Wednesday, January 15, 2014

கண்ணன் சந்தித்த பல்வேறு மனிதர்களின் உண்மை சொரூபம்!

தூங்க ஆரம்பித்த கண்ணனுக்கு மீண்டும் கண்ணெதிரே ஆடவரும், பெண்டிரும் தோன்றினர்.  முடிவில்லாத ஊர்வலமாக வந்தவர்கள் ஆங்காங்கே கோஷம் போட்டுக்  கொண்டும் , புருவ நெரிப்பிலும், முகச் சுளிப்பிலும் தங்கள் அதிருப்தியைக் காட்டிய வண்ணமும் வந்தனர். அவர்களில் சிலர் அழுது புலம்பிக் கொண்டு தர்மத்தைக் குறித்துப் பேசினர். இன்னும் சிலர் தர்மம் என்றால் என்ன என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர்.  கண்ணனை அங்கே கண்டதும் அவனிடம் தர்மம் என்றால் என்ன எனக் கேட்டனர்!  அவர்கள் மனம் திருப்தி அடையும்படியான பதிலைக் கண்ணனால் சொல்ல முடியவில்லை.  அப்போது கண்ணனே அவர்களைப் பார்த்து தர்மம் என்றால் என்ன? என்று கேட்பதைக் கண்ணனே பார்த்தான்.  அவன் குரலையும் அவனே கேட்டான்.  அவர்களில் ஒருவர், “எனக்குத் தெரியும்”, என்றது கண்ணனுக்குத் தெரிந்தது.

 அந்த மனிதன் எதற்கு நெகிழ்ந்து கொடுக்காதவனாகத் தெரிந்ததோடு அல்லாமல், அவன் முகம் சத்ராஜித்தைப் போல் இருந்தது.  ஆனால் சத்ராஜித் முகத்தை விட இன்னமும் அதிகக் கோணல்களோடும், கபடம் நிறைந்ததாகவும் காணப்பட்டது.  அந்த முகம் சொல்லியது.  தன் கோணல் சிரிப்போது, “நான் தர்மத்தை விலைக்கு வாங்கி விட்டேன். பிராமணர்களிடமிருந்து வாங்கினேன்.  அவ்வளவு ஏன், அனைத்துக் கடவுளரிடமிருந்தும் வாங்கிவிட்டேன்.  என் குடும்பத்திற்கு நான் உணவளிக்கிறேன்.  அத்தோடு இல்லாமல் பல வழிபாட்டுத் தலங்களிலும் வழிபட்டு வருகிறேன்.  எனக்கு மட்டுமே தெரியும்.  எப்படிப் பணத்தைச் சேர்ப்பது என்பது மட்டுமின்றிப் பணக்காரர்களைச் சேர்ப்பதும்,  நான் மட்டுமே அறிவேன்.  செல்வத்தைச் சேகரிப்பது மட்டுமில்லாமல் அதைக் கொடுப்பதும் எவ்வாறு என நான் மட்டுமே அறிவேன்.”

“ஆஹா, பேராசை நிறைந்த உன் தர்மம் தர்மமே அல்ல!  வெறும் பணத்தாசையும் தர்மம் அல்ல.  நீ தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் அல்ல!”  கிருஷ்ணன் தான் இதைச் சொல்லிக்கொண்டே மேலும் நகர்ந்து செல்வதைக் கவனித்தான்.  தன்னைத் தானே பார்த்துக் கொண்டும், தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் ஒரு மூன்றாம் நபர் போல் அனைத்தையும் கிரஹித்துக் கொண்டும் இருந்தான் கிருஷ்ணன்.  “நான் அறிவேன் தர்மத்தை!  அதைக்குறித்து எனக்குத் தெரியும்!” இன்னொரு குரல் அங்கே கேட்டது.  அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த கிருஷ்ணன், புனிதச் சின்னங்களைத் தரித்துக் கொண்டிருந்த ஒரு உருவத்தைக் கண்டான்.  அது மேலும் சொன்னது!” நான் புனிதமானவன்.  பாவங்களிலிருந்து விலகி இருப்பவன்.  நான் எவரையும் கொல்லவில்லை; எங்கும் திருடவில்லை; பிறன் மனை நாடியதில்லை.  என் பாதை மட்டுமே சரியான பாதையாகும்!”

“ஆஹா, எல்லையற்ற பயத்தின் காரணமாகவன்றோ நீ இத்தகையதொரு தர்மத்தைக் கடைப்பிடிக்கிறாய்??  ம்ஹூம், நீ தக்க மனிதன் அல்ல.  தர்மம் உன்னிடமும் இல்லை!” இதைச் சொன்ன கண்ணன் மேலே சென்றான். மூன்றாவதாக இப்போது பேசிய குரல் எங்கோ அடி பாதாளத்திலிருந்து வருவது போல் கேட்டது.  யாரென்று கூர்ந்து கவனித்த கண்ணன் அது ஒரு துணிச்சல்காரரின் குரல் என்பதைக் கண்டான்.  பிசாசைப்போன்ற தைரியம் உள்ளவனோ?  அப்படித்தான் இருக்க வேண்டும்.  அந்தக் குரல் கூறியது.  “நான் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறேன்.  ஏனெனில் என் தர்மம் என்னவென நான் அறிவேன்.  என் எதிரிகளை ஒழித்துக் கட்டிவிட்டேன். ஏனெனில் என்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பாவத்தின் விளைநிலங்கள்.  பல உயிர்ப்பலிகளையும் கருணையோடு கொடுத்திருப்பதோடு அதன் மூலம் என் வெற்றியையும் இவ்வுலகிற்குப் பறை சாற்றுகின்றேன்.  நான் பிராமணர்களுக்கு உணவளிக்கிறேன்.  அவர்கள் என்னை வாழ்த்திப் பாடுகின்றனர்.” என்றது அந்தக் குரல்.  “ஆஹா, இந்தத் தற்பெருமைக்காகவன்றோ நீ தர்மத்தைக் கடைப்பிடிப்பதாய்ச் சொல்கிறாய்!  நீயும் அல்ல!” கண்ணன் இன்னும் மேலே சென்றான்.


 இப்போது ஒரு பணிவான குரல் அவன் காதுகளில் விழுந்தது.  மிகமிகப் பணிவும் விநயமும் நிரம்பிய குரலில் அது கூறியது!  “நான் அறிவேன் எது உண்மையான தர்மம் என்பதை!  வேறு எவரும் அறிய மாட்டார்கள்.  தர்மம் என்பதில் பணிவு வேண்டும். விநயம் வேண்டும்.  அடக்கம் இருக்க வேண்டும். என்ன கெடுதல்கள் நேர்ந்தாலும் நான் மகிழ்வோடு தாங்கிக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன்.  பசி, தாகம், குளிர், துரதிருஷ்டம் போன்றவற்றைக் கூடப் பொறுத்துக் கொள்கிறேன்.  என்னைப் போன்ற சாதுவான பொறுமைசாலிகளுக்கு இந்த உரிமைகள்  உயிரைப் போன்றது.   தர்மத்தின் பெரும்புகழ் இதில் தான் அடங்கியுள்ளது.  ஆகவே பொறுமையுடன் அனைத்தையும் பொறுத்துக் கொள்வதே தர்மம்!” என்றது.  “ஆஹா, நீ ஒரு அடிமையைப் போல் அன்றோ செயல்படுகிறாய்?? உனக்குள்ளே இருக்கும் தெய்வீகம் குறித்து நீ சிறிதேனும் அறிவாயா?   அதைத் தெரிந்து கொள்ளாத நீ தர்மவானா?  இல்லவே இல்லை.  உன் அடிமைப் புத்தி உன்னை விட்டு விலகவில்லை!”  கண்ணன் இன்னும் மேலே சென்றான்.

பின்னர் வந்தது ஒரு குரல்.  சூழ்ச்சி மிக்க நரியைப் போன்ற குரலாகத் தெரிந்தது அது.  மெதுவாக ரகசியக் குரலில் அது கூறியதாவது!”  எனக்குத் தெரியும் என் தர்மம் என்னவென்று!  பல கடினமான சூழ்நிலைகளில் இருந்தும், நிகழ்வுகளில் இருந்தும் நான் விலகியே இருப்பேன்.  சிங்கக் கூட்டங்களிடையே செல்ல மாட்டேன்.  எப்போதும் பத்திரமான, சுகமான வழியிலேயே செல்வேன்.  அங்கே அமைதியும் நிரம்பி இருக்கும்.  கடவுளரின் கடுமையைக் குறித்த பயமும் இருக்கும்!” “ஆஹா, இப்படியும் உண்டா?  நீ ஒரு கோழை.  உன் தர்மம் கோழைத்தனம் நிரம்பியது.  உன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்கிறாய்!  நீ அல்ல!”  கண்ணன் இன்னும் மேலே சென்றான். இப்போது இன்னொரு குரல் கேட்டது.  “எனக்கு செல்வத்தை அள்ளித் தரும் கடவுளர்களுக்கு ஆதரவாக நான் நடந்து கொள்வேன்.  அவர்களைக் குறித்து அவர்கள் சார்பாகப் பேசுவேன்.  ஒன்றுமே இல்லாதவர்களுக்கு எல்லாவற்றையுக் கொடுத்து ரக்ஷிப்பதாகச் சொல்வேன்.  ரக்ஷிப்பேன் என்னும் நம்பிக்கையை விதைப்பேன்.  அந்த நம்பிக்கைச் சொல்லைக் கேட்ட அவர்கள் ஆனந்தத்தில் குடித்துவிட்டு ஆடிப்பாடுவார்கள்.  சந்தோஷமாக இருப்பார்கள்.”

“பித்தலாட்டக்காரா!  நீ செய்வது பித்தலாட்டம்., நம்பிக்கை மோசடி.  இதுவா தர்மம்?? “கண்ணன் இன்னும் மேலே சென்றான்.  இப்போது ஒரு குரல் கேட்டது.  குரலிலேயே அதன்  உயர்வும், மேன்மையும் புரிந்தது.  கம்பீரம் குறையாமல் அது, “எனக்குத் தெரியும் எது தர்மம் என!  வாழ்க்கையின் சிக்கலான பொறிகளிலிருந்து தப்பிக்கும் வழி தான் அது.  ஏக்கங்களையும், கனவுகளையும் ஒடுக்குவதற்காக ஏற்பட்டது அது.  மனித மனத்தின் பலஹீனங்களைக் காட்டுவது.  என்னிடம் உள்ள பலஹீனத்தை நானே நன்கறிந்திருக்கிறேன்.  அதை வெறுக்கிறேன்.  அதே போல் மற்றவர்களின் பலஹீனங்களையும் அடியோடு வெறுக்கிறேன்.  ஆகவே பற்றற்ற தன்மையைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதோடு அனைவரிடமிருந்தும் விலகியும் நிற்கிறேன்.  மக்களிடமிருந்து தொடர்புகளை முழுமையாக அறுத்துக்கொண்டு அனைவருக்கும் மேலே தனித்து உயர்ந்து நிற்கிறேன்.”

“அடடா!  இது ஒரு வாழ்க்கையா?  நீ உனக்கு நிகரில்லை என்னும் இறுமாப்பிலும், அகந்தையிலும் இருக்கிறாய்!  இப்படி விலகி நிற்பதும் ஒரு வாழ்க்கையா?  நீயா தர்மவான்??” கண்ணன் மேலே சென்றான்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு தர்மவானின் பேச்சுக்கு கண்ணனின் பதில்கள் அருமை...

ஸ்ரீராம். said...

படிச்சுட்டேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொருவன் சொன்னதும் அதனை கண்ணன் ஏற்காமல் கூறிய பதில்களும் அழகாக மிகப்பெரிய கொட்டை எழுத்துக்களில் கொடுத்துள்ளதால் என்னால் சுலபமாகப் படித்து ரஸிக்க முடிந்தது.

உண்மையில் யார் தான் தர்மத்தை முழுவதும் அறிந்து அனுஷ்டிப்பவனோ?

அறிய ஆவலுடன்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொருவன் சொன்னதும் அதனை கண்ணன் ஏற்காமல் கூறிய பதில்களும் அழகாக மிகப்பெரிய கொட்டை எழுத்துக்களில் கொடுத்துள்ளதால் என்னால் சுலபமாகப் படித்து ரஸிக்க முடிந்தது.

உண்மையில் யார் தான் தர்மத்தை முழுவதும் அறிந்து அனுஷ்டிப்பவனோ?

அறிய ஆவலுடன்.....

sambasivam6geetha said...

அனைவருக்கும் நன்றி.