Wednesday, July 17, 2013

நின்னைச் சரணடைந்தேன், வாசுதேவா!

இதற்கு மேல் தூக்கமும் வராது போல் இருந்தது உத்தவனுக்கு.  நிலவொளி பளீரெனப் பிரகாசிக்க உருக்கி ஊற்றிய வெள்ளிக் கம்பிகள் போல் அந்த மரக்கிளைகளின் மேல் படர்ந்த நிலவொளியைப் பார்த்த உத்தவன் அது இலைகளுக்கு ஊடே புகுந்து கீழே தரையில் காட்டிய விசித்திரமான ஒளிக்கோலத்தைக் கண்டான்.  எனினும் அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.  கீழே படுத்து உறங்கிய அந்தப்பிசாசுகளின் மேலும் இதே நிலவொளி வீசுகிறது. ஹூம், இத்தனை வெளிச்சமும் அபாயமாய்த் தோன்றியது உத்தவனுக்கு.  எந்த ஆரியனுக்கும் கிடைக்காததொரு விசித்திரமான மரணம் எனக்குக் கிடைக்கப் போகிறது.  உத்தவனுக்குத் தன் நிலைமையே விசித்திரமாய் இருந்தது.  தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.  திடீரென அவனுக்குக் கசனின் நினைவு வந்தது.  சுக்ராசாரியாரிடம் சஞ்சீவனி மந்திரம் கற்கும் நோக்கத்தோடு வந்த கசன் அவராலேயே உண்ணப்பட்டுப்பின்னர் சஞ்சீவனி மந்திரத்தைக் கற்று அவர் வயிற்றிலிருந்து கிழித்துக் கொண்டு வெளிவந்து பின்னர் சுக்ராசாரியாரையும் சஞ்சீவனி மந்திரம் மூலம் உயிர்ப்பித்தான்.  ஆனால் இங்கே, இங்கே உத்தவன் அந்த ராக்ஷசர்களால் நெருப்பில் வாட்டப்பட்டு உண்ணப்பட்டதும் அவனைத் திரும்ப அழைக்க எவரும் இல்லை.  அவர்கள் அவனைப் பக்ஷணம் பண்ணியது பண்ணியதாகவே இருக்கும்.  ஆஹா, எனக்கு மட்டும் அந்த சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தால்!! இந்த ராக்ஷசர்கள் அனைவரின் வயிற்றையும் கிழித்துக் கொண்டு வெளிவரும் சந்தர்ப்பம் கிடைக்குமே!  ஹூம் எனக்கு அந்த அதிர்ஷ்டமெல்லாம் இல்லை.


இப்போது அரை மயக்கத்திலிருந்த உத்தவன் கண்கள் முன் ஒரு காட்சி படம் போலத் தோன்றியது.  தான் விழித்திருக்கிறோமா, தூங்குகிறோமா, இது கனவா, நனவா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் உத்தவன்.  அந்த இரு இரட்டையர்களின் குரலும் கேட்டாற்போல் இருந்தது உத்தவனுக்கு.  “ஆஹா, உத்தவனை ராக்ஷசர்கள் சாப்பிட்டுவிட்டார்களே!” என்று பரிதாபமான குரலில் சொல்வது கேட்டது. இல்லை, இல்லை; அது உண்மையில்லை.  அவனை எந்த ராக்ஷசனும் இதுவரை சாப்பிடவில்லை.  இதோ இந்தக் கிளையின் மேல் உட்கார்ந்திருக்கிறானே.  ஆனால் விரைவில் ராக்ஷசர்கள் அவனைச் சாப்பிடப் போவது என்னமோ உறுதி! உத்தவன் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து போகவிருந்தான்.  அப்போது அவன் காதுகளில் கேட்டது ஒரு பரிச்சயமான குரல்.  “நான் இருக்கையில் உத்தவனாவது இறந்து போவதாவது! அவனைச் சாக விடமாட்டேன்.”  அந்தக் குரலின் உறுதியும், கருணையும், தொனியில் தொனித்த பாசமும் உத்தவனைத் தூக்கிவாரிப் போட வைத்தது.  இது யார் குரல்? ஆஹா, அல்லும்பகலும் நான் நினைத்துக் கொண்டிருக்கும் என் கிருஷ்ணன் குரல் அல்லவோ இது!  அவன் குரல்களில் தான் எத்தனை உறுதி! திண்மை! திட்டவட்டமாக அன்றோ சொல்கிறான்.  தன்னைத் தானே உலுக்கிக் கொண்டான் உத்தவன்.  இது என்ன உண்மையா, பொய்யா?  தான் கண்டது கனவா? நனவா?  அல்லது…அல்லது என் புலன்கள் என்னை ஏமாற்றுகின்றனவா?  இல்லை, இல்லை, அந்தக் குரல் கேட்டது பொய்யில்லை. பொய்யே அல்ல.  குரலில் காணப்பட்ட நிச்சயத்தன்மை, அதன் இனிமை, எப்போதும் போல் ஒலிக்கும் கருணைத் தன்மை எதுவும் பொய்யல்ல.  எவராலும், எதாலும் அசைக்கப்பட முடியாத ஈடு இணையற்ற ஒரு பக்தியின் வெளிப்பாடாக அமைந்த அந்தக் குரல் பொய்யில்லை.  இதோ, இதோ, என் கண் முன்னர் அந்த நீலமேக சியாமள வண்ணனான கண்ணன் முகம் தெரிகின்றதே.


இவ்வளவு அருகே அந்த முகம் தெரிவதோடு அதில் தெரியும் அந்த நீண்ட கண்கள்!  ஒளியை மட்டுமா வீசுகின்றன!  கருணையையும், அன்பையும் மழையாக வர்ஷிப்பதோடு, நான் இருக்க பயமேன் என்ற அபயமும் அல்லவோ அளிக்கிறது.  அன்புடன் கூடிய கருணை, அதோடு நான் காத்து ரக்ஷிப்பேன் என்ற உறுதி.  இதோ கண்ணன் தலை, அதில் சூடிய கிரீடம், மயில் பீலி, அளவு கடந்த மென்மையுடனும், கருணையுடனும் என்னை நோக்கிக் குனிகின்றான் கண்ணன்.  உத்தவன் மனதுக்குள் நம்பிக்கை துளிர் விட்டது.  தன் நிராதரவான நிலையை முற்றிலும் மறந்து நம்பிக்கை கொண்டான்.  தன் எதிரே கிருஷ்ணன் இருப்பதாகவே நம்பினான்.  தன்னை முழுக்க முழுக்க அவனிடம் ஒப்படைத்துக் கொண்டான்.  பரிபூரணமாகச் சரணாகதி அடைந்தான்.  கிருஷ்ணனைப் பார்த்துப் பாசத்துடன் சிரித்தான்.  தன் விசுவாசமான அன்பையும் பரிபூரணச் சரணாகதியையும் காட்டினான்.  “கண்ணா, என் மன்னா, மணிவண்ணா.  நான் என்றென்றும் உன்னுடையவன்.  ஒருவேளை இப்போது இங்கே நான் இறக்க நேரிட்டாலும் உன்னுடைய ஆணையைச் சிரமேற்கொண்டு அதை நிறைவேற்றும் முயற்சியில் இறப்பதற்காகப் பெருமைப் படுகிறேன்.  அதோடு கண்ணா, இந்தக் கடைசி நிமிடத்தில் கூட உன் நாமத்தை  மட்டுமே என் உதடுகள் உச்சரிக்க வேண்டும். வேறெதுவும் வேண்டாம்.”  மீண்டும் உத்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அதே குரல், அதே குரல், மென்மையாக, அதே சமயம் உறுதியுடன் தன் கருணையை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டு கேட்டது.  “நான் உயிருடன் இருக்கும்வரை உத்தவனைச் சாகவிடமாட்டேன்!’  உத்தவன் சிரித்துக் கொண்டான்.


ஆஹா, என்னுடைய கற்பனைகள் எங்கெல்லாம் போகின்றன.  என்ன என்னமோ சித்து விளையாட்டுகள் எல்லாமும் தோன்றுகின்றன.  குரல்கள் எல்லாம் கேட்கின்றன.  ஆனால் பரவாயில்லை.  என் அருமைக் கண்ணனின் அந்தக் குரலை ஒரு முறை அல்ல இருமுறைகள் கேட்டுவிட்டேன்.  இது போதும், எனக்கு இது போதும், கண்ணா, நீயே சரணம்.  நின்னைச் சரணடைந்தேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக மகிழ்வோடு உன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இறக்கத் தயாராகிவிட்டேன்.”


ஹே கிருஷ்ணா கோவிந்தா ஹரே முராரே
ஹே நாதா நாராயணா வாசுதேவா


இதற்குள்ளாகக் கீழே அந்தப்பிசாசு மனிதர்கள் விழித்து விட்டதாகத் தோன்றியது.  எழுந்ததோடு அல்லாமல், அந்த மரத்தைச் சுற்றி ஓடினார்கள், கூக்குரலிட்டார்கள், யாரையோ பழிப்புக் காட்டுவது போல் கத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடியதில் உத்தவன் பயத்தில் கீழே விழத்தான் போகிறேன் என்றே எண்ணினான்.  அவன் உடலில் நேற்றிருந்த அளவுக்கு சக்தியும் இன்றில்லை.  மிகவும் தளர்ந்து போயிருந்தான்.  ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருந்த ராக்ஷசர்கள் விரைவில் உலர்ந்த மரக்கிளைகளைக் கொண்டு வந்து அந்த மரத்தடியில் குவித்த வண்ணம் இருந்தனர்.  அவனைக் கீழே கொண்டு வர வேண்டி அவர்கள் நெருப்பை மூட்டி விடப் போகிறார்கள் என்பதை உத்தவன் புரிந்து கொண்டான்.  அதே போல் கீழே நெருப்பு மூட்டப்பட்டது.  புகையால் மூச்சு அடைத்தது  உத்தவனுக்கு.  மூக்குத் துவாரங்கள் எரிந்தன.  “ஓ, கண்ணா, வாசுதேவா, நான் உன்னுடையவன்.  உன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டேன்.  உயிர் பிழைத்திருந்தாலும் சரி, இறப்பிலும் சரி நான் என்றென்றும் உன்னுடையவன். இதை மட்டும் நீ ஒரு போதும் மறவாதே! என்னையும் மறந்துவிடாதே!’  உடலின், மனதின் அனைத்து சக்திகளையும் இழந்த நிலையில் உத்தவன் இந்த வார்த்தைகளைத் தன்னுள்ளே முணுமுணுத்துக் கொண்டான்.  இனி தானாகவே கீழே இறங்க வேண்டியது தான்.  அல்லது நேரே நெருப்பில் குதித்து விடலாமா?


உத்தவன் ஒரு முடிவுக்கு வருவதற்குள்ளாக தூரத்தில் காட்டுக்குள்ளே, ஏதோ சப்தம் கேட்டது.  இல்லை, இல்லை, எவரோ ஒரு குழுவாகச் சுற்றிச் சூழ்ந்து கொள்ள மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றனர். இந்த ராக்ஷசர்களும் அப்படித் தானே வந்தனர்!  இது ஒருவேளை இன்னொரு ராக்ஷசர்களின் குழுவோ?  கீழே இருந்த ராக்ஷசர்களுக்கும் அந்தச் சப்தம் கேட்டிருக்கிறது என்பது அவர்கள் உற்றுக் கவனித்து விட்டு ஒருவரை ஒருவர் அச்சத்தோடு பார்த்துக் கொண்டதில் இருந்து தெரிந்தது.  திடீரென முரசங்களின் முழக்கம் ஓங்கி வலுவாகவும் வேகமாகவும் ஒலித்தது.  சிறிது நேரம் ஒலித்து ஓய்ந்த முரசின் முழக்கத்திற்குப் பின்னர் கோபம் கொண்ட ஆண் சிங்கத்தின் கர்ஜனை போன்றதொரு குரல் காட்டின் அந்தத் திறந்த வெளியெங்கும் பாய்ந்து எதிரொலித்தது.



6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“நான் இருக்கையில் உத்தவனாவது இறந்து போவதாவது! அவனைச் சாக விடமாட்டேன்.” //

//அந்தக் குரலின் உறுதியும், கருணையும், தொனியில் தொனித்த பாசமும் உத்தவனைத் தூக்கிவாரிப் போட வைத்தது. இது யார் குரல்? ஆஹா, அல்லும்பகலும் நான் நினைத்துக் கொண்டிருக்கும் என் கிருஷ்ணன் குரல் அல்லவோ இது! அவன் குரல்களில் தான் எத்தனை உறுதி! திண்மை! திட்டவட்டமாக அன்றோ சொல்கிறான். தன்னைத் தானே உலுக்கிக் கொண்டான் உத்தவன். //

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே! ;)

இப்போத்தான் எனக்கும் நிம்மதியாக உள்ளது.

ஸ்ரீராம். said...

வருவது யாரோ...

அடுத்தடுத்த பதிவுகள் உடனே..உடனே...உடனே...!

திண்டுக்கல் தனபாலன் said...

இனி பயம் இல்லை...

sambasivam6geetha said...

வாங்க வைகோ சாரி, நிம்மதியானதுக்கு சந்தோஷம். :))))

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், எழுதி வைச்சதைக் காப்பி,பேஸ்ட் பண்ணறது உடனுக்குடன் நடக்கும். புதுசா எழுதணும்னா கொஞ்சம் நாளாகும். :))))

sambasivam6geetha said...

வாங்க டிடி, ஆமாம், பயம் இல்லை. :)))