Monday, January 27, 2014

சாத்யகியைக் காணவில்லை!

வஞ்சக மனம் படைத்த சத்ராஜித் என்னும் யாதவத் தலைவன் மிகுந்த எச்சரிக்கையுடன் கிருஷ்ணனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.  திறமைசாலியும், இளைஞனும் ஆன கிருஷ்ணனின் புரிந்து கொள்ள இயலா வழிமுறைகளை அவன் நன்கறிவான்.  இந்த இளைஞன் ஆச்சரியங்களை ஆழ்த்துவதில் மன்னன்.   சற்றும் தயக்கமில்லாமல் அவன் ராஜசபையின் முடிவை ஏற்றுக் கொண்டதன் பின்னால் ஏதோ விஷயம் இருக்கிறது.  ஏதோ சூழ்ச்சி மறைந்திருக்கிறது.   ஆகவே தான் அவன் எப்போதும் போல் சுறுசுறுப்பாகத் தன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.  ம்ம்ம்ம்ம்ம்?? அவர்கள் நிஜமாகவே சுயம்வரத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும் தான் அங்கே செல்கிறார்களா?  ம்ம்ம்ம்?


அப்படி எனில் எதற்காக சாத்யகியும், கிருதவர்மாவும் அவர்கள் படை வீரர்களை மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் இவ்வளவு கவனமாகப் பயிற்சி அளிக்கவேண்டும்??   சாத்யகி சுயம்வரத்தில் நடைபெறப்போகும் வில் வித்தைப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை எனில் அவன் இங்கே ஏன் மும்முரமாகவும் தீவிரமாகவும் வில் வித்தைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான்?  வரும் நாட்களில் யுத்தம் எதுவும் நடைபெறப்போவதில்லை எனில், எதற்காகக் குதிரைகளுக்குக் கூடப்பயிற்சி அளித்திருக்க வேண்டும்??  புத்தம்புதிய ரதங்கள் தயார் செய்யப்பட்டன. கதாயுதங்கள் புதியனவாகவும் வலிமை உள்ளதாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  வலிமையான கூர்மையான அம்புகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  இவை எல்லாம் எதற்கு?

இவை அனைத்துமே சுட்டிக் காட்டுவது ஒன்றே ஒன்றைத்தான்.  அது புஷ்கரத்தை எவ்வகையிலேனும் கைப்பற்ற வேண்டும் என்பதைத் தான் சுட்டுகிறது.   சத்ராஜித் இதுவாகத் தான் இருக்க வேண்டும் என அனுமானித்தான்.   அதோடு அல்லாமல் சாத்யகி கிருஷ்ணனுக்கு முன்னால் சென்று அக்ரவனத்தின் தலைவனைச் சந்தித்து மற்ற யாதவ இளவரசர்களோடும் அங்கே ஒரு விருந்துடன் கூடிய சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யச் செல்கிறான்.  இதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?  சாத்யகி கிருஷ்ணனுக்கு வலக்கை போன்றவன்.  அவனுடன் இணையாக நின்று யுத்தம் செய்யும் வல்லமை கொண்டவன்.  நிச்சயம் அவன் புஷ்கரத்தைக் கைப்பற்றி செகிதனாவிடம்  ஒப்படைத்துவிட்டே சுயம்வரத்திற்குச் செல்லப் போகிறான்.  திரெளபதியையும் அவனே ஜெயிக்கவேண்டும் என எண்ணுகிறான்.  அவனுடைய சந்தேகாஸ்பதமான நடவடிக்கைகளுக்கு எல்லாம் இதுவே காரணமாக இருக்கும்.  வேறென்ன இருக்க முடியும்?


 இந்த வஞ்சகமான நடவடிக்கைகளை எவ்வாறேனும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.  யாதவ வீரர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ளப் போகிறார்களா? அதையும் பார்த்துவிடலாம்.  ஒரு காலத்தில் இளமையும், வீரமும், கம்பீரமும் வாய்ந்த சாத்யகியை சத்ராஜித்துக்கு மிகவும் பிடித்தே இருந்தது.  நல்ல குணமும் நடவடிக்கைகளும் நிறைந்தவனாய் இருந்தான்.    அவன் தந்தையும் யாதவர்களிடையே குறிப்பிட்டுப் பேசும் அளவுக்கு ஒரு நல்ல தலைவனாக இருந்தான்.  சில சமயங்களில் குழப்பமாகப் புரிந்து கொள்ள முடியாமல் நடந்தாலும்  பொதுவாக அவனுடைய உயர்ந்த குணத்துக்காகப் பாராட்டக் கூடியவனாகவே இருந்தான்.

சத்ராஜித் தன் மகள் சத்யபாமையை  சாத்யகிக்கு மணமுடிக்க நினைத்திருந்தான்.  ஆனால் சாத்யகியின் தந்தை சாத்யகா இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டான்.   சாத்யகியும் இதை ஏன் எதற்கு என ஆராய்ந்து பாராமல் ஏற்றுக் கொண்டுவிட்டான்.  ஏனெனில் கிருஷ்ணனுடன் சேர்ந்து அவன் செய்து வந்த வேலைகளில் சாத்யகி அவ்வளவு ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தான்.  அந்த நேரம் அவனுக்குக் கிருஷ்ணைன் வேலைகளை முடிக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு நினைவே இல்லை. திருமணம் குறித்தெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை.   தன் செல்வத்தில் கர்வம் கொண்டிருந்த சத்ராஜித்தை இது மிகவும் புண்படுத்தி விட்டது. உயர்குடியில் பிறந்த சாத்யகா தன் மகனுக்குத் தான் அளிப்பதாய்ச் சொன்ன மணமகளை, தன் சொந்த மகளை மறுத்துவிட்டானே!  இது அவனுக்கு அழகா? இப்போது இந்த யுத்தத்தை நிறுத்துவதெனில் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. கிருஷ்ணனிடமிருந்து அவன் நண்பர்களைப் பிரிக்க வேண்டும்.

கிருஷ்ணனின் திட்டத்தைத் தகர்க்க வேண்டும்.  அதற்கு ஒரே வழி அவன் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் அவன் அருமை நண்பர்களை அவனிடமிருந்து கவர்ந்து கொள்வது தான்.   அதுவும் யாதவர்களிடையே சத்ராஜித்தின் சொல்லுக்கும், செயலுக்கும், முக்கியத்துவம் வர ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் சரியான ஒன்றாகவும் இருக்கும்.   சத்ராஜித் தனக்குள் தீர்மானித்துக் கொண்டிருந்தான்.

சாத்யகியோ முன்பிருந்ததை விடவும் மும்மடங்கு அதிகரித்திருக்கும் தன் ராணுவப் பிரிவோடு துவாரகையை விட்டு அக்ரவனம் செல்லும் ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தான்.  மார்கசீர்ஷ மாதத்தின் அந்த நல்ல நாளில் அவன் கிளம்பிய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் கிருஷ்ணன் கிளம்பப் போகிறான் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.  அவனுடைய படை வீரர்களும் நீண்ட பயணத்துக்குத் தயாராகி வந்தனர்.  கிளம்பவேண்டிய நாள் அதிகாலை வெள்ளி முளைக்கும் முன்னேயே கிருஷ்ணன், தன் முக்கியத்துவம் வாய்ந்த மஹாரதர்களோடு துவாரகையை விட்டு வெளியேறி சாத்யகியும் அவன் வீரர்களும் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். சாத்யகியும் அவன் படை வீரர்களும்  செல்ல வேண்டிய வழியில் அவன் படை வீரர்கள் தண்டு இறங்கி இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.  அங்கே சென்ற அவன் சாத்யகியை அங்கே காணாமல் திகைத்தான்.  அவன் வீரர்கள் பொறுமையின்றி சாத்யகிக்காகக் காத்திருப்பதையும் கண்டான்.  சாத்யகி அங்கே  வந்த அடுத்த நிமிடமே அவர்கள் அக்ரவனம் நோக்கிச் செல்லத் தயாராகக் காத்திருப்பதையும் பார்த்தான்.  படை வீரர்கள் அனைவரும் சாத்யகியிடம் மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.  தங்கள் தலைவனின் வீரத்தின் மேலும் அவன் தலைமையின் மேலும் கர்வம் கொண்டவர்கள்.  ஆனால் இப்போது இந்தக் கடைசி நிமிடத்தில் சாத்யகியைக் காணோம் என்றதும் அவன் பின் வாங்கி விட்டானோ என்னும் எண்ணம் தோன்றி மனம் கூசி, மனம் உடைந்து செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆக்ரோஷமும், வீரமும் ஒருங்கே அமைந்த சாத்யகி திடீரெனக் கோழையாக மாறிப் போனானா?  இது நினைக்கக் கூட இயலாத ஒன்றாய் உள்ளதே. அல்லது அவன் உடல் நிலை சரியில்லையா?  ம்ஹூம் அப்படி எல்லாம் இருக்காது.  இருக்கவும் முடியாது.  இதை எல்லாம் என்னவென்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லையே!  ஏ, மஹாதேவா!  இந்த துவாரகை மக்கள் சாத்யகியின் இந்தப் படை வீரர்களைக் குறித்து என்ன எண்ணுவார்கள்? ஏற்கெனவே நம்மைக் கேலி செய்தவர்கள் ஆயிற்றே! வேண்டாத போருக்குச் செல்கிறார்கள் எனக் கேலி பேசி வந்தனரே!  இப்போது சாத்யகி, நம் அருமைத் தலைவன், அவனைக் காணாமல் நாம் எங்கும் போக முடியவில்லை என்பதை இந்த ஊரும், இதன் மக்களும் யாதவத் தலைவர்களும் எவ்விதம் எதிர்கொள்ளப்போகின்றனர்? என்னென்ன கூறப் போகிறார்கள்?  சிரிக்க மாட்டார்களா? சிரிப்போர் கண் முன்னே இடறி விழுந்தாற்போல் ஆகாதா?

தன் ரதத்திலிருந்து எட்டிப் பார்த்த கிருஷ்ணன், அங்கிருந்த அஹுகா என்பவனிடம் சாத்யகி எங்கே எனக் கேட்டான்.  அஹூகா தன் ரதத்திலிருந்து குதித்துக் கீழே இறங்கிக் கிருஷ்ணனிடம் வந்து, “பிரபுவே, அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை!” என்றான்.  “அவன் மாளிகையில் பார்த்தாயா?” கிருஷ்ணன் கேட்டான்.  இந்தப் புதியதொரு சூழ்நிலையைக் கிருஷ்ணனால் புரிந்து கொள்ள இயலவில்லை.  அஹுகாவோ, “விசாரித்தேன் பிரபுவே,  அவர் நேற்றிரவு மாளிகைக்குத் திரும்பவே இல்லை.  அவர் விட்டுச் சென்ற இடத்திலேயே ரதம் நின்று கொண்டிருக்கிறது.  “ மீண்டும் கிசுகிசுத்தான் அஹூகா.

“ஆச்சரியமாய் இருக்கிறது.  தன் தாய்மாமனைச் சந்திக்கப் போவதாய்ச் சொல்லிவிட்டு என்னிடம் இருந்து கிளம்பினான்.  அது நேற்று மாலை. ஆனால் அவன் இரவை அங்கே கழிக்கப் போவதாய்ச் சொல்லவே இல்லையே!” கிருஷ்ணனுக்கு திடீரென ஏற்பட்ட இந்தப் புதிரை விடுவிக்க இயலவில்லை.  “ நான் ரதம் ஓட்டியைக் கேட்டேன், பிரபுவே. தாய் மாமன் வீட்டில் இறங்கிக் கொண்டு, ரதம் ஓட்டியைத் தலைவர் திரும்பி அனுப்பி விட்டாராம்.  அங்கிருந்து வீட்டிற்கு நடந்தே சென்றுவிடுவதாயும் கூறினாராம்.” என்றான் அஹுகா.  “சாத்யகி அப்படிச் செய்யக் கூடியவனே!  அது சரி, அவன் தாய்மாமனை நீ விசாரித்தாயா?” என்று கிருஷ்ணன் கேட்டான்.  “விசாரித்தேன் பிரபுவே.  வாயிற்காப்போன் தலைவர் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டி வாயிலைக் கடந்தபோது பார்த்திருக்கிறான்.  அவன் சொன்னான் தலைவர் தன் வீட்டிற்குத் தான் திரும்பிக் கொண்டிருந்தார் என!”  கண்ணன் சற்று நேரம் யோசித்தான்.  படை வீரர்கள் கிளம்பவேண்டி நிர்ணயித்திருந்த நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.  சாத்யகிக்கு ஏதோ ஆகிவிட்டது.  இவ்வளவு நேரம் தூங்கக் கூடியவனே அல்ல.  அதோடு எந்த வேலையைக் கொடுத்தாலும் அந்த வேலையைச் செய்யத் தன்னால் தாமதம் ஏற்படுவதை விரும்புபவனும் அல்ல.  நேரத்தைக் கடைப்பிடிப்பதில் வல்லவனும் கூட.  தன் கடமையிலிருந்து பின்வாங்குபவனும் அல்ல.  ஏதேனும் செய்ய வேண்டும். அதுவும் அதை இப்போதே உடனே செய்தாக வேண்டும்.  உடனே!  என்ன செய்வது?




3 comments:

ஸ்ரீராம். said...

சாத்யகிக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க அடுத்த பதிவுக்குப் போகிறேன். இந்தப் பதிவில்தான் சத்ராஜித் மகள் சத்யபாமா பற்றி வந்திருக்கிறது. சத்ராஜித்தின் புகழ் பெற்ற மாலை பற்றி ஒன்றும் விவரம் காணோமே...

sambasivam6geetha said...

வாங்க டிடி, நன்றி.

sambasivam6geetha said...

ஶ்ரீராம், அது தனியாக நான்காம் பாகமாக வரச்சே விபரங்கள் வரும். இப்போ இன்னமும் மூணாம் பாகமே முடியலை. :)))) இதிலேயே இன்னும் நிறைய இருக்கு. முதல் இரு பாகங்கள் சீக்கிரம் முடிஞ்சாப்போல் இதிலே முடியாது.