Thursday, February 6, 2014

பலராமனும் கிளம்புகிறான்!

கோவிந்தன் சொல்வது சரியே!  அதிகச் செல்வம் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ வைக்கும்.  கொடுமையானதும் கூட.  யாதவர்கள் தங்கள் கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறைக்குத் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. அவர்கள் கட்டுக்கோப்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.  ம்ம்ம்ம்ம்ம்… இவ்வளவு அதிகப் பணம் இருப்பதால் தானே சத்ராஜித்தால் இப்படி அலக்ஷியமாக நடந்து கொள்ள இயல்கிறது.  எந்நேரமும் வணிகக் கப்பல்கள் கடல்களில் மிதந்து சென்று வியாபாரம் செய்த வண்ணம் இருக்கின்றன. பொன்னும், மணியும், ரத்தினங்களும், முத்துக்களும் குவிகின்றன.  வீட்டிலும் பல பெரிய தன வணிகர் வந்தவண்ணமும், போன வண்ணமும் இருக்கின்றனர்.  அவர்களுக்காக எந்நேரமும் விருந்து உபசாரங்கள், ஆடல், பாடல், கேளிக்கைகள்!   ஆனால் இது எத்தகைய ஊழலான வாழ்க்கை என்பதைத் தான் நான் பார்த்து வருகிறேனே!  நேற்றிரவு கூட சத்ராஜித் அளித்த ஒரு விருந்துக்கு பலராமன் சென்றிருந்தான்.  அங்கே தான் அனைத்தையும் பார்த்தானே.

அதோடு மட்டுமா!  சத்ராஜித்திடம் விலை மதிக்க முடியா ச்யமந்தக மணி இருக்கிறது.  அந்த மணியின் ஒளி பட்டாலே எல்லாமும் தங்கமாக மாறுமாம். அதை வைத்துக் கொண்டு அனைத்து யாதவர்களையும் தன்னுடைய அடிமையாக அன்றோ சத்ராஜித் வைக்க நினைக்கிறான். இவ்வளவு தங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?  நல்ல சுத்தமான வீரர்களாக இருந்தவர்களைக் கோழைகளாகவும், சோம்பேறிகளாகவும் மாற்றியதோடு அல்லாமல் கோவிந்தனின் ஆலோசனையைப் புறக்கணிக்கவும் வைத்தது இந்தத் தங்கத்தால் தானே!  இந்த யாதவர்கள் தங்களைத் தாங்களே இப்படி வீண் செல்வத்தினால் வந்த புகழ் போதையில் அழியாமல் காப்பாற்ற வேண்டும்.  ஆம், நான் தான் இதைச் செய்ய வேண்டும்.  வந்து குழுமி இருந்த அனைத்து யாதவர்களையும் பார்த்துச் சாட்டையால் அடிப்பது போல் தன் கடுமையான சொற்களால் அடிக்க ஆரம்பித்தான் பலராமன்.

“கோழைகளே, தைரியமற்றவர்களே! ஏமாற்றுக்காரர்களே!  சூழ்ச்சிக் காரர்களே!  உங்கள் தர்மம் என்பது தான் என்ன!  அதிலிருந்து நீங்கள் பிறழ்ந்து விட்டீர்களே, தெரியவில்லை?   கோவிந்தனைத் தோற்கடித்துவிட்டீர்கள்! அவனைக் கைவிட்டு விட்டீர்கள்!  அவன் நம்மை எல்லாம் விட்டுச் சென்றுவிட்டான்!” இதைச் சொல்கையில் பலராமன் தன்னுள்ளே ஆழமாக ஏற்பட்ட வேதனையிலும், வருத்தத்திலும், கோவிந்தன் தன் ஆலோசனைகளைச் சொன்னபோது அதை மறுத்த முதல் ஆள் தான் தான் என்பதை முற்றிலும் மறந்தே போனான்.  ஆனால் யாதவர்களிடையே பெரும் அளவில் மாற்றம் தெரிந்தது.  பலராமனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர்கள் மனதைப் புண்ணாக்கியது.  வாளால் அறுபட்டது போல் துடித்தனர். கண்ணன் தங்களுக்கு எவ்வளவு அரியவன், தாங்கள் கண்ணனை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அப்போதே புரிந்து கொண்டவர்கள் போல் காட்சி தந்தனர்.  நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல் தாங்கள் செய்த தவறின் ஆழம் புரிந்து, அதன் விளைவுகள் புரிந்து செய்வதறியாமல் திகைத்தனர்.

உக்ரசேனரைப் பார்த்து பலராமன், “மாட்சிமை பொருந்திய அரசரே,  இந்த விஷயத்தில் எவருடைய அவசரம் அவசரமான குறுக்கீடுகளும் தேவையில்லை.   இதன் விளைவுகள் குறித்தும் எந்தக் கோழைகளும் எனக்கு எடுத்துச் சொல்ல வேண்டாம்.  அப்படிப்பட்ட மனிதர்கள் சாக்கடையிலேயே அதன் சேற்றிலேயே திரும்பத் திரும்ப உழலும் பன்றிகளைப் போன்றவர்கள். இவர்கள் செல்வத்தில் புரளுகின்றனர். அவ்வளவு தான் வேறுபாடு! “பலராமன் தான் இன்று வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை மறந்தே விட்டானா என அனைவருக்கும் எண்ணத் தோன்றியது.  ஆனால் எல்லாமே தவறு என்பது சூரியனைக் கண்டதும் மறையும் பனித்துளி போல், சூரியனைக் கண்டதும் ஏற்படும் வெளிச்சம் போல் பலராமனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்கு விளங்கியது.  மேலும் பொங்கினான் பலராமன்! உக்ரசேனரைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.


“கோழைகள், சூழ்ச்சிக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள்!  அவர்களுக்குப் பொன் வேண்டும், பொருள் வேண்டும், வாழ்க்கையைப் பல விதங்களிலும் இன்பமாக அனுபவிக்க வேண்டும்.  வசதி, வாய்ப்புகள் வேண்டும்.  சூதாட வேண்டும், குடிக்க வேண்டும்.  விருந்துகளிலும், ஆடல், பாடல், கேளிக்கைகளிலும் கழிக்க வேண்டும்.  ஆனால் தர்மம் என்றால் கிட்டேயே நெருங்க மாட்டார்கள். இவர்களின் தர்மம் என்பது என்னவென இவர்கள் அறிவார்களா?  மாட்சிமை பொருந்திய மன்னா! என்னிடமும் இவை எதுவும் அறவே இல்லை!”


“உங்களுக்கு விருப்பமிருந்தால் சபையைக் கூட்டுங்கள் மன்னா!  ஆனால் நான் முடிவுக்கு வந்துவிட்டேன்.  ஒவ்வொரு அதிரதர்களும்  அவர்களுக்குள் எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு தயாராகி என்னுடன் அக்ரவனம் வரவேண்டும்.  கண்ணன் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.  அவன் வாக்குக் காக்கப்பட வேண்டும்.  இதை நான் அந்த சாக்ஷாத் மஹாதேவன் ஆன சோமநாதப் பெருமானின் மேல் ஆணையிடுகிறேன்.  கண்ணனின் வாக்கைக் காப்போம். புஷ்கரத்தைத் திரும்பக் கைப்பற்றுவோம்.  துருபதனின் மகள் திரெளபதியின் சுயம்வரத்தை வெற்றியடையச் செய்வோம்.  கோவிந்தனை, என் அருமைக் கண்ணனை வெற்றி பெற்றவனாக நம்மிடையே திரும்பக் கொண்டு வருவோம்.”  சற்றே தயங்கினான் பலராமன்.

ஒரு கணம் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொண்டான்.  மின்னல் போல் அனைத்தும் கண்ணெதிரே தோன்றி மறைந்தன.  பின்னர்  மீண்டும் கர்வம் பொங்க அனைவரையும் பார்த்து அறைகூவல் விடுத்தான். “ மாட்சிமை பொருந்திய மன்னா!  நான் ஒரு சபதம் போடுகிறேன்;  கேளுங்கள். கோவிந்தன், என் அருமைக் கண்ணன் திரும்பும் வரையிலும் அந்த மதுவை நான் தீண்டமாட்டேன்.  அவன் நம்முடன் , நம்மிடையே இல்லை எனில் வாழ்வதன் பொருள் தான் என்ன?  அவனில்லாமல் ஒரு வாழ்க்கையா? “ பலராமன் குரல் தழுதழுத்தது.

ஆனால் சாத்யகனுக்கு பலராமனின் இந்த நீண்ட உரையிலோ, அவன் சபதத்திலோ மனம் அமைதி அடையவில்லை.  அவன் மகனைக் காணவில்லையே!  “எங்கே என் மகன்?  அவனை எவ்விதம் கண்டு பிடிப்பது? என்னதான் நடந்திருக்கும் அவனுக்கு?”  மனம் சங்கடத்தில் ஆழ்ந்திருக்க மகனைப் பற்றிய கவலை நீங்காமல் கேட்டான் சாத்யகன்.

“அவனுக்கு என்ன நடந்திருக்குமா?” சாத்யகன் பக்கம் திரும்பிய பலராமன், “ தன் கடமையிலிருந்து அவன் தப்பி இருக்கக் கூடாது.  கோவிந்தனைத் தானே தனியாக அனைத்தையும் எதிர்கொள்ளும்படி செய்துவிட்டானே!  இப்படிச் செய்யலாமா?  யாரோ சூழ்ச்சி செய்திருக்கின்றனர்.  அவர் யார் என என்னால் ஊகிக்க முடிகிறது.  சாத்யகியை நன்றாக ஏமாற்றி இருக்கின்றனர்.” யார் இதைச் செய்தது என்பதை அறிந்தவன் போல் பலராமன் அனைவர் முகங்களையும் உற்றுக் கவனித்தான்.


 “இல்லை, அவன் கடமையிலிருந்து தவறவே இல்லை.  அவன் தாய் வழி மாமன் வீட்டிலிருந்து தன் சொந்த மாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது தான் ஏதோ நடந்திருக்கிறது.  யாரோ அவனைக் கடத்தி இருக்கக்  கூடும்.  “சாத்யகன் புலம்பினான்.

“மாமா சாத்யகரே, கவலைப் படாதீர்கள்! சாத்யகியைக் கடத்தினவர் எவரானாலும், அவர்கள் அனைவரும் கூண்டோடு பிடிக்கப்பட்டு, தண்டிக்கப் படுவார்கள்.  தேவையானால் அவர்கள் உயிரும் பறிக்கப்படும்.  இதை நான் அந்த மஹாதேவன் பெயரால் ஆணையிடுகிறேன்.  இது உறுதி, சத்தியம்!” என்றான் பலராமன்.  அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் கிருஷ்ணனின் திடீர்ப் போர்க்கோலமும் அவன் சென்ற விதமும் ஆச்சரியம் அளித்தது எனில் அதற்குச் சற்றும் குறையாமல் சாத்யகியின் திடீர் மறைவும் அவர்களுக்குள் திகில் கலந்த அச்சத்தை ஊட்டியது என்றால் சற்றும் மிகையில்லை. நெருப்பை உமிழ்வது போல் பலராமன் உமிழ்ந்த கோப வார்த்தைகளில் அவனுக்குக் கிடைத்த இந்த திடீர் அதிகாரத்தில் அனைவரும் கட்டுப்பட்டனர். அப்போது எவரோ, “சபையைக் கூட்டுங்கள்!” என்றனர்.

“சபையைக் கூட்டி என்ன செய்ய முடியும்? விவாதிக்க வேண்டும், மீண்டும், மீண்டும் விவாதம், தவிர்க்க முடியாத ஆய்வுகள், தீர்மானங்கள், எல்லாம் முட்டாள் தனம்! கோவிந்தன் இன்னும் பதினைந்து நாட்களில் எப்படியும் புறப்பட இருந்தான்.  அவன் இடத்தில் இப்போது நான் இருக்கிறேன்.  என் வீரர்கள் மட்டுமின்றி அனைத்து அதிரதர்களையும் திரட்டிக் கொண்டு நான் செல்லப் போகிறேன்.  என்னோடு வராமல் இங்கேயே தங்க வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் அவர்கள் பெயரைச் சொன்னால் போதுமானது!”  பலராமன் தன் பெருங்குரலில் கர்ஜித்தான்.


 கோபம் சற்றும் அடங்காமலே அனைவரையும் சுற்றும் முற்றும் பார்த்தான் பலராமன்.  உக்ரசேனரிடம் திரும்பி, தன் கோபம் சற்றும் குறையாமலேயே, “மாட்சிமை பொருந்திய அரசே, நான் கோவிந்தன் பக்கமே அவன் உதவிக்கு அவன் துணைக்கு நிற்கப் போகிறேன்.  அதே போல் என்னுடன் அழைத்துச் செல்லும் அனைவரையும் கோவிந்தனின் உதவிக்காகவே பயன்படுத்துவேன். அவன் எங்கே இருக்கிறானோ அங்கே தர்மம் இருக்கும்.  அது வெல்லும். ஏனெனில் எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே விஜயலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இது உண்மை, இது சத்தியம்.  உங்கள் ஆசிகளை எங்களுக்குத் தாருங்கள் மன்னா!  அது மட்டுமல்ல மன்னா!  சாத்யகி உயிருடன் இருக்கிறானா இல்லையா எனத் தெரியவில்லை.  அவனை ஒரு வேளை எவரேனும் கொன்றிருந்தால் அந்தக் கொலையாளிக்குத் தக்க தண்டனை அளிக்கப்படும் என எனக்கு உறுதிமொழி கொடுங்கள்.  “ மழை போலப் பொழிந்த பலராமனின் வார்த்தைகளைக் கேட்ட யாதவத் தலைவர்கள் வசியம் செய்யப்பட்டவர்களைப் போல் ஆனார்கள்.  ஆனால் பலராமனின் இந்தக் கோபத்தைக் குறைக்க எண்ணி, “சாது, சாது” என கோஷித்தனர்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்ணன் திரும்பவே கூடாது... ஆனால் தீண்டமாட்டேன் எனும் சபதம் தொடர வேண்டும்...

ஸ்ரீராம். said...

கூடிய கூட்டத்தில் சத்யராஜ், ச்சே! சத்ராஜித் இல்லையா! கண்ணன் மது குடிப்பானோ?