Friday, July 12, 2013

ராக்ஷசர்களின் முற்றுகை!

அப்போது அங்கிருந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு “க்ரீச்” என்றதொரு ஓலம் கேட்டது. அது மனிதக் குரலா, விலங்கின் குரலா, பறவையின் குரலா என இனம் காண முடியவில்லை. அதைக் கேட்டதுமே நிகும்பன் தாமதிக்கவே இல்லை. தன் கால்களாலும், கைகளாலும் சத்தமின்றித் தவழ்ந்து சென்று சற்று தூரத்தில் மறைந்திருந்த நீண்ட அதே சமயம் அடர்த்தியான புற்களுக்கிடையில் காணப்பட்டதொரு புதரின் மறைவில் அதன் கீழே நழுவிச் சென்று மறைந்து கொண்டான். கண நேரத்திற்கு உத்தவன் மனதில் நிகும்பன் தன்னை ஆசை காட்டி அழைத்து வந்து மோசம் செய்கிறானோ என்ற எண்ணமே மேலிட்டது. தன்னை மரணத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறானோ என சம்சயப் பட்டான்.   ஆனால் அந்தச் சின்னஞ்சிறு ராக்ஷசச் சிறுவன் அவன் மேல் காட்டிய அன்பு பொய்யல்ல.  அத்தகையதொரு அன்பு காட்டுபவன் ஏமாற்றவும் மாட்டான்.  அந்தச் சிறுவனக் கொடூரமானவன் என நினைப்பதே தவறு. ஆகவே உத்தவன், தன்னுடைய அம்புறாத்தூணியை முதுகில் நன்றாக இழுத்துக் கட்டிக் கொண்டு அந்தச் சிறுவன் சொன்ன புத்திமதியின் பிரகாரம் அருகிலிருந்த பெரிய, உயரமான மரத்தின் அடர்ந்த கிளைகளில் மறைந்து கொள்ள வேண்டி ஏற ஆரம்பித்தான்.


அது எவ்வளவு நன்மையைத் தந்தது என்பதை உத்தவன் உடனே உணர்ந்தான்.  மரத்தின் அடர்ந்த மேற்கிளைகளில் ஒன்றின் உள்ளே சென்று அவன் மறைந்தது தான் தாமதம், சில நிழல் உருவங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து அந்த மரத்தினடியில் வந்ததையும், அங்கேயே அமர்ந்ததையும் பார்த்தான்.  அவன் தைரியத்தை உலுக்கி அவன் மனதைக் கலங்கடிக்கும்படியான பயங்கரமானதொரு ஊளைச் சப்தம் இல்லை இல்லை அலறல் அப்போது கேட்டது.  இது ஏதோ காட்டு மிருகத்தின் ஊளை அல்ல; பிணம் தின்னிப்பேய்கள் ஊளையிடும் என்பார்களே அது போல் அல்லவோ இருக்கிறது! உத்தவன் தலையோடு கால் நடுங்கினான்.  மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவானோ என அஞ்சினான்.  தன்னையும் அறியாமல் மரத்தில் தானிருந்த இடத்தில் பற்றிக் கொண்டிருந்த கிளையைக் கைநழுவ விட்டுவிடுவான் போல இருந்தது.  ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட உத்தவன், நிகும்பனின் புத்திமதியை நினைவு கூர்ந்தான். “என்ன நடந்தாலும் கீழே மட்டும் இறங்கிவிடாதே!” இது தான் அவன் சொன்னது. சத்தமின்றி மெல்ல இன்னும் மேலே ஏறிய உத்தவன் வசதியானதொரு கிளையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான்.


உத்தவன் நன்கு கூர்ந்து கவனித்ததில் கீழே பத்துப் பதினைந்து ராக்ஷசர்கள் இருப்பதாய்த் தோன்றியது.  ராக்ஷசர்கள் தங்களோடு  இரண்டு நபர்களைச் சிறைப் பிடித்தும் வந்திருக்க வேண்டும்.  நிலவொளியில் ராக்ஷசர்களின் ஆயுதங்கள் பிரகாசித்ததையும் உத்தவன் கண்டான். ஈட்டிகளும், கோடரிகளும் ஏந்தி இருந்தனர்.  மரத்தினடியில் இருந்த அந்த ராக்ஷசர்கள் தங்கள் ஓலத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தனர்.  கேட்கவே பயங்கரமாக இருந்தது.  சிலர் வெறி பிடித்தது போல் ஆடவும் தொடங்கினார்கள்.  அவர்களின் இந்தச் செயல்களினால் உத்தவன் தான் இருந்த மரக்கிளையிலிருந்து பயத்திலேயே கீழே விழுந்துவிடுவானோ எனப் பயந்து  கொண்டிருந்தான்.  சற்று நேரம் இவ்வாறு ஆடிப் பாடிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ராக்ஷசர்கள் களைப்பினாலோ, அல்லது அவர்களுக்கே அலுப்புத் தோன்றியதாலோ எல்லாவற்றையும் நிறுத்திவிட்டுப் படுத்து ஓய்வு எடுக்க ஆரம்பித்தனர். சிறைப்பிடித்து வந்தவர்களைக் கட்டியிருந்த கயிறுகளின் மற்றொரு முனை, அவர்களைப் பிடித்து வந்த ராக்ஷசர்களின் கால்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது.  ஆகையால் சிறைப்பிடித்து வந்த இருவரும் தங்களைப் பிடித்த ராக்ஷசர்களை எழுப்பாமல் தப்ப இயலாது.


மரக்கிளையில் உயிருக்குப்பயந்து ஒளிந்து கொண்டிருந்த உத்தவன் தன்னுடைய மரணத்திற்காகக் கவலைப்படக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அந்த ராக்ஷசர்கள் தூங்குகையில் மெல்ல, மெல்ல மேலே உள்ள கிளைக்கு ஏறினான். எவ்வளவு தான் கவனமாக சத்தமே இல்லாமல் ஏறினாலும், மரத்தின் இலைகளின் மர்மர சப்தத்தை அவனால் நிறுத்த இயலவில்லை.  அந்த நிசப்தமான வேளையில் திடீரெனக் கேட்ட இந்தச் சின்னஞ்சிறு சப்தத்தில் விழித்து எழுந்த அந்த ராக்ஷசர்கள் கோபத்தில் அந்தத் திக்கைப் பார்த்து ஓலமிட்டு அலறினார்கள்.  எப்படியோ மேற்கிளைக்கு ஏறிவிட்ட உத்தவன் தான் பயத்தில் கீழே விழுந்துவிடாமல் இருக்கத் தன் மேல் உத்தரீயத்தை எடுத்துப் பக்கத்துக்கிளையோடு சேர்த்துத் தன்னைத் தானே கட்டிக் கொண்டான். நேரம் மெல்ல மெல்லக் கடந்தது. கீழ்வானில் வெள்ளி முளைத்தது.  உத்தவன் இருந்த கிளை அவனின் உடல் எடையை இனிமேலும் தன்னால் தாங்க முடியாது எனப் பெருமூச்சு விட்டது.  சடசடவென முறிய ஆரம்பித்தது.  சப்தம் கேட்ட ராக்ஷசர்கள் எழுந்து கூக்குரலிட்டுக் கொண்டே மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து மேலேயும், கீழேயும் தேடினார்கள். 


மரக்கிளைகளுக்கு இடையே தேடினார்கள். அந்தக் கூக்குரலைக் கேட்கவே முடியவில்லை.  ஆனால் அவர்கள் நிறுத்தும்வழியையும் காணோம்.  உத்தவனுக்குத் தான் கீழே விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவே முடியவில்லை.  எப்படியோ சமாளித்துக் கொண்டு மரக்கிளையின் இன்னொரு பாகத்துக்குத் தாவினான்.  மரத்தின் மேலே யாரோ இருப்பது ராக்ஷசர்களுக்கு நிச்சயம் ஆகிவிட்டது.  ஆனால் அவன் கீழே விழவில்லை என்றதும் அந்த ராக்ஷசர்கள் அவர்களில் இருவரை மரத்தின் மேலேறிப் பார்க்கச் சொன்னார்கள்.  இரு ராக்ஷசர்கள் மரத்தின் மேலே ஏறினார்கள்.  உத்தவன் தன் அம்புறாத் தூணியில் மிச்சம் இருந்த நான்கு அம்புகளில் ஒன்றை எடுத்து மேலே ஏறும் ராக்ஷசன் மேல் குறிபார்த்தான். அம்பை அவன் கைகள் தன்னிச்சையாக எய்தியது.  உத்தவன் குறி தப்பவில்லை.  அது முன்னால் வந்து கொண்டிருந்த ராக்ஷசனைத் தாக்க அவன் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.  அவன் உடலில் இருந்து ரத்தம் பெருகியது.  இதைக் கண்ட மற்றவன் மரத்திலிருந்து கீழே இறங்கிவிட்டான்.



4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அது முன்னால் வந்து கொண்டிருந்த ராக்ஷசனைத் தாக்க அவன் அலறிக் கொண்டு கீழே விழுந்தான். அவன் உடலில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட மற்றவன் மரத்திலிருந்து கீழே இறங்கிவிட்டான்.//

சுவரஸ்யமாகப்போகிற்து.

திண்டுக்கல் தனபாலன் said...

ராக்ஷசர்களுக்கு பயம் ஆரம்பித்து விட்டது...!

இப்போது Font முன்பு போல் உள்ளது... நன்றி..,

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், நன்றி.

sambasivam6geetha said...

நன்றி டிடி, வேர்டில் எழுதித் தான் காப்பி, பேஸ்ட் பண்ணறேன். நீங்க சொன்னப்புறமா நோட்பாடில் போட்டுட்டு அதிலிருந்து காப்பி, பேஸ்ட் செய்யறேன். :))))