Friday, July 27, 2012

கண்ணனின் யோசனைகள்!


கிருஷ்ணனுக்கு ஆரம்பத்தில் இருந்தே கெளரவ சகோதரர்களிடம் சந்தேகம்;  அவர்கள் தான் ஏதோ தந்திரம் செய்து பாண்டு புத்திரர்களைக் கொன்றிருக்க வேண்டும் என்றே எண்ணினான்.  அதற்கேற்றாற்போல் இங்கே துரியோதனனைப் பார்த்தால்!........கண்ணன் அவனைத் தான் கூர்ந்து கவனிப்பது தெரியாவண்ணம் அவன் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தான்.  துரியோதனன் பாண்டவர்களை நினைத்தும், அவர்களின் முடிவை எண்ணியும் துக்கப்படுவது போல் நடிக்கிறான்;  மிக நன்றாகவே நடிக்கிறான் என்பது கண்ணனுக்குப் புரிந்துவிட்டது.  கண்ணன் சகுனியையும் விடவில்லை;  அவனையும் கவனித்தான். சகுனியும் தான் மிகுந்த துக்கத்தில் இருப்பது போல் காட்டிக்கொண்டு அவ்வப்போது கண்களால் கண்ணீரை வெளிப்படுத்திக் கொண்டு, தேவையான சமயங்களில் ஓர் அடக்கப்பட்ட விம்மலோடும் நாடகத்தில் தன் பகுதியை நிறைவாகவே நிறைவேற்றினான்.  ம்ம்ம்ம்ம்ம்ம்…… இதில் என்னவோ இருக்கிறது!  விடக் கூடாது!  சரி, அந்தக் கர்ணன் என்ன செய்கிறான் என்று பார்த்தால்…….ம்ஹும் துக்கத்தின் அறிகுறியே இல்லை.    வெளிப்படையாகவே வரவேற்பைக் காட்டிய தெளிவான முகம்,  சூரியனைப் போலவே பளிச்சிட்ட கண்கள்,  துக்கமில்லாத சாதாரணமான புன்னகை எல்லாமும் அவன் உள்ளத்தின் உறுதியையும், உடலின் வலிவையும் சொல்லாமல் சொல்லின.

கண்ணனுக்குத் தன் தந்தை வசுதேவர் கர்ணனின் பிறப்பைக் குறித்துக் கூறிய கதை நினைவில் மோதியது.  குடும்பத்தில் ஓரிருவர் தவிர வேறு யாருமே அறியாதது.  கண்ணனுக்குத் தெரிய வேண்டிய அவசியம் குறித்து யோசித்தே வசுதேவர் அவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.  கண்ணனுக்கு  அதிர்ஷ்டம் என்னும் சொல்லுக்கு உள்ள இந்த விசித்திரமான குணங்களை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது.  கர்ணன், ஒரு ரதசாரதியால் வளர்க்கப்பட்டவன், துரியோதனனுக்கு அரசியலில் ஆதரவு காட்டுகிறான்.  நம்பிக்கைக்கு உகந்த நண்பனாகவும் இருந்து வருகிறான்.  அந்த ஐந்து சகோதரர்களும், எவர்களைக் குந்தி பார்த்துப்பார்த்து வளர்த்து ஆளாக்கினாளோ, அந்த ஐந்து சகோதரர்களும் இறந்தவர்களாகிவிட்டனர்.   எத்தனை கஷ்டங்களுக்கு இடையில் அவர்களை வளர்த்து ஆளாக்கினாள்!  அனைத்தும் தரைமட்டமாகிவிட்டதே!  அதோடு மட்டுமா?  அவர்களால் ஆர்யவர்த்தத்தில் தர்மம் நிலைநாட்டப்படும் என நினைத்ததும், தவிடு பொடியாகிவிட்டதே!  இனி தர்மம் தலை தூக்குமா?  மெல்ல மெல்ல அவர்கள் அரண்மனை வளாகம் வந்தடைந்தார்கள்.  மிகப் பெரியதொரு வளாகமாக இருந்தது அது.  பல அரச மாளிகைகளும் பின்னால் அவற்றுக்கெனத் தனித் தோட்டங்களோடு காணப்பட்டது. 

கிருஷ்ணன், உத்தவன், சாத்யகி தங்கத் தனி மாளிகை அளிக்கப்பட்டது.  அவர்கள் இருந்த மாளிகைக்கு அருகே தான் திருதராஷ்டிரனின் பாட்டியாரும், மரியாதைக்குரிய ராணியுமான சத்தியவதி வேறொரு அரச மாளிகையில் வசித்து வந்தாள் என்பதை அவர்கள் அங்கே சென்றதும் தெரிந்து கொண்டார்கள்.  பீஷ்மரின் மரியாதைக்கு உகந்த விருந்தாளிகளாய்த் தங்கின யாதவ குல சிரோன்மணிகளை உபசரிக்கும் பொறுப்பை துரியோதனன் வலிந்து ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல், எப்படியேனும் அவர்களை மகிழ்வில் ஆழ்த்த வேண்டும் என்று முனைப்பும் காட்டி வந்தான்.  கிருஷ்ணனுக்கு அவனுடைய இந்த உபசரிப்பின் பின்னால் துரியோதனனின் உண்மை சொரூபம் மறைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை.   அவன் தன்னையும் தன் வருகையையும் விரும்பவில்லை என்பதோடு தன் மேல் நம்பிக்கையும் வைக்கவில்லை என்பதைக் கண்ணன் உணர்ந்தான்.  என்ன காரணமாக இருக்கும்?  பாண்டவர்கள் இவன் உத்தரவின் பேரில் தான் கொல்லப்பட்டனரா?  இப்படிப் பட்டதொரு காரியத்தை உண்மையாகவே துரியோதனன் செய்திருப்பானா? 


உண்மையான துரியோதனனையும், அவன் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களையும், தன்னை அவன் அடிக்கடி சோதனை செய்பவன் போல் பார்ப்பதையும் கண்டு கண்ணனுக்கு அவன் சற்றும் மாறவில்லை என்பது நன்கே தெரிந்தது.  சகுனியின் துணை கொண்டு தன் விருப்பங்களை எப்படியேனும் நிறைவேற்றிக்கொள்ளும் இந்த துரியோதனன் என்னும் இளவரசன் இப்போது பட்டத்து இளவரசனாகிவிட்டான்.  அவனால் தான் ஏற்கப் போகும் பணியை நிறைவாகவும், அரச தர்மத்துக்கு உட்பட்டும் செய்ய முடியுமா?  ம்ஹும், சகுனியின் துணையை அவன் விட்டாலன்றி இது ஒருக்காலும் நடவாத ஒன்று.  பொய்யான புன்னகையிலேயே சகுனி அனைவரையும் ஏமாற்றி வருகிறான்.  சிறிது நேரத்தில் சம்பிரதாயத்துக்கு உட்பட்ட சந்திப்பாக திருதராஷ்டிர மன்னனைச் சந்திக்கச் சென்றான் கண்ணன்.  திருதராஷ்டிரன் மாளிகையும் கண்ணனுக்கு அளிக்கப்பட்ட விருந்தினர் மாளிகைக்கு அருகேயே இருந்தது.   வயசுக்கு மீறிய முதுமையோடும், இப்போதே கூன் விழுந்த முதுகோடும் காணப்பட்ட திருதராஷ்டிரன் அந்த அரியணைக்குச் சற்றும் பொருத்தமின்றிக் காணப்பட்டான்.  துரியோதனனும் தன் தகப்பன் அருகே அமர்ந்து  அங்கே கண்ணன் வருகைக்குக் காத்திருந்தான்.  அவனைத் தவிரவும் இன்னொரு இளைஞன் சஞ்சயன் என்னும் பெயருள்ளவன் அங்கே இருந்தான். 


அவன் திருதராஷ்டிரனின் நம்பிக்கைக்கு உகந்த சேவகன்;  நேரம் வாய்க்கையில் எல்லாம் திருதராஷ்டிரனின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுபவன்.  அவனின்றி திருதராஷ்டிரனால் அரசியல் நிலவரங்களை உள்ளது உள்ளபடி புரிந்து கொண்டிருக்க இயலாது.  இரு காவலாளிகள் தண்டாயுதத்தை ஏந்திய வண்ணம் அங்கே மெளனமாகக் காவல் காத்தனர்.  திருதராஷ்டிரனும் துக்கத்துக்கு உரிய ஆடைகளை அணிந்த வண்ணம் அரசச் சின்னங்கள் ஏதுமின்றிக் குருட்டுக் கண்களைத் தரையில் பதித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.  குனிகன் என்னும் அமைச்சனால் கண்ணன் திருதராஷ்டிரனிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.  வழக்கப்படி அவன் கால்களில் விழுந்து கண்ணன் வணங்க, அவனைத் தொடர்ந்த சாத்யகியும், உத்தவனும் கூட மன்னனை வணங்கி விட்டுக் கண்ணனின் இருபக்கமும் நின்று கொண்டனர்.  திருதராஷ்டிரன் தன் ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் மறைத்துக் கொண்டு பேசினான் என்பது நன்கு புரிந்தது.  அப்படியே அவன் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும், அதை துரியோதனன்  திருத்தினான்;  அல்லது மறுத்தான்.  தன் மகனிடம் குருட்டுத்தனமான பாசமும், பக்தியும் வைத்திருக்கிறான் திருதராஷ்டிரன் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான்.  திருதராஷ்டிரனை ஆட்டுவிப்பவன் துரியோதனன் என்றும், அவன் கைகளில் பொம்மையாகவே திருதராஷ்டிரன் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டான்.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... இனிமேல் தான் விறுவிறுப்பு... தொடருங்கள்...
நன்றி....