களா?  அவர்களுக்கு ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல சம்மதமாய் இருக்குமா?  ஏதேனும் தொந்திரவுகளை….ம்ம்ம்ம் தடங்கல்களை உருவாக்கப்போகிறார்கள்.” திருதராஷ்டிரன் குரலில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு யுதிஷ்டிரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.  என்றாலும் தன் தம்பிகளைக் குறித்து நன்கு அறிந்திருந்த அவன், “பெரியப்பா, அவர்களுக்குச் சம்மதம் இராதுதான்;  நிச்சயம் எதிர்ப்பார்கள்.  ஆனால் நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன், அரசே, உங்கள் கட்டளையை நாங்கள் நிறைவேற்றுவோம்.” என உறுதி மொழி கொடுத்தான் யுதிஷ்டிரன்.

“குழந்தாய், நீ மிகப் பெரியவன்! உயர்ந்த உள்ளம் உனக்கு.  என் தம்பி பாண்டுவைப்போலவே உயர்ந்த உள்ளமும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கும், பெருந்தன்மையான மனமும் உனக்கும் வாய்த்திருக்கிறது.  இந்தக்குரு வம்சத்தைப் பேரழிவில் இருந்து நீ இப்போது காப்பாற்றி உள்ளாய்.” திருதராஷ்டிரன் உண்மையாகவே இதை உணர்ந்து கூறினான் என்பது புலப்பட்டது. 

“அரசே, இப்போது எனக்கு விடைகொடுங்கள்.” யுதிஷ்டிரனுக்கு உடனே சென்று தம்பிகளையும், தாயையும் பார்க்க ஆவல் மிகுந்தது.  திருதராஷ்டிரன் கால்களில் விழுந்து வணங்கியவன், பீஷ்மர் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டார் பீஷ்மர்.  இவ்வளவு நேரமும் எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார் அவர்.  யுதிஷ்டிரனைத் தூக்கி நிறுத்திய பீஷ்மர், “ யுதிஷ்டிரா, தர்மமே நீ தான்.  நீயே தர்மம். நீ வேறு அது வேறல்ல.  அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அந்த மஹாதேவன் உன்னையும், உன் தம்பிமார்களையும் காப்பாற்றுவான்.  நீ இப்போது செல்லும் பாதை அந்த மஹாதேவரால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும்.” அவனை மீண்டும் அணைத்துக் கொண்ட பீஷ்மரின் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர் முத்துக்கள் யுதிஷ்டிரனின் உச்சந்தலையில் அக்ஷதைகள் போல் விழுந்தன.  கிழவரின் மனதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரனுக்கு ஒரே சமயத்தில் நன்றி உணர்வு, அன்பு, பாசம், கிழவரை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற வருத்தம் எல்லாம் ஏக காலத்தில் தாக்கியது.  தன் கையாலாகாத் தனத்தை நினைந்து நொந்து கொண்டான்.  அவன் தொண்டை அடைத்துக் கொண்டு பேச்சுக் கிளம்பவில்லை.

பாண்டவர்கள் வாரணாவதம் செல்லட்டும்.  நாம் இப்போது கண்ணன் எங்கே வந்து கொண்டிருக்கிறான், என்ன செய்கின்றான் என்பதைப்பார்ப்போமா!

ஹஸ்தினாபுரத்துக்கு வந்து கொண்டிருந்த கண்ணனுக்கும், அவன் பரிவாரங்களுக்கும் சாத்யகியின் பிள்ளையான யுயுதானா பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.  அவர்கள் அப்போது புஷ்கர க்ஷேத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.  சாத்யகி ஒரு மாபெரும் ரதப் படைக்குத் தலைவனாகப்பொறுப்பேற்று வழி நடத்திக் கொண்டிருந்தான். சாத்யகியே ஒரு அதிரதன்.  ரதப் படையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தான். ஒவ்வொரு ரதமும் எந்தவிதமான சூழ்நிலைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.  ஒவ்வொரு ரதமும் இரண்டு அதிரதர்களைக் கொண்டிருந்ததோடு இரண்டு சாரதிகளும் இருந்தனர்.  அதே போல் மாற்றுக் குதிரைகளும் ஒவ்வொரு ரதத்துக்காகவும் தயார் நிலையில் கூடவே வந்து கொண்டிருந்தன. இதைத் தவிர பல மாட்டு வண்டிகளில் ஆயுதங்கள், உணவுப்பொருட்கள், கூடாரம் அடித்துத் தங்குவதற்கான பொருட்கள், மருத்துவ வசதிகள் என வரிசையாக வந்து கொண்டிருந்தன.  எல்லாம் புஷ்கர நகரை நெருங்கி விட்டது.  புஷ்கரம் அப்போது யாதவர்களின் ஆட்சியில் தான் இருந்தது.


2 comments:

sambasivam6geetha said...

அப்பாதுரை, நேத்திக்கு மின்சாரம் போயிட்டதாலே பப்ளிஷ் ஆனதை செக் பண்ணலை. அப்புறமா மறந்தே போயிட்டேன். சொன்னதுக்கு நன்றி. உங்க பின்னூட்டம் எதிலே பப்ளிஷ் ஆயிருக்குனு கண்டு பிடிக்கணும். :))))))))

sambasivam6geetha said...

to me
அப்பாதுரை has left a new comment on your post "திருதராஷ்டிரனுக்கு நிம்மதி!திருதராஷ்டிரன் பெரிதும்...":

கொஞ்சம் edit பண்ணனுமோ?